மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

Date: 18 FEBRUARY 2018

 

Time uploaded in London- 20-43

 

Written by London swaminathan

 

Post No. 4760

 

PICTURES ARE TAKEN from various sources. They may not be directly related to the article. They are only representational.

 

 

WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.

 

 

மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? சாணக்கியன் அறிவுரை (Post No.4760)

ஒரு தந்தை தனது மகனை எந்த வயது வரை கொஞ்சலாம்? எப்போது அவனை நண்பனாக நடத்த வேண்டும் என்று சாணக்கியன் சொல்கிறான்.

 

மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால் 2300 ஆண்டுகளுக்கு முன்னர் சாணக்கியன் பேசாத விஷயமே இல்லை. மாபெரும் மகத சாம்ராஜ்யத்தைத் ஸ்தாபித்த, மிகப் பெரிய பொருளாதார நிபுணன் , ராஜ தந்திரி மற்ற விஷயங்கள் பற்றிச் சொல்லுவது அற்புதமானது. அவருக்குப் பின்னர் தமிழகத்தில் தோன்றிய வள்ளுவன், திருக்குறளில் செப்பும் கருத்துகள் பல, சாணக்கியனின் கருத்துகளை எதி, ரொலிப்பதாக உள்ளது. இமயம் முதல் குமரி வரை பாரதீய சிந்தனை ஒன்றே என்பதற்கு இது மேலும் ஒரு சான்று.

 

ஒரு மகனை தந்தையானவர் ஐந்து வயது  வரை கொஞ்சலாம்; பத்து வயது வரை கட்டு திட்டங்களுடன் பராமரிக்கலாம். 16 வயதை அடைந்துவிட்டாலோ மகனை நண்பரைப் போல நடத்த வேண்டும்

லாலயேத் பஞ்ச வர்ஷாணி தச வர்ஷாணி தாடயேத்

ப்ராப்தே து ஷோடசே வர்ஷே புத்ரம் மித்ரவதாசரேத்

சாணக்கிய நீதி 3-18

xxxx

 

வரமேகோ குணீ புத்ரோ நிர்குணைஸ்ச சதைரபி

ஏகஸ்சந்த்ரஸ்தமோ ஹந்தி ந ச தாராகணைரபி

சாணக்கிய நீதி 4-6

குணமற்ற நூறு புதல்வர்களைவிட குணவானாகிய ஒரு பிள்ளை இருப்பது மேல்; இரவு நேரத்தில் ஒரு நிலவு இருளை எல்லாம் போக்கிவிடும்; நிறைய நட்சத்திரங்கள் போக்காது.

 

மூர்க்கஸ்சிராயுர்  ஜாதோபி தஸ்மாத்  ஜாதம்ருதோ வரஹ

ம்ருதஹ ச்ஸ சால்பதுக்காய யாவஜ்ஜீவம் ஜடோ தஹேத்

சாணக்கிய நீதி 4-7

xxx

ஒரு முட்டாள் குழந்தையைப் பெறுவதற்குப் பதிலாகக் குறைப் பிரசவம் ஆனாலும் சரியே. குறைப் பிரசவம் என்பது அந்த நேரத்தில் துக்கத்தைக் கொடுத்துவிட்டு மறைந்து விடும்; முட்டாள் பிள்ளையோ பெற்றோரின் வாழ்நாள் முழுதையும் வீணாக்கி விடும்.

 

 

ஏகோநாபி ஸுபுத்ரேண வித்யாயுக்தேன ஸாதுனா

ஆஹாலாதிதம் குலம் ஸர்வம் யதா சந்த்ரேண சர்வரீ

சாணக்கிய நீதி 3-16

 

ஒரு நல்ல மகன் இருந்தால் அவன் குடும்பம் முழுவதையும் புகழ் அடையச் செய்வான்; ஒரு சந்திரனால் இரவும் முழுதும் ஒளி பெறுவதைப் போல!

xxx

கிம் ஜாதைர்பஹுபிஹி புத்ரைஹி சோக  ஸந்தாபகாரகைஹி

வரமேகஹ குலாலம்பீ யத்ர விஸ்ராம்யதே குலம்

சாணக்கிய நீதி 3-17

 

துக்கத்தையும் கெட்ட பெயரையும் உண்டாக்கும் பல புதல்வர்கள் இருந்து என்ன பயன்? குடும்பம் முழுதும் பயன அடையக்கூடிய ஒரு மகன் போதும்.

xxx

 

இதை மக்கட்பேறு என்ற அதிகாரத்தில் வள்ளுவன் எழுதிய பத்து குறட்களுடன் ஒப்பிட்டால் இரு அறிஞர்களும் ஒரே விஷயத்தைச் சொல்லுவதைக் காணலாம்; இதோ சில குறட் பாக்கள்:

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்

பண்புடை மக்கட் பெறின் 62

 

மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை

என்னோற்றான் கொல்லெனுஞ் சொல் –70

 

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனைச்

சான்றோன் எனக் கேட்ட தாய் –69

 

தம்மின் தம் அறிவுடைமை மாநிலத்து

மன்னுயிர்க்கு எல்லாம் இனிது- 68

தந்தை மகற்கு ஆற்றும் நன்றி அவையத்து

முந்தியிருப்பச் செயல் –67

பொருள் எழுதத் தேவை இல்லாத, எளிமையான,எல்லோருக்கும் தெரிந்த குறள்கள்!

 

இந்து மத புராணங்களில் உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்குப் புகழ் பெற்ற சிறுவர்கள் உள்ளனர்:

 

 

நட்சத்திர நிலைக்கு உயர்ந்த துருவன்,

ஒரு அணையை கை விரலால் இரவு முழுதும் அடைத்த ஸ்வேதகேது,

யமனையே விரட்டிச் சென்று கேள்வி கேட்ட நஸிகேதஸ்,

புத்திசாலியான என்றும் 16 வயது வாழும் வரம் பெற்ற மார்கண்டேயன்,

இறைவன் பெயரைச் சொல்லி தந்தையின் ஆட்சியையே எதிர்த்த பிரகலாதன்,

16 வயத்துக்குள் பல்லாயிரம் பாடல் பாடிய ஞான சம்பந்தன்,

16 வயதுக்குள் பாவை பாடிய ஆண்டாள்,

இளம் வயதிலேயே நாட்டை வலம் வந்த ஆதிசங்கரர்!

 

போன்ற பல இளைஞர்கள் முன் உதாரணமாக விளங்கினர். உலகில் வேறு எந்த சமயத்திலும், கலாசாரத்திலும் இப்படி இல்லை என்பதால் பாரதீய கலாசாரமே பழமையான, முதன்மையான நாகரீகம் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

(நல்லவர்களை எப்படி அறியலாம்? பிறர் எழுதியதை, பிறர் எடுத்த படங்களை அவர்களுடைய பெயர்களுடன் வெளியிடுவார்கள். கெட்டவர்களை எப்படிக் கண்டுபிடிக்கலாம்? பிறர் எழுதியதை,அது வெளியான பிளாக், பத்திரிக்கை பெயர்களை நீக்கிவிட்டு , தங்களுடையது போல வெளியிடுவார்கள்;  கெட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் எளிது))

 

–Subaham–

 

Leave a comment

Leave a comment