7-6-25 மாலைமலர் இதழில் வெளி வந்த இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை! – 2
ச. நாகராஜன்
கன்யாகுமரி
பாரதத்தின் தென் கோடியில் உள்ள இந்தத் தலம் நாகர்கோவிலிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
இது 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். தேவியின் முதுகுப் பகுதி விழுந்த இடம் இது. இந்தத் தலத்தைப் பற்றிய புராண வரலாறு ஒன்று உண்டு.
முன்னொரு காலத்தில் பாணாசுரன் என்னும் அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிய பிரம்மா அவன் முன் தோன்றி அவனுக்கு வரம் அளிக்கத் திருவுள்ளம் கொண்டார். ஒரு கன்னிப் பெண்ணைத் தவிர வேறு யாராலும் தனக்கு மரணம் வரக் கூடாது என்று அந்த அசுரன் வேண்ட, அந்த வரத்தை அருளினார் பிரம்மா. மிக்க வலிமை உடைய அசுரன் கன்னிப் பெண்ணால் தனக்கு அழிவு ஏற்படவே முடியாது என்ற எண்ணத்தால் தேவர்கள் உள்ளிட்ட அனைவரையும் கொடுமைப் படுத்த ஆரம்பித்தான். தேவர்கள் திருமாலை அணுக அவர் பாணாசுரனின் வரம் பற்றி விளக்கி சிவனை அணுகுமாறு கூறினார்.
சிவபிரானை அணுகிய தேவர்கள் தங்களின் குறையை முறையிட்டனர். சிவபிரான் இந்த அசுரனை அழிக்கத் தகுதி வாய்ந்தவள் தேவியே என்று கூற, தேவர்கள் தேவியை நோக்கித் தவம் புரிந்து வேண்டினர். அவர்களுக்கு அருள் புரிய எண்ணிய தேவி கன்யாகுமரி தலத்தில் ஒரு பெண்ணாக அவதரித்தாள்.
கன்னியாக இருந்த தேவி சிவபிரானை மணக்க எண்ணிக் கடும் தவம் புரிந்தாள். அப்போது அருகில் சுசீந்திரத்தில் தாணுமாலயனாக இருந்த சிவபிரான் தேவியை மணக்க எண்ணினார். மணம் முடிந்தால் தங்கள் துயர் தீராதே என்று இதனால் தேவர்கள் பயந்தனர்.
ஆனால் தேவரிஷியான நாரதர் இதுவும் சிவபிரானின் அருள் விளையாடலே என்பதை உணர்ந்தார். சிவபிரானின் முன், அவர் ஒரு கோரிக்கையை வைத்தார். மணம் முடிக்கும் இடத்திற்கு மாப்பிள்ளையான சிவபிரான் சூரியோதயத்திற்கு ஒரு நாழிகை முன்னதாகவே வந்து விட வேண்டும் என்றும் அப்படி வரவில்லை எனில் மணம் நடக்காது என்றும் அவர் கூற அதை அப்படியே சிவபிரான் ஏற்றார்.
மண நாளன்று தாணுமாலயன் கன்யா குமரி இருந்த இடத்தை நோக்கி வரும் போது நாரதர் சேவல் வடிவில் இருந்து கூவினார்.
சிவபிரான் விடிந்து விட்டது என்பதால் தன் இருப்பிடம் திரும்பினார். தன்னை மணக்க சிவபிரான் வருவார் என்று காத்திருந்த குமரியம்மன் அவர் வராததால் எல்லையற்ற கோபம் கொண்டாள்.
திருமணத்திற்கென வைக்கப்பட்டிருந்த பண்டங்களையும் வண்ண மலர்களையும் கடற்கரைப் பரப்பில் வீசினாள்.
இதுவே கன்யாகுமரி கடற்கரை வண்ணமயமாக இன்றும் காட்சி அளிப்பதற்கான காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் பாணாசுரன் கன்யாகுமரியின் அழகில் மயங்கித் தன்னை மணக்குமாறு கோரினான். தேவி மறுத்தாள். ஆனால் தேவியை மணக்க எண்ணிய அசுரன் அவள் அருகில் வந்த போது தேவியானவள் வானுயரும் வடிவம் எடுத்து அசுரனைக் காலில் போட்டு வதம் செய்தாள்.
தேவர்கள் பூ மழை பொழிந்து தேவியின் உக்கிரத்தைத் தணித்தனர். தேவி சாந்தம் அடைந்து சிவபிரானை நோக்கிக் கடும் தவம் செய்ய ஆரம்பித்தாள். குமரி அம்மன் என்றும் பகவதி அம்மன் என்றும் துர்க்கை என்றும் பல்வேறு பெயர்கள் தேவிக்கு உண்டு.
தன் யோக சக்தி அனைத்தையும் அம்மன் தனது மூக்குத்தியில் இறக்கி வைத்திருப்பதால் அந்த மூக்குத்தி ஜொலிக்கும் ஒன்றாக அமைந்திருக்கிறது. தூரத்தில் வரும் கப்பல்கள் மூக்குத்தி ஒளியால் வழி காட்டப்பட்டு வந்தன. சில மாலுமிகளோ மூக்குத்தி ஒளியை கலங்கரை விளக்கம் என்று எண்ணி விபத்துக்குள்ளாயினர். ஆகவே கோவிலின் முன்புற வாயில் மூடப்பட்டு, வடக்குப் புறமாக வாயில் வைக்கப்பட்டது.
