சிவாஜிக்கும் ஒரு கோவில்; 108 மஹாராஷ்டிர புனிதத்தலங்கள்- 20 (நிறைவு) -Post No.12,045

VEERA SHIVAJI TEMPLE

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,045

Date uploaded in London – –  26 May , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx 

மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள 108 புனிதத் தலங்கள் என்ற கட்டுரைத்  தொடர் இத்துடன் நிறைவு பெறுகிறது . தமிழ் நாட்டைப் போலவே இந்த மாநிலத்திலும் ஏராளமான பிள்ளையார் கோவில்களும் அனுமார் கோவில்களும் இருக்கின்றன. இது தவிர ஹரே கிருஷ்ணா இயக்கக் கோவில்கள், குஜராத்திகள் வணங்கும் சுவாமி நாராயண் கோவில்கள் பெரிய ஊர்கள் அனைத்திலும் உள்ளன. ஆனால் நான் பழங் காலக் கோவில்களையும் முக்கியக் கோவில்களையும் மட்டுமே குறிப்பிட்டுள்ளேன். ஹிந்து சாம்ராஜ்யத்தை உருவாக்கி மொகலாய சாம்ராஜ்யத்துக்கு முடிவு கட்டிய சிவாஜிக்கும் கூடக் கோவில் இருக்கிறது. அவரை இம்மாநில மக்கள் , சிவ பெருமானின் அருள் பெற்ற பவானி தேவியின் அருள் பெற்ற ,ராஜாவாகவே கருதுகின்றனர்.

PART 20

101. கணேஷ் மந்திர், தேக்டி

நாகபுரி நகரிலுள்ள பழங்காலக் கோவில்களில் தேக்டி பிள்ளையார் கோவில் முக்கியமானதும் புகழ் பெற்றதும் ஆகும் ;  தேக்டி என்றால் குன்று. இந்தப் பிள்ளையாரும் குன்றின் மேல் அமர்ந்தவர் தான். தற்போதைய கோவில் கட்டி 250 ஆண்டுகள் ஆயிற்று . பிள்ளையாரின் தலை தங்கக் கவசத்தால் அலங்கரிக்கப்பட்டிருக்கிறது. வெள்ளி   ஆபரணங்கள்  அவர் உடலை அலங்கரிக்கின்றன. கவர்ச்சிமிக்க கணபதி .

102. ராம்டேக் கோவில்

நாகபுரியின் ராம்டேக் பகுதியில் ராமபிரானுக்கு கட்டப்பட்ட கோவில் இது இலங்கைக்குச் செல்வதற்கு முன்னர் ராமர் தங்கிய இடம் என்பது பக்தர்களின் கூற்று. ராமரின் சபதம் என்னும் பொருள்படும் வகையில் ராம் ‘டேக்’ என்று பெயர் இடப்பட்டது அகஸ்திய முனிவர் இங்கு இருந்தபோது அசுரர்களை ஒழிக்க ராமபிரான் சபதம் செய்த இடம் இது  

ஒரு குன்றின் மீது , கோட்டைக்குள் கோவில் அமைந்திருப்பதால் நகரத்தின் ‘கர் முர்’  ஒலிகளுக்கு அப்பால் அமைதியான சூழ்நிலையில் ராமரை தரிசிக்கலாம். இது குறைந்தது 400 ஆண்டுகளுக்கு முந்தைய கோவில். 350 அடி அகல நீளமுள்ள ‘ஒம்’ சின்னத்தினால் கூடுதல் பெருமையும் உண்டு; காளிதாசரின் மேக தூத காவியத்தின் நினைவாக ‘ஓம்’ வடிவில் கட்டிடம் கட்டப்பட்டது. குரங்குகளுக்கும் குறைவில்லை . கார்கள், மலை உச்சி வரை செல்லும் . பின்னர் 60 படிகள் ஏறினால் போதும் . இந்த வட்டாரத்தில் மேலும் பல கோவில்களும் பழங்கால சின்னங்களும் உள .

103. போதரேஸ்வர் ராம் மந்திர்

நாக்பூர் நகரின் நடுவில் அமைந்த கோவில் இது.

ராஜஸ்தானிலிருந்து வந்து வியாபாரம் செய்த போதார்  குடும்பத்தினர் 1923-ம் ஆண்டில் கட்டிய கோவில்; ராமன் மற்றும் சிவன் மூர்த்திகளை தரிசிக்கலாம். ராமர், லட்சுமணர், ஹனுமான் சீதை சிலைகள் இருக்கின்றன. சலவைக் கற்களால் கட்டப்பட்டிருக்கிறது.

104.ஆதாசா கணபதி கோவில்

நாகபுரியிலிருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் ஆதாஸா என்னும் ஊர் உளது இந்தக் கிராமத்தில் குன்றின் மீதுள்ள கோவிலை பக்தர்கள் ஏறிச் சென்று தரிசிக்க வேண்டும் ; பழமையான கோவில் . இங்குள்ள கணபதியின் சிறப்பு 12 அடி உயரமும் 7 அடி அகலமும் ஆகும். ஒரே கல்லில் செதுக்கப்பட்ட பிரம்மாண்ட கணபதி..

பெளஸ மாதத்தில் பெரிய விழா நடைபெறுகையில் பெரும் பக்தர்கள் கூட்டத்தைக் காணலாம்.

XXXX

 கொறடி கோவில் (சென்ற பகுதியில் விவரம் உளது. நாக்பூரிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த சக்தி கோவில். கொறடி ஏரிக்கரையில் அமைந்த அம்மனைத் தரிசிக்க பெரிய பக்தர் கூட்டம் வருகிறது தேவியின் பெயர் மஹாலக்ஷ்மி ஜகதம்பா.

105. நாராயணபுர மஹாதேவ் / நாராயனேஸ்வர் கோவில்

புனே நகரிலிருந்து 35 கிலோமிடேட்டர் தூரத்தில் நாராயனேஸ்வரர் கோவில்  இருக்கிறது . அருகிலுள்ள நாராயண்பூர் தத்த மந்திர் பிரசித்தம் அடைந்த அளவுக்கு இது பிரபலம் ஆகவில்லை. அதற்கு அருகிலுள்ள இக்கோவிலில் ஸ்வயம்பூ லிங்கம் இருக்கிறது. கோவிலுக்குள் சின்ன தீப ஸ்தம்பம் இருக்கிறது . இது மிகவும் பழமையான கோவில் ஆயினும் உள்ளூர் மக்கள் நல்ல வண்ணக் கலவையைப் பூசியுள்ளனர்.உள்ளே சென்றால் பழமையை உணரலாம். கோவிலுக்குப் பின்னால் படிக்கிணறு அமைந்துள்ளது .

106.பராடிவாடி தேவி கோவில், ஆங்கண் வாடி

மால்வன் வட்டாரக் கோவிலான  பராடிவாடி தேவி கோவிலில் ஆண்டுதோறும் நடக்கும் ஜாத்ரா (யாத்திரை ஊர்வலம்) மிகவும் புகழ் பெற்றது . பக்தர்களின் கோரிக்கைகளை உடனே நிறைவேற்றும் ஜாக்ருத் தேவஸ்தானங்களில் ஒன்று என்ற நம்பிக்கையால் பக்தர்களின் வருகை அதிகம். இந்தக் கோவிலின் சடங்குகள் விநோதமானவை.தேவியின் கற்சிலையை ஆபரணங்கள், முக கைவசத்தால் அலங்கரிப்பார்கள் ; இதற்குப் பின்னர் ஊர் நாவிதர் ஒரு கண்ணாடி மூலம் சூரிய கிர ணங்களை அந்தச் சிலை மீது பிரதிபலிப்பார் . அது மட்டுமல்ல. ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு பெண்மணி சென்று, கோவில் பிரசாதம் தயாரிக்கும் வேலையில் ஈடுபடவேண்டும்; சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் விழா இது.

இதற்கு அருகிலுள்ள ரயில் நிலையங்கள் – கங்கவிலி , ஓரோஸ்.

107.ஸ்ரீ சிவ சத்ரபதி (சிவாஜி) கோவில் , தர்கார்லி

சத்ரபதி சிவாஜியின் மகன்களில் ஒருவரான ராஜாராம், இந்தக் கோவிலை சிந்து துர்க் கோட்டையில் கட்டினார். மாலவன் நகரிலிருந்து 6 கிமீ தொலைவில் அமைந்துள்ளது டில்லி கேட் அருகில் கோபுரத்தில் சிவாஜியின் கால், கை சுவடுகள் பதிக்கப்பட்டுள்ளன 1695-ம் ஆண்டில் சத்ரபதி சிவாஜியின் நினைவாக இது கட்டப்பட்டது  சிவாஜியின் சிலை கருங்கல்லால் ஆனது. அவருடைய வாளும் இங்கே வைக்கப்பட்டுள்ளது.. சுற்றுலாப் பயணிளைத் தவிர உள்ளூர் மக்களும் பயபக்தியுடன் வந்து சிவாஜி மஹாராஜாவைத் தரிசித்துச் செல்கின்றனர் .

மால்வன் என்னும் இடத்திலிருந்து 4 கி.மீ தொலைவில் தார்கர்லி உளது.

108.பிரம்மநாத் கோவில், பாருண்டே

புனே மாவட்ட ஜுன்னார் தாலுகாவில் பாருண்டே கிராமத்தில் பிரம்மநாத் கோவில் இருக்கிறது. ஆஷாட கிருஷ்ண ஏகாதசியில் விழா நடைபெறும்.

நாத் சம்பி ரதாய வழிபாட்டின் சிற்பங்கள் இங்கே காணப்படுகின்றன..  ஹட யோகம் , தியானம், ஆசனம் மூலமாக வழிபடும் சைவர்கள் இவர்கள். மீனநாத அல்லது மச்சேந்திரநாத என்பவர் இதன் ஸ்தாபகர்

கோரக்க நாத் , ஹரிபா, கானுபா என்பவர்கள் அவரைப் பின்பற்றினர் .கோரக்நாதர் வழியாக இது பிரபலம் அடைந்தது  நாத் சம்பிரதாய பயிற்சி பெறுவோரின் சிற்பங்கள் பருண்டே முதலிய கோவில்களில் இருப்பதால் இங்கு ஆராய்ச்சியாளர்களும் வருகின்றனர் .

xxxx சுபம் xxxxx

நாத் சம்பிரதாயம், சிவாஜி கோவில், மஹாராஷ்டிர , 1008 தலங்கள் , பிரம்மநாத், நாராயணேஸ்வரர்

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: