பொம்பளை சிரிச்சா, உதைச்சா, பார்த்தா போச்சு

பொம்பளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு என்பது தமிழ் பழமொழி. ஆனால் பெண்கள் சிரித்தால் செண்பக மரம் பூக்கும் என்கிறது வடமொழி. பெண்களைப் போல் மரங்களுக்கும் மசக்கை (தோஹத) உண்டாம். பெண்களின் அன்புக்காக அவை ஏங்குமாம். தமிழர்களும் வேங்கை மரத்தை பெண்களின் திருமணத்தோடு இணைத்துப் பேசுவர். சங்க இலக்கிய நூல்கள் வேங்கை பரத்தின் அடியில் பெண்கள் புலி புலி என்று குரலிடுவதையும் அதனால் அது பூப்பதையும் குறிப்பால் உணர்த்தும்

சம்ஸ்கிருதத்தில் ஒரு செய்யுள் இருக்கிறது. அது பெண்களுக்கும் மரத்துக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு பற்றிப் பேசுகிறது. அசோக மரத்தைப் பெண்கள் உதைத்தால் அது பூக்கும் என்று 2000 ஆண்டுகளாக வடமொழிப் புலவர்கள் பாடினர். இதோ அவர்கள் தரும் பட்டியல்:

பெண்கள் உதைத்தால் பூக்கும் அசோக மரம்
பெண்கள் சிரித்தால் பூக்கும் செண்பக மரம்
பெண்கள் பேசினால் பூக்கும் நமேரு மரம்
பெண்கள் தழுவினால் பூக்கும் குராபக மரம்
பெண்கள் பார்த்தால் பூக்கும் திலக மரம்

நாலிங்கிதக் குரபகஸ் திலகோ ந த்ருஷ்டோ
நோ தாடிதஸ்ச சரணை சுத்ரசாம் அசோக:
சிக்தோ ந வக்த்ரம் அதுனா பகுளாஸ் ச சைத்ரே
சித்ரம் ததாபி பவதி ப்ரஸவ அவகீர்ண என்பது சம்ஸ்கிருதப் பாடல்.

பெண்கள் எத்தனை வகை?

பெண்களை வடமொழி வித்தகர்கள் நாலு வகையாகவும், பரத சாஸ்திர அறிஞர் பரத ரிஷி எட்டு வகையாகவும் தமிழர்கள் வயதின் அடிப்படையில் ஏழு வகையாகவும், ஜப்பானியர்கள் ஒன்பது வகையாகவும், ஆக்ஸ்போர்ட் விஞ்ஞானிகள் டி.என்.ஏ. அடிப்படையில் ஏழு வகையாகவும் பிரித்தனர்.

பத்மினி, சங்கினி,ஹஸ்தினி, சித்ரினி

வடமொழி நூலர்கள் குணத்தின் அடிப்படையில் பெண்களை நாலு வகையாகப் பிரித்தனர். அவர்கள் பத்மினி, சங்கினி, ஹஸ்தினி, சித்ரினி எனப்படுவர்.

பத்மினி பெண்களைப் பார்ப்பது அபூர்வம். அவர்கள் மிகவும் அழகானவர்கள், மென்மையானவர்கள்,புனிதமானவர்கள். முகம் வட்ட வடிவம் உடையது. உடலும் உருண்டு திரண்டு இருக்கும். அவர்கள் சுஹாசினி (மலர்ந்த முகம்) சுபாஷினி ( இனிய சொல்), சாருஹாசினி (புன்சிரிப்புடையோர்) ஆவர். அழகிய கவர்ச்சிகரமான பார்வையால் எதிரிகளையும் தேவர்களையும் வசப்படுத்துவர்.

சங்கினி வகைப் பெண்கள் அழகானவர்கள், புத்திசாலிகள், சுறு சுறுப்பானவர்கள். சங்கு வடிவத்தில் சில உடல் அம்சங்கள் ஒல்லியாக இருக்கும். சுதந்திர சிந்தனை படைத்தவர்கள். அதிக சக்தி உடைய இவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவோர் கார்கி, வைதேகி, சுரவந்தியா ஆவர்.

