பிரம்ம முகூர்த்தம்- வைகறை துயில் எழு- அவ்வையார்- Part 1 (Post No.5172)

Written by London swaminathan

 

Date: 2 JULY 2018

 

Time uploaded in London –   10-49 am (British Summer Time)

 

Post No. 5172

 

Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.

 

சூரிய உதயத்திற்கு முன்னருள்ள சுமார் இரண்டு மணி நேரம் பிரம்ம முஹூர்த்தம் என்னும் காலமாகும். ஆன்றோர்களும், சான்றோர்களும், சாதுக்களும், மஹான்களும், சந்யாசிகளும் சங்கராச்சார்யார்களும் எழுந்து இறைவனை வழிபடும் புனித நேரம் இது. விஞ்ஞானத்தாலும் போற்றப்படும் காலம் இது. தமிழ், ஸம்ஸ்க்ருத இலக்கியங்களில் இது வெகுவாகப் போற்றப்படுகிறது.

 

மஹா ப்ரெடெரிக் மன்னர், அக்பர் போன்றோர் பின்பற்றிய நெறிமுறை இது. “வைகறைத் துயில் எழு”– அவ்வையார் நமக்கு ஆத்திச்சூடி மூலம் கொடுத்த கட்டளை இது.

 

புத்தியதற்குப் பொருந்து தெளிவாக்கும்;

சுத்தநரம்பினாற் தூய்மையுறும்- பித்தொழியும்

தாலவழி வாத பித்தம் தத்தநிலை மன்னும்; அதி

காலைவிழிப்பின் குணத்தைக் காண்

என்று ஒரு புலவர் பாடிச் சிறப்பித்த காலம் இது.

 

ஆசாரக் கோவை என்னும் நூலும் இதைப் போற்றும்:-

வைகறை யாமம் துயிலெழுந்து தான்செய்யும்

நல்லறமும் ஒண்பொருளும் சிந்தித்து வாய்வதின்

தந்தையும் தாயும் தொழுதெழுக என்பதே

முந்தையார் கண்ட முறை

(ஆசாரக்கோவை– 41)

 

புலவர்கள் கூறும் கருத்து யாது?

 

புத்தி, சிந்தனை தெளிவாக இருக்கும்

நமது உடல் தூய்மையாக இருக்கும்

வாத பித்த, கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்கும்

இவை அதிகாலையில் விழித்தெழுவதன் பயன்களாம்.

 

ஆசாரக் கோவை சொல்கிறது

அதிகாலைப் பொழுதில் எழுந்து பெற்றோர்களை வணங்கி அன்றைய தினம் செய்யவேண்டிய செயல்களைப் பட்டியலிட்டு, அதற்கான வழிமுறைகளை தயாரிப்பது முன்னோர்கள் பினபற்றிய முறை.

ஒரு கட்டுரையாளர் ஒரு கணக்குப்போட்டு வைத்துள்ளார்:–

ஒருவன் நாள்தோறும் 5 மணிக்கும் மற்றொருவன் 7 மணிக்கும் எழுந்திருப்பதாக வைத்துக்கொள்வோம்; இவ்வாறு அவன் 40 ஆண்டுகள் செய்து வந்தால் 5 மணிக்காரனுக்கு 29,000 மணி நேரம் கூடுதலாக கிடைக்கும்!! எட்டு மணிக் காரனுடன் ஒபீட்டால் 43,500 மணி நேரம் கூடுதலாகக் கிடைக்கும். சிலர் இதை எதிர்த்தும் வாதிட முடியும். அதாவது இரவு படுக்கச் செல்லும் நேரத்தைத் தாமதித்தால் இந்த நேரத்தை ஈடுகட்டலாம் அல்லது கூடுதலாக வேண்டுமானாலும் பெறலாமே என்று.

 

ஆனால் நம் முன்னோர்கள் அதை ஏற்க வில்லை; காரணம் வெளிப்படை; ஒருவன் உறங்கி எழுந்தவுடன் இருக்கும் புத்துணர்ச்சி இரவில் படுக்கைக்குச் செல்லும் முன் இராது; கொட்டாவிகளும், நாள் முழுதும் நடந்த கெட்ட விஷயங்களின் சிந்தனையுமே அதிகரிக்கும்.

பறவைகளின் இனிய சங்கீதமும் குளிர்ந்த காற்றும் நம்மை நற் சிந்தனையில் ஆழ்த்தும் நேரம் பிரம்ம முகூர்த்தம் ஆகும்.

 

‘ஐயினி அக்பரி’ எழுதிய அபுல் பாசல், மாமன்னர் அக்பர் அதிகாலையில் துயில் எழுவதைக் குறிப்பிட்டுள்ளார். பாரதத்தின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு காலை நாலு மணிக்கு எழுந்து சிரசாஸனம் செய்து வந்ததால் இறுதிவரை இளமைப் பொழிவுடன் வாழ்ந்தார். தற்போதைய பாரதப் பிரதமர் நரேந்திர மோடியும் அதிகாலை எழுந்து பணிகளைக் கவனிப்பதை அனைவரும் அறிவர்.

மஹா ப்ரெடெரிக் (Frederic the Great)

பிரஷ்யா (ஜெர்மனி அதைச் சுற்றியுள்ள பகுதிகள்) தேசத்தை ஆண்ட மஹா ப்ரெடெரிக் நமக்கு சுமார் 250 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர். அவர் வாழ்வில் நடந்த ஒரு சுவையான சம்பவம் இதோ:

 

 

“நான் மிகவும் தாமதமாக எழுந்திருப்பது நல்லதல்ல;

அதிகாலை நாலரை மணிக்கு என்னை எழுப்பி விடு என்று வேலைக்காரனுக்குக் கட்டளையிட்டார். மறுநாள் மன்னரின் கட்டளையை சிரமேற்கோண்டு அவனும் முயற்சி செய்தா ன் அவர் எழுந்திருக்கவில்லை. அது மட்டுமல்ல; இன்னும் பத்து நிமிஷம் மட்டும் தூங்குகிறேன் என்று சொல்லி தட்டிக்கழித்துக் கொண்டே இருந்தார். வேலைக்கரன் துணிவுடன் அவரைத் தட்டி எழுப்பினான். அப்போதும் அவர் கும்பகர்ணனாகவே இருந்தார். இறுதியில் அவர் முன்னரே சொன்ன படி ஒரு ஈரத்துணியை மன்னர் முகத்தில் போட்டான். மன்னர் கோபத்துடன் எழுந்து ஒரு முறை முறைத்தார்.

“மன்னாதி மன்னா; தங்கள் கட்டளையையே நான் நிறை வேற்றினேன் இவ்வாறு செய்யாவிடில் என்னைத் தண்டித்திருப்பீர்களே” என்றான்.

மன்னரும் நிதானித் து சிந்தித்து

“அன்பனே நீ செய்தது சரியே” என்று அவனைப் பாராட்டினார்.

 

இதே போல நாமும் பரீட்சை நேரங்களில் நம்முடைய பெற்றோர்களிடம் அதிகாலையில் எழுப்பச் சொல்வோம்; அவர்கள் எழுப்ப முனைஅயும் போது எரிந்து விழுவோம். பரீக்ஷையில் நல்ல மதிப்பெண்களோடு ‘பாஸ்’ ஆகும்போது அவர்களுக்கு மனதார நன்றி சொல்லுவோம். இல்லையா?

 

கட்டுரையின் அடுத்த பகுதியில் விஞ்ஞான விளக்கங்களைக் காண்போம்.

 

-தொடரும்……………

Leave a comment

Leave a comment