Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
27-10-25 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
உலகையே மாற்றும் மனித ரொபாட்!
ச. நாகராஜன்
நாளுக்கு நாள் உலகில் அதிக வயதானவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே போகிறதே என்று இளைஞர்கள் கவலைப்படுகின்றனர்.
“இடைவிடாமல் எங்களுக்கு உதவி செய்ய யார் இருக்கிறார்கள்?” என்று முதியவர்களும் கவலைப்படுகிறார்கள்.
இதற்கு ஒரு தீர்வு தான் என்ன?
வேலைப் பளு தாங்காமல் வேலைக்குப் போகும் பெண்மணிகள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். இதற்கும் தீர்வு உண்டா?
இப்படிப்பட்ட கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில் மனித ரொபாட் என்பது தான்.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து அறுபதுகளில் மனிதர்களுக்கு வீட்டில் உதவி செய்ய சின்னச் சின்ன இயந்திரங்கள் வர ஆரம்பித்தன.
இன்றோ மலைக்க வைக்கும் அளவிற்கு மனித ரொபாட் அனைத்து உதவிகளையும் செய்யத் தயார்.
மனிதனைப் போலவே அதே உயரம், அதே அழகிய அமைப்புடன் டைனிங் டேபிளுக்கு வந்து, “இதோ, காப்பி” என்று காப்பி கோப்பையைத் தரும் காட்சி கண் கொள்ளாக் காட்சி தானே
உலகில் ஜப்பானிய கம்பெனிகளும், பெரிய அமெரிக்க நிறுவனங்களும் இப்போது விதவிதமான மனித ரொபாட்டுகளைத் தயார் செய்ய ஆரம்பித்து விட்டன.
வீட்டு உதவி ரொபாட்டுகள், வாக்குவம் க்ளீனரில் ஆரம்பித்து பெப்பர் என்ற பர்ஸனல் கம்பேனியன் ரொபாட் நம்முடன் ஜாலியாகப் பேசி நமது அன்றாட ஷெட்யூல்களில் உதவி செய்கிறது. இதை சாஃப்ட் பேங்க் ரொபாடிக்ஸ் என்ற நிறுவனம் தயார் செய்திருக்கிறது.
மெடிகல் ரொபாட்டுகள் அறுவைச் சிகிச்சையில் உதவி செய்கின்றன. ரொபாட்டின் கரங்கள் நுட்பமாகச் செயல்படுகின்றன.
வயதானவர்களுக்கு பெப்பர் ரொபாட் உதவி செய்வதோடு அவர்களின் நேரத்தை இனிமையாகப் போக்க அரட்டை அடிக்கவும் செய்கிறது!
தொழிலகங்களை எடுத்துக் கொண்டால் ஆடோமேடட் கைடட் வெஹிகிள் இப்போஒது தயார். குகா என்ற நிறுவனம் இதை இப்போது தயார் செய்கிறது. தேர்ந்தெடுத்து நிர்ணயிக்கப்பட்ட சாலை வழிகளில் இது பத்திரமாக உங்களைச் சேர வேண்டிய இடத்தில் சேர்ப்பிக்கும்.
கல்வித் துறையிலோ ஹ்யூமனாய்ட் ரொபாட்டுகள் மாணவர்களுக்கு பலவித புதிய உத்திகளைக் கற்றுத் தருகின்றன.
விவசாயத்துறையில் அறுவடைக்கு ரொபாட்டுகள் தயார்.
ட்ரோன்கள் கல்யாண வீடுகளில் உயரப் பறந்து கண்காணிப்பதையும் போட்டோ எடுப்பதையும் அனைவரும் பார்த்து வருகிறோம் ட்ரோன்கள் டெலிவரி செய்யும் விதமே தனி. ஒவ்வொரு வீட்டிற்கும் இனி டெலிவரி ட்ரோன்களினால் தான்!
இரண்டாம் உலக மகாயுத்தத்தில் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்ட குண்டுகள் முழுதுமாக இன்னும் அகற்றப்படவில்லை. இப்போது பாம் டிஸ்போஸல் ரொபாட் ரெடி. இவை பயமில்லாமல் வெடி குண்டுகளை அகற்றி விடும்.
அடுத்து நெடுங்காலமாகப் பேசப்பட்டு வரும் மனிதக் கழிவுகளை மனிதர்கள் அகற்றுவதா என்ற சர்ச்சைக்கு ஒரு முடிவு வந்து விட்டது. மனிதர்கள் முகத்தைச் சுளிக்கும் வேலைகளில் ரொபாட்டுகள் இறங்கி நொடியில் கழிவுகளை அகற்றி விடும்!
முதுகெலும்பில் அடி, பக்கவாதம் – நடக்கவே முடியவில்லை. கவலை வேண்டாம். ரீ ஹாபிலிடேஷன் ரொபாட்டுகள் இப்படி அங்கங்களில் குறைபாடு உள்ளவர்களுக்கு உதவும். அவர்களை நினைத்த இடத்திற்கு அழைத்துச் செல்லும். எக்ஸோ பயானிக்ஸ் என்ற நிறுவனம் இந்த வகை ரொபாட்டுகளைத் தயார் செய்கிறது.
சுற்றுப்புறச்சூழலையும் காலநிலையையும் கண்காணித்து உதவ மரைன் ரொபாட்டுகள் ரெடி.
கடைகளில் சென்று சாமான்களை வாங்குகிறீர்களா? அசோனொமஸ் ஷாப்பிங் கார்ட் என்னும் வண்டிகள் உங்கள் சாமான்களைச் சேகரித்து பில் கவுண்டரில் கொடுத்து விடும். உங்கள் கார் வரைக்கும் வந்து சாமான்களை பத்திரமாக இறக்கி விடும்.
அன்றாட ரொடீன் வேலைகளுக்கு உதவி செய்ய ஸ்மார்ட் ஹோம் ஹப்ஸ் என்ற ரொபாட்டுகள் ரெடி. இவை அன்றாட வேலைகளை நிகழ்ச்சி நிரலாக்கி உங்களுக்கு எந்த நேரத்தில் எதைச் செய்ய வேண்டும் என்று சொல்லி உதவும்.
இன்னும் தானே டிரைவ் செய்யும் கார்கள், ஹோட்டலில் பரிமாறும் ரொபாட்டுகள், திருடர்கள் வருகிறார்களா என்பதைக் கண்காணிக்கும் விசேஷ ரொபாட்.. அடடா…. பட்டியல் நீளமாகப் போகிறது….
எதிர்கால உலகம் இனிமையான உலகம். சோம்பேறிகளாக மனிதர்கள் ஆகி விடாமல் இருந்தால் சரி தான்!
எல்லாம் ரொபாட்டே பார்த்துக் கொள்ளும் என்றால் மனிதனுக்கு இனி என்ன தான் வேலை!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆதிரங்கம்- ஸ்ரீரங்கபட்டணம் தலத்தில் பெருமாள் தரிசனம் ! (Post.15,339)
தமிழ்நாட்டில் வைணவர்களுக்கு கோயில் என்றால் ஸ்ரீரங்கம் என்று பொருள்; சைவர்களுக்குச் சிதம்பரம் என்று பொருள். அவ்வளவு புகழ்பெற்ற ஸ்ரீரங்கத்துக்கும் முந்தியது ஆதி ரங்கம் எனப்படும் ஸ்ரீரங்கபட்டணம் ஆகும் . கர்நாடகத்தில் மைசூருக்கு அருகில் உள்ளது .
Srirangapatna Temple tower
ஏன் ஆதிரங்கம் என்ற பெயர் ? காவிரி நதியின் கரையில் அமைந்துள்ள மூன்று பெருமாள் கோவில்களில் முதலில் உள்ளது ஸ்ரீரங்கபட்டணம் /ஆதி ரங்கம். இரண்டாவது ரங்கம் சிவ சமுத்திரத்தில் இருக்கிறது ; கடைசி ரங்கம் தமிழ்நாட்டில் திருச்சிக்கு அருகிலுள்ள ஸ்ரீ ரங்கம் ஆகும் . இவை முறையே ஆதி, மத்யம, அந்த்ய ரங்க க்ஷேத்ரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
கங்கையினும் புனிதமான காவிரி
கங்கை நதியைவிட காவிரி புனிதமானது என்று அப்பர் போன்ற பெரியார்கள் பாடிப் பரவியதற்குக் காரணம் இப்போது புரிகிறது. 1500 மைல் நீளமுள்ள கங்கையின் கரையிலுள்ள புனிதத் தலங்களைவிட மிகவும் அருகருகே சிவன் கோவில்களும் பெருமாள் கோவில்களும் நிறைந்தது காவிரி நதிதான் .
திப்புசுல்தான் வரலாறு
Tippusultan Palace
கோட்டை படங்கள்
மைசூருக்கு அருகிலுள்ள ஸ்ரீரங்கப்பட்டணத்துக்கு மேலும் ஒரு சிறப்பு– வரலாற்று நிகழ்ச்சிகள் ஆகும் ஹைதர் அலியின் மகன் திப்பு சுல்தான், ஆங்கிலேயர்களுடன் சண்டைபோட்டு அவர்களைத் திணறடித்த பூமி இது. இறுதியில் குள்ள நரித் தந்திரத்தால் திப்பு சுல்தானைக் கொன்றனர்; அத்தோடு அவனுடைய கோட்டையை இடித்துத் தரை மட்டமாக்கி அங்கிருந்த தங்கம் ரத்தினக் கற்களை பிரிட்டனுக்கு கொண்டு சென்றனர் , விலைமதிப்புக் குறைவான பொருள்களை லண்டன் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸியத்தில் காட்சிக்கு வைத்துவிட்டு, விலையே சொல்ல முடியாத அரிய பொருட்களை ரகசியமாகப் பங்கு போட்டுக்கொண்டனர். திடீர் திடீரென்று கொள்ளைக்கார ஏல நிறுவனபிகளுக்கு அவை ஏலத்து க்கு வரும்போது அவை பற்றிய செய்திகள் வரும்; பெரும்பாலாவை திரைக்குப்பின்னால் விற்கப்படுகின்றன.
