
Written by London swaminathan
Date: 21 APRIL 2017
Time uploaded in London:- 15-59
Post No. 3838
Pictures are taken from various sources; thanks.
contact; swami_48@yahoo.com

ஒரு பெண் பேசினால் பூமி அதிரும்;
இரண்டு பெண்கள் பேசினால் நட்சத்திரங்கள் பூமியில் விழும்;
மூன்று பெண்கள் பேசினால் கடல் நீர் வற்றிவிடும்;
பல பெண்கள் பேசினால் இந்த உலகத்துக்கு என்னதான் ஆகுமோ!
இது ஒரு தமிழ்ப் புலவரின் கதறல், அச்சம்!
ஆனால் இவை அனைத்தும் தீயது உரைக்கும் வாயாடிகள் பற்றிய வியாக்கியானம். ஏனெனில், அதே புலவர் நல்ல பெண் யார் என்பதற்கு ஆறு நிபந்தனைகள் போட்டும் பாடி இருக்கிறார்.
முதலில் தீய பெண்கள் பற்றிப் பார்ப்போம்:-
பெண்ணொருத்தி பேசிற் பெரும்பூமி தானதிரும்
பெண்ணிருவர் பேசில்விழும் வான்மீன்கள் – பெண்மூவர்
பேசி லலைசுவறும் பேதையே பெண் பாலர்தாம்
பேசிலுல கென்னாமோ பின்.
–நீதிவெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)
(பெண் ஒருத்தி பேசில் பெரும் பூமிதான் அதிரும்; பெண் இருவர் பேசில் விழும் வான் மீன்கள் (நட்சத்திரங்கள்); பெண் மூவர் பேசில் அலை (கட) சுவறும் (வற்றிவிடும்); என்றால் பெண்ணே (பேதையே) பெண்கள் பலர் பேசத் துவங்கிவிட்டால் பின்னர், இவ்வுலகம் என்னதான் ஆகுமோ?)
xxxxxxx

நல்ல பெண்ணுக்கு உரிய ஆறு லட்சணங்கள்
நல்ல பெண் என்பவள்—-
1.தாயைப் போல அன்பும்
2.வேலைக்காரி போல தொண்டும்
3.திருமகளைப் போல அழகும்
4.பூமாதேவியைப் போல பொறுமையும்
5.அழகிய கொங்கையுடைய வேசி போல இன்பமும்
6.அமைச்சரைப் போல அறிவுரையும்
உடையவளே பெண் என்று பெயர் உடையவள்.
(மற்றதெல்லாம் பெண் உருவில் இறைவன் படைத்த பேய்கள் என்பது சொல்லாமலே விளங்கும்; அதாவது சூர்ப்பநகை, தாடகை, கைகேயி, பூதகி — எல்லாம் ஒன்று சேர்ந்த கட்டழகி!!)
அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப்
பொன்னி னழகுங் புவிப்பொறையும் — வன்னமுலை
வேசி துயிலும் விறன்மந் திரிமதியும்
பேசி லிவையுடையாள் பெண்
–நீதி வெண்பா (எழுதியவர் பெயர் இல்லை)

(அன்னையின் தயையும், அடியாள்/வேலைக்காரி பணியும், தா மரை மலர் மீதமர்ந்த லெட்சுமி தேவியின் அழகும், புவி/பூமியியைப் போல பொறுமையும், தூங்கும்போது அழகிய முலைகளை உடைய விலைமாது போல இன்பம் தருதலும், வல்லமைமிக்க அமைச்சரைப் போல அறிவும் — இந்த ஆறு அரிய இயல்புகளையும் உடையவளே பெண் எனத் தக்கவள்)
–Subham–