கிழக்கு நோக்கி கொண்டு பகவதி அம்மன் உள் மண்டப கர்பக்ருஹத்தில் எழுந்தருளியுள்ளாள். ஒரு கரத்திலே இலுப்பைப் பூ மாலையை தரித்து மற்றொரு கரத்தைத் தொடை மீது அமர்த்தி தவக்கோலத்தில் அம்மன் காட்சி அளிக்கிறாள்.
இங்கிருந்து சூரியோதயத்தைக் கண்டு மகிழ்வது சிறப்பாகும்.
கன்யாகுமரி ஹிந்து மதத்தின் எழுச்சிக்கு வழி கோலிய அற்புதத் தலமாகும். இங்கு தான் ஸ்வாமி விவேகானந்தர் தனது பாரத யாத்திரையின் போது வந்து 1892 டிசம்பரில் அருகிலிருந்த பாறைக்கு நீந்திச் சென்று மூன்று நாட்கள் தவம் புரிந்தார். அலைகடலின் மீது தோன்றிய ராமகிருஷ்ணர் அவரை வா என்று அழைக்கவே அவர் அமெரிக்கா செல்ல இறுதி முடிவு எடுத்தார்; அங்கு சென்றார். உலகையே வென்றார். அவர் தவம் புரிந்த இந்தப் பாறையில் விவேகானந்தர் மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு செல்ல படகு வசதிகளும் உண்டு.
இந்தப் பாறையின் முக்கிய சிறப்பு அம்சம் இங்கு தேவியின் ஸ்ரீ பாதம் அமைந்திருப்பது தான். தேவி தவம் புரிந்த பாறை இது என்பதால் இது ஸ்ரீபாதப்பாறை என்று அழைக்கப்படுகிறது. தேவியின் பாதச் சுவடு உள்ள இடம் தரிசனம் செய்யக் கூடியபடி அழகுற பாதுகாக்கப்பட்டிருக்கிறது;
இங்கு தான் உலகப் பொதுமறையான திருக்குறளை இயற்றிய தெய்வப்புலவர் திருவள்ளுவரின் சிலையும் உள்ளது.
இப்படி தமிழ்நாட்டின் தென்பகுதிக்கு பயணம் மேற்கொள்பவர்கள் குற்றாலம், தென்காசி, திருச்செந்தூர், திருநெல்வேலி, சுசீந்திரம், கன்யாகுமரி ஆகிய புகழ்பெற்ற இடங்களுக்குச் செல்ல நல்லதொரு பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம். புத்துணர்ச்சியோடு தெய்வ அருளையும் பெறலாம்.
தொடர் முடிகிறது
ஶ்ரீ நகர், ஜெய்பூர், கோவா, கோவளம், மைசூர், விசாகப்பட்டினம், வழியாக ஒரிஸா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், பீஹார், ஹிமாசல் ப்ரதேசத்தில் உள்ள பல இடங்களுக்கும் சென்று கைலைமலை நாதனை தரிசித்து, தேவி கன்யாகுமரியையும் தரிசித்ததோடு இந்தப் பயணத் தொடர் முடிவடைகிறது. ஊக்கமூட்டிய வாசகர்கள், மாலைமலர் நிர்வாகத்தினர் மற்றும் ஆசிரியக் குழுவினர் அனைவருக்கும் நன்றி.
1.அரங்கம்– ஆடலாம், பேசலாம் ; மேடை இருக்கும். 2,குரங்கம்- மான்; சிவன் கையில் இருக்கும்; 3. சுரங்கம்– தங்கம் வெள்ளி எடுக்க தோண்டும் பாதை 4.1.அரங்கம் 2,குரங்கம் 3. சுரங்கம் 4.ஆதங்கம்– கவலை, துக்கம் ; 5.பதங்கம் 6.ஓரங்கம் 7.சாரங்கம் 8.மாபாதகம்– 5.பதங்கம்-வீட்டில் பூச்சி, மருந்துச் சரக்கு, பாதரசம், எரிந்து அடியில் தங்கியுள்ள பொருள்; – 6.ஓரங்கம்– ஒரே காட்சியுள்ள நாடகம் 7.சாரங்கம்– வில்; 8.மாபாதகம்– கொலை, கொள்ளை முதலிய ஐந்து பெரிய பாவங்கள்
–SUBHAM—
TAGS- லண்டன் ,தமிழ் குறுக்கெழுத்துப் போட்டி ,10 6 2025
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஆயிரம் ஆண்டுகளுக்கு தமிழ் நாட்டின் ஒரு பகுதியை ஆண்ட பாண்டியர்கள் யார் ? வெள்ளைக்காரர்கள் கணக்குப்படி ஒரு ரசரின் சராசரி ஆட்சிக்காலம் இருபது ஆண்டுகள்; ஆனால் தமிழ் நாட்டில் இது முப்பது ஆண்டுகள் என்று என்னுடைய ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. வெளிநாட்டுக்காரர் சராசரியை ஒப்புக்கொண்டாலும் கடுங்கோன் என்னும் மன்னனுக்கு முன்னால் ஆண்ட ஐம்பது பாண்டியர்கள் யார் ? இதை அறிய திருவிளையாடல் புராணம் நமக்கு உறுதுணையாக நிற்கிறது. அதற்கு மூல நூலான சாரசமுச்சயம் போன்ற சம்ஸ்க்ருத நூல்களை ஆராய்ந்தால் மேலும் பல உண்மைகள் வெளிப்படலாம். இலங்கை விஜயன் (550 BCE) ஆட்சிக் காலம் முதல் கல்வெட்டு கூறும் கடுங்கோன் (550 CE) காலம் வரை ஆண்டவர்கள் பட்டியல் எங்கே?
****
பாண்டியர் பற்றிய முதல் இலக்கியக் குறிப்பு இலங்கையின் வரலாற்றைக் கூறும் மஹா வம்சத்தில் கிடைக்கிறது . தீய செயல்களுக்காக இந்தியாவின் கலிங்கம்/வங்காள பிரதேசத்திலிருந்து நாடு கடத்தப்பட்ட விஜயன் (545 BCE) ஒரு யக்ஷ கன்னிகையை மணக்கிறான் ; அவளுடைய பெயர் குவேனி. ஆனால் முறையான ராஜ வம்ச பெண்ணைத்தான் க்ஷத்ரிய மன்னர்கள் மணக்க வேண்டும், அப்போதுதான் அந்தப் பெண் மஹாராணி ஆக முடியும் என்று புரோகிதர்கள் சொல்லவே , அவர்கள் மதுரைக்குச் சென்று பாண்டிய மன்னரின் மகளை பெண் கேட்கின்றனர் அவளும் விஜயனை மணக்கிறாள். அவள் மட்டுமின்றி மந்திரி மகள்கள் முதலியோரும் இலங்கைக்கு வந்து அங்குள்ள ராஜ வம்ச ஆட்களை மணக்கின்றனர். ஏனெனில் விஜயனுடன் எழுநூறு பேர் இந்தியாவிலிருந்து இலங்ககைக்கு வந்தனர். இந்த நிகழ்ச்சி அஜந்தா குகையில் ஓவியமாக உள்ளது. இது 2600 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த (545 BCE) வரலாற்று நிகழ்ச்சி . அப்போதைய மதுரையைக் கடல் விழுங்கியதாக இறையனார் அகப்பொருள் உரையிலிருந்து நாம் அறிகிறோம்.
இதற்குப்பின்னர் கல்வெட்டு சான்றுகள் அசோக மன்னரின் கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கிறது. அதற்குப்பின்னர் காரவேலனின் ஹத்தி கும்பா கல்வெட்டிலிருந்து கிடைக்கிறது. பாண்டியர் மட்டுமின்றி சேர, சோழ, சத்தியபுத்திரர் (அதியமான்) பற்றியும் அசோகர் கூறுகிறார் .
இதை எல்லாம் உறுதிப்படுத்தும் வகையில் 2200 ஆண்டுகளுக்கு முன்னர் எல்லாளன் என்ற சோழன் இலங்கையை 45 ஆண்டுகள் நீதி நெறி தவறாமல் ஆண்டதையும் மஹாவம்சம் கூறுகிறது; இது ஒரு புறமிருக்க மெகஸ்தனீஸ் (born around 350 BCE and died around 290 BCE) எழுதிய இண்டிகா INDICA நூலில், பண்டேயா என்ற மகாராணி தென்னாட்டை ஆண்டதாகவும் ஒரு குறிப்பு உள்ளது. அந்த ராணி மீனாட்சியாக இருக்க வேண்டும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். மேற்கூறிய வரலாற்றுக் குறிப்புகளை எல்லோரும் ஏற்கின்றனர்.
இதன் சாராம்சம் என்ன?
2600 ஆண்டுகளுக்கு முன்னர் பாண்டியர் ஆட்சி துவங்கியது என்பதாகும். அதற்கு முன்னரும் பாண்டியர் ஆட்சி இருந்ததற்கு மஹாபாரதம் ராமாயணத்திலிருந்தும் குறிப்புகள் கிடைக்கின்றன .
கடல்கொண்ட கபாட புரத்தை வால்மீகி ராமாயண ஸ்லோகத்திலிருந்தும் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திர ஸ்லோகத்திலிருந்தும் அறிகிறோம்; பாண்டிய கவாடம் என்ற முத்து பற்றி அர்த்த சாஸ்திரம் சொல்கிறது.
****
ஒரு வட்டத்தை வரைந்து துவக்கப்புள்ளியைக் காட்டு என்று சொன்னால் எவரும் எந்த இடத்திலும் புள்ளியைவைத்து இங்கிருந்துதான் வட்டம் துவங்கியது என்று சொல்ல முடியும். அந்தக் குழப்பத்தைத் தவிர்க்க நாம் ஏதேனும் ஒரு துவக்கப்புள்ளியைக் குறிக்கவேண்டும். தொல்காப்பியம் சொல்லும் நிலம் தரு திரு வில் பாண்டியன் முதல் சங்க நூல்களைத் தொகுத்த உக்கிரப்பெருவழுதி வரை பல பாண்டிய மன்னர் பெயர்கள் கிடைத்த போதிலும் நெடுஞ்செழியன் எப்போது ஆண்டார், அது எந்த நெடுங்கிச்செழியன் , முதுகுடுமிபி பெருவழுதி எப்போது ஆண்டார் என்றெல்லாம் யூகிக்கத்தான் முடிகிறது; குறிப்பிட்ட ஆண்டினைச் சொல்ல முடியவில்லை. ஆகையால் வட்டத்தில் நாமே துவக்கப்புள்ளியை வைப்போம் .
நல்ல வேளையாக, பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணத்தில்( தி வி பு) மலையத்வஜ பாண்டியன் காலத்திலிருந்து தொடர்ச்சியான வரலாறு கிடைக்கிறது. அதில் அவர் இன்னார் மகன் இவர் என்று சொல்லி கதையைக் கொண்டு செல்கிறார். சுமார் எழுபது பாண்டிய மன்னர்களின் பெயர்கள் நமக்கு கிடைக்கின்றன .
இப்போது நமக்குள்ள பொறுப்பு யார், யார் எப்போது ஆண்டார்களென்று முடிவு செய்வதே.
தி. வி. பு. சொல்லும் பெயர்கள் ஸம்ஸ்க்ருதப் பெயர்களாக இருப்பதால் அதை ஆராய்ச்சியாளர்கள் ஒதுக்கிவிட்டனர். அந்தப் பெயர்கள் அவர்கள் பட்டம் ஏற்றபோது கொடுக்கப்பட்ட அபிஷேகப் பெயர்கள் என்பதை அறிந்தால் அவருடைய வேறு தமிழ்ப்பெயர்கள் நெடுஞ்செழியனாகவோ பெருவழுதியாகவோ இருந்திருக்கும் என்பதை நாம் ஊகிக்கலாம். மேலும் கல்வெட்டுகளின் தமிழ்ப் பகுதிகள் மாறன் வழுதி என்று சொல்லும் இடத்திலும் அதே கல்வெட்டின் ஸம்ஸ்க்ருதப் பகுதி வர்மன் ஜடிலன் (சடையன்) என்றெல்லாம் சொல்கின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக மதுரையை நிறுவிய குலசேகர பாண்டியன் மற்றும் அவருக்கு கடம்ப வனத்தில் சிவலிங்கம் இருப்பத்தைச் சொன்ன தனஞ்செயன் என்ற செட்டியார் பெயரை அப்படியே கர்நாடக ஆளுப்பா வம்ச மன்னர்களின் பெயர்களில் காண்கிறோம். அதுமட்டுமல்லாமல் தி வி பு பெயர்களான குலசேகரன், வீர பாண்டியன், குலோத்துங்கன் என்ற பெயர்களை பிற்காலத்த்தில் சோழ பாண்டிய மன்னர்களின் பெயர்களில் காண்கிறோம் இதனால் இவை கற்பனைப் பெயர்களோ இட்டுக்கட்டிய பெயர்களோ இல்லை என்பது தெளிவாகிறது பூரண வர்மன் என்பவரின்1600 ஆண்டுப் பழமை உடைய கல்வெட்டு இந்தோனேஷிய காட்டில் கிடைத்திருக்கிறது புற நானூறு முதலிய நூல்களில் நிறைய சம்ஸ்க்ருத கோத்திர பெயர்களைக் காண்கிறோம் அப்பர் காலத்திலும் அவருக்கு முன்னரும் திலகவதி, புனிதவதி பரம தத்தன், முதலிய ஸம்ஸ்க்ருதப் பெயர்களைக் காண்கிறோம்; யானை மாலை போட்டதால் மன்னர் ஆன மூர்த்தி செட்டியார் (நாயனார் பற்றியும் நம்பியின் தி. வி. பு. வும் பெரியபுராணமும் பாடுகின்றன
இவை எல்லாவாற்றையும் கருத்திற்கொண்டு மீனாட்சி அரசாண்ட தேதியிலிருந்து நாம் வரலாற்றினைத் துவங்கி பாண்டிய மன்னர் ஆட்சி வரிசையை பட்டியல் இடலாம். மெகஸ்தனீஸ், பெருவழுதி குறிப்பினை ஆதாரமாக வைத்து மீனாட்சி ஆண்டது 2300 ஆண்டுகளுக்கு முன்னர் என்று துவங்கலாம். மதுரையில் கோவில் இருந்ததை புறநானூற்றிலுள்ள முதுகுடுமி பெருவழுதி பாடலும் காட்டுகிறது. மஹேந்திர பலலவன் (600 CE) கால சம்பந்தர் அங்கயற்கண்ணி, ஆலவாய் என்று தெளிவாகவே பெயர் சொல்லிப் பாடியிருக்கிறார். மீனாட்சி என்பதன் அழகான தமிழ் மொழிபெயர்ப்பு அங்கயற்கண்ணி ஆகும்.
இதற்குப்பின் மாணிக்கவாசகர் பற்றித் தமிழ் அறிஞர்கள் முன்னுக்குப்பின் முரணாகப் பேசுவதை அடுத்த கட்டுரையில் ஆராய்வோம்.
–subham—
Tags- பாண்டியர் வரலாறு தீர்க்கப்படாத மர்மங்கள், புதிர்கள்
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
7-6-25 மாலைமலர் இதழில் வெளி வந்த இந்தத் தொடரின் இறுதிக் கட்டுரை! இரு பகுதிகளாக இங்கு வெளியிடப்படுகிறது.
நீலத்திரைக் கடல் ஓரத்திலே நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லை! – 1
ச. நாகராஜன்
இந்தியாவின் அற்புதமான ஒரு நகராகத் திகழ்வது கன்யாகுமரி நகர். இந்து மா கடல் தெற்கிலும் வங்காள விரிகுடா கிழக்கிலும் அரபிக்கடல் மேற்கிலும் இருக்க இந்த முப்பெரும் கடலின் சங்கம இடத்தில் இந்தத் தலம் அமைந்திருக்கிறது.
இங்குள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவை நமது பாரம்பரியத்தை விளக்கிக் கொண்டிருக்கின்றன.
அருகில் சுசீந்திரம், திருக்குற்றாலம், தென்காசி, திருநெல்வேலி, திருச்செந்தூர் ஆகிய இடங்களுக்கும் சென்று புத்துணர்ச்சி பெறலாம். இவற்றை இங்கு பார்ப்போம்.
திருக்குற்றாலம்
குற்றால அழகினையும், சிறப்பினையும் பற்றி குற்றாலத்தை அடுத்துள்ள மேலகரத்தில் 17ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்த திரிகூட ராசப்பக் கவிராயர் தான் இயற்றிய குற்றாலக் குறவஞ்சியில் அற்புதமாகக் கூறியுள்ளார்.
எடுத்துக்காட்டிற்கு ஒரு பாடல்:
வானரங்கள் கனி கொடுத்து மந்தியொடு கொஞ்சும் ;
மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும் ;
கானவர்கள் விழி எறிந்து, வானவரை அழைப்பார் ;
கவன சித்தர் வந்து வந்து காயசித்தி விளைப்பார் ;
தேன் அருவித் திரை எழும்பி, வானின் வழி ஒழுகும் ;
செங்கதிரோன் பரிக் காலும் தேர்க் காலும் வழுகும் ;
கூனல் இளம் பிறை முடித்த வேணி அலங்காரர்
குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே!
– குற்றாலக் குறவஞ்சி பாடல் எண் 67
தென்காசியிலிருந்து ஆறு கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தின் எழிலையும் அருவிகளின் வனப்பையும், இயற்கைச் சூழலையும் மலையின் புனிதத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ஒன்பது புகழ் பெற்ற அருவிகள் இங்கு மக்கள் அனைவரையும் வருக வருக என்று அழைக்கின்றன. பேரருவி, ஐந்தருவி, புலி அருவி ஆகியவற்றில் ஜனக்கூட்டம் எப்போதும் அதிகமாகவே இருக்கும். குற்றால மலையின் மீது ஏறி செண்பகா தேவி மற்றும் தேனருவியை நெருங்கினால் அங்கு விழும் நீர்வீழ்ச்சிகளையும் கண்டு ஆனந்திக்கலாம்.
புராண வரலாற்றின் படி சிவ-பார்வதி திருமணத்தின் போது தேவர்கள் அனைவரும் ஒருமிக்க கைலாசத்தில் கூடவே, வடதிசை தாழ்ந்து தென் திசை உயர்ந்தது. உடனே சிவபிரான அகத்திய முனிவரை நோக்கி தென்திசை ஏகி பூமியை சமனப்படுத்துமாறு பணிக்க அகத்தியர் பொதிய மலை வந்தார். பூமியும் சமனமாயிற்று.
அகத்தியர் பொதிய மலையிலிருந்து தமிழ் மொழியைப் பரப்பும் அரிய செயலில் ஈடுபட்டார்.
சிவபிரான் கோவில் கொண்டுள்ள இடம் குற்றாலம். அருவியில் குளித்து புத்துணர்ச்சி பெற்று ஆன்மீக எழுச்சி பெற குற்றால நாதரை தரிசிக்கலாம்.
இங்குள்ள காற்றில் ஆக்ஸிஜனின் அளவு அபரிமிதமாக இருப்பதால் சுவாசக் கோளாறுகள் உள்ளவர்கள் இங்கு வந்து தங்கி அதை உடனே போக்கிக் கொள்வது வழக்கம். அற்புதமான அரிய வகை மூலிகைகளில் பட்டுத் தவழ்ந்து வரும் தென்றல் இதமாக உடல் மீது படுவதாலும் மூலிகைக் காற்றை சுவாசிப்பதாலும் அனைத்து விதமான நோய்களும் போய்விடும் என்பது நிபுணர்களின் அறிவுரை!
தென்காசி
இறைவர் : காசி விஸ்வநாதர்
இறைவி : உலகம்மை நாயகி
பொங்கி வரும் குற்றால நீர்வீழ்ச்சியிலிருந்து உருவாகி ஒடும் சிற்றாறு ஆற்றின் கரையில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். திருக்குற்றாலத்திற்கு ஆறு கிலோமீட்டர் முன்னதாகவே இந்தத் திருத்தலம் அமைந்துள்ளது.
இங்குள்ள காசி விஸ்வநாதர் ஆலயம் எழுந்தது குறித்து சுவையான ஒரு வரலாறு உண்டு.
பிற்காலப் பாண்டிய மன்னர்களில் பெரிதும் போற்றப்பட்டு நல்லாட்சி செய்தவன் பராக்கிரம பாண்டியன். கி.பி. 1422ம் ஆண்டு வாக்கில் இவன் தென்காசியைத் தலைமை இடமாகக் கொண்டு ஆட்சிப் பொறுப்பை ஏற்றான்.
அவன் வடக்கில் காசி சென்று விஸ்வநாதரைத் தரிசிக்க விழைந்த போது அவன் கனவில் சிவபிரான் தோன்றி எனக்கு தென்காசியில் ஒரு கோவில் கட்டுக என்று அருள் பாலித்துக் கூறினார்.
உடனே 15 ஏக்கர் பரப்பளவில் சுமார் 17 ஆண்டுகளில் மிகப் பெரும் கோவிலை அமைத்தான் பராக்கிரம பாண்டியன்.
திருச்செந்தூர் (அறுபடை வீடுகளில் இரண்டாவது)
சூரபன்மனை வதம் செய்ய முருகன் தன் பரிவார தேவதைகளுடன் வந்து முகாமிட்ட தலம் திருச்செந்தூர். சூரனை அடியோடு அழித்து அவனைச் சேவற் கொடியாக மாற்றிக் கொண்ட தலம் இது என்பதால் இதற்கு ஜயந்தி நகரம் என்ற பெயர் உண்டு.
சூரனை வதம் செய்ததும் தன் பரிவார தேவதைகளுக்கு முருகன் தன் பன்னிரு கைகளினாலேயே விபூதி பிரஸாதம் வழங்கினார். முருகனின் பன்னிரு கைகளின் ஸ்தானத்தை இன்று பன்னீர் இலை பெற்று, திருச்செந்தூர் இலை பிரஸாதம் என்று பக்தர்களின் கைகளுக்கு வந்து சேர்கிறது.
இது அலைவாய்த் தலம் என்பதால் இங்கு வழிபடும் போது நமது மனதில் எழுகின்ற எண்ணங்கள் ஓய்ந்து மன அமைதி கூடும்; இறையருள் சித்திக்கும்.
கடற்கரை ஓரம் அமைந்துள்ள திருச்செந்தூர் தல தரிசனம் வெற்றியைத் தரும்; வளமான வாழ்க்கையைத் தரும்! லட்சக்கணக்கில் பக்தர்கள் இங்கு கூடுவது இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் ஒன்றாகும்.
திருநெல்வேலி
தமிழ்நாட்டின் தென்கிழக்குப் பகுதியில் தன்பொருனை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் இது அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்தத் தலமானது சில காலம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாகவும் திகழ்ந்த தலமாகும்.
இறைவன் : நெல்லையப்பர் வேணுவன நாதர் உள்ளிட்ட பல பெயர்கள்
இறைவி: காந்திமதியம்ம, வடிவுடையம்மை
இந்த நகரின் பழம்பெருமை சொல்லி முடியாது. இறைவன் திருவிளையாடல் நடத்தியதால் திருநெல்வேலி என்ற பெயர்க் காரணம் ஏற்பட்டது என்பது பற்றியு புராண வரலாறு உண்டு.
Gnanamayam Broadcast comes to you EVERY SUNDAY via Zoom, Facebook and You Tube at the same time .
London Time 1 PM (British Summer Time)
Indian Time 5-30 pm (evening)
Sydney, Australia time 11 pm (Night)
*****
PLEASE JOIN US TO LISTEN TO SPECIAL PROGRAMMES via Zoom, Facebook and You Tube at the same time .
***
Prayer by Mrs Jayanthi Sundar Team: Master Akash Ramesh
***
Vaishnavi Anand and Latha Yogesh from London presented World Hindu News in Tamil
***
Mrs. Brahannayaki Sathyanarayan spoke on – Vada Thirumullaivayil Shrine
****
Talk by Prof. S Suryanarayanan, Former Principal of Madurai Saraswathy Narayanan College spoke:
Topic- Yaathum Oore, Yaavarum Kelir in Tamil
****
SPECIAL EVENT-
Talk by Mr T R R Ramesh on Periya Puranam in Tamil.
He highlighted Role of Women in Peria Puranam; apart from Karaikkal Ammaiyar, Isai Gnaniar, Mankaiyarkarasiyar and Thilkavathiyar, wives of other Nayanmars also made big contribution for Saivism; he illustrated this point with many examples.
Mr T R Ramesh is the son of Sekkizhar Adippodi Dr T N Ramachandran and
PRESIDENT, HINDU TEMPLE WORSHIPPERS COMMITTEE.
******
ஞானமயம் ஒலி/ ஒளி பரப்பு நிகழ்ச்சிநிரல் ஞாயிற்றுக்கிழமை 8-6-2025
நேரில் காணலாம்; கேட்கலாம் via Zoom, Facebook and You Tube at the same time .
வறுமையும் (விட்டு) நீங்கும்; – திருமகள் வந்து சேருவாள்;
செல்வமும் வாழ்நாளும் மிகும்.
****
வைரம்தான் சிறந்த ரத்தினம் !
மாமணி மரபுக் கெல்லாம் வயிரமே முதன்மைச் சாதி
ஆமென வுரைப்பர் நூலோ ரதிகம்யா தென்னி னேனைக்
காமரு மணிகட் கெல்லாந் தமரிடு கருவி யாமத்
தூமணி தனக்குந் தானே துளையிடுங் கருவி யாகும்.
வைரம் ஏன் சிறந்தது என்றால் உலகிலேயே கடினமான பொருள் வைரம்தான் . மற்ற நவரத்தினங்களைத் துளை போட வைர ஊசியைத்தான் பயன்படுத்துகிறார்கள் ; மேலும் வைரத்தைத் துளைபோட வல்லது வைர ஊசி மட்டுமே
நவரத்தின நூலாராய்ச்சி வல்லுநர்கள் , பெருமை
பொருந்திய மணிகளில் வயிரமே முதற் சாதியாம் என்று
கூறுவர்; அம் முதன்மை எதனாலென்னில், அந்தத் தூய்மையுடைய வயிரமணி, மற்றைய மணிகளனைத்திற்கும் தொளையிடுங் கருவியாகும் (அன்றி), தனக்கும் தானே தொளை செய்யும் கருவியாகும்
வலாசுரனின் பித்தம்தான் மரகதம் ஆகியது; இதை கருட ரத்தினம் என்றும் சொல்லுவார்கள்.
மரகதத் தோற்றங் கேண்மின் வலாசுரன் பித்தந் தன்னை
இரைதமக் காகக் கௌவிப் பறந்தபுள் ளீர்ந்தண் டில்லித்
தரைதனிற் சிதற வீழ்ந்து தங்கிய தோற்ற மாகும்
உரைதரு தோற்ற மின்னும் வேறுவே றுள்ள கேண்மின்.
மரகதத்தின் தோற்றத்தினைக் கேளுங்கள்; வலாசுரன்
பித்தத்தை, தமக்கு உணவாகக் கௌவிப் பறந்த கலுழன்/ கருடன் , டில்லி நாட்டிற் ?????? சிதறலால் வீழ்ந்து தங்கிய (இடங்களில்) தோற்றமாகும்; இன்னம் வெவ்வேறு உள்ளன கேளுங்கள்.
PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.
என் கருத்து
மரகதம் பச்சை நிறக் கல்; பித்த நீரும் அதே நிறம்; ஆகையால் இதை அசுரனின் பித்த நீரில் உண்டானது ன்று பேச்சு வழக்கில் சொல்வதுண்டு. கருடனுடன் சம்மந்தப்படுத்தவும் காரணம் உண்டு; ஆதி காலத்தில் பள்ளத்தாக்குகளில் இருந்த நவரத்தினங்களை எடுப்பதாற்காக மாமிசத் துண்டுகளை மலை உச்சியிலிருந்து வீசி எறிவார்கள்; அதைப் பள்ளத்தாக்கின் அடிப்பகுதிக்குச் சென்று எடுத்துக்கொண்டு கருடன் மேலே பறந்து வரும் அப்போது அதைப் பிடித்தோ கொன்றோ மரகதம் முதலிய கற்களை எடுத்தனர்; இதனால் இதை கருட ரத்தினம் என்பார்கள்
சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதிய அடியார்க்கு நல்லாரும் இதைவிளக்குகிறார் :
நகைத்தலானுமிழ, அஃது இமவான் முதலிய பன் மலைகளினும் ஊறிப் பிறத்தலிற் கருடோற்காரம் என்று பெயர் பெற்ற மரகதச் சாதி’ என்று அடியார்க்கு நல்லார் கூறுவர்.
****
மாணிக்கம் விற்ற படலத்தில் ஒவ்வொரு ரத்தினத்தின் தோற்றம் , கிடைக்குமிடம், அவற்றை அணிவதால் ஏற்படும் பலன்களைக் கூறுகிறார் ; பொதுவான செய்தி, ததீசி முனிவரின் எலும் பிலிருந்தும் வலாசுரனின் உடற்பகுதிகளிலிருந்தும் நவரத்தினங்கள் தோன்றின என்பதாகும்; இவை விஞ்ஞானக் கொள்கைகளுக்கு முரணானவை; ஆயினும் நவரத்தினங்களின் வகைகள், குணங்கள் முதலிய செய்திகள் இரத்தின ஆராய்ச்சியாளர்களுக்குப் பயன்படும் செய்திகள். இதை பாடல் வரிசைப்படி வேங்கடசாமி நாட்டார் உரை எழுதியுள்ளார். அவற்றை அணிவதால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதே நமக்குத் பயன்தரும் செய்தி; இதில் வியப்பான செய்தி என்னவென்றால் அட்லாஸ் என்னும் தேசப்பட புஸ்தகம் இல்லாத காலத்தும் அவர் சிங்களம் கோசலம் முதல் துருக்கி ஈரான்/ பாரசீகம் வரை குறிப்பிடுவதாகும் ஆனால் சங்க காலத்துக்கும் முன்னர் வாழ்ந்த காளிதாசனும் பாண்டிய நாடு முதல் பாரசீகம் வரை வருணிக்கிறார் என்பதை நினைவிற்கொள்ள வேண்டும். குற்றமில்லாத மணிகளை அணிவோருக்கு புகழும் செல்வமும் ஆயுளும் வளரும் என்பதே பரஞ்சோதி முனிவர் கூறும் செய்தி;
இதற்கு மேலும் சில உதாரணங்கள் இதோ :
இந்தமணி பாரியாத் திரகிரியிற்
கொடுமுடியா யிலங்குந் தெய்வ
மந்தரமால் வரைப்புறஞ்சூழ் மேகலையா
மயனிந்த மணியி னாலே
அந்தரநா டவனகரு மரசிருப்பு
மண்டபமு மமைத்தா னிந்தச்
சந்தமணி தரிப்பவரே தரியார்வெந்
நிடவாகை தரிக்க வல்லார்.
தெய்வத் தச்சன் மயன், இந்த மணியினாலே, தேவேந்திரனது நகரத்தையும் அவன் அரசு வீற்றிருக்கு மண்டபத்தையும் ஆக்கினான்; இந்த அழகிய TOPAZ புருடராகமணியை (புஷ்பராகம்) அணிபவரே,பகைவர் புறங்கொடுக்க வெற்றி மாலை தரிக்க வல்லராவர் .
*****
நீலம் SAPHIRE பற்றிய ஒரு அதிசயச் செய்தி !
நீல ரத்தினம் சிறந்ததா என்று சோதிக்க அதைப் பால் குடத்தில் போடவேண்டும் ; அப்போது பாலின் நிறத்தைவிட நீல நிறம் அதிகமாக இருந்தால் அது மிகச் சிறந்த நீலக்கல் என்கிறார் பரஞ்சோதியாரும் நச்சினார்க்கினியரும் ; மதுரை பாரத்வாஜ கோத்திர பிராமணன் நச்சினார்க்கினியர் உரையில்லாவிடில் இன்று நமக்கு சங்க இலக்கியத்தின் உண்மைப்பொருள் தெரிந்திராது!
இலங்கொளிய விந்நீல மெய்ப்படுப்போர்
மங்கலஞ்சேர்ந் திருப்பா ரேனை
அலங்குகதிர் நீலத்திற் பெருவிலையா
யிரப்பத்தி னளவைத் தாகித்
துலங்குவதான் பாற்கடத்தி னூறுகுணச்
சிறப்படைந்து தோற்றுஞ் சோதி
கலங்குகட லுடவைப்பி லரிதிந்த
விந்திரன்பேர்க் கரிய நீலம்.
ஒளியினையுடைய இந்நீல மணிகளை, அணிகின்றவர்கள் நலங்களெய்தியிருப்பர்; மற்றை ஒளியினையுடைய மா நீலத்தினும் பதினாயிர மடங்காகிய பெரிய விலையினை உடைய இந்த இந்திர நீலம், பால் குடத்தில் இட்டால், (பால் நிறத்தைக் கீழ்ப்படுத்தி) நூறு மடங்கு தன் குணம் மேம்பட்டு ஒளி தோன்றச் செய்யும்; (இஃது)
ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இந்நிலவுலகில் அரியதாகும்!
சீவகசிந்தாமணியிலே “கருமணியம் பாலகத்துப் பதித்தன்ன படிலாய்” என்பதன் குறிப்பாகக் ‘கருமணியைப் பாலிற் பதித்தால் பால்நிறங் கெடுமென்றுணர்க’ என நச்சினார்க்கினியர் கூறியிருப்பது இங்கு
நினைக்கற்பாலது. (73)
PEARL JEWELS OF GODDESS MEENAKSHI OF MADURAI SHIVA TEMPLE.
*****
தந்தைதன் காமக் கிழத்திய ரீன்ற
தனயராய்த் தனக்குமுன் னவராய்
முந்தைநா ளரசன் பொன்னறை முரித்து
முடிமுதற் பொருள்கவர்ந் துட்குஞ்
சிந்தைய ராகி மறுபுலத் தொளித்த
தெவ்வரைச் சிலர்கொடு விடுப்ப
வந்தவர் கவர்ந்த தனமெலா மீள
வாங்கினா னீர்ங்கதிர் மருமான்.
நவரத்தின வியாபாரி வடிவில் வந்த சிவபெருமான் அரசனுக்குத் தேவையான நவரத்தினங்களைக் கொடுத்துவிட்டு கோவிலுக்குள் சென்று மறைகிறார் ; பின்னர் மந்திரிகள் அவைகளைக்கொண்டு நவரத்தின மகுடம் செய்து இளம் வயது அபிஷேக பாண்டியனுக்கு பட்டாபிஷேகம் செய்கின்றனர் அவனுக்கு யார் யார் கருவூலத்தைக் கொள்ளையடித்து எங்கே ஒளிந்து கொண்டு இருக்கின்றனர் என்ற துப்புத் தகவலை மக்கள் கொடுக்கின்றனர் ; அவனையும் அவர்களை பிடித்து பழைய ரத்தினங்களை மீட்டான் என்ற சுபச் செய்தியுடன் பரஞ்சோதி முனிவரும் மாணிக்கம் விற்ற படலத்தை முடிக்கிறார்; இன்று ரத்தின வியாபாரத்தில் ஈடுபடுவோருக்கு இதிலும் சிலப்பதிகார உரையிலும் ஏராளமான தகவல்கள இருக்கின்றன.
*****
எழுகூற்றிருக்கை
ஏழு முதல் ஒன்று வரை எண்களை வைத்துக் கவி பாடுவது எழுகூற்றிருக்கை எனப்படும் இந்த சிறப்பான திருவெழுகூற்றிருக்கை என்ற பாடல் தேர்த் தட்டு போல்
அமைந்துள்ளது. 1 முதல் 7 வரை படிப்படியாக கீழிருந்து மேல் பின்பு மேலிருந்து கீழ் என்று தேர் தட்டு மேலே செல்வதும், கீழே செல்வதுமாக அமைந்த அற்புதமான பாடல். ; இதை சம்பந்தர், திருமங்கை ஆழ்வார், அருணகிரிநாதர் முதலிய பலரும் பயன்படுத்திப் பாடியுள்ளனர் பரஞ்சோதியாரும் பாடியுள்ளார்:
ஓருருவாய் நேர்நின்ற வணிகேசர்
விடையின்மே லுமையா ளோடும்
ஈருருவாய் முக்கண்ணு நாற்கரமு
மஞ்சமர (5) ரிறவா வாறு (6)
காருருவா யெழு(7) மிடறுங் காட்டித்தங்
கோயில்புகக் கண்டா ரின்று
பாருருவாய் நின்றவணி கேசரிவ
ரெனவேபின் பற்றிப் போவார்.
ஓர் உருவாகி நேரே நின்ற வணிகர் பெருமான், இடபவூர்தியின் மேல் உமைப் பிராட்டியோடும் இரண்டு திருவுருவமாய், மூன்று கண்களையும் நான்கு கைகளையும், அஞ்சிய (5) தேவர்கள் இறவாத
வண்ணம், தோன்றச் செய்து, தமது திருக்கோயிலுட் போதலைக் கண்டவர்கள், இன்று பாரின்கண் வணிகர் தலைவர் வடிவினராய் நின்றவர் இவரே என்று, பின்றொடர்ந்து சென்றனர். .
மாணிக்கம் விற்ற படலத்தில் வணிகர் உருவாய் வந்த சிவபெருமான் மறைந்த காட்சி இது!
இச்செய்யுளில் ஒன்று முதல் ஏழு எண்களின் பெயர்
கூறியது எண்ணலங்காரம்; அஞ்சு, ஆறு, ஏழு என்பன ஈண்டு எண்ணுப்
பெயர்களல