Tippu Sultan Grave
வெள்ளைக்காரனைக் குதறும் ஒரு புலி பொம்மையை திப்பு சுல்தான் வைத்திருந்தான். அதை இன்றும் விக்ட்டோரியா ஆல்பர்ட் மியூஸிடத்தில் காணலாம். படை வீரர்களுக்குச் சம்பளம் போடும் நாளன்று காவலர் இல்லாமல் திப்புசுல்தான் தனியாக இருப்பான் என்ற செய்தியை ஒரு துரோகி வெள்ளைக்கற்களுக்குத் துப்புக் கொடுத்தான். அப்போது அவனைத் தாக்கி அழித்தனர் வெள்ளைக்காரர்கள்; இப்போது பாழடைந்த கோட்டையில் அவன் நினைவுச் சின்னம் உள்ளயது. அவன் சும்மா இறக்கவில்லை நூற்றுக்கனக்கான வெள்ளையர்களைக் கொன்று குவித்து இறந்தான். அந்த வெள்ளைக்கார கல்லறைகளும் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் உள்ளன. வெள்ளைக்காரர்களை அவன் சிறைவைத்த இருட்டுச் சிறைச்சாலைகளும் உள்ளன.
ஸ்ரீரங்கப்பட்டினத்தில் உள்ள ரங்கநாதர் கோயிலுக்கு திப்புசுல்தான் பல மானியங்களை அளித்துள்ளார் என்றும் சொல்லப்படுகிறது
Watergate in Srirangapatna
பெருமாளின் புகழ்
நாங்கள் ஸ்ரீரங்கபட்டணத்துக்குப் போனபோது ஜனவரி (3-1-2026) மாத விடுமுறைக் காலமாதலால் நல்ல கூட்டம் இருந்தது .ஐம்பது ரூபாய் டிக்கெட் வாங்கியும் கூட, நீண்ட வரிசையில் முக்கால் மணி நேரம் நின்ற பின்னர் தான் பெருமாளைச் சேவிக்க முடிந்தது. கர்நாடக மாநில ஸ்ரீரங்கபட்டணம் கோவிலும் காவிரி நதி சூழ்ந்த தீவுப் பகுதியில் உள்ளது. இங்குள்ள வெளிநாட்டுப் பறைவைகள் வந்து தங்கும் பறவைகள் சரணாலயம் சுற்றுலாப்பயணிகளை இயற்கை ஆர்வலர்களையும் கவர்ந்து இழுக்கிறது
மூலவர் ரங்கநாதர், தாயார் ரங்கநாயகி.
பாஞ்சராத்ர ஆகமத்தைக் கடைப்பிடிக்கும் கோவில் இது.
மகாலட்சுமி, பூமாதேவியுடன், ஆதிசேசன் மீது பகவான் விஷ்ணு பள்ளி கொண்ட திருக்கோலம்.
.தனித்தனி சந்நிதிகளில் நரசிம்மர், கிருஷ்ணர், வெங்கடேஸ்வரர், அனுமான்,கருடன், பிரம்மா , ஆழ்வார்களும் உள்ளனர்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது; கங்க வம்சத்தினர், ஹோய்சால வம்சத்தினர் தானம் செய்த செய்திகள் கிடைக்கின்றன .
12-ஆம் நூற்றாண்டில் ஹோய்சாள மன்னர் விஷ்ணுவர்தன் ஸ்ரீரங்கப்பட்டணம் தீவை இராமானுஜருக்கு தானமாக வழங்கினார். கெளதம முனிவருக்கு பெருமாள் காட்சி தந்த தலமும் ஆகும் .
இதன் இன்னுமொரு சிறப்பு பஞ்சரங்க தலங்கள் என்று அழைக்கப்படும் ஐந்து அரங்கத் தலங்களில் ஒன்று ஆகும் ; ஏனைய நான்கு: மாயூரம் பரிமளரங்கநாதர், கோவிலடி பெருமாள், ஸ்ரீரங்கம், கும்பகோணம் சாரங்கபாணி கோவில்கள்.
***
From my Old Article
என்னுடைய புஸ்தகத்தில் முன்னர் எழுதியது கீழே உள்ளது
From my book :கர்நாடக மாநிலத்தில் 108புகழ்பெற்ற கோவில்கள்
37. ஸ்ரீரெங்கப்பட்டண ரங்கநாத சுவாமி கோவில் Ranganathaswamy Temple, ,Srirangapatna
மைசூரிலிருந்து 15 கி மீ தூரம். மிகவும் புகழ்பெற்ற பஞ்ச ரங்க, ஆதிரங்க க்ஷேத்ரம் .
காவிரி நதியின் கரையில் ஐந்து புகழ்பெற்ற ரங்கநாதர் ஆலயங்கள் உள . அந்த பஞ்ச ரங்க ஸ்தலங்களில் இதுவே முதலில் இருப்பதால் ஆதி ரங்கம் என்று வைஷ்ணவர்கள் அழைப்பர். அடுத்த நான்கு தலங்களும் தமிழ்நாட்டில் காவிரிக் கரையில் அமைந்துள்ளன.
ஆதிரங்கம் – ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)
மத்தியரங்கம் – ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)
அப்பாலரங்கம் – திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)
பஞ்சரங்கம் – பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர், மாயவரம் (தமிழ்நாடு)
நீண்ட நெடும் பாம்பான ஏழுதலை நாகத்தில் ரங்கநாதர் எனும் விஷ்ணு படுத்திருக்க, லெட்சுமி அருகில் அமர்ந்து இருக்கிறார் . பெரிய சிலை .
கோவிலில் இடம்பெறும் ஏனைய சந்நிதிகள் : ரெங்கநாயகி, ராமர், நரசிம்மர், சுதர்சனர் பஞ்ச முக ஆஞ்சனேயர் , கோபால கிருஷ்ணர்
கிபி (பொது ஆண்டு) 894 முதல் வரலாறு இருப்பினும் அதற்கு முன்னரே கோவில் இருந்திருக்க வேண்டும் ஒவ்வொரு வம்ச மன்னர்களும் கட்டிடங்களை எழுப்பி கோவிலைப் பெரிதாக்கினார்கள் .
நுழை வாயிலில் இருக்கும் 4 பெரிய தூண்களில் விஷ் ணுவின் 24 வடி வங்கள் அலங்கரிக்கினறன.
ஹொய்சாள பாணி கலை அம்சங்களை அவை பிரதிபலிக்கின்றன .
பிரகாரத்தில் புராணக்கதைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன ரங்கநாத சுவாமியின் ரத சிற்பம் அற்புதமாகஇருக்கிறது . காவிரி நதியானது அதன் போக்கில் மூன்று தீவுப் பகுதிகளை உண்டாக்கியது. சிவ சமுத்திரம், ஸ்ரீரங் கப்பட்டணம் , திருச்சி/ ஸ்ரீரங்கம் .மூன்று இடங்களில் உள்ள கோவில்களையும் ஒரே நாளில் பார்ப்பதில் கர்நாடக வைஷ்ணவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர் .
–subham—
Tags- ஸ்ரீரங்கபட்டணம், ஆதிரங்கம், பெருமாள் , திப்பு சுல்தான் கோட்டை, காவிரி நதி, கர்நாடகம் , லண்டன் சுவாமிநாதன், பஞ்சரங்க தலங்கள், கோவில் படங்கள் , கோட்டை படங்கள்
ஆனந்தரைப் புரிந்து கொண்டால் புத்தரைப் புரிந்து கொள்ளலாம்!
ச. நாகராஜன்
புத்தரின் வாழ்க்கையில் அவரது அணுக்கத் தொண்டராக அணுவளவும் பிசகாது அவரது உபதேசத்தின் படி வாழ்ந்தவர் ஆனந்தர்.
அவரது வாழ்க்கை ஒரு பெரிய கலைக்களஞ்சியம் அளவுக்கு விரிவானது; சுவையான சம்பவங்களைக் கொண்டது.
ஆனந்தரைப் படித்தால், புரிந்து கொண்டால் புத்தரை நன்கு புரிந்து கொள்ளலாம்.
புத்தருக்கு அன்றாட கைங்கரியம் செய்ய நாகஸாமளா, நாகிதா, உபவாணா, சுனக்கத்தா, சுந்தா, சாகதா, ராதா, மெஹியா உள்ளிட்ட பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் புத்தர் ஞானம் பெற்ற பிறகு இருபது ஆண்டுகள் சேவை செய்து வந்தனர்.
ஆனால் இவர்களின் சேவையில் புத்தர் பரிபூரண திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் ஆனந்தர் தன் மனம், மெய், மொழி, செயல் ஆகிய எல்லாவற்றையும் புத்தருக்கே அர்ப்பணித்து அவரின் அபிமானத்தைப் பெற்றார்.
ஒரு முறை புத்தரும் நாகஸாமளரும் ஒரு சாலை வழியே சென்று கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் சாலை இரண்டாகப் பிரிந்தது.
புத்தர் ஒரு வழியைச் சுட்டிக் காட்ட நாகஸாமளர் இன்னொரு வழியைச் சுட்டிக் காட்டினார். புத்தர் வேண்டாம் என்று தடுத்த போதும் பிடிவாதமாக அந்த வழியில் தான் போகவேண்டும் என்றார் நாகஸாமளர்.
தனது திருவோட்டையும் ஆடையையும் புத்தரின் காலடியில் வைத்த அவர், “ஐயனே! இதோ திருவோட்டையும் ஆடையையும் உங்கள் காலடியில் வைத்து விட்டேன்.” என்று கூறி விட்டு தான் தேர்ந்தெடுத்த பாதை வழியே செல்லலானார்.
ஆனால் சிறிது தூரத்திலேயே அங்குள்ள வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கித் துன்புறுத்தினர்.
உடனே அவர் ஓடோடி வந்து புத்தரைச் சரணடைந்தார். புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.
அவரது சேவை பின்னர் நிறுத்தப்பட்டது.
