நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

நட்சத்திர அதிசயங்கள்

 சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதையைப் பார்த்தோம்.மஹாபாரதம் கூறும் கதையின் விளக்கத்தைப் பார்ப்போம்!

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – 2

ச.நாகராஜன்

 

மஹாபாரதக் கதையின் உட்பொருள்

மஹாபாரதம் “ரோஹிணி சில காலம் அனைவரின் பார்வையிலிருந்து மறைந்து மீண்டும் தன் பழைய இடத்தில் தோன்றினாள்” என்று கூறுவதன் பொருள் என்ன?

ப்ரஜாபதி ரோஹிணி நட்சத்திரத்தின் அதி தேவதை.அத்தோடு ரிஷிகள் செய்யும் யாகங்களுக்கும் அதிகாரி!தேவர்களின் நாளும் மனிதர்களின் நாளும் வேறு வேறு. தேவர்களின் இரவு நேரத்திற்கு அதிபதி ப்ரஜாபதி தான்.இரவு நேரத்தில் இருக்கின்ற ஒரே வெளிச்சம் சந்திரனின் வெளிச்சம். யாகத்திற்கு இந்த சந்திர ஒளி தேவையாக இருந்தது.ஆகவே தான் சந்திரனே ப்ரஜாபதி என்று கூறப்பட்டான்.

தைத்திரீய பிராமணம், “ப்ரஜாபதி சிந்தனையில் ஆழ்ந்தார்.அவர் தனது வயிறு காலி ஆவதை உணர்ந்தார். உடனடியாகத் தவத்தை மேற்கொண்டார்.எதையாவது படைக்க வேண்டும் என்ற உந்துதல் அவருக்கு ஏற்பட்டது.புதிய விராட்டை அதாவது அண்டத்தை சிருஷ்டித்தார்.தேவர்களையும் அசுரர்களையும் அழைத்து இந்தப் புதிய அமைப்பை ஏற்குமாறு வேண்டினார். அவர்களும் அதை ஏற்றுக் கொண்டனர்” என்கிறது. அந்த விராட் தான் ரோஹிணி! ப்ரஜாபதியின் புதிய அமைப்பில் ரோஹிணிக்கு முதல் இடம் கிடைத்தது. அதாவது மேல் ஸ்தானம் கிடைத்தது.

 

இதை அறிவியல் ரீதியாகப் பார்ப்போம். வானத்தின் சுழற்சி கடிகார முள் இடமிருந்து வலமாகச் சுழலுவது போன்ற சுழற்சி!க்ளாக்வைஸ் சுழற்சி என்று சாதாரணமாக இதைக் கூறுகிறோம்.இடைவிடாது சுழலும் வானச் சுழற்சியில் மாறாத நட்சத்திரமாக இருக்கும் துருவ நட்சத்திரத்தை அடையாளமாக வைத்துக் கொண்டே வானத்தின் திசையைக் கணிக்க வேண்டியதாக இருக்கிறது.ஆனால் இந்த துருவ நட்சத்திரம் கூட  சுழற்சியில் மிக மிகச் சிறிய அளவில் இடம் பெயர்கிறது.

துருவ நட்சத்திரத்தை முதலில் பார்த்த அதே இடத்தில் பார்க்க சரியாக 25710 ஆண்டுகள் ஆகிறது, (கணித சௌகரியத்திற்காக 26000 ஆண்டுகள் எனக் கொள்வோம்)செலஸ்டியல் ஈக்வேஷன் எனப்படும் வானத்து ரேகை ஒவ்வொரு நட்சத்திரத்தின் வழியாகவும் ஒவ்வொரு கால கட்டத்தில் போகும்.கி.மு 2700ல் இந்த வானத்து ரேகை ரோஹிணியின் வழியே சென்றது.இந்தக் கால கட்டத்தில் தான் நட்சத்திரங்களை ஒரு புதிய அமைப்பின் கீழ் கொண்டு வர வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ஆகவே படைப்பு உந்துதல் உண்டான ப்ரஜாபதி ரோஹிணியை ‘பழைய இடத்திற்குச் செல்ல’ வைத்தார்.பல காலம் களை இழந்திருந்த ரோஹிணி வெட்கத்தால் சிவந்து புதிய பொலிவுடன் கவர்ச்சியுடன் போனாள்.மஹாபாரதம் கூறும் கதையின் உட்பொருள் வானியல் ரீதியாக இது தான்!

 

இப்படி வானவியல் கணிதம், வானச் சுழற்சி, புதிய அமைப்பை மனித குல நன்மைக்காக செய்ய வேண்டிய கட்டாயம் ஆகியவற்றை பாமரனுக்கு எப்படி உணர்த்துவது?அறிஞர்களும் கூடத் திணறும் அற்புத கணிதம் இது. ஆகவே தான் இதை எளிமைப் படுத்தி இதிஹாஸங்களும் புராணங்களும் சுவையான கதையாக அனைத்தையும் விவரித்தன! புராணக் கதைகளை ஒரு சிறந்த வானவியல் நிபுணர் மட்டுமே அறிவியல் ரீதியாகப் புரிந்து கொள்ள முடியும்.

 

முதல் தர ஒளியுடைய நட்சத்திரம்

அல்டிபெரான் எனப்படும் ரோஹிணி 65 ஒளி வருட தூரத்தில் உள்ளது.106 மாக்னியூட்டில் அமைந்துள்ள முதல் தர நட்சத்திரமாகும் இது! சகட அமைப்பில் இதைக் காணலாம் என அறிவியல் கூறுகிறது. ஆக விஞ்ஞானமும் புராணமும் ஒரே விஷயத்தை தங்கள் தங்கள் வழியில் விரிவாகக் கூறுவதைப் பார்க்க முடிகிறது!

 

சிவந்த மணி பெற்ற நீல ரத்னம்!

ரோஹிணி நட்சத்திரத்தின் பெருமை எல்லையற்றது.பல் வேறு மொழிகளில் ஏராளமானவர்கள் அதைப் புகழ்ந்து பாடல்களை எழுதியுள்ளனர்.ஒரே ஒரு பாடலை மட்டும் இங்கு பார்ப்போம். ரோஹிணி நட்சத்திரத்தை கண்ணன் தன் பிறப்புக்காகத் தேர்ந்தெடுத்ததை உலகம் நன்கு அறியும்.அதனால் ரோஹிணியின் பெருமை உச்சத்திற்குச் சென்று விட்டது. ரோஹிணியையும் சுவாதி நட்சத்திரத்தையும் பில்வமங்களர் க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் ஒப்பிட்டு மகிழ்ந்து நம்மையும் மகிழ்விக்கிறார்.

க்ருஷ்ணகர்ணாம்ருதத்தில் இரண்டாவது ஆஸ்வாஸத்தில் 65வது பாடலாக அமைந்துள்ள இப்பாடலை ராமகிருஷ்ண மடம் அண்ணாவின் பதம் பிரித்துத் தந்துள்ள அர்த்தத்துடன் பார்ப்போம்:

 

ஸ்வாதீ ஸபத்னீ கிலதாரகாணாம் முக்தாபலானாம் ஜனனீதி ரோஷாத் I               ஸா ரோஹிணீ நீல-மஸூத ரத்னம் க்ருதாஸ்பதம்    கோபவதூ குசேஷ¤ II

தாரகாணாம் – நட்சத்திரங்களின்                                              ஸபத்னீ – சக்களத்தியாகிய                                                   ஸ்வாதீ – ஸ்வாதீ என்பவள்                                            முக்தாபலானாம் – முத்துக்களுக்கு                                               ஜனனீ கில இதி – தாயாகி விட்டாள் அல்லவா என்ற                           ரோஷாத் – கோபத்தால்                                                        ஸா ரோஹிணீ – நட்சத்திரங்களில் ஒருத்தியாகிய அந்த ரோஹிணீ                 கோபவதூ குசேஷ¤ – இடைப் பெண்களின் மார்பகங்களின் மத்தியில்                      க்ருத ஆஸ்பதம் – இடம் பெற்று விளங்கும்                                       நீலம் ரத்னம் – கிருஷ்ணனாகிற நீல ரத்னத்தை                                   அஸூத – பெற்றாள்

 

ஸ்வாதி நட்சத்திரம் தோன்றும் போது விழும் மழைத்துளிகளைத் தம்முள் ஏந்தி சிப்பிகள் முத்தை உருவாக்கும் என்பதைச் சுட்டிக் காட்டி ஸ்வாதிக்கு போட்டியாக நீல ரத்னத்தை ரோஹிணீ பெற்றுப் பெருமை அடைந்தாள் என்று கூறும் இந்தச் செய்யுள் மிகச் சுவையானது; ஆழ்ந்த பொருளைக் கொண்டது!

நீல ரத்னத்தைப் பெற்ற சிவந்த மணியான ரோஹிணியைப் போற்றி வணங்குவோம்!

************

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! நட்சத்திர அதிசயங்கள்

Aldebaran= star Rohini

நட்சத்திர அதிசயங்கள்

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம். நிலவைக் கவர்ந்த நிலவின் காதலி ரோஹிணியைப் பற்றிப் பார்ப்போம்

நிலவைக் கவர்ந்த ரோஹிணி! – Part 1

By ச.நாகராஜன் Santanam Nagarajan

 

சிவ புராணம் கூறும் ரோஹிணியின் கதை

வானில் உள்ள மர்மங்களைப் புரிந்து கொள்ள சிவ புராணத்தைப் படிக்க வேண்டும். நட்சத்திரத் தோற்றம், அவற்றின் இயல்புகள் மற்றும் படைப்பு மர்மங்களை அற்புதமாக விளக்குகிறது சிவ புராணம்.

தட்சன் தனது புத்திரிகள் 27 பேரை சந்திரனுக்கு மணம் செய்து வைத்தான். சந்திரன் ரோஹிணியின் பால் தீராத காதல் கொண்டான்.மற்ற இருபத்தி ஆறுபேரையும் புறக்கணித்து ரோஹிணியை மட்டும் பிரியாமல் எப்போதும் அவள் கூடவே இருந்தான்.இதனால் மனம் வருந்திய இருபத்தி ஆறு பேரும் தங்கள் தந்தையான தட்ச ப்ராஜாபதியிடம் சென்று முறையிட்டனர்.தட்சனுக்கு எல்லையற்ற கோபம் உண்டானது. அவன் சந்திரனை அழைத்துக் கடுமையாக எச்சரித்தான். ஆனால் சந்திரனோ அந்த எச்சரிக்கையை சட்டை செய்யவில்லை. தீராத மையலில் ரோஹிணியுடன் கூடவே இருந்தான்.இரண்டு முறை எச்சரித்தும் பயனில்லை.

தனது புத்திரிகளின் புலம்பலை மூன்றாவது முறை கேட்ட தட்சன் பெரிதும் வெகுண்டான்.சந்திரனை க்ஷயரோகம் பிடிக்கக் கடவது என்று சாபம் இட்டான். சாபத்தினால் சந்திரன் நாளுக்கு நாள் இளைத்துப் பொலிவை இழக்க ஆரம்பித்தான். சந்திரனே மூலிகைகளின் அதிபதி. அவன் இளைத்ததால் மூலிகைகள் வாடி வதங்க ஆரம்பித்தன.அவைகள் தொடர்ந்து வீரியத்தை இழக்கவே தேவர்கள் பெரிதும் கவலை அடைந்தனர்.சந்திரனை அடைந்து காரணத்தைக் கேட்டனர். சந்திரனும் தட்சனின் சாபம் பற்றிக் கூறினான். தேவர்கள் தட்சனை அடைந்து சந்திரனை மன்னிக்குமாறு வேண்டினர். சிவனின் அருளால் சரஸ்வதி தீர்த்தத்தில் சந்திரன் மூழ்கி எழுந்தால் அவன் க்ஷய ரோகத்திலிருந்து விடுபடுவான் என்று சாப நிவிர்த்திக்கான வழி பிறந்தது. மனம் மகிழ்ந்த சந்திரன் சரஸ்வதி தீர்த்தத்தில் குளித்து வளர ஆரம்பித்தான். மாதத்தில் பாதி நாட்கள் தேய்ந்து        மீதிப் பாதி நாட்கள் வளர்வதுமாக இருக்க ஆரம்பித்தான். அமாவாசையும் பௌர்ணமியும் தோன்றக் காரணமான இந்தக் கதையை விளக்கமாகச் சிவ புராணம் விளக்குகிறது!

