Written by London Swaminathan
Post No. 15,945
Date uploaded in London – 4 July 2026
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
WORDS BEGINNING WITH “P”
பைலர் – வேத வியாசரின் நான்கு சீடர்களில் ஒருவர் பைலர்; இவருக்கு ரிக்வேதத்தைக் கற்பித்து அதைப் பரப்பும் பொறுப்பினை வேத வியாசர் வழங்கினார் . ஏனைய மூன்று சீடர்கள் சுமந்து, ஜைமினி, வைஸம்பாயான ஆவர். பைலர் (पैल) ரிக் வேதத்தை, இந்திரப்ரமதி, பாஸ்கலயென்ற இருவருக்கு ஓதுவித்தார்; யுதிஷ்த்திரர் நடத்திய ராஜ சூய யாகத்துக்குப் பைலர் வந்த செய்தியை மஹாபாரதம் நமக்குத் தெரிவிக்கிறது .
***
பாஞ்சாலம் – தற்போது பஞ்சாப்என்று பெயர் ; பஞ்சாப் என்றால் ஐந்து நதிகள் ஓடும் பிரதேசம் என்று பொருள் .
***
பாஞ்சாலி – திரௌபதியின் பெயர் ; பாஞ்சாலத்தை ஆண்ட துருபதனின் புதல்வி என்பதால் திரௌபதி என்றும் அழைக்கப்பட்டாள் ; அவள் பேரழகி , ஆனால் கறுப்பி; அதனால் கிருஷ்ணா என்றும் பெயர் .
***
பஞ்சதந்திரம் – விஷ்ணு சர்மா என்ற பிராமணன், சம்ஸ்க்ருத மொழியில் எழுதிய நூல் பஞ்சதந்திரம் ஆகும் . பறவைகளையும் விலங்குகளையும் பயன்படுத்தி அரசிளங்குமாரர்களுக்கு நீதி நெறிகளையும், ஆட்சி செய்யும் முறையையும் விளக்கிய நூல் இது சுலோகத்துக்கு சுலோகம் ஆயிரக்கணக்கான பொன்மொழிகள் நிறைந்தது .2000 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான இந்த நூலை பாரசீக மொழியில்1500 ஆண்டுகளுக்கு முன்னர் மொழிபெயர்த்ததால் உலகம் முழுதும் பரவியது.
ஐந்து தந்திரங்கள் பெயர்களும் அர்த்தமும் :
1.மித்ர-பேதம் – நண்பர்களுக்கு இடையே சண்டையை உருவாக்குதல் ;
2.மித்ர-லாபம் – நண்பர்களை உருவாக்கிக் கொள்ளுதல்;
3.காகோலுகியம்– காகம் + உலூகம்= காகத்துக்கு ஆந்தைக்கும் இடையே வளர்ந்த பகைமை ;
பகல்வெல்லும் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது- 471 என்று வள்ளுவரும் இதை மொழிபெயர்த்துள்ளார்.
4.லப்தப்பிரநாசம் – கிடைத்ததை இழத்தல்;
5.அபரீக்ஷிதாகாரகம் – பதறாத காரியம் சிதறாது
பல குறள்கள், பஞ்ச தந்திரக் கதைகளின் எதிரொலி என்பதை எனது ஆராய்ச்சிக்கட்டுரையில் எழுதியுள்ளேன்.
***
பாண்டவர்கள் : பாண்டுவின் ஐந்து (பஞ்ச) புதல்வர்கள் ; யுதிஷ்டிரன் , பீமன், அர்ஜுனன் என்ற முதல் மூவர் குந்தி மூலமும் நகுலன், சகாதேவன் என்ற இரட்டையர் மாத்ரி மூலமும் பிறந்தார்கள். 13 ஆண்டு வனவாசத்துக்குப் பின்னர் கெளரவர்களுடன் போரிட்டு வெற்றி பெற்று ஹஸ்தினாபுரத்திலிருந்து ஆட்சிபுரிந்தார்கள் ; இதை உலகப் புகழ்பெற்ற மஹாபாரதம் சம்ஸ்க்ருத மொழியில் ஒரு லட்சம் ஸ்லோகங்களில் வருணிக்கிறது.
***
பாண்டியர்: தென் தமிழ் நாட்டினை 2300 ஆண்டுகளுக்கு முன் ஆளத் துவங்கினார்கள். மதுரையை முஸ்லிம்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் கைப்பற்றியதோடு பாண்டியர்கள் மறைந்தனர் ; பின்னர் விஜய நகரப்பேரரசர்கள் மதுரையைக் கைப்பற்றி இந்து ஆட்சியை நிறுவினார்கள் . அகஸ்திய மஹரிஷியோடு தொடர்புபடுத்தி, காளிதாசன் குறிப்பிட்ட ஒரே தமிழ் மன்னர் பாண்டியர்தான்! இவர்களிலு மிகப் பழைய மன்னரான பல்யாக சாலை முதுகுடுமிப் பெருவழுதி (மீனாட்சி சுந்தரேஸ்வரர் ) கோவிலை வலம் வந்ததை புறநானூறு பாடுகிறது. மூன்று தமிழ்ச் சங்கங்களை நிறுவி தமிழை வளர்த்தார்கள். முத்துக்கள் மூலமும் தமிழ் மொழி மூலமும் உலகப் புகழ்பெற்றார்கள்.
***
பாண்டு: பஞ்ச பாண்டவர்களின் தந்தை; விசித்திர வீர்யன் என்ற மன்னர் இறந்த பின்னர் அவருடைய மனைவி அம்பாலிகா மூலம் வியாஸருக்குப் பிள்ளையாகப் பிறந்தார் ; அந்தக்காலத்தில் ஆட்சி செய்ய முறையான அரச குமாரன் இல்லாவிடில் ஒரு ரிஷி மூலம் குழந்தையைப் பெறும் முறை இருந்ததால் அம்பாலிகாவும் வியாசரும் இணைந்தனர் ; பிறக்கும் போதே பாண்டு ரோகத்துடன் பிறந்தார்; அவருடைய அண்ணன் திருத்த ராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால் ஹஸ்தினாபுரத்தின் அரசுக் கட்டில் ஏறினார் ; குந்தி, மாத்ரி என்ற இரண்டு அரசிளங் குமரிகளை மணந்தார்.
ஒரு முறை பாண்டு காட்டிற்கு வேட்டையாடச் சென்றார்; இரண்டு மான்கள் கலவி இன்பத்தில் ஈடுபட்டபோது அதன் மீது அம்புகளை எய்தார்; ஆனால் அவை மான்கள் அல்ல; மான் தோல் போர்த்திய கிண்டம ரிஷியும் அவருடைய மனைவியும் ஆவர்; சாகும்போது கிண்டம ரிஷி ஒரு சாபம் போட்டார்; நீ கலவி இன்பத்தில் ஈடுபட்டால் அன்றே உனக்கு மரணம் சம்பவிக்கும் என்று சாபம் கொடுத்தார் ; ஆண்டுகள் பல உருண்டோடின ; ஒரு வசந்த காலத்தில் காம உணர்வு மேம்படவே மாத்ரி யை நெருங்கினார் பாண்டு; மாரடைப்பில் இறந்தார்; தன்னால்தானே இந்த மரணம் ஏற்பட்டது என்ற குற்ற உணர்வு மேம்படவே மாத்ரி, தனது இரண்டு புதல்வர்களைக் குந்தி தேவியிடம் ஒப்படைத்துவிட்டுத் தீப்பாய்ந்து உயிர்விட்டார் (இதே போல பூதப் பாண்டியன் தேவியும் தீப்பாய்ந்து கணவன் சிதையில் எரிந்த செய்தி புறநானுற்றில் உள்ளது.
***
பண்டிட்/ பண்டிதர்
சம்ஸ்க்ருத மொழி அல்லது அதிலுள்ள நூல்களைக் கற்ற சான்றோனுக்கு பண்டிட் என்று பொருள் ; காஷமீர் மாநிலத்தில் பிராமணர்களை பண்டிட் என்பார்கள் ; இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் பண்டிட் வம்சத்தில் பிறந்தவர் ; ஆயினும் பிராமணராக வாழவில்லை .
***

பாணினி- உலகத்தின் முதல் இலக்கண புஸ்தகத்தை சம்ஸ்க்ருத மொழியில் எழுதி அஷ்டாத்யாயி – எட்டு அத்தியாயங்கள் – என்று பெயர் சூட்டினார் ; உலகம் வியக்கும் வண்ணம், மிகச் சுருக்கமாக நாலாயிரம் சூத்திரங்களில் இலக்கணத்தைச் செப்பினார் ; இவர் 2700 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்ததாக கோட்ஸ்டக்கர் என்ற அறிஞர் காரணங்களுடன் அற்புதமாக விளக்கினார் ; அவருடைய நூலில் புத்த மதச் சுவடே இல்லை என்பதால் புத்தர் காலத்துக்கு முந்தியவர் என்பது தெளிவு ; சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல் என்ற சூத்திர முறை இவரால் பரவியது .தற்கால பாக்கிஸ்தானில் உள்ள சாலத்துராவில் பிறந்தார் இவருக்குப் பல நூற்றாண்டு களுக்குப் பின்னர் வந்த பதஞ்சலி முனிவர் மஹாபாஷ்யம் என்ற விரிவுரை எழுதி – வியாக்கியானம் செய்து- பாணினியின் புகழைப் பரப்பினார். ஒரு மொழியை விஞ்ஞான முறையில் அணுகிய முதல்வர் பாணினி . இவர்கள் இருவருக்குமிடையே வாழ்ந்த காத்யாயன வரருசி என்பவர் சில குறிப்புகளை எழுதியதால் மூவரையும் முநித்ரயம் – மூன்று முனிவர்கள் – என்று அறிஞர்கள் போற்றுவர்
வாக்யகாரம் வரருசிம், பாஷ்யகாரம் பதஞ்சலிம்
பாணிணீம் சூத்ரகாரம் ச ப்ரணதோஸ்மீ முனித்ரயம்
–என்று துதித்து சம்ஸ்க்ருத மாணவர்கள் பாடத்தைத் துவங்குவார்கள்; பாணினி தனக்கு முன்னர் வாழ்ந்த பல இலக்கண கர்த்தாக்களைக் குறிப்பிடுகிறார்; அவர்களது நூல்கள் நமக்கு கிடைக்கவில்லை ; இலக்கியமின்றேல் இலக்கணமில்லை என்பது தமிழ்ச் சான்றோர்களின் கண்டுபிடிப்பு; ஆகையால் பாணினிக்கு முன்னர் பிரமாண்டமான சம்ஸ்க்ருத இலக்கியம் இருந்திருக்க வேண்டும்! அத்தனையும் அழிந்து போயிற்று ; அவர் வேத கால இலக்கியத்துக்கும் தமது கால இலக்கியத்துக்கும் உள்ள வேறு பாடுகளையும் சுட்டிக்காட்டுவதால் புத்தரின் காலத்துக்கு முன்னர் மிகப்பெரிய சம்ஸ்க்ருத நூல்கள் இருந்தன என்பது வெள்ளிடை மலையென விளங்கும்.
உபவர்ஷ, பராசர்ய, கரமாண்ட, சாகடயான, அபிதலி , சாகல்ய முதலிய இலக்கண வித்தகர்களின் பெயர்களை பாணினி குறிப்பிடுவதால் அவருக்கும் முன்னர் இலக்கண நூல்கள் இருந்ததை அறிய முடிகிறது.
அஷ்டாத்யாயி நூலினை நன்றாகக் கற்ற ஒவ்வொருவருக்கும் ஆயிரம் பொற்காசுகளைத் தருவதாக காஷ்மீர் மன்னர் அறிவித்தைதை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கல்ஹணர் எழுதிய ராஜ தரங்கிணி நமக்கு எடுத்துரைக்கிறது .
***
பராசரர்
(पराशर) முனிவர் பராசரர், சக்தி என்பவரின் புதல்வர்; வசிஷ்டர்-அருந்ததி ஆகியோரின் பேரர்; பராசரரின் தாயாருக்கு அத்ருச்யந்தி, மத்ஸ்யவதி/ மீனவச்சி, , சத்யவதி என்று பல பெயர்கள் உள்ளன.
லட்சக் கணக்கான இந்துக்கள் தினமும் விஷ்ணு ஸஹஸ்ரநாம ஸ்தோத்திரத்தைப் பாராயணம் செய்கிறார்கள்; இந்துக்கள் ஜீனியாலஜி GENEOLOGY எனப்படும் வம்ச பரம்பரை இயலில் வல்லவர்கள் என்பதால் தினமும் வியாசரின் வம்ச பரம்பரையைச் சொல்வர் ; பராசரரின் புதல்வர் வியாசர் .
வியாசம் வசிஷ்ட நப்தாரம் சக்தே பௌத்ரம் அகல்மஷம் பராசராத்மஜம் வந்தே சுக தாதம் தபோ நிதிம். ( வசிஷ்டரின் கொள்ளு பேரரும், சக்தியின் பேரரும், பராசரரின் புதல்வரும், சுகரின் தந்தையுமான வியாசரை வணங்குகிறேன்.)
***
பாரிஜாத மலர்

நாரதர் ஒரு அரிய பாரிஜாத மலரை தேவலோகத்திலிருந்து கொண்டுவந்து கிருஷ்ண பரமாத்மாவிடம் கொடுத்தார். அவர் அதை யாரிடம் கொண்டு கொடுக்கிறார் என்று பார்த்துக் கொண்டே நின்றார். அவருக்கும் தெரியும் கிருஷ்ணருக்குப் பல மனைவியர். அவர்களில் ருக்மணிக்கும் சத்யபாமாவுக்கும் இடையே கொஞ்சம் சலசலப்பு உண்டு என்று.
அவர் எதிர்பார்த்த மாதிரியே கொஞ்சம் சுவையான செய்தி கிடைத்தது. அந்த பாரிஜாத மலரை, கொஞ்சமும் தயங்காமல், யோசிக்காமல் ருக்மணியிடம் கொடுத்தார் கிருஷ்ண பரமாத்மா .
நாரதர், நாராயண, நாராயண – என்று உச்சரித்தவாறே விரைந்தார். சத்யபாமாவைக் கண்டார். ஒன்றுமே பேசாமல் முகத்தைத் தொங்கப் போட்டுக்கொண்டு சோகமே உருவாக நின்றார்
நாரதர் சொன்னார்: ஒன்றுமில்லை, அரிய, பெரிய பாரிஜாத மலர் ஒன்றை உங்களுக்காகப் பறித்துக் கொண்டுவந்து கிருஷ்ணரிடம் கொடுத்தேன். நீங்கள் அவருக்கு மிகவும் பிடித்தமானவரே உங்களிடம் அது வந்துவிடும் என்று நினைத்தேன். அவரோ ஒரு நொடியும் தாமதிக்காமல் ருக்மணியிடம் கொடுத்துவிட்டார். அதுதான் எனக்கு பெரிய கவலை, துக்கம
சத்யபாமா சொன்னார்: அப்படியா சேதி? இப்போதே அந்த மலரை இங்கே கொண்டுவரச் சொல்லுகிறேன் என்றாள்.நாரதர்: வேண்டாம், வேண்டாம்; அது ஒரு மலர்தானே. மரத்தையே கொண்டுவரச் சொல்லி கிருஷ்ணனிடம் கட்டளை இடுங்கள் என்றார். சத்யபாமா கோபமாக இருப்பதை அறிந்த கிருஷ்ணன், காரணத்தை விசாரித்து அறிந்தார். பாரிஜாத மரத்தைக்கொண்டு வருவதாக வாக்கு கொடுத்துவிட்டுப் புறப்பட்டார்
இதற்குள் நாரதர் இந்திர லோகத்துக்குச் சென்று, ” இந்திரா, வர வர லோகத்தில் திருட்டு பயம் அதிகமாகி வருகிறது. உன் பாரிஜாத மரத்தைக் கொஞ்சம் கண்காணித்து வா” என்று சொல்லிவிட்டுப் போனார்.
கிருஷ்ணன், பாரிஜாத மரத்தை அடியோடு பெயர்ப்பதை அறிந்து அவரைக் கையும் களவுமாகப் பிடித்தார் இந்திரன், .
கண்ணன் உண்மைக் காரணத்தைச் சொன்னவுடன் அவருக்குப் பரிதாபம் ஏற்பட்டது. கண்ணனும் அதை எடுத்துவந்து சத்யபாமாவின் தோட்டத்தில் ஊன்றி வைத்தான்.
கண்ணன் இறந்தவுடன் துவாரகாபுரி கடலுக்குள் சென்றது. அப்போது அந்த பாரிஜாத மரம் இந்திரலோகத்துக்கே சென்றுவிட்டது.
இப்பொழுது உத்தரப் பிரதேசத்தில் கிட்டோர் என்னுமிடத்தில் உள்ள ஒரு மரம் பாரிஜாதம் என்று கருதப்படுவதாக விக்கிபீடியா படம் போட்டுள்ளது. தமிழ்நாட்டில் பவள மல்லிகைக்கும் பாரிஜாதம் என்ற பெயர் உண்டு.

கிட்டூர் (உ.பி.) என்னுமிடத்திலுள்ள பாரிஜாதம் (விக்கிபீடியா)
****
பரீக்ஷித் மன்னர்
அபிமன்யு இறந்த பின்னர் அவருக்குப் பிறந்தவர் பரீக்ஷித் ; உத்தராவின் கர்ப்பத்தில் பரீக்ஷித் இருந்தபோது அஸ்வத்தாமா, பிரம்மாஸ்திரம் என்னும் அணு ஆயுதத்தை ஏவினார்; இது உத்தராவின் கர்ப்பத்தைத் தாக்காமல் இருப்பதற்கு கிருஷ்ணர் ஏற்பாடு செய்தார் ; பின்னர் பிறந்த பரீட்சித் பாண்டவ வம்ச ஆட்சியை நீடித்தார்
பரீட்சித் மன்னன் காட்டுக்கு வேட்டை ஆடச் சென்றபோது சமீக என்ற முனிவரை அவமானப் படுத்தவே அவர் இன்னும் ஒரே வாரத்தில் நீ ஒரு நாகர் கையால் ( பாம்பு கடித்து ) இறப்பாய் என்று சாபமிட்டார். அவருடைய நாகா இன நண்பர் தட்சகனுக்கு இந்தப் பணியைக் கொடுத்தார். ஒரு வார காலத்துக்குள் எதுவும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக அரண்மனை “செக்யூரிட்டியை” அதிகப்படுத்தினார். ஆனால் தட்சகன் ஒரு பழக் கூடையில் ஒளிந்துகொண்டு அரண்மனைக்குள் புகுந்து பரீட்சித் மன்னனைப் படுகொலை செய்தான்.
பரீட்சித் மன்னன் படுகொலை, பாண்டவ வம்சத்துக்கு ஒரு களங்கமாக அமைந்தது. உடனே மன்னனின் மகன் ஜனமேஜயன் நாகர்களைக் கண்ட இடத்தில் கொல்லுமாறு உத்தரவிட்டான். இந்த நாகர் படுகொலை மக்களுக்கு பெரிய கவலையைத் தந்தது.
பிராமணர் சமாதான உடன்பாடு
அந்தக் காலத்தில் கலப்புத் திருமணம் நிறைய நடந்தது. ஜரத்காரு என்ற ஒரு பிராமண ரிஷி / முனிவர் ஒரு நாக இனப் பெண்ணை மணந்து கொண்டார். அந்தப் பிராமண முனி ஜரத்காருவுக்கு ஆஸ்திக முனிவர் என்று ஒரு மகன் இருந்தார். அவருக்கு அரசாங்கத்தில் நல்ல செல்வாக்கு. ஆக அவரைத் தேர்ந்தெடுத்து சமாதான தூது அனுப்பினர். அவருடைய தூது வெற்றி பெற்றது. நாகர்கள் படுகொலை நிறுத்தப்பட்டது. அவர்களும் பாண்டவ வம்சத்தைத் தொடுவதில்லை என்று சபதம் செய்தனர்.
விந்தையிலும் விந்தை! 5000 ஆண்டுகளுக்கு முன்னால் ஏற்பட்ட இந்த சமாதான உடன்பாட்டை இன்றும் பிராமணர்கள் மூன்று வேளை சந்தியாவந்தனத்தில் ஒரு மந்திரமாக சொல்லுகிறார்கள் ( நர்மதாயை நம: என்னும் இந்த மந்திரம் நர்மதை நதிக்கரையில் நடந்த சர்ப்ப யாகத்தை நினைவு படுத்துகிறது) அந்த மந்திரத்தில் நாகர்கள், ஜரத்காரு, ஜனமேஜயன், ஆஸ்தீகர் ஆகிய அனைவரும் நினைவு கூறப்பட்டு புகழப் படுகின்றனர். உலகிலேயே மிகப் பழைய சமாதான உடன்பாடு இதுதான்!!
***
இதற்கு முன் நடந்த சம்பவமே நாகர்- யாதவர் மோதலுக்கு காரணமாக அமைந்தது ; அந்தக் கதை பின் வருமாறு:
நாகா- கிருஷ்ண பரமாத்மா மோதல்
மஹா பாரத காலத்தில் அர்ஜுனனும் கிருஷ்ணனும் காடுகளை அழித்து நகரங்களை உண்டாக்கி மக்களைக் குடியமர்த்தும் நல்ல எண்ணத்தோடு பெரிய காடுகளை எரித்தனர். காடுகளில் வாழ்ந்த பழங்குடி நாகா இன மக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆயினும் அர்ஜுனனும் கண்ணனும் தன் போக்கில் காடுகளை எரிக்கவே நிறைய பேர் இறந்தனர். இது தவிர காளீயன் என்னும் நாகர் தலைவர் இருந்த இடத்தில் மாடு மேய்க்கச் சென்ற இடையர்களுக்கும் காளீயனுக்கும் மோதல் வலுக்கவே அவனையும் கண்ணன் கொன்றான். இந்த மேய்ச்சல் நிலத் தகராறை பிற்கால புராண ஆசிரியர்கள் காளீயன் என்னும் பாம்பைக் கொன்றான் என்று கதை கட்டி விட்டனர். உண்மையில் காளியனும் ஒரு மனிதனே. அவர்கள் நாகர்/ பாம்பு சின்னத்தை அணிந்ததால் நாகர்கள் எனப்பட்டனர்.
யாதவர்கள் மீதும் பாண்டவர்கள் மீதும் கோபம் கொண்ட நாகர்கள் பழிவாங்குவதற்காக ஒரு தருணத்தை எதிர் பார்த்துக் காத்திருந்தனர். மய தானவன் என்ற ஒரு நாகர் தலைவன் மட்டும் அர்ஜுனன் கிருஷ்ணர் தரப்பில் இருந்தான்.அவனைக் கானகத் தீயிலிருந்து மீட்டதால் பாண்டவர்களுக்கு உலகம் வியக்கும் அரண்மணையைக் கட்டித் தந்தான். மஹாபாரத யுத்தம் முடிந்தபின், கிருஷ்ணன் ஒரு வேடனின் அம்புக்குப் பலியானான். பாண்டவ சகோதரர் ஐவரும் பழைய கால வழக்கப்படி வடக்கு நோக்கிச் சென்று பாத யாத்திரை செய்து உயிர்த் தியாகம் செய்தனர். அர்ஜுனனின் பெயரன் பரீக்ஷித் ஆட்சிக்கு வந்தான்.
மய தானவன் தென் அமெரிக்காவுக்குள் குடியேறி மாயா நாகரீகத்தை ஸ்தாபித்தான்.
Tags- HINDU DICTIONARY IN ENGLISH AND TAMIL 76; இந்து மத கலைச்சொல் அகராதி- 76 , பரீக்ஷித், பைலர், பஞ்சதந்திரம், பாணினி, பாரிஜாத மலர்
–subham—