புத்தரின் சீடரான நாகிதாவுக்கு நகர வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. புத்தர் அனைத்தையும் விட்டு விட்டு காட்டில் வசிக்க வேண்டுமென்று உபதேசித்தார்.
ஆனால் நாகிதாவோ நகரத்தில் ஆடம்பர வாழ்க்கையில் ஐக்கியமானார்.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
உபவாணர் ஒரு சமயம் புத்தருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பில் அவருக்கு சேவை செய்ய முன் வந்த போது வெந்நீரையும் மருந்துகளையும் தயார் செய்து ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் புத்தரின் சமிக்ஞைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
சுனக்கத்தா வைசாலி நகர இளவரசர். அவர் புத்தருக்கு சேவை செய்ய முன் வந்தார். ஆனால் அவர் புத்தரின் உபதேசங்களை விட்டு விட்டு கோரகத்தீய சம்பிரதாயத்தில் பற்று கொண்டார்.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
சுந்தா ஒரு இளைஞர். புத்தர் ஒரு சமயம் இரு அற்புதங்களை நிகழ்த்த முன் வந்த போது அவரை முந்தி தானே அவற்றை நிகழ்த்துவதாகச் சொன்னார். ஆனால் அவரால் முடியவில்லை. ஆகவே அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
சாகதா தினசரி பிட்சைக்காக நகருக்குச் செல்வது வழக்கம். அங்கு ஒரு வீட்டில் அவருக்கு விதவிதமான அமுது படைத்து கூடவே குடிக்கவும் பானம் தந்தனர். அதைக் குடித்த அவர் சுய நினைவை இழந்து ஆடிக் கொண்டே புத்தர் இருந்த விஹாரத்தின் வாசலில் வந்து விழுந்தார். இதர துறவிகள் அவரைத் தூக்கி எடுத்து புத்தரின் பாதாரவிந்தங்களில் தலை இருக்குமாறு படுக்க வைத்தனர். ஆனால் அவரோ திரும்பி தன் கால்களை புத்தருக்கு எதிரே வைத்தார். மறுநாள் சுய நினைவு திரும்பவே தனது தவறை உணர்ந்த அவர் புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். புத்தரும் மன்னித்தார். ஆனால் மீண்டும் அதே தவறை அவர் செய்யவே அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
ஒன்றுமே தெரியாத ராதா புத்தருக்கும் சேவை செய்தார்; சரிபுத்தருக்கும் சேவை செய்தார். ஆனால் அவரோ ஒரு குடும்பஸ்தர்.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
மெஹியா குறுகிய காலமே புத்தருக்கு சேவை செய்தார். ஜந்துகாமர் என்பவரின் வீட்டிற்கு பிட்சைக்காக சென்ற அவர் திரும்பி வரும் போது ஒரு மாந்தோப்பின் வழியே வந்தார். அதன் அழகில் மயங்கிய அவர் கிமிகாலா நதியின் கரையில் இருந்த அந்த மாந்தோப்பிலேயே தியானம் செய்வேன் என்று கூறு புத்தரிடம் அனுமதி கேட்டார்.
இருமுறை அவரது வேண்டுகோளை நிராகரித்த புத்தர் மூன்றாம் முறை சரி என்று அனுமதி கொடுத்தார். மாந்தோப்பில் தியானம் செய்யச் சென்ற மெஹியா அங்கு கெட்ட எண்ணங்களால் பாதிக்கப்படவே மீண்டும் புத்தரிடம் ஓடோடி வந்தார். புத்தருக்குச் சேவை செய்யும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
ஆக இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் சேவை செய்ய முடியாமல் போனது.
ஐம்பது வயதான போது ஒரு நாள் புத்தர் அனைத்து சீடர்களையும் அழைத்து, வயதானதால் வரும் தளர்ச்சி எனக்கு வந்து விட்டது. எனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய நல்ல ஒருவர் வேண்டும்” என்றார்.
ஒவ்வொருவராக முன் வந்த போது அவர்களை தகுந்த காரணம் சொல்லி நிராகரித்தார் புத்தர்.
இறுதியில் ஆனந்தர் முன் வந்தார். உடனே அவரை அணைத்து ஏற்றுக் கொண்டார் புத்தர்.
அந்தக் கணமே அவர் புத்தரின் உபதேசங்களில் ஐக்கியமானார்.
இறுதி வரை அவர் புத்தபிரானுடன் கூடவே இருந்தார். ஒரு கணமும் அவரை விட்டுப் பிரியவில்லை.
அதனால் புத்தரின் வாழ்க்கையோடு அவரது வாழ்க்கையும் ஒன்றி விட்டது.
ஆகவே ஆனந்தரைப் புரிந்து கொண்டால் புத்தரை நன்கு புரிந்து கொள்ளலாம்.
ஆனந்தரின் வாழ்வை ஆனந்தமாகப் படிப்போம்; புத்தரின் போதனைகளை உள்ளபடி புரிந்து கொள்வோம்!
***
ஆதாரம், நன்றி: ஆஷா தாஸ், கல்கத்தா 1992ல் எழுதியுள்ள Ananda : The Man and the Monk புத்தகம்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
நான் கண்ட மைசூர் சாமுண்டீஸ்வரி கோயில் (Post No.15,337)
கர்நாடக மாநிலத்தின் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்று மைசூர் நகரத்துக்கு மிகவும் அருகிலுள்ள சாமுண்டீஸ்வரி கோயில் ஆகும். மைசூர் நகரத்துக்கு பெயர் கொடுத்ததே இந்தக் கோவில்தான் . மகிஷாசுரன் என்ற அசுரனை தேவி வதம் செய்த காட்சி மஹாபலிபுரம் போன்ற பல இடங்களில் இருந்தாலும் மைசூர் நகரமே அந்த அரக்கனின் பெயரைத் தக்க வைத்துக்கொண்டது.
மைசூர் நகரத்திலிருந்து 13 கி.மீ தொலைவில் சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி கோயில் அமைந்துள்ளது.
மூன்றாவது முறையாக இந்தக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் ஜனவரி 2026 (3-1-2026) முதல் வாரத்தில் கிடைத்தது . இந்த முறை காரில் கோவில் அருகே சென்றதால் பெரிய மகிஷாசுரன் சிலையையும் பெரிய நந்தி சிலையையும் பார்க்கச் செல்லவில்லை இப்போது கண்ட மிகப்பெரிய மாற்றம் போகும் வழி முழுதும் கடைகள் , கடைகள், கடைகள்! அங்குள்ள கூட்டத்தில் முட்டி மோதி மேலே சென்றால் கோவிலிலும் கூட்டம் 200 ரூபாய் டிக்கெட் வாங்கியும் முக்கால் மணிநேரம் காத்திருந்தோம், சில நிமிட தரிசனத்துக்காக; ஆயினும் அந்த தரிசனத்தில் ஒரு மனத் திருப்தி.
சக்தி தேவியின் தலங்களில் மக்களைக் கவர்ந்திழுக்கும் க்ஷேத்திரங்களில் இது தனிச் சிறப்பு வாய்ந்தது; ஏனெனில் அருகில் மகாபலேஷ்வர் என்ற சிவத்தலமும் நாட்டின் மிகப்பெரிய நந்தி களில் ஒன்றும் மஹிஷாசுரனின் மிகப்பெரிய உருவமும் ஒருங்கே அமைந்துள்ள மலை இது
புல்லட் பாய்ண்டுகளில் சுவையான விஷயத்தைக் காண்போம்
1
மஹிஷாசுரனுரு என்பதே மருவி மைசூர் ஆனது
2
இது மைசூர் உடையார் வம்ச அரசர்களின் குல தெய்வம். முன் காலத்தில் விஜயதசமி/ தசரா பண்டிகையின் போது பெரிய யானை மீதுள்ள அம்பாரியில் மன்னர் பவனி வந்தார்; இப்போது அந்த தங்க அம்பாரியில் சாமுண்டீஸ்வரி பவனி வருகிறாள் . இதைக் காண லட்சக்கணக்கான மக்கள் நவராத்ரி முடியும் தசரா நாளில் வருகின்றனர்.
3
தேவியால் வதம் செய்யப்பட மஹிஷாசுரனின் பிரம்மாண்டமான சிலை கோவிலிலிருந்து சற்று தொலைவில் உள்ளது அவன் கையில் வாளும் பாம்பும் இருக்கிறது .
4
தஞ்சாவூர் பெரிய கோவில், லெபாக்ஷி போன்ற இடங்களில் உள்ளது போன்ற பெரிய நந்தி ; யாரும் மறக்க முடியாத பெரிய உருவம். மேலும் நந்தியின் உடலில் அலங்கார வேலைப்பாடுகள். இந்த நந்தி 15 அடி உயரமும், 24 அடி நீளமும், இதன் கழுத்தைச் சுற்றி பெரிய மணிகளைக் கொண்டு மிகப் பிரமாண்டமாக காட்சியளிக்கின்றது.
5
இவ்வளவையும் காண, 3500 அடி உயரமுள்ள மலை ஏற வேண்டும். தற்காலத்தில் காரில் சென்று கோவில் வாசலில் இறங்கலாம்; மலை ஏறும் வழக்கம் மலை ஏறிவிட்டது.
6
கோவிலின் வரலாறு ஹோய்சாள, விஜயநகர, மைசூர் உடையார் வம்ச அரசர்களால் ஆராதிக்கப்பட்ட அம்மன் சுமார் ஆயிரம் ஆண்டு வரலாறு உடையவள்.
7
அசுரனை வதம் செய்ததால் அஷ்ட புஜ துர்க்கை வடிவம் கொண்டுள்ளாள் எட்டு கரங்களுடன் சாமுண்டீஸ்வரி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார். அன்னையின் கீழ், மகிஷாசுரன் எருமை உடலுடனும், அசுரத் தலையுடனும் இருக்கிறான். திரிசூலத்தால் அன்னை இவனைக் குத்தியபடி காட்சியளிக்கிறாள்.
8
கர்ப்பக்கிரகம் எனப்படும் கருவறை வாசலில் நந்தினி, கமலினி என்னும் துவாரபாலகியர் காட்சி தருகின்றனர். சந்நிதியின் வலப்புறம் பைரவர் இருக்கிறார். இந்த விக்கிரகம் மார்க்கண்டேய மகரிஷியால் நிறுவப்பட்டதாக ஐதீகம்.
9
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் இங்குச் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. நவராத்திரி, சிவராத்திரி, கன்னட மாதப் பிறப்பு தினங்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
முக்கிய திருவிழா நவராத்திரி ஆகும். நவராத்திரி விழாவின் போது, அம்பிகை ஒன்பது விதமான ரூபங்களில் இங்கே அலங்கரிக்கப்படுவார். ஏழாவது நாளன்று மைசூர் மஹாராஜா தானம் செய்த நகைகளைக்கொண்டு அம்பாளுக்கு அலங்காரம் செய்வார்கள்.
நந்தி சிலை
மகிஷாசுரன் சிலை
10
சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் ஆயிரம் படிகளை, உடையார் மன்னர்கள் செதுக்கினார். மகாராஜா கிருஷ்ணராஜ உடையார் மற்றும் அவரது மூன்று ராணிகளான ராமவிலாசா, லட்சுமிவிலாசா மற்றும் கிருஷ்ணவிலாசா ஆகியோரின் ஆறடி சிலை வைக்கப்பட்டுள்ளது.
11
Address
Chamundeshwari Temple Address: Chamundi Hill Rd, Mysuru, Karnataka, 570010, India
—subham—Tags- மைசூர், சாமுண்டீஸ்வரி கோயில் , நந்தி சிலை, மகிஷாசுரன் சிலை, படங்கள், லண்டன் சுவாமிநாதன்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-12-2025 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கதை!
ஏஐ (AI) மாப்பிள்ளை!
ச.நாகராஜன்
“எங்க அம்மாவுக்குப் பைத்தியம் தான் பிடிச்சிருக்கு! ஏஐ மாப்பிள்ளை தான் வேணுமாம்” என்று சிவாவிடம் கவலையோடு சொன்னாள் தேவி.
“என்ன?” என்று திகைப்புடன் கேட்ட சிவா, எப்படி இந்த பிடிவாதம் உங்க அம்மாவுக்கு வந்தது? அப்ப நம்ம காதல் என்ன ஆகும்?” என்றான்.
“எங்க அம்மாவோட பிரெண்டெல்லாம் தங்கள் பெண்களுக்கு ஏஐ வெப்சைட்டில் மாப்பிள்ளை பார்க்கறாங்களாம்! ஏஐ இருக்கே, அது எல்லாத்தையும் அலசி ஆராய்ந்து தகுந்த மாப்பிள்ளையை செலக்ட் பண்ணிடுமாம். எல்லா அம்மாமார்களுக்கும் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் யுகத்திலே பைத்தியம் தான் பிடிச்சிருக்கு. எங்க அப்பாவோட பேச்சையும் கேட்கறதில்லை. இப்ப என்ன செய்யறது?”
“இதோ பார் தேவி! நமக்குள்ளே ஜாதி பிரச்சினை இல்லை. ஒரே ஜாதி. அந்தஸ்து பேதமும் இல்லை. இரண்டு பேரும் ஒரே கம்பெனியில் நல்ல சம்பளத்திலே தான் வேலை பார்க்கிறோம். என் கிட்ட கார் இருக்கு, சொந்த வீடும் இருக்கு. வயசும் சரியா அமைஞ்சிருக்கு. இப்படி இருக்கும் போது என்ன பிரச்சினை வரும்னு நீ நினைக்கிறே. அம்மாவிடம் சொல்லி விடேன், நம்மைப் பத்தி!:
“இதோ பாரு சிவா! நைஸா உன்னோட தகுதி, அந்தஸ்து, அழகு எல்லாத்தையும் உன் பேரைச் சொல்லாம சொல்லிப் பார்த்தேன். எங்க அம்மா, “இதெல்லாம் தகுதியே இல்லை. ஏஐ செலக்ட் பண்ணி இருக்கா? அதனோட அப்ரூவல் இருக்கான்னு கேக்கறா. நான் பாட்டுக்கு உன்னைப் பத்தியும் நம்ம காதலைப் பத்தியும் சொல்லி ஒரேயடியா முடியாதுன்னு பதில் வந்தா அப்பறம் பேச்சையே எடுக்க முடியாது, அதான் யோசிக்கிறேன்”
“கரெக்ட்! முதல் தடவை ரிஜக்ஷன் ஆனா அத்தோட அவ்வளவு தான்!.
சரி, கவலைப் படாதே! என் ஃபிரண்ட் சரத் கிட்ட இதைப் பத்திப் பேசறேன்” ஆறுதலாகச் சொல்லி விட்டுக் காரில் ஏறினான் சிவா.
கவலை படிந்த முகத்தோடு ஸ்கூட்டரில் ஏறிச் சென்றாள் தேவி.
“பூ! இவ்வளவு தானா சிஸ்டர்? இந்த முட்டாள் தான் உங்க ஹஸ்பெண்ட். இதுக்கு நான் காரண்டி” என்று தேவியைப் பார்த்து சிவாவின் நண்பன் சரத் அழுத்தம் திருத்தமாகச் சொன்னதை அவளால் நம்பவே முடியவில்லை.
“எப்படி அண்ணா, இவ்வளவு நிச்சயமா சொல்றீங்க?” என்றாள் தேவி.
“தேவி! சரத்தைப் பற்றி உனக்குத் தெரியாது. அவன் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ்லே ரொம்ப அட்வான்ஸ்ட் மாடலை வச்சிருக்கான்.” என்ற சிவா, சரத்தைப் பார்த்து, “டேய், உன் ஐடியாவைக் கொஞ்சம் விவரமாகச் சொல்லேன்” என்றான்.
ஒரு நிமிடத்திலே வரேன் என்று தனது ஆபீஸ் ரூமுக்குள் சென்ற அவன் திரும்பி வந்த போது கையில் சில பேப்பர்களைக் கொண்டு வந்தான்.
“தேவி! இதோ பேப்பர்கள்! இந்த லூஸை நிச்சயமாக கல்யாணம் பண்ணிக்கணும்னா இதை ஃபில் அப் செய்! அது போதும்” என்ற சரத் பேப்பர்களை தேவியிடம் நீட்டினான்.
தேவி அதைப் படித்துப் பார்த்து முகம் மலர்ந்தாள். சிரிக்கவும் செய்தாள்!
“எங்கே, பேப்பரைத் தா! இந்த அட்வான்ஸ்ட் ஏஐ இடியட் அப்படி என்ன தான் ஐடியா தந்திருக்கான்னு நானும் பாக்கறேன்!”
தேவியிடமிருந்து பேப்பர்களை வாங்கிப் படித்த சிவா ஹாஹா என்று சிரித்தான்.
தேவியிடம், “அதான் நான் சொன்னேனே! சரத்தைப் போல ஒரு பெர்ஃபெக்ட் இடியட்டை இனி மேலே பார்க்கவே முடியாதுன்னு” என்று சொன்ன சிவா, “இதை உடனே ஃபில் அப் செய்” என்றான்.
தேவி விறுவிறு என்று எழுதலானாள்.
“இந்தாடி!இவன் தான் உனக்கு மாப்பிள்ளை” என்று அதிரடியாக தேவியின் அம்மா லலிதா சொன்ன போது அவள் அரண்டே போனாள். அவளது அப்பாவும் திகைப்புடன் தன் மனைவி காண்பிக்கும் போட்டோவைப் பார்க்க விரைந்தார்.
“அம்மா! நீ சொல்றதுக்கெல்லாம் ஆமாம் போடறது தான் என் ஒரே வேலை. ஆனால் இந்த விஷயத்திலே எனக்கும் முடிவெடுக்க உரிமை உண்டு” என்று கலக்கத்துடன் சொன்ன தேவி அப்பாவைப் பார்த்தாள்.
“ஐ ஃபுல்லி அக்ரீ வித் யூ. நீ தான் பைனலா முடிவைச் சொல்லணும்” என்று கூறிய தேவியின் அப்பா போட்டோவை வாங்கி தேவியிடம் கொடுத்தார்.
போட்டோவைப் பார்த்த தேவி பயங்கர ஆச்சரியத்திற்குள்ளானாள்.
அது சிவாவின் போட்டோவே தான்!
இருந்தாலும் தன் ஆச்சரியத்தை அவள் உடனடியாக காட்டிக் கொள்ளவில்லை.
“யாராம், இவன்? இவனை எப்படி நீ செலக்ட் செய்தாய்?” என்று சற்று கடுப்புடன் கேட்டாள் தேவி.
“அடீ முட்டாள்! அடிமுட்டாள்டி நீ!! இவன் பார்க்க அழகா இருக்கான். வயசு, ஜாதி எல்லாம் பொருத்தமா இருக்கு. கார் வச்சிருக்கான். சொந்த வீடு வேற! ஐடி கம்பெனியில் தான் வேலை. உன் கம்பெனி பேரே போட்டிருக்கு. விசாரித்துத் தான் பாரேன். இவன் தான் நம்ம வீட்டு மாப்பிள்ளை.ஏஐ-யே அப்ரூவ் பண்ணி செலக்ட் பண்ண பிறகு வேற பேச்சே இல்லை” என்று அழுத்தம் திருத்தமாகச் சொன்ன லலிதா, “நாளைக்கே பொண்ணு பார்க்க வரச் சொல்லி இருக்கேன். ரெடியா இரு” என்று தீர்க்கமாகச் சொல்லி விட்டாள்.
மறுநாள் பெண் பார்க்கும் வைபவம் நன்றாக நடந்து முடிந்தது. சிவா உடனடியாக சம்மதம் தெரிவிக்க அவனது பெற்றோர் முகூர்த்த தேதியைப் பற்றி லலிதாவிடம் பேச ஆரம்பித்தனர்.
லலிதாவிடம் எந்த வித ரீ ஆக் ஷனையும் காட்டாமல், “அம்மா பெண்ணாக” சரி என்று சொல்லி விட்டாள் தேவி.
“எப்படிடா இதை சாதிச்சே? “என்று சரத்திடம் சிவா கேட்டான்.
“அண்ணா! ஆயிரம் கோடி நன்றிகள்! எப்படி இதை ஃபிக்ஸ் பண்ணீங்க”” என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கேட்டாள் தேவி.
“அடி, அம்மாடி, அரை லூஸே! உன் கிட்ட கொடுத்த பேப்பரிலே உங்க அம்மாவுக்கு எதெல்லாம் பிடிக்கும் எதெல்லாம் பிடிக்காதுன்னு கேட்ட கேள்விக்கெல்லாம் நீ தானே பதில் கொடுத்தே! புடவை கலர், ஜரிகை பார்டர்னு எல்லாம் தான் அத்துபடி ஆயிடுச்சே. அதுக்கு தகுந்த மாதிரி தான் உங்க வீட்டையும் சிவா அம்மா, அப்பாவையும் நான் தயார் செய்தேன். உங்க அம்மா பார்க்கிற அதே சைட்டிலே தான் சிவாவின் ஜாதகம், டீடெய்ல்ஸை ரெஜிஸ்டர் செய்தேன். உடனே உங்க அம்மாவுக்கு அனுப்ப வச்சேன். முடிவை பார்த்தயா,” – சரத் கூறி முடித்தவுடன் அவன் காலில் விழுந்தாள் தேவி.
“ஆசீர்வாதம்” என்று கூறிய சரத், “ஒண்ணு புரிஞ்சுக்கணும். மனித மூளை தர டேட்டாவைத்தான் – தரவுகளைத்தான்- ஏஐ அனைலைஸ் பண்ணும். எப்பவுமே மனித மூளை தான் ஒசத்தி. என் டேட்டாவைப் பார்த்து தான் அது முடிவு செஞ்சது. ஏஐ என்பது கோடிக்கணக்கான டேட்டாக்களை ஒரு நொடியில் அனலைஸ் செய்யும். அதிலே அது ஒசத்தி. மற்றதுலே…”
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஜனவரி 2026 முதல் வாரத்தில் பெங்களூரில் காரில் பயணம் செய்தோம். ஒரு பஸ் டிரைவர் மொபைலில் பேசிக்கொண்டே பஸ்ஸை ஓட்டினார் . பஸ்ஸில் முழு அளவு பயணிகள் இருந்தார்கள்.
இன்னும் கொஞ்ச தூரம் பயணம் செய்தோம்; ஒரு பள்ளிக்கூட மாணவர் பஸ் அது. அதன் பின்னால் எதிர்காலத் தலைவர்கள் பஸ்ஸில் பயணம் செய்கிறார்கள் என்று பெரிய எழுத்தில் எழுதி இருந்தது. FUTURE LEADERS ON BOARD. அதாவது பள்ளிச் சிறுவர்கள் பயணம் செய்கிறார்கள்! அதிக கவனம் தேவை! என்பது அதன் பொருள்; ஆனால் அந்த பஸ்ஸின் டிரைவரும் மொபைலில் பேசிக்கொண்டே இருந்தார். பஸ்சிலுள்ள எதிர்காலத் தலைவர்களுக்கு என்ன ஆகப்போகிறதோ என்று எண்ணி வியந்தோம்!
நல்லவிஷயங்களும் உண்டு.!
பெரும்பாலான ஹோட்டல்களில் நாம் கேட்காமலேயே வெந்நீர் கொண்டு வைக்கிறார்கள் இட்லி கேட்டோம்; தட்டு இட்லியுடன் மூன்று வடைகளுடன் நான்கு வகை சாம்பார் சட்னிகளுடன் வந்தது. நல்ல சுவை டிரைவருக்கும் சேர்த்து மூன்று பேருக்கு 400 ரூபாய்தான் ஆயிற்று .
மூன்று நாட்கள் செய்த பயணத்தில் மேலும் இரண்டு ஹோட்டல்களில் சாப்பிட்டோம் ஓரிடத்தில் பூரி, மசால், சோறு , ஆறுவகைக் கறி, கூட்டுடன் , சுவீட்டுடன் நல்ல சாப்பாடு விலை ரூ.175; இன்னும் ஒரு இடத்தில் 200 ரூபாய்
பல ஆண்டுகளுக்கு முன்னர் சென்னை அசோக் நகர் சரவணபவனில் 80 ரூபாய்க்குச் சாப்பாடு சாப்பிட்டது நினைவுக்கு வந்தது.
***
நாங்கள் சென்ற இடங்கள்
1.வைரமுடி சார்த்தப்படும், ஜெயலலிதா குடும்பம் வணங்கிய மேலுக்கோட்டை செல்வ கேசவப் பெருமாள் கோவில்,
2ஆதிரங்கம் என அழைக்கப்படும் காவிரிக்கரை ஸ்ரீரங்கப் பட்டணம், 3.கர்நாடக ராஜ குடும்பத்தின் தெய்வம் சாமுண்டீஸ்வரி கோவில், 4.ஹோய்சாள கட்டிடக் கலைக்குப் புகழ் பெற்ற சோமனாதபுரம்,
5.மைசூர் மஹாராஜா அரண்மனை .
செய்யக் கூடாதது!
சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவிலுக்குப் போகக்கூடாது ; நல்ல கூட்டம்; ஒரு கோவிலில் ஆளுக்கு 50 ரூபாய் டிக்கெட்; சாமு ண்டீஸ்வரி கோவிலில் ஆளுக்கு 200 ரூபாய் டிக்கெட்; அப்படியும் முக்கால் மணி நேரம் வரிசையில் காத்திருந்தோம்..
நல்ல வேளையாக ஐயப்ப கும்பல் இல்லை ; ஒரு பத்து கருப்பு வேட்டிகளைத்தான் பார்த்தோம் .
ஒவ்வொரு கோவில்,சுற்றுலா இடம் பாற்றியும் தனித்தனியே காண்போம்.
***
மேலுக்கோட்டை செல்வ கேசவப் பெருமாள் கோவில்
மேலுக்கோட்டை செல்வ கேசவப் பெருமாள் கோவில்
மாண்டயாவிலிருந்து 30 கி.மீ . தொலைவிலுள்ள செலுவ நாராயணர் கோவிலில் நடக்கும் வைரமுடி உற்சவம் மிகவும் புகழ் படைத்தது வைஷ்ணவ ஆசார்யார் ஸ்ரீ ராமானுஜர் 12ஆண்டுகள் வசித்த ஊர் இது..
Sri Cheluvanarayana Swamy Temple, Pandavapura, Taluk, Melukote, Karnataka 571431
மைசூரிலிருந்து 50 கி.மீ தூரத்திலுள்ள இந்த ஊருக்கு திருநாராயணபுரம் என்ற பெயரும் உண்டு .
உற்சவ மூர்த்தி விக்ரகம் செல்வப்பிள்ளை. இதற்கு ராமப்ரியா என்ற பெயரும் உண்டு . ராமரால் கிருஷ்ணராலும் வணங்கப்பட்ட விக்ரகம் என்பது ஐதீகம் .
காவிரி நதியையும் யதுகிரியையும் நோக்கி அமைந்த கோவில்.
டில்லியிலுள்ள முஸ்லீம் மன்னர் முகமது ஷாவிடம் பறிபோன விக்ரகத்தை ராமானுஜர் மீட்டு வந்தார். விக்கிரகத்தின் மீது அன்பு பூண்ட அவரது மகள் கோவிலுக்கு வந்தபோது இறந்ததாகவும் ஆகையால் அவரும் இங்கு வணங்கப்படுவதாகவும் சொல்லுவர். பீபி நாச்சியார் என்ற அந்த முஸ்லீம் பெண்ணின் உருவமும் கோவிலில் உளது.
கோவிலின் கோபுரம் மிகவும் அழகானது. ஆழ்வார்கள், ராமானுஜர் யதுகிரியம்மா சந்நிதிகள், சிலைகளும் இருக்கின்றன. தங்க கருட வாகனத்தில் பெருமாள் திரு வீதி உலா வரும் நாள் மிகவும் பக்தர் கூட்டத்தைக் கொண்டுவருகிற்து .மாலையில் துவங்கும் விழா இரவு முழுதும் நீடிக்கும்
***
வைர முடி விழா
வீதி உலா வருகையில் பெருமாள் அணிவது வைர முடி. ஏனைய காலங்களில் அவர் அணிவது ராஜ முடி. அதிலும் ரத்தினைக் கற்கள் இருக்கும்.
வைரமுடி பற்றி சுவையான கதைகளும் பு ழ க்கத்தில் உள்ளன. பெருமாள் உறங்கும்போது அது திருடு போனதாகவும் கருடன் அதை மீட்டு வருகையில் அதன் தலையிலுள்ள நீலக் கல் தமிழ்நாட்டில் நாச்சியார் கோவிலில் விழுந்ததாகவும் பின்னர் அது மணிமுத்தாறு மூலம் மீண்டும் மேலுகோட்டைக்கு வந்ததாகவும் கதை சொல்லுவார்கள் (நெல்லை ஜில்லா மணிமுத்தாறு வேறு).
Xxxx
பேய்களை விரட்டும் தடி !
47.Yoga Narasimha Temple, Melkote யோக நரசிம்ம சுவாமி கோவில்
Yoga Narasimha Temple, Melkote Main Road, District Mandya, Melukote, Karnataka 571431
மைசூரிலிருந்தது 50 கிமீ தொலைவு.
1777 மீட்டர் உயர குன்றின் மீது மேலுகோட்டை யோக நரசிம்ம சுவாமி கோவில் அமைந்துள்ளது . யோக பட்டையுடன் நரசிம்மர் அமர்ந்த நிலை யில் இருக்கிறார் 365 படிகள் ஏறி சென்றால் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலை வேலைப்பாடுகளைக் காணலாம்.
இந்தக் கோவிலின் சிறப்பு என்னவென்றால் நரசிம்மரின் வலப்புறத்தில் ஒரு தடி / தண் டம் வைக்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு பேய் பிடித்தவர்களின் தலையில் அடித்தால் பேய்கள் ஒடி விடும்.
மேலுகோட்டையில் ராமானுஜர் தங்கியிருந்த காலத்தில் அவருக்கும் சமணர்களும் மோதல் ஏற்பட்டது . பிட்டிதேவன் என்னும் சமண சார்பு மன்னன் மகளை பிரம்மராக்ஷஸி பேய் பிடித்த பொழுது 1000 சமணர்களால் பேயை விரட்ட முடியவில்லை. இறுதியில் ராமானுஜர் அந்தப் பேயை விரட்டினார். மந்திரம் சொல்லி ஒரு குச்சியால் பெண்ணின் தலையில் தட்ட பேய் பறந்தோடிப்போனது ; பொறாமை கொண்ட சமணர்கள் மதுரையில் ஞான சம்பநதரை அனல்வாதம், புனல்வாதம் போட்டிகளுக்கு அழைத்தது போலவே ராமாநுஜரையும் போட்டிக்கு அழைத்தனர். ஆயிரம் பேரும் 1000 கேள்விகள் கேட்போம். நீர் ஒரே பதிலில் திருப்திகரமான பதில் சொல்ல வேண்டும் என்று ராமானுஜருக்கு நிபந்தனை விதித்தனர். அவர் ஒரு திரை மறைவில் சென்று ஆயிரம் தலை கொண்ட ஆதிசேஷன் உருக்கொண்டு ஒரே பதிலில் விடை சொன்னார் ; சமணர்கள் திரையை விலக்கியபோது ஆயிரம் தலை கொண்ட ஆதி சேஷனைக் கண்டு மூர்ச்சித்து விழுந்தனராம் .
See More Temples in my book :கர்நாடக மாநிலத்தின் 108புகழ்பெற்ற கோவில்கள்
யோக நரசிம்ம சுவாமி கோவில்
–SUBHAM—
Tags- கர்நாடக பயணம், விநோதங்கள், யோக நரசிம்ம சுவாமி கோவி
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
23-10-2025 கல்கிஆன்லைன் இதழில் பிரசுரமான கட்டுரை!
வேற்று கிரக மனிதர்கள் உண்டா? SETI- யின் ஆராய்ச்சி!
ச.நாகராஜன்
நவீன அறிவியல் யுகம் ஆரம்பமானதிலிருந்தே மனித குலத்திற்கு ஒரு உற்சாகமான தேடலும் ஆரம்பித்தது.
நமது பூமியைத் தவிர இதர கிரகங்களில் நம்மைப் போன்ற உயிரினங்கள் உண்டா, மனிதரைப் போல நுணுக்கமான அறிவை அவர்கள் கொண்டிருக்கிறார்களா, அல்லது அதற்கும் மேம்பட்ட நுண்ணறிவைக் கொண்டிருக்கிறார்களா, அவர்கள் பூமிக்கு விஜயம் செய்வதுண்டா… இன்ன பிற கேள்விகள் மனிதர்களுக்கு எழுந்து கொண்டே இருக்கின்றன.
இதை அறிவியல்பூர்வமாக ஆராய ஒரு பெரும் திட்டம் தீட்டப்பட்டது. அதன் பெயர் தான் Search for Extraterrestrial Intelligence என்பதாகும்.
சுருக்கமாக அதை SETI என்று அழைக்கிறோம்.
1960ம் ஆண்டுSETIஃப்ராங்க் ட்ரேக் (Frank Drake) என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது.
ஒரு ரேடியோ டெலஸ்கோப்பை வைத்து நமக்கு அருகில் உள்ள இரண்டு நட்சத்திரங்களிலிருந்து வரும் சிக்னல்களை இது ஆராய
ஆரம்பித்தது. இந்த டெலஸ்கோப் பலவிதமான அலைவரிசைகளை ஆராயும் திறன் கொண்டது.
கலிபோர்னியாவில் உள்ள ஆலன் டெலஸ்கோப் அர்ரே என்ற ஒரு சாதனைத்தையும் வைத்துக் கொண்டு வெளி கிரகங்களிலிருந்து ஏதேனும் சிக்னல்கள் வருகிறதா என்பது கண்காணிக்கப்பட்டது. ஏராளமான தரவுகள் வர ஆரம்பித்தன. இவை பிரபஞ்சத்தில்
இயற்கையாக எழும் ஓசைகளா அல்லது நமக்கு வரும் சிக்னல்களா என்பது ஆராயப்பட்டது.
சேட்டி உலகெங்கும் உள்ள பல்வேறு ஆய்வு மையங்களுடன் தொடர்பு கொண்டது. உலகத்தின் ஆகப் பெரும் பணக்காரரான யூரி மில்னர் பல லட்சம் நட்சத்திரங்களை ஆராய பணத்தைத் தாராளமாக நன்கொடையாகக் கொடுத்து வழங்கினார்.
உலகத்தில் ஏராளமானோர் இதற்கு ஆதரவு தந்தனர். ஆனால் வழக்கம் போல சில சந்தேகப்பேர்வழிகள் இவ்வளவு பணத்தைத் தண்டமாகச் செலவழிக்கலாமா என்று கேள்வி கேட்டனர்.
அப்படி வேற்று கிரக மனிதர்கள் இருந்தால் அவர்கள் இத்தனை காலமாக நம்முடன் ஏன் தொடர்பு கொள்ளவில்லை என்பது அவர்களின் ஒரு கேள்வி.
வேற்றுகிரக மனிதர்கள் பற்றிய ஆய்வில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் ஏராளமான சவால்களைச் சந்திக்க நேர்ந்தது.
முதலில் எதிர்மறை விமரிசனங்கள். அடுத்ததாக பூமியிலிருந்து அனுப்பப்படும் சாடலைட்டுகள், ரேடியோ ஒலிபரப்புகள் ஆகியவற்றிலிருந்து வரும் சிக்னல்கள் உள்ளிட்டவற்றை விஞ்ஞானிகள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
சரி, இதுவரை நடத்திய ஆய்வில் சுவையான தொடர்பு ஏதேனும் உண்டா?
உண்டு என்பதே பதில்.
1977ம் ஆண்டு விவரிக்கவே முடியாத ஒரு சிக்னல் வந்தது. இது 72 விநாடிகளே நீடித்தது. இதன் மர்மம் இன்னும் விடுபட்டபாடில்லை.
வேற்றுகிரகவாசிகள் பற்றிய ஏராளமான திரைப்படங்களும், தொலைக்காட்சித் தொடர்களும் வந்துள்ளன; வந்து கொண்டே இருக்கின்றன.
ஸ்டார் ட்ரெக், தி பிக் பேங் தியரி உள்ளிட்டவை மிகவும் பிரபலமானவை.
கார்ல் சகனின் காண்டாக்ட் என்ற நாவல் உள்ளிட்ட பல நாவல்கள் மிகவும் பிரபலமானவை. ஆர்தர் க்ளார்க், ஐஸக் அஸிமாவ் ஆகியோரும் ஏராளமான நாவல்களைப் படைத்துள்ளனர்.
இப்போது சமீபத்தில் வெளியாகியுள்ள ஜான் கெர்ட்ஸ் எழுதியுள்ள ‘ரீ இன்வெண்டிங் சேட்டி’ (REINVENTING SETI) என்ற புத்தகம் புதிய முனைப்புகளைச் சுட்டிக் காட்டுகிறது.
2025 அக்டோபர் மாத ஆரம்பத்தில் செவ்வாய் கிரகத்திலிருந்து முந்நூறு லட்சம் கிலோமீட்டர் தொலைவில் ஒரு விண்பொருள் தென்பட்டது.
அதன் பெயர் 3I ATLAS.
இது பற்றிய பெரும் பரபரப்பு உலகில் ஏற்பட்டுள்ளது.
இது ஒருCOMETதானா– வால்மீனா – அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு விண்பொருளா என்பது தான் அது.
ஏராளமான விஞ்ஞானிகள் இதில் ஈடுபட்டு இது ஒரு காமட் தான் என்பதற்கான ஆதாரங்களே அதிகம் உள்ளன என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.
ஆனால் ஹார்வர்ட் வானியல் விஞ்ஞானியான அவி லோப் இது செயற்கையான ஒரு விண்கலம் தான் என்பதற்கு 30 முதல் 40 சதவிகிதம் சாத்தியக்கூறு உள்ளது என்கிறார்.
இது தான் இன்றைய பரபரப்பான பேசு பொருளாக ஆகி இருக்கிறது.
ஆக விண்வெளியில் நம்மைப் போன்ற உயிரினங்கள் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கை இன்னும் முற்றிலுமாகப் போகவில்லை.
ஆராய்ச்சி தொடரும் – எத்தனை டிரில்லியன் டாலர்கள் செலவானாலும் சரிதான் ஒரு கை பார்த்து விடுவோம்!
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து, .வைஷ்ணவி ஆனந்தும், லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வணக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை ஜனவரி மாதம் நான்காம் தேதி 2026-ம் ஆண்டு.
நேயர்களுக்கு முதலில் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்
***
முதலில் வங்க தேசச் செய்திகள்
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிரான வன்முறை அதிகரிப்பு
வங்கதேசத்தில் மேலும் ஒரு ஹிந்து நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பதற்றத்தை அதிகரித்து உள்ளது.
ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டு உள்ளார். கொல்லப்பட்டவர் பெயர் பிஜேந்திர பிஸ்வாஸ் (42) இவர் ஆடைத் தொழிற்சாலையில் பாதுகாவலாளியாக இருந்து வந்தார்.
இந்த சம்பவம் மைமென்சிங்கில் உள்ள பாலுகா உபாசிலா என்ற இடத்தில் நடந்துள்ளது அவரை சுட்டுக்கொன்றவர் சக ஊழியர் நோமன் மியா (29)என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். சுடுவதற்கு பயன்பத்திய சிறியரக துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர்.
இந்துக்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு மாணவர் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். அதற்கு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், பல்வேறு நகரங்களில் வன்முறை வெடித்தது.
குறிப்பாக, இந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. அண்மையில், மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ் என்ற இந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார்.அதன் தொடர்ச்சியாக, சாட்டோகிராம், பிரோஜ்பூர் மாவட்டங்களில் 10க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களின் வீடுகளுக்கு தீவைக்கப்பட்டன.
பின்னர் மேலும் இரண்டு இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன
இதுதொடர்பான பலர் கைது செய்யப்பட்ட்டனர் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவங்களால் வங்கதேசத்தில் பதற்றம் நிலவுகிறது.
இந்தியாவின், சிலிகுரி பகுதியை துண்டிப்போம் என, வங்கதேச இடைக்கால அரசு கூறி வருவது குறித்த கேள்விக்கு, ‘கோழி கழுத்தாக இருக்கும் சிலிகுரியை, யானையாக வளர நாம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தின் தற்போதைய சூழல் மற்றும் இந்தியாவின் சிலிகுரி காரிடார் பகுதிக்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் குறித்து, ஈஷா அறக்கட்டளை நிறுவன சத்குருவிடம் கேள்விகள் கேட்கப்பட்டது. அது குறித்த வீடியோ பதிவில் சத்குரு கூறியதாவது: இந்தியாவின், ஒரு பகுதி வெறும், 22 கி.மீ., அகலத்தில், கோழிக்கழுத்து போல் இருப்பது ஒரு தேசத்தை உருவாக்குவதற்கான சரியான முறை அல்ல. இதற்கான அதிகாரம் நம்மிடம், 1946 மற்றும் 47ல் இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால், 1972ல் இதற்கான சீர்திருத்தங்களை செய்யும் அதிகாரம் இருந்தும், நாம் அதை செய்யவில்லை.
கோழியாக இருப்பதால் தேசங்களை உருவாக்கி விட முடியாது. அது ஒரு யானையாக வளர வேண்டும். அதற்கு ஊட்டச்சத்து தேவைப்படலாம் அல்லது சில ஊக்க மருந்துகள் தேவைப்படலாம். எது தேவையோ அதை நாம் செய்தே தீர வேண்டும். எப்படியிருந்தாலும், இந்த முரண்பாடு வெறும், 78 ஆண்டுகளுக்கு முன் தான் நிகழ்ந்தது.
சில திருத்தங்கள் தேவைப்படுகின்றன. திருத்தம் நடந்தே தீர வேண்டும். நாம் அந்த கோழிக்கு நன்றாக உணவளித்து அதை ஒரு யானையாக மாற்ற வேண்டும். யானையின் கழுத்தை கையாள்வது அவ்வளவு எளிதாக இருக்காது. எப்படியோ, இப்போது அவர்கள் இந்த விவகாரத்தை முன்னிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள். இனி இது தவிர்க்க முடியாமல் நடந்தே தீரும்.
தற்போதைய நிலையில், தேசங்களின் இறையாண்மையை பாதுகாப்பது மிக முக்கியமானது. காலப்போக்கில் எல்லைகள் மெதுவாக தளர்ந்து ஒரு கட்டத்தில் முழுமையாக அது நீக்கப்படலாம். 1944, 45ல், ஐரோப்பாவில் மக்கள் கடுமையாக போரிட்டனர். மிக மோசமான முறையில் இரண்டாம் உலகப்போர் நடந்தது. ஆனால், இன்று பாருங்கள், அவர்கள் அனைவரும் ஐரோப்பிய ஒன்றியமாக இருக்கிறார்கள். எனவே அதை செய்வது சாத்தியம்தான். என்று சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறினார்.
***
கோவிலில் முதல் மரியாதை தெய்வத்துக்கு தான்: ஐகோர்ட்
கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான் என்பதால், சிறப்பு மரியாதைகளை, ஒரு போதும் உரிமையாக கோர முடியாது’ என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தேவராஜ சுவாமி கோவிலில், தங்கள் ஆசிரம மடாதிபதிக்கு, 1992 முதல் வழங்கப்பட்டு வந்த, ‘பஞ்ச முத்திரை மரியாதை’ நிறுத்தப்பட்டதை எதிர்த்து, ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஆசிரமம் தரப்பில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கை, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், சி.குமரப்பன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, ஹிந்து அறநிலையத் துறை தரப்பில், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ”தேவராஜ சுவாமி கோவில் செயல் அறங்காவலரின், 1991ம் ஆண்டு செப்., 5ம் தேதியிட்ட கடிதத்தில் குறிப்பிட்டபடி, காஞ்சி காமகோடி பீடம் -சங்கர மடம், அகோபில மடம், நாங்குநேரி வானமாமலை மடம், மைசூர் பரகால ஜீயர் மடம், உடுப்பி வியாசராயர் மடம் ஆகிய ஐந்து மடங்களின் மடாதிபதிகளுக்கு மட்டுமே சிறப்பு மரியாதைகள், பல ஆண்டுகளாக வழங்கப்பட்டு வருகின்றன,” என்றார்.
இதை பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கோவிலில் முதல் மரியாதை, எப்போதும் தெய்வத்துக்கு தான். சிறப்பு மரியாதைகளை, ஒருபோதும் உரிமையாக கோர முடியாது. மடங்களின் தலைவர்களை கவுரவிப்பது, அவர்களுக்கு மரியாதை வழங்குவது குறித்து, அறநிலையத்துறை சட்டப்படி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் முடிவெடுக்க வேண்டும்.இதுதொடர்பாக, அறநிலையத் துறை அதிகாரியை அணுகி, மனுதாரர் தரப்பு நிவாரணம் கோரலாம். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
*****
ஹிந்துக்கள் ஒன்றோடு நிறுத்தக்கூடாது 2 – 3 குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும்: அசாம் முதல்வர் ‘அட்வைஸ்’
”அசாம் மாநிலத்தில் ஹிந்து மக்கள் தொகையின் வளர்ச்சி குறைந்து வருவதால், ஹிந்து தம்பதியர் ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு, மூன்று குழந்தைகளாவது பெற்றெடுக்க வேண்டும்,” என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான அசாமில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 40 சதவீதத்தை நெருங்கி வருவதாக சமீபத்தில், பா.ஜ.,வைச் சேர்ந்த அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியிருந்தார்.
எதிர்கால தலைமுறை இந்நிலையில், மக்கள் தொகை அமைப்பு மாறி வருவது குறித்து, சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியுள்ளதாவது:
சிறுபான்மையினர் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் குழந்தை பிறப்பு விகிதம் அதிகம் உள்ளது. ஹிந்துக்களிடையே குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. எனவே தான் ஹிந்துக்களை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ள சொல்கிறேன்.
ஒரு குழந்தையோடு நிறுத்தாமல், குறைந்தது இரண்டு குழந்தைகள் பெற்றெடுங்கள். முடிந்தவர்கள் மூன்று குழந்தைகள் கூட பெற்றெடுக்கலாம்.
முஸ்லிம்கள் ஏழு, எட்டு குழந்தைகள் பெற்றுக்கொள்கின்றனர். இப்படியே சென்றால், அசாமில் அவர்களின் மக்கள் தொகை 40 சதவீதத்துக்கு மேல் செல்லும்.
ஹிந்துக்களின் மக்கள் தொகை 35 சதவீதத்துக்கு கீழே செல்வதை எதிர்கால தலைமுறையினர் சந்திக்க நேரிடும்.
நம் அண்டை நாடான வங்கதேசம், அடிக்கடி வடகிழக்கு இந்தியாவை பிரித்து, தங்களுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றது.
கோரிக்கை போர் செய்யத் தேவையில்லை. அவர்களின் மக்கள் தொகை 50 சதவீதத்தை தாண்டினால் தானாகவே அது நடந்துவிடும்.
அசாம் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளர், முஸ்லிம்களுக்கு 48 சட்டசபை தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என, அக்கட்சியிடம் கோரிக்கை வைத்தார்.
அவரை இன்னமும் கட்சியை விட்டு நீக்கவில்லை. ஏனென்றால், முஸ்லிம் ஓட்டுகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது என்று அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறினார்.
***
வைகுண்ட ஏகாதசி செய்திகள்
வைகுண்ட ஏகாதசி விழாவை ஒட்டி திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோயிலில் தங்கத் தேரோட்டம் நடைபெற்றது.
கடந்த 20ம் தேதி ஏகாதசி விழா தொடங்கி பகல் பத்து உற்சவ விழாக்கள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவியுடன் தங்கத்தேரில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்ற பக்தி முழக்கம் எழுப்பினர்.
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் டிசம்பர் 30 ஆம் தேதி காலை 5.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. நம் பெருமாள் பாண்டியன் கொண்டை, கிளிமாலை, ரத்தின அங்கி அலங்காரத்தில் பரமபத வாசலை கடந்து எழுந்தருளினார். ரங்கா.. ரங்கா.. கோஷத்துடன் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர்
பெங்களூரு இஸ்கான் கோவிலில் சொர்க்கவாசல் திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்..
ஆருத்ரா தரிசனம்
ஜனவரி மூன்றாம் தேதி ஆருத்ரா தரிசனம் ;அதை முன்னிட்டு சிதம்பரம் நடராஜர் கோவில் தேர்த்திருவிழா முதல் நாள் நடந்தது; ஐந்து தேர்களில் பவனி வந்த 5 மூர்த்திகளை ஏராளமான பக்தர்கள் தரிசித்தனர்
***
சபரிமலை கோயிலில் தங்கம் திருடப்பட்ட வழக்கு – தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் கைது!
சபரிமலையில் தங்கம் திருடப்பட்ட வழக்கில், திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமார் கைது செய்யப்பட்டார். இதனால் இவ்வழக்கில் கைது செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 10ஆக உயர்ந்தது.
சபரிமலை ஐயப்பன் கோயில் துவார பாலகர் சிலைகளில் இருந்த தங்கக் கவசங்கள், பராமரிப்பு பணிக்காக 2019ம் ஆண்டு கழற்றப்பட்டன. பின்னர் ஒப்படைக்கும்போது தங்கக் கவசங்களின் எடை, 4 புள்ளி 54 கிலோ அளவுக்கு குறைந்திருந்து கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பான விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது.
இவ்வழக்கில் உன்னிகிருஷ்ணன் போத்தி உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
இப்போது திருவிதாங்கூர் தேவசம் போர்டு முன்னாள் உறுப்பினர் விஜயகுமாரை கைது செய்து சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை செய்து வருகின்றனர்.
***
ராமர் கோவில் பிரதிஷ்டை 2ம் ஆண்டு விழா: பிரதமர் மோடி பெருமிதம்
ராமர் கோவில் பிரதிஷ்டை இரண்டாம் ஆண்டு விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது குறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இன்று, அயோத்தியின் புனித பூமியில் ராமர் கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்ட இரண்டாம் ஆண்டு விழா கொண்டாடப்படுகிறது; இந்த விழா நமது நம்பிக்கை மற்றும் மரபுகளின் தெய்வீக விழாவாகும்; உலகம் முழுவதும் உள்ள ராம பக்தர்களுக்கு வாழ்த்துகள். நாட்டு மக்களுக்கும் வாழ்த்துக்கள்.
ராமரின் எல்லையற்ற கருணை மற்றும் ஆசீர்வாதங்களுடன், எண்ணற்ற ராம பக்தர்களின் ஐந்து நூற்றாண்டு பழமையான உறுதிமொழி நனவாகியுள்ளது. இன்று, ராமர் தனது அற்புதமான இல்லத்தில் மறுபிறவி எடுத்துள்ளார். கடந்த மாதம் அயோத்தியில் காவிக்கொடியை நிறுவும் வாய்ப்பு கிடைத்தது அதிர்ஷ்டம்.
ஒவ்வொருவரின் இதயங்களிலும் சேவை, அர்ப்பணிப்பு மற்றும் இரக்க உணர்வை மேலும் வலுப்படுத்த விரும்புகிறேன். இது ஒரு வளமான மற்றும் தன்னம்பிக்கை கொண்ட இந்தியாவை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளமாகவும் மாறும். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்; லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் , லதா யோகேஷும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு பற்றிய முக்கிய அறிவிப்பு .
எல்லோரும் நீண்ட பொங்கல் விடுமுறைக்குச் செல்வதால்
அடுத்த நிகழ்ச்சி பற்றிய செய்தியை FACEBOOK மற்றும் YOU TUBE வழியாக பின்னர் அறிவிப்போம் .
மீண்டும் ஞான மயம் குழு உங்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களையும், பொங்கல் வாழ்த்துக்களையும்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
4-1-2026 ஞாயிறு அன்று ஒளிபரப்பப்பட்ட ஞானமயம் நிகழ்ச்சியில் இடம் பெற உரை
ஆலயம் அறிவோம்
வழங்குவது ப்ரஹன்நாயகி சத்யநாராயணன்
ஞானமயம் நேயர்கள் அனைவருக்கும் நமஸ்காரம். வணக்கம்.
ஒன்றா உலகு அனைத்தும் ஆனார் தாமே
ஊழி தோறு ஊழி உயர்ந்தார் தாமே
நின்று ஆகி எங்கும் நிமிர்ந்தார் தாமே
நீர் வளி தீ ஆகாசம் ஆனார் தாமே
கொன்று ஆடும் கூற்றை உதைத்தார் தாமே
கோலப் பழனை உடையார் தாமே
சென்று ஆடு தீர்த்தங்கள் ஆனார் தாமே
திரு ஆலங்காடு உறையும் செல்வர் தாமே
– திருநாவுக்கரசர் திருவடி போற்றி
ஆலயம் அறிவோம் தொடரில் இன்று நமது யாத்திரையில் இடம்
பெறுவது தமிழ்நாட்டில் சென்னையிலிருந்து திருவள்ளூர் வழியாக அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள திரு ஆலங்காடு திருத்தலமாகும். இது சென்னையிலிருந்து 60 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
ஆலமரக்காடாக இருந்த இந்தப் பகுதியில் இறைவன் ஸ்வயம்புவாகத் தோன்றி நடனமாடியபடியால் இறைவன் வட ஆரண்யேஸ்வரர் என்ற பெயரைப் பெற்றார். அம்மனின் சக்தி பீடங்களில் இது காளி பீடமாக அமைகிறது.
நடராஜப் பெருமான் நித்தமும் நடனமாடும் ஐந்து அம்பலங்களில் இது ரத்தின சபை ஆகும்.
ஏனைய நான்கு சபைகள்
சிதம்பரம் நடராஜர் கோவில் – பொன்னம்பலம்
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் – வெள்ளியம்பலம்
திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவில் – தாமிர அம்பலம்
குற்றாலநாதர் கோவில் – சித்திர அம்பலம்
இந்தத் தலத்தைப் பற்றிய ஏராளமான புராண வரலாறுகள் உண்டு. சும்பன், நிசும்பன் என்ற இரு அரக்கர்கள் ஆலமரங்கள் அதிகமாக உள்ள இந்தக் காட்டில் தங்கி தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் சொல்லொணா துன்பம் விளைவித்து வந்தனர். இதனால் வருத்தமடைந்த தேவர்கள் சிவ, பார்வதியிடம் சென்று முறையிட்டனர். பார்வதி தேவி தனது பார்வையால் காளி தேவியைத் தோற்றுவித்தாள். காளி தேவி அரக்கர்களை அழித்தாள். அவளையே தேவி ஆலங்காட்டிற்கு தலைவியாக்கினாள்.
அரக்கர்களின் ரத்தத்தைக் குடித்த காளி பல கோரச் செயல்களைச் செய்யவே, முஞ்சிகேச கார்க்கோடக முனிவர் சிவனிடம் சென்று முறையிட்டார். உடனே சிவபிரான் கோர வடிவம் கொண்டு ஆலங்காட்டை அடைந்தார். அவரைக் கண்ட காளி, “என்னுடன் நீ நடனமாடி வெற்றி பெற்றால் இந்த ஆலங்காட்டை ஆளலாம்” என்றாள்.
சிவன் உடனே ஊர்த்துவ தாண்டவத்தை ஆடினார். அப்போது அவர் தன் காதில் இருந்த மணியைக் கீழே விழவைத்து, பின் அதைத் தன் இடதுகால் பெருவிரலால் எடுத்து மீண்டும் தன் காதில் பொருத்தினார். இது போல் தன்னால் தாண்டவம் ஆட முடியாது என்று காளி தன் தோல்வியை ஒப்புக் கொண்டாள். உடனே இறைவன் அவள் முன் தோன்றி, “என்னையன்றி உனக்குச் சமமானவர் யாரும் கிடையாது. இத்தலத்தில் முதலில் உன்னை வழிபட்ட பின்னரே பக்தர்கள் என்னை வழிபட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு முழுப்பலன் கிடைக்கும் என்று கூறி அருளினார். அன்றிலிருந்து காளி தனிக் கோயில் கொண்டு அருள் பாலித்து வருகிறாள்.
இத்தலத்தில் கார்க்கோடகன், சுநந்த முனிவர், பரண தேவ நாயனார், பட்டினத்துப் பிள்ளையார், சேக்கிழார் உள்ளிட்ட பல பெரியோர் வழிபட்டுள்ளனர்.
நடனக்கலையில் தேர்ச்சி பெற விரும்புவோர் வழிபட வேண்டிய தலம் இது. கணவன், மனைவி ஒற்றுமை ஓங்கவும் இத்தலத்தில் வழிபாடு நடத்தப்படுகிறது.
மார்கழி மாதம் திருவாதிரைத் திருவிழா இங்கு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
63 நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து இறைவனை தரிசித்த தலம் இது. காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதி ஆகும். அவரை சிவபிரான் அம்மையே என்று அழைத்ததால் அவர் காரைக்கால் அம்மையார் என்ற பெயரைப் பெற்றார்.
அவர் வரலாற்றைக் கூறும் சேக்கிழார் பிரான்,
“இறவாத இன்ப அன்பு வேண்டி, பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும், இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன்னடியின் கீழ் இருக்க என்றார்”
என்று பாடுகின்றார்.
அவர் சிவபிரானை வழிபட்டவுடன் சிவபிரான் தனது இடதுகாலைத் தூக்கி ஊர்த்துவ தாண்டவம் ஆடினார். தலைக்கு மேலே காலைத் தூக்கி ஆடுவது ஊர்த்துவ தாண்டவம் எனப்படும். அவரின் திருவடியின் கீழிருந்து காரைக்கால் அம்மையார் சிவானந்த இன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும் தலமாகும் இது.
அவர் பாடிய திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம், திருவிரட்டை மணி மாலை, அற்புதத் திருவந்தாதி ஆகியவை பதினோராந் திருமுறையில் உள்ளன.
காரைக்காலம்மையார் தலையால் நடந்து வந்த தலம் இது என்பதால் இத்தலத்தில் கால் பதிக்க அஞ்சிய திருஞானசம்பந்தர் வெளியில் ஓரிடத்தில் தங்கி இரவு உறங்கலானார். அப்போது அவர் கனவில் வந்த ஆலங்காட்டான். “நம்மை அயர்த்தனையோ பாடுதற்கு” என்று கேட்க அடுத்த நாள் தலத்துக்கு வந்து கோவிலுள் சென்று இறைவன் மீது பதிகம் பாடி வணங்கி வழிபட்டார் திருஞானசம்பந்தர்.
இத்தலத்தில் திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரும் பதிகங்கள் பாடி அருளியுள்ளனர்.
காலம் காலமாக ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வடாரண்யேஸ்வரரும், வண்டார்குழலியும்
அனைவருக்கும் சர்வ மங்களத்தைத் தர ஞானமயம் சார்பில் பிரார்த்திக்கிறோம்.