
Post No. 9857
Date uploaded in London –16 JULY 2021
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
ஆங்கிலத்தில் ‘பெயில்’ ஆன உலகப் புகழ்பெற்ற இந்திய கதாசிரியர் ஆர்.கே நாராய(ண)ன்


மால்குடி டேய்ஸ் MALGUDI DAYS , ஸ்வாமி அண்ட் ஃப்ரண்ட்ஸ் SWAMI AND FRIENDS கதைகள் மூலம் உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர் ராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண சுவாமி ஐயர் ஒரு முறை ஆங்கிலப் பரீட்சசையில் தோல்வி அடைந்தார் என்றால் வியப்பாக இருக்கிறதல்லவா !
தமிழ், கன்னடம் போன்ற இந்திய மொழிகளில் சிந்திப்பதை அப்படியே ஆங்கிலத்தில் அழகு குன்றாமல் நகைச் சுவை ததும்ப எழுதுவதில் மன்னன் ஆர்.கே நாராயண் . உலகப் புகழ் பெற்ற ஆங்கில எழுத்தாளர்களை கவர்ந்திழுத்தவர் இவர். கிரஹாம் க்ரீனின் GRAHAM GREENE ஆப்த நண்பர்.
பிறந்த தேதி – அக்டோபர் 1, 1906
இறந்த தேதி – மே 13, 2001
வாழ்ந்த ஆண்டுகள் – 94
சென்னையில் பிறந்த ஆர்.கே.என்., பாட்டியின் கவனிப்பில் வளர்ந்தார். பாட்டியின் கதைகளைக் கேட்டு பிற்காலத்தில் அதே பாணியில் , எளிய நடையில் எழுதினார். சென்னையிலும் மைசூரில் மஹாராஜா கல்லூரியிலும் பயின்றார். பின்னர் ஆசிரியராகப் பணியாற்றினார்.அதற்குப்பின்னர் முழு நேர எழுத்தாளர் ஆனார்.
ராஜம் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார் ; அவர் ஐந்தே ஆண்டுகளில் இறந்தது பெரிய அடியாக விழுந்தது. மறுமணம் செய்துகொள்ள மறுத்தார்.1994-ல் ஹேமா என்ற புதல்வியை இழந்தது இரண்டாவது அடியாக விழுந்தது. பரீட்சைகளில் இரு முறை தோல்வி. அதில் ஓர் முறை ஆங்கிலத்தில்!!
இவருடைய 11 நாவல்கள், மால்குடி என்னும் கற்பனைக் கிராமத்தை தளமாகக் கொண்டது. ஒரு இந்துவுக்கு எவையெல்லாம் மதிப்பும் மரியாதைக்கும் உரியனவோ அவற்றையெல்லாம் மாற்றாரும் மதிக்கும் வகையில் எழுதிய மஹா புருஷன். ஏனைய இந்திய எழுத்தாளர்கள் இந்தியாவைக் கிண்டலும் கேலியும் செய்யும் ஆணவம் மிக்க ஆங்கில அடிவருடிகள்.
வாழ்க்கையின் நிதர்சன உண்மைகள், தார்மீகப் பிரச்சனைகள்/கேள்விகள், மனித நேயம், பழ மைக்கும் புதுமைக்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் ஆகியவற்றை இவருடைய படைப்புகள் பிரதிபலித்தன.
இந்து மதத்தில் ஆழ்ந்த பற்றுடைய இவர் , மறுபிறப்பு, புனர் ஜென்மத்தில் நமிக்கை உடையவர். அவைகளைக் கதைகளிலும் பயன்படுத்தினார். ஒருகாலத்தில் ஆவியுலகத் தொடர்புகளிலும் நம்பிக்கை கொண்டிருந்தார்.
கட்டுரைகள், தன்னுடைய சுய நினைவலைகள், குழந்தைகளுக்கான கதைகள், ஆகியவற்றையும் சிறு கதைகளையும், புதினங்களையும் எழுதி இலக்கிய வரலாற்றில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
தி கைடு THE GUIDE என்னும் இவருடைய நாவல் மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது. இதில் நகைச்சுவையும் உண்டு; சோகமும் உண்டு. ஒரு மோசடிக்காரன் எப்படி புனிதன் ஆகிறான் என்ற கதை இது.
இவருடைய மால்குடி டேய்ஸ் MALGUDI DAYS கதை டெலிவிஷனில் காட்டப்பட்டவுடன் அதுவரை இவரை அறியாதோரும் இவரை அறிய வாய்ப்புக்கிட்டியது.
ஆர்.கே.என். கதைகளில் அப்பாவி மக்களை சந்திக்கும் அதே நேரத்தில் ஆழமான இந்திய தத்துவத்தையும் அறிய முடியும். அவர் எழுதிய 15 நாவல்களில் மூன்று நாவல்கள் அவரது ஆற்றலின் உச்சத்தை எடுத்துக் காட்டுகின்றன.அவை The Financial Expert (1952), The Guide (1958), and The Man-Eater of Malgudi (1961).
ஏழு சகோதர சகோதரிகளுடன் பிறந்த இவருடைய தம்பி ஆர் கே லக்ஷ்மணன் RK LAXMAN இந்தியாவின் புகழ்பெற்ற கார்ட்டூனிஸ்ட் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்.கே.என். தந்தை ஒரு பள்ளிக்கூட தலைமை ஆசிரியர். அங்குள்ள புஸ்தகங்களும் , ஆங்கில பத்திரிக்கைகளும் இவருடையய ஆங்கில அறிவை மேம்படுத்தின. வீட்டில் ஆங்கிலம் பேசினால் அதைத் தவறின்றி பேச வேண்டும் என்பது தந்தையின் கண்டிப்பான உத்தரவு .
1930ம் ஆண்டில் பட்டம் பெற்றார். ஆசிரியராக பணியாற்றப்போன ஆர்.கே.என். நாளே நாட்களில் வேலையை விட்டுவிட்டு ஓடிவந்தார்.
1930ம் ஆண்டில் அவர் பாட்டி தேர்ந்தெடுத்த ஒரு நல்ல நாளில் நோட்டுப் புஸ்க த்தைத் திறந்து வைத்துக்கொண்டு மனக் கண் முன்னர் என்ன வருகிறது என்று காத்துக் கொண்டிருந்த நேரத்தில் மால்குடி என்ற போர்டுடன் ஒரு ரயில்வே ஸ்டேஷன் தோன்றியது. அன்று முதல் அதை விடாப்பிடியாகப் பிடித்துக்கொண்டார்.
முதலில் இவர் நண்பர் மூலம் லண்டனில் நாவல்களை வெளியிட பலரை நாடினார் . ஒருவரும் முன்வரவில்லை. அந்த எழுத்துக் காகிதங்களை ஒரு கல்லோடு கட்டி தேம்ஸ் நதியில் மூழ்கடித்து விடுங்கள் என்று நண்பருக்கு எழுதினார். அவரோ கிரஹாம் க்ரீன் GRAHAM GREENE என்ற புகழ்பெற்ற எழுத்தாளரிடம் கொடுக்கவே அவர் ஒரு வெளியீட்டாளர் மூலம் முதல் நாவலை வெளியிட்டார். அப்போது முதல் கிரஹாம் க்ரீன் இவரது குரு ஆனார். எல்லா நாவல்களையும் அவருக்கு அனுப்பி, அவருடைய ஆலோசனைப்படி திருத்தினார். பெயரைக் கூட ஆர். கே. நாராயண் என்று சுருக்கிவைத்தது அவருடைய ஆலோசனையின் பேரில்தான்.
சில முறை இவரது பெயர் நோபல் பரிசுக்குப் பரிந்துரை செய்யப்பட்டது. அது எட்டாக் கனியானபோதும் உலகப் புகழ் பெற்ற பல இலக்கிய விருதுகளை வென்றார். உலகம் முழுதும் சுற்றுப்பயணம் செய்த நாட்களில் உலகப் புகழ் பெற்ற அத்தனை எழுத்தாளர்களையும் சந்தித்தார். இந்தியாவுக்குப் பெருமை தேடித்தந்த புகழ்மிகு எழுத்தாளர் ஆர்.கே.நாராயண்
இவருடைய படைப்புகள் –


1935 – SWAMI AND FRIENDS
1937 – THE BACHELOR OF ARTS
1938- THE DARK ROOM
1945 – GRATEFUL TO LOVE AND DEATH
1949- THE PRINTER OF MALGUDI
1958- THE GUIDE
1961- THE MAN EATER OF MALGUDI
1967- THE VENDOR OF SWEETS
1977- THE PAINTER OF SIGHNS
1982- MALGUDI DAYS
1985- THE BANYAN TREE AND OTHER STORIES
1986- THE TALKATIVE MAN
1990- THE WORLD OF NAGARAJ
1992- GRANDMOTHER’S TALES
இந்தியாவின் சாஹித்ய அகாடமி விருது, பத்மபூஷன் விருதுகளால் கவுரவிக்கப்பட்டார். ராஜ்ய சபை மூலம் எம்.பி பதவியும் கிடைத்தது.


-SUBHAM-
tags –ஆர். கே நாராயண் , நாராயணன், மால்குடி, கிரஹாம் க்ரீன்


