
Written by London swaminathan
Date: 24 September 2016
Time uploaded in London:6-37 am
Post No.3184
Pictures are taken from various sources; thanks.
நான் மதுரை யாதவர் தெரு வடக்கு மாசி வீதியில் கால் நூற்றாண்டுக் காலம் வசித்தேன். அப்பொழுது பல காட்சிகளைக் கண்டதுண்டு. திடீரென டவுன் பஸ் நிற்கும். அதிலிருந்து ஒருவனைக் கீழே தள்ளி நாலைந்து பேர் அடிப்பார்கள். உடனே ரோட்டில் போகும் வருவோரெல்லாம் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவனை அடிப்பார்கள். அவன் குத்துயிரும் கொலை உசிருமாக இருக்கையில் அவனை ஓட ஓட விரட்டுவார்கள். கடைசியில் அவன் எப்படியோ தப்பி த்து ஓடி விடுவான். இதே போல மதுரை சித்திரைத் திருவிழாவிலும் கண்டதுண்டு. காரணம் என்ன என்று கேட்டால் அவன் “பெண்கள் மீது கை வைத்துவிட்டான்” சார்! என்பர். ஆனால் அடித்தவர்களில் பாதிப்பேருக்கு ஏன் அடித்தோம், யாரை அடிக்கிறோம் என்றே தெரியாது! இதற்குப் பெயர் தர்ம அடி!
இப்போது நான் வசிக்கும் ஊரிலும் (LONDON) பெண்கள் மீது இப்படிக் கைவைப்பதுண்டு. பெரும்பாலும் பஸ்களிலும் அதிகமாக மெட்ரோ
(METRO சுரங்க) ரயிலிலும் நடக்கும். அதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் சில கட்டுரைகளில் சி. சி. டிவி. (C C TV= Closed Circuit Television) காமெரா மூலம் படம் எடுத்துப் பிரசுரிப்பார்கள்.
வாரம் தோறும் நாங்கள் ‘ஸ்கைப்’ SKYPE மூலம் நடத்தும் கம்ப ராமாயணம் வகுப்பில், கிஷ்கிந்தா காண்டம் படிக்கையில் இப்படி ஒரு காட்சி வந்தவுடன் , மதுரையில் பழைய காலத்தில் பார்த்த அவ்வளவும் நினைவுக்கு வந்து விட்டது. மன திற்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். காரணம் இல்லாமல் இல்லை. எங்கள் வீட்டுப் பக்கத்துச் சந்தில் ஒரு ஐயர், இட்டிலிக் கடை வைத்து நடத்தி வந்தார். அவரது இட்டிலியும் பக்கோடாவும் மதுரை முழுதும் பிரசித்தம். அவரும் ஒரு முறை இப்படி தர்ம அடி கொடுக்கும் கும்பலில் நாலு அடி போட்டு விட்டுத் திரும்பி வந்தார்.
“என்ன மாமா? நீங்களும் அடித்தீர்கள்? ஏதாவது உங்களி டம் விஷமம் செய்தானா? என்று நாங்கள் கேட்டோம். இல்லை எனக்குத் தெரியாது. எல்லோரும் அடித்தார்கள். நானும் அடித்தேன். என்ன? பொம்பளை மீது கை வச்சிருப்பான். அல்லது பிக் பாக்கெட் அடிச்சிருப்பான். நாலு சாத்து சாத்த வேண்டியதுதானே? என்றார் !!!
இதுபேர்தான் தர்ம அடி!!!
இதை எல்லாம் கேட்ட பின்னர் நாங்கள் (என் சகோதர்கள்) எல்லோரும் வீட்டிற்குள் போய் சிரி, சிரி என்று சிரிப்போம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் ‘தர்ம அடி’ நினைவுக்கு வரும்.
நிற்க. கம்பன் பாட்டைப் பார்ப்போம்.

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை
வேறு உளார் வலி செயின் விலக்கி வெஞ் சமத்து
ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே
தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்
–கலன் காண் படலம் , கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்
பொருள்:-
வழியில் செல்லும் மகளிரை வேறு எவரேனும் வருத்தினால் (ரோட்டில் போகும் பெண்கள் மீது யாரேனும் கை வைத்தால்), அவர்களுடன் தமக்குத் தொடர்பில்லையானாலும், அது செய்ய முடியாதபடி (தர்ம அடி போட்டு), தடுத்துப் போர் செய்து உயிரையும் கொடுப்பர் உலகத்தார். அப்படியிருக்கையில் நானோ என்னை நம்பியிருந்த என் மனைவியின் (சீதா தேவியின்) துயரத்தைப் போக்க மாட்டாதவனாய் உள்ளேன் (இவ்வாறு ராம பிரான் புலம்புகிறார்)
இதைப் பார்க்கும்போது கம்பன் காலத்திலும் சாலையில் இப்படி நடந்து, அதில் பலர் தலையிட்டு, தர்ம அடி கொடுத்து, சிலர் உயிர் கூட போனதுண்டு என்று தெரிகிறது.
எங்கள் லண்டனிலும் கூட மாதம் தோறும் இப்படிச் சில செய்திகள்
வருகின்றன. சூப்பர்மார்க்கெட் கார் பார்க்கிலும் (CAR PARK) ‘பப்’ (PUBLIC HOUSE) பிலும் (மது பானக்கடை) சண்டை போடுவோர் இடையே சமரசம் செய்யப்போய் கத்திக் குத்து வாங்கி இறந்தோர் பற்றிய துயரச் செய்திகளை படிக்கிறோம்.

வாழ்க கம்பன்! வளர்க தமிழ்! அனைவரும் படிக்க கம்ப ராமாயணம்!!!
-SUBHAM-
You must be logged in to post a comment.