
WRITTEN BY S NAGARAJAN
Post No. 11,915
Date uploaded in London – 19 APRIL 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
வெள்ளிப் பல்லக்கில் ஏற இருந்த சிஷ்யரைத் தடுத்த மஹாசந்நிதானம்!
ச.நாகராஜன்
சிருங்கேரியில் நடந்த உண்மைச் சம்பவம் இது.
நாள் :- 1931ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் தேதி.
இளம் துறவியான ஶ்ரீ அபிநவ வித்யா தீர்த்தரை பட்டத்து இளவரசராக நியமிக்கும் வைபவம் நடக்கும் தினம்.
ஶ்ரீ சிருங்கேரி சாரதா பீடத்தின் 34-வது பீடாதிபதியாகத் திகழ்ந்த ஶ்ரீ சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் அவரை தனது அடுத்த பீடாதிபதியாக நியமிக்க, அந்த பட்டத்து இளவரசர் வைபவம் நிகழ இருந்தது.
சிருங்கேரியே கோலாகலமாக இருந்தது.
பக்தர்கள் திரண்டனர்.
குருவும் சிஷ்யருமாக இரு ஆசார்யர்களும் ஊரில் பட்டணப் பிரவேசமாக ஊர்வலமாக வருவதற்கு ஏற்பாடுகள் மிகச் சிறப்பாகச் செய்யப்பட்டிருந்தன.
இரு ஆசார்யர்களும் ஶ்ரீ சாரதாம்பாள் கோவிலில் தரிசனம் செய்து பிரதட்சிணமாக கோயிலுக்கு வெளியே வந்தனர்.
மஹா சந்நிதானத்திற்கென தங்கப் பல்லக்கும் சிஷ்யருக்கென வெள்ளிப் பல்லக்கும் அலங்கரிக்கப்பட்டு தயாராக இருந்தது.
குருவிற்கு வலது புறம் அவரது வலது கை சுட்டு விரலைப் பிடித்தவாறே சிஷ்யர் வந்து கொண்டிருந்தார்.
கம்பீரமான நடை.
பார்த்தவர்கள் பரவசமடைந்தனர்.
வெள்ளிப் பல்லக்கு அருகே வந்ததும் குருவான சந்திரசேகர பாரதீ மஹா ஸ்வாமிகள் தனது கை சுட்டு விரலை டக்கென்று விடுவித்து வேகமாக வெள்ளிப் பல்லக்கில் ஏறி அமர்ந்து விட்டார்.
பார்த்தவர்கள் திகைத்தனர்.
வழக்கமில்லா வழக்கம் இது.
சிஷ்யருக்கு வெள்ளிப் பல்லக்கு. குருவிற்குத் தங்கப் பல்லக்கு.
பாரம்பரிய நடைமுறை இது தான்.
ஏதேனும் தவறாக நடந்து விட்டதோ என்று யாரும் எண்ணுவதற்கு இடம் கொடுக்காமல் மஹா சந்நிதானம் இளையவரை நோக்கி சைகையால் சிஷ்யரை முன்னே சென்று தங்கப் பல்லக்கில் அமருமாறு ஜாடை செய்தார்.
அனைவருக்கும் குழப்பம். சிஷ்யருக்கும் அதே குழப்பம்.
வயதில் மூத்த பக்தர்களும் அதிகாரிகளும் ஓடி வந்து நிலைமையைச் சரிப்படுத்த முயன்றனர்.
மஹாசந்நிதானம் வெள்ளிப் பல்லக்கிலிருந்து எழவே இல்லை.

கடைசியில் ஸர்வாதிகாரி ஶ்ரீ கண்ட சாஸ்திரிகளே மஹா சந்நிதானத்திடம் வந்து விண்ணப்பம் செய்து கொண்டார்.
ஆசார்யரோ, கணீரென்ற குரலில் பிரகடனம் செய்தார் இப்படி:
“இன்றைய வைபவத்தின் நோக்கம் என்ன? அதை முதலில் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். ஶ்ரீ அபிநவ வித்யாதீர்த்தர் என்று பட்டப்பெயர் சூட்டப்பட்டு இதோ இருக்கிறாரே இவருக்கே இன்று முதல் எல்லா மரியாதைகளும் உபசாரங்களும் உரித்தாகின்றன. நான் சுதந்திரமாகத் தனித்து வாழ விரும்புகிறேன். என் விருப்பத்திற்கு என்னை வாழ விடுங்கள்”
அனைவரும் விக்கித்துப் போயினர்.
மஹா ஸ்வாமிகள் தன்னில் லயித்து பரமாத்மாவுடன் ஒன்றுபவர்.
பல நாட்கள் அவர் தியானத்திலேயே இருப்பது வழக்கம்.
இது மடத்தின் நிர்வாகத்திற்குச் சில சமயம் சங்கடத்தைத் தந்ததும் உண்டு.
ஆனால் அரசால் நியமிக்கப்பட்ட அதிகாரி வந்து இதைச் சோதிக்க நேர்ந்த போது அவர் விடை பெறும் சமயம் மஹா சந்நிதானம் அவரிடம் ‘வந்த வேலை முடிந்ததா’ என்று கேட்டு ‘அவர் வந்த வேலை என்ன’ என்பதையும் சுட்டிக் காட்டினார்.
அதிர்ந்து போனார் அரசு அதிகாரி.
ஒரு பெரும் மஹானின் முன்னிலையில், பரப்ரஹ்மத்துடன் ஐக்கியமாகி நிற்கும் நிலை கொண்டவரின் முன்னிலையில், தான் இருப்பதை உணர்ந்த அவர் அரசுக்கு இப்படிப்பட்ட மகானைத் தான் கண்டதே இல்லை என்று எழுதி அனுப்பினார்.
மஹா சந்நிதானத்தின் வரலாறை அனைவரும் படிக்க வேண்டும். சம காலத்தில் வாழ்ந்த அவரைப் பற்றி அறிவது நமது பாக்கியமே.
ஜய ஜய சங்கர! ஹர ஹர சங்கர!!
***

This picture is from Dharmapuram in Tamil Nadu
ஆதாரம், நன்றி ஶ்ரீ குரு கிருபா விலாஸம் மூன்றாம் பாகம்.
கிடைக்குமிடம் ஶ்ரீ சந்திரசேகர பாரதீ ப்ரஹ்ம வித்யா டிரஸ்ட் 5, பிருந்தாவன் தெரு, மைலாப்பூர், சென்னை – 4