கிளி படங்கள் பல இடங்களிலிருந்து எடுக்கப்பட்டன; நன்றி)
Article No. 2104
Written by London swaminathan (தமிழில் மொழி பெயர்ப்பு)
Date : 28 August 2015
Time uploaded in London :– 8-38 am
காஷ்மீரில் ஒரு பெரிய வணிகர் இருந்தார். அவர் ஆண்டுதோறும் பாரசீகத்துக்குச் சென்று வணிகம் செய்து வந்தார். (பாரசீகத்தின் தற்போதைய பெயர் ஈரான்). இந்திய சரக்குகளை அங்கே விற்றுவிட்டு ஈரானிய சரக்குகளைக் காஷ்மீருக்குக் கொண்டுவந்து விற்பது அவரது வழக்கம். ஒரு முறை பாரசீகத்தில் ஒரு அழகான கிளியைப் பார்த்தார். அது மனிதர்களைப் போலவே பேசுவது கண்டு வியப்படைந்தார். உடனே அந்தக் கிளியை ஒரு விலை பேசி வாங்கிவிட்டார்.
காஷ்மீருக்குத் திரும்பிவந்தவுடன் அழகான, பெரிய கூண்டு செய்து அதற்கு ராஜ உபசாரம் செய்துவந்தார். அவரது குடும்பத்தினரும் அக்கிளியைப் போற்றி வளர்த்தனர். தங்கக் கூண்டு ஆனாலும், கூண்டு என்பது சிறைவாசம்தானே! இருந்த போதிலும் கிளி அழகாகப் பேசி அவர்களை மகிழ்வித்து வந்தது.
ஒரு குறிப்பிட்ட ஆண்டில் காஷ்மீர் வணிகருக்கு உலல்நலம் சரியில்லை. உடனே அந்தரங்கக் காரியதரிசியை அழைத்து, “இந்த ஆண்டு நீ போய் பாரசீகத்திலிருந்து சரக்குகளை வாங்கி வா; எனக்கு உடம்பு சரியில்லை” என்றார். எஜமானர் போட்ட உத்தரவை சிரம் மேல் தாங்கி அவரும் பாரசீகத்துக்குப் புறப்படத் தயாரானார்.
எல்லோர் அன்புக்கும் பாத்திரமான கிளி, அவரை அழைத்து, “அன்பரே. நீர் பாரசீகத்துக்குச் செல்லும்போது எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். இங்கு எனக்கு ராஜபோக உபசாரம் கிடைத்தாலும் என் சொந்தக்காரர்களைப் பார்க்காமல் எனக்கு வருத்தமாக இருக்கிறது. அவர்களை நீங்கள் சந்தித்து நான் குசலம் (நலம்) விசாரித்ததாகக் கூறுங்கள். என் சொந்தக்கார கிளிகள் நீர் செல்லும் நகருக்குக் கிழக்கேயுள்ள தோட்டத்தில்தான் வசிக்கின்றன. மிகப் பெரிய கூட்டம் என்பதால் அந்தக் கிளிகளை நீவீர் எளிதில் இனம் காண முடியும். இடர்ப்பாடு ஏதும் இராது “ என்றது. கடைசியாக நான் அவர்களைப் பார்க்க வேண்டும். அதற்கு என்ன வழி என்றும் ஒரு கேள்வியைக் கேளும்; அவர்கள் சொல்லும் பதிலை என்னிடம் மறவாது செப்பும்” என்றும் கிளி பகன்றது. காரியதரிசியும் அதற்கு ஒப்புக்கொண்டார்.
வணிகரின் செயலர் பாரசீகத்துக்குச் சென்று வணிகப் பணிகளை செவ்வனே செய்து முடித்தார். திடீரென காஷ்மீரிலுள்ள கிளி சொன்ன விஷயம் நினைவுக்கு வரவே நகருக்கு வெளியேயுள்ள தோட்டத்துச் சென்றார். அந்தக்கிளி சொன்னது போலவே எளிதில் சொந்தக் கார கிளிக்கூட்டத்தைக் கண்டு பிடித்தார். அவர்களுடைய சொந்தக்கார கிளி காஷ்மீரில் அடைபட்டிருப்பதையும் அது “நலம்தானா?” என்று வினவியதையும் செப்பிய பின்னர், ”ஒரு முக்கிய விஷயம் காஷ்மீர் கிளி உங்களை மீண்டும் பார்க்கவேண்டுமாம். நீங்கள்தான் வழி சொல்லவேண்டுமாம்” என்றார். அந்தக் கிளிகளோ கீச்சுக் கீச்சு என்று ஒலி எழுப்பியனவே அன்றி பதில் இறுக்கவில்ல. அவரும் மூன்று நான்கு முறை கேட்டுப் பார்த்தார். பலனில்லை. அவர் புறப்படும் முன் ஒரே ஒரு கிளி மட்டும்—வயதான கிளி—இறக்கையெல்லாம் பாதி இழந்துவிட்ட கிளி- தொப்பென்று மரத்திலிருந்து கீழே விழுந்தது. செத்துப்போன கிளி போல சிறகெல்லாம் விரிந்து, மல்லாந்து கிடந்தது. அதைப் பார்த்த செயலர், “ஐயோ பாவம்; தள்ளாத வயது போலும்” என்று சொல்லிக் கொண்டே வெளியேறினார்.
காஷ்மீருக்குத் திரும்பிவந்தவுடன் , எஜமானரிடம் – முதலாளியிடம் – வணிக விஷயங்களை ஒப்புவித்தார். அவருக்கும் மிக்க மகிழ்ச்சி. இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிளி மெதுவாக அவரை அழைத்து “நான் சொன்ன விஷயம் என்னவாயிற்று?” என்று கேட்டது. அவரும் நடந்ததை நடந்தபடியே சொல்லிவிட்டு கடைசியில் ஒரு கிளி மரத்திலிருந்து கீழே விழுந்து இறந்ததையும் கூறினார். இதைக் கேட்டுக்கொண்டே இருந்த கிளி திடீரென கூண்டின் உட்புறத்தில் நிற்கும் மரக்குச்சியில் இருந்து விழுந்தது. அது சிறகை விரித்து மல்லாந்து கிடந்ததைப் பார்த்துவிட்டு எஜமானரிடம் கிளி திடீரென்று இறந்துவிட்டது என்றார். அவரும் அதன் பரிதாபச் சாவைப் பார்த்துவிட்டு வேலைக்கரனைக் கூப்பிட்டு, ஊருக்கு வெளியேயுள்ள தோட்டத்தில் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்யச் சொன்னார்.
உடனே வேலைக்கரன் அந்தக் கிளியை மிகவும் மரியாதையுடன் எடுத்துக்கொண்டு ஊருக்கு வெளியே ஒரு இலைதழை படுக்கை செய்து அதன்மீது வைத்துவிட்டு, ஒரு குழிதோண்டத் துவங்கினான். இதுவரை இறந்ததுபோல பாவனை செய்த கிளி சிறகடித்துப் பறந்தோடிப் போய்விட்டது!!!
விடுதலை! விடுதலை!
சுவாமி ராமதாஸ் சொன்ன கதை இது.
(கிளி ப்டம்: விக்கிபீடியா)
அவர் சொல்லுவார்: எப்படி அந்தக் கிளி தான் (நான்) என்னும் தன்மையை இழந்தவுடன் விடுதலை பெற்றதோ அது போல நாமும் அஹம்காரம் (யான், எனது என்னும் செருக்கு) என்பதை இழந்தோமானால் விடுதலை/ முக்தி/ மோக்ஷம் கிடைக்கும்.
தமிழில் மொழிபெயர்ப்பு- லண்டன் சுவாமிநாதன்
You must be logged in to post a comment.