 

புராதன நாகரிகங்கள் புகழும் ரோஹிணி

ரோஹிணி என்றால் சிவந்தவள் என்று பொருள். ஆறு நட்சத்திரங்களைக் கொண்ட தொகுதி ரோஹிணி மண்டலம்! அருகே இருக்கும் ஐந்து நட்சத்திரங்களையும் சேர்த்து இதைச் சகடம் எனக் குறிப்பிடுகின்றனர். சிவந்த குதிரை என்று பொருள் படும் லோஹிதாச்வ என்ற பெயராலும் இதைக் குறிப்பிடுவர். அராபிய மொழியில் அல்டிபெரான் என்று இந்த நட்சத்திரத்தை அழைக்கின்றனர். இதற்கு வரிக்குதிரை அல்லது குதிரை என்று பொருள். சந்திரனின் பிறை தரிசனத்தை எப்படி இந்து மதம் வலியுறுத்துகிறதோ அதே போல பிறை தரிசனத்தை இஸ்லாமும் வலியுறுத்துகிறது!

ரோஹிணி நட்சத்திரம் புராதனமான எல்லா நாகரிகங்களாலும் பெரிதும் போற்றப்பட்ட ஒரு நட்சத்திரம். சீனர், பாபிலோனியர், எகிப்தியர்,அராபியர், இந்தியர், கிரேக்கர் என அனைவரும் போற்றிய நட்சத்திரம் இது என்பதோடு அனைத்து நாகரிகங்களிலும் இதைப் பற்றிய ஏராளமான கதைகளும் உண்டு என்பது குறிப்பிடத் தகுந்தது. சந்திரன் – ரோஹிணி பற்றி அகநானூறு, மலைபடுகடாம்,நெடுநல்வாடை உள்ளிட்ட ஏராளமான சங்க நூல்கள் புகழ்ந்து பாடுகின்றன!

எடுத்துக் காட்டாக ‘அறுமீன் பயந்த அறம் செய் திங்கள் செல் சுடர் நெடுங்கொடி போல’ என இணை பிரியாத காதலர்கள் சந்திரனும் ரோஹிணியும் என்று புகழும் சங்கப் பாடல் வரிகளைச் சுட்டிக் காட்டலாம்! தமிழ் ஆர்வலர்கள் நெடுநல்வாடையில் வரும் 159 முதல் 163 வரிகள் சுட்டிக்காட்டும் ‘உரோகிணி நினைவனள் நோக்கி நெடிதுயிரா’ உள்ளிட்ட பல பாடல் வரிகளைப் படித்து மகிழலாம்.

மஹாபாரதக் கதை

இந்த நட்சத்திரத்தின் அதி தேவதை பிரஜாபதி, மஹாபாரதத்தில் வன பர்வத்தில் வரும் ஒரு முக்கியக் கதை ரோஹிணியைப் பற்றி விளக்குகிறது.

அனைவரது பார்வையிலிருந்து  சில காலம் ரோஹிணி மறைந்து விட்டாள் என்றும் ரோஹிணி மேலிருந்து கீழே விழுந்து விட்டாள் என்றும் பிறகு சிறிது காலம் கழித்து ரோஹிணி தன் இடத்தை மீண்டும் பிடித்தாள் என்றும் கதை கூறுகிறது.  இந்தக் கதை கூறும் மர்மத்தைச் சற்று விளக்கமாகப் பார்ப்போம்

-தொடரும்

இந்தக் கட்டுரை ஸ்ரீஜோஸியம் வாரப் பத்திரிக்கையில் வெளியானது. இதை விரும்புவோர் இந்தக் கட்டுரை ஆசிரியர் S. Nagarajan எழுதிய அஸ்வினி, கார்த்திகை, திருவாதிரை உள்ளிட்ட அனைத்து நட்சத்திர அதிசயங்களையும் படித்து மகிழலாம்.