
Written by London swaminathan
Date: 8 JULY 2018
Time uploaded in London – 6-41 am (British Summer Time)
Post No. 5194
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’
-நறுந்தொகை, வெற்றி வேற்கை (அதிவீர ராம பாண்டியன்)
‘மிதிலைக்கு அரசனான ஜனகனுக்கு ஒன்றுமே தெரியாது; அவருக்கு மண்ணாசைதான் அதிகம்’ என்று சில முனிவர்கள் குறை கூறினார்கள். அவரது குருவான யாக்ஞவல்கியரின் காதிலும் இது விழுந்தது. ஜனகனின் பெருமையை உலகிற்கு உணர்த்த ஒரு தந்திரம் செய்தார். ஒரு நாள் எல்லா ரிஷி முனிவர்களும் இருந்த சமயத்தில், ஜனகனுடைய அவையில் யக்ஞவல்கியர் தத்துவச் சொற்பொழிவு செய்துகொண்டிருந்தார்.
அச்சமயத்தில் ஒரு சேவகன் ஓடி வந்து அரசே! குதிரை லாயம் தீப்பிடித்து எரிகிறது; அணைக்க முடியவில்லை’ என்றான். அரசன், ‘சரி, போ’ என்றார். கொஞ்ச நேரம் ஆயிற்று; மற்றொரு காவலன் வந்து மன்னர், மன்னவா! அரண்மனையின் ஒரு புறத்திலும் தீ பரவிவிட்டது; எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை என்றான்; மன்னனோ ‘‘சரி, நீ போகலாம்’ என்றார்.
முதல் காவலன் வந்து சொன்னபோது சில முனிவர்கள் பயந்து தண்ணீர் குடிக்கப் போவது போல பாவனை செய்து வெளியேறினர். இரண்டாவது காவலன் வந்து சொன்னபோது அசெம்பிளியில் பாதி காலி; ஒவ்வொரு முனிவரும் ஏதோ அவசர வேலை இருப்பது போல வெளியே போயினர்.

சிறிது நேரத்தில் மூன்றாவது காவலன் வந்து அரசே; இந்த அறை வரை தீ வந்துவ்ட்டது; எங்களால் தீ ஜ்வாலையைத் தாங்க முடியவில்லை; நாங்கள் வெளியேறுகிறோம்; நீங்களும் வெளியேறுங்கள் என்று கெஞ்சினான். மீதியிருந்த முனிவர்கள் கைத்தடி காலணி, கமண்டலம் சகிதம் குதிங்கால் பிடறியிற் அடிக்க ஓடினர்.
ஜனகன் சொன்னான்,
“மிதிலாயாம் ப்ரதீப்தாயாம் நமே தஹ்யதி கிஞ்சன”-
“ எரிவதில் என்னுடையது என்றும் எதுவும் இல்லை!” —
தீயின் உக்கிரம் மெதுவாகத் தணிந்தது; ஜனகனும் யாக்ஞவல்கியரும் தொடர்ந்து தத்துவ விவாதம் நடாத்திக் கொண்டு இருந்தனர். ஓடிப்போன முனிவர்கள் ஒவ்வொருவராகத் திரும்பி வந்தனர். அவர்கள் வந்த காரணம், மன்னன் இறந்தானா? தலைமைக் குரு இறந்தாரா என்று பார்க்கத்தான்!
எல்லோரும் மீண்டும் வந்து அமர்ந்த பின்னர் குரு சொன்னார்:
“உண்மை ஞானி ஜனக மாமன்னன் ஒருவன்தான் ; நீங்கள் எல்லோரும் உயிர் பிழைக்க ஓடியதோடு கமண்டலமும் கைத்தடியும் எரிந்து விடும் என்று அஞ்சி அவைகளையும் எடுத்து ஓடினீர்; ஜனகனோ இந்த அரண்மனையே தன்னுடையது அல்ல” என்ற ஆன்ம ஞானம் பெற்றவன் என்றார்.
முனிவர்கள் வெட்கித் தலை குனிந்தனர்; ‘ஞானிக்கில்லை இன்பமும் துன்பமும்’.
“மிதிலை எரிந்திட வேதப் பொருளை
வினவும் சனகன் மதி—தன்
மதியினிற் கொண்டதை நின்று முடிப்பது
வல்ல நம் அன்னை மதி”– (சுப்ரமண்ய பாரதி)
–சுபம்-