ஹஸ்தினி வகைப் பெண்கள் பார்பதற்கு இனியவர்கள், ஆனால் பருமனானவர்கள். பின் தூங்கி பின் எழும் பத்தினிகள். கேளிக்கை விரும்பிகள். நீங்கள் முடிவு எடுத்தால் கோபிப்பார்கள். தானாகவும் முடிவு எடுக்க மாட்டார்கள். கேளிக்கையே வாழ்க்கையின் குறிக்கோள். பிரபுக்கள் வம்சம்.

சித்ரினி மிக மெல்லிய தேகம் உடையோர். மூங்கில் குச்சியோ எனலாம். அலங்காரத்திலும் கலைகளிலும் ஆர்வம் அதிகம். அலமாரி முழுதும் ஆயிரம் உடைகளைப் பார்க்கலாம். படுக்கப் போகும் போதும் படுத்து எழுந்திருக்கும் போதும் அலங்காரத்துடன் வருவர். அலங்காரி, சிங்காரி ஒய்யாரி-பேஷன் பேர்வழிகள்.

Tree Yakshi Kicking the Asoka Tree, 2200 year old statue

2000 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களை வகைப் படுத்தினர் ஆன்றோர்கள். இன்றும் இவ்வகையினரைக் காண்பது நம் முன்னோரின் மேதாவிலாசத்தைக் காட்டும்.
நாட்டிய சாத்திரம் எழுதிய வட மொழி அறிஞன் பரத முனி எட்டு வகை நாயகிகளைப் பற்றிப் பேசுகிறார். இவரகள் குணத்தால் பிரிக்கப்பட்டவர் இல்லை. திரைப்பட கதாநாயகிகள் போல நடிப்பதற்காக தோன்றுபவர்கள்.

அவர்கள் ;1.வாசக சஜ்ஜா நாயிகா:காதலனுடன்டன் குலவத் தயாரான உடையுடன் இருப்பாள் 2.விரஹோத் கண்டிதா நாயிகா: பிரிவால் வருந்தும் பெண் 3. ஸ்வாதீன பர்த்ருஹா நாயிகா: கணவனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவள் 4. கலஹாந்த்ரிதா நாயிகா: சண்டை போட்டுப் பிரிந்தவள் 5.கண்டிதா நாயிகா: காதலுனிடம் கோபமாகச் சீறுபவள் 6.விப்ரலப்தா நாயிகா: காதலனால் ஏமாற்றப்பட்டவள் 7.ப்ரோஷித பர்த்ருகா நாயிகா: கணவனுடன் சுகமாக வசிப்பவள் 8.அபிசாரிகா நாயிகா: கணவணை காண ஆவலுடன் செல்லும் நாயகி.
இந்த எட்டு வகைகாயும் நாடகம் திரைப்படம் ஆகியவற்றில் காண்கிறோம்.

தமிழர்கள் செய்த 7 வகை

தமிழர்கள் 40 வயதுக்குக் குறைவான பெண்களை மட்டும் வயது அடிப்படையில் ஏழு பிரிவுகளாகப் பிரித்தனர். அதற்குப் பிறகு அவர்களைக் கண்டுகொள்ளவில்லை. பேதை (5—7), பெதும்பை (8—11), மங்கை (12—13), மடந்தை (14—19), அரிவை (20—25), தெரிவை (25—31), பேரிளம் பெண் (32 முதல் 40 வயது).

இது தவிர சம்ஸ்கிருத நிகண்டு அமரகோஷம், தமிழ் நிகண்டு பிங்கலந்தை போன்றவற்றில் பல வடமொழிப்ப் பெயர்கள் உள்ளன. வாலை, தருணை, ப்ரவுடை, விருத்தை என்பன அந்தப் பிரிவாகும். இவைகளும் வயதின் அடிப்படையில் அமைந்தனவே.

காமசூத்திரம் எழுதிய வாத்ஸ்யாயனர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே பாலியல் ரீதியில் ஆண்களையும் பெண்களையும் பலவகைகளாகப் பிரித்திருப்பதும் குறிப்பிடத்த்க்கது. நம் முன்னோர்கள் எந்த அளவுக்கு ஆராய்ச்சி மனப்பான்மையோடு இவ்விஷயங்களை அனுகினர் என்பதைப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.

பெண்ணின் குணங்கள்

தாயின் கருணை, அடியாள் போல தொண்டு,பூமாதேவி போல பொறுமை, படுக்கை அறையில் மகிழ்விக்கும் பெண், குடும்ப நிர்வாகத்தில் மந்திரி போல அற்புத மூளை—அத்தனையும் வாய்கப் பெற்றவள் தாய். இதோ நீதி வெண்பா பாடல்:

அன்னை தயையும் அடியாள் பணியும் மலர்ப்
பொன்னின் அழகும் புவிப் பொறையும் – வன்னமுலை
வேசி துயிலும் விறல் மந்திரி மதியும்
பேசில் இவையுடையாள் பெண்

மஹாபாரதம், லலிதா சஹஸ்ரநாமம் ஆகியவற்றிலும் பெண்கள் பல வகையில் பிரிக்கப் பட்டிருக்கின்றனர்..

மரபியல் ரீதியில் ஏழு வகை

மனித இனம் முழுதும் ஏழு ரிஷிகளின் (சப்த ரிஷி) வழித்தோன்றியதாக இந்து மத நூல்கள் கூறுகின்றன. அத்ரி, ப்ருகு, குத்ஸ, வசிஷ்ட, கௌதம, காஸ்யப, ஆங்கிரஸ ரிஷி என எழுவர். மேலை நாட்டில் ஆக்ஸ்பர்ட் பேராசிரியர் ப்ரையன் சைக்ஸ் (Bryan Sykes) ஆராய்ந்ததில் வேறு ஒரு உண்மையைக் கண்டார். அவர் ஐரோப்பாவிலிருக்கும் பெண் இனங்களின் உயிர் அணுவிலுள்ள மைடோகாண்ட்ரியாவை ஆராய்ந்து பார்த்து அவர்கள் அனைவரும் ஏழு தாய்மார்கள் இடமிருந்து தோன்றினர் என்றும் அவருக்கு மூலமான பெண்மணி ஆப்பிரிக்காவில் சில லட்சம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தார் என்றும் கூறுகிறார். ஏவாளின் ஏழு சகோதரிகள் The Seven Sisters of Eve என்று அவர் ஒரு புத்தகமும் எழுதி தனது மரபியல் ஆய்வுகளை வெளியிட்டார்.

ஆண்கள், பெண்கள் ஆகிய இருவர் இடத்திலும் மைடோகாண்ட்ரியல் டி.என்.ஏ.(mitochondrial DNA) இருந்தாலும் அம்மாவிடமுள்ள மைடோகாண்ட்ரியல் டி.என்.ஏ. மட்டுமே குழந்தைகளுக்குப் போகும். ஆகவே இதை வைத்து மூதாதையாரான பெண்மணி யார் என்பதை ஆராயலாம். அவர் கண்டுபிடித்த ஏழு வகைப் பெண்களூக்கும் கற்பனைப் பெயர்கள் கொடுத்திருக்கிறார். அவையாவன: 1.ஊர்சுலா 2.சீனியா 3.ஹெலீனா 4.வெல்டா 5.தாரா 6.காத்ரீன் 7.ஜாஸ்மின்

இந்தப் பெயர்கள் கற்பனை என்றாலும் அவர்களின் முதல் எழுத்து அந்த டைப்பின் (வகையின்) எழுத்தாகும் எ.கா. ஊர்சுலா என்றால் யு, சீனியா என்றால் எக்ஸ்—இப்படி வரும்.
ஜப்பனியர்கள் ஒன்பது குலத்திலிருந்து வந்ததாகவும் அமெரிக்க பழங்குடியினர் 4 குலத்திலிருந்து வந்ததாகவும் இந்துக்கள் ஏழு ரிஷிகளிடமிருந்து வந்ததாகவும் கூறுகிறனர். இவைகளையும் மரபியல் ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கமுடியும்.

இப்படியே ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் மனித குலம் ஒன்றே –எல்லோரும் ஒரு தாய் மக்கள்- நாம் அனைவரும் சகோதர சகோதரிகள் என்ற பரந்த மனப் பான்மை வளரும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ் முழக்கமும் “ ஒன்று பரம்பொருள், நாம் அதன் மக்கள், உலகு இன்பக் கேணி என்று நல் வேதம் கூறுவதாக பாரதி கூறும் வேத வாசகங்களும் உயிர்பெறும்.

ஒன்று பரம்பொருள் நாம் அதன் மக்கள்
உலகு இன்பக் கேணி என்றே—மிக
நன்று பல் வேதம் வரைந்தகை பாரத
நாயகி தன் திருக் கை (தேசிய கவி சுப்ரமண்ய பாரதி)
**************

Leave a comment

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: