
Written by London Swaminathan
Date: 26 November 2016
Time uploaded in London:19-11
Post No.3391
Pictures are taken from various sources; they are representational only; thanks.
contact; swami_48@yahoo.com
வினையே ஆடவர்க்கு உயிரே!
நாலு ஆண்டுகளுக்கு (மார்ச் 31, 2012) முன் புறநானூற்றில் பகவத் கீதை-பகுதி-2 ல் குறுந்தொகைப் (135) பாடலைக் குறிப்பிட்டிருந்தேன். இப்பொழுது விரிவாகக் காண்போம்
ஆண்களுக்கு வேலைதான் முக்கியம் (உயிர் போல)
பெண்களுக்கு கணவந்தான் முக்கியம் (உயிர் போல)
யார் இதைச் சொன்னது பாலை பாடிய பெருங்கடுங்ன்கோ; இதோ முழுப்பாடல்.
வினையே ஆடவர்க்கு உயிரே வாணுதல்
மனையுறை மகளிர்க்கு ஆடவர் உயிர் என
நமக்கு உரைத்தோரும் தாமே,
அழா அல் தோழி! அழுஙுவர் செலவே
—குறுந்தொகை 135
பாலை பாடிய பெருங் கடுங்கோ (குறு.135) கூறுகிறார்: தொழில் தான் ஆண் மக்களுக்கு உயிர். இல்லத்தில் வாழும் பெண்களுக்கு கணவனே உயிர்.
இதை நமக்குச் சொன்னவரும் உன் கணவன்தான். ஆகையால் அழாதே! கணவர், உன்னை விட்டுப் பிரிந்து செல்ல மாட்டார் (என்று தோழி கூறினாள்).
இதில் உள்ள தொழிலே ஆடவர்க்குயிர் என்ற கருத்து 5000 ஆண்டுகளுக்கு முன்னால் கண்ணபிரான் பகவத் கீதையில் சொன்ன கருத்தாகும்

கீதையில் கண்ணன் கூறுகிறான் (3-5, 3-8):
எவனும் ஒரு வினாடி கூட கருமம் செய்யாமல் இருக்க முடியாது. நீ விதிக்கப்பட்ட கடமையைச் செய். கருமம் செய்யாமையினும் கருமம் செய்தல் சிறந்தது அன்றோ.
ந ஹி கச்சித் க்ஷணமபி ஜாது திஷ்டத்ய கர்மக்ருத் (பகவத் கீதை 3-5)
ஜாது- ஒருபோதும்
க்ஷணம் அபி -ஒரு வினாடி கூட
கச்சித் – எவனும்
அகர்மக்ருத்- வேலை செய்யாமல்
ந ஹி திஷ்டதி – நிற்பது இல்லை.
நியதம் குரு கர்ம த்வம் கர்ம ஜ்யாயோ ஹ்யகர்மண:
சரீர யாத்ராபி ச தே ந ப்ரசித்யேதகர்மண: (3-8)
நீ உனக்கு விதிக்கப்பட்ட பணியைச் செய்; ஒன்றுமே செய்யாமல் இருப்பதைவிட ஒரு பணியைச் செய்வது சிறந்ததன்றோ! ஒருவன் ஒன்றுமே செய்யாமல் இருந்தால் உடலைப் பராமரிப்பதும்கூட முடியாது.
கருமம் செய்வதற்கே உனக்கு அதிகாரம். அதன் பற்றில் அல்ல(2-47)
கர்மண்யேவ அதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (2-47)

கருமமே கண்ணாயினார்
பணியைச் செய்வது உன் கடமை; அதன் பலனை எதிர்பார்த்துச் செய்யாதே
வள்ளுவனும் இக்கருத்தை வலியுறுத்துவான்:-
இன்பம் விழையான் வினை விழைவான் தன் கேளிர்
துன்பம் துடைத்தூன்றும் தூண் (குறள் 615)
தனக்கு என்று ஒரு இன்பத்தையும் விரும்பாமல், மேற்கொண்ட செயலை முடிப்பவன், சுற்றத்தாரைத் தாங்கும் தூண் போன்றவன் ஆவான். அவன் சுற்றத்தாரின் துன்பத்தைத் தீர்ப்பான்.
இந்தக் குறளை குமர குருபரர் எழுதிய பாடலுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். நீதி நெறி விளக்கத்தில் 53ஆவது பாடலாக இது மலர்கிறது.
மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார் கண் துஞ்சார்,
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் – செவ்வி
அருமையும் பாரார், அவமதிப்பும் கொள்ளார்
கருமமே கண்ணாயினார்

இதன் பொருள்: ஒரு காரியத்தைச் செய்ய வேண்டுமென்று முனைப்புடன் இறங்கியவர்கள் தனது உடலில் உண்டாகும் நோவைப் பொருட்படுத்தமாட்டார் பசியைப் பார்க்க மாட்டார், தூங்க மாட்டார், யார் தீங்கு செய்தாலும் அதைப் பொருட்படுத்த மாட்டார்,காலத்தின் அருமையைப் பற்றியும் கவலைப்படமாட்டார். அடுத்தவர் கூறும் அவமதிப்பான சொற்களைக் கேட்கமாட்டார் தங்கள் காரியத்திலேயே கண்ணாயிருந்து அதில் வெற்றி பெறுவதிலேயே கவனமாக இருப்பார்.
–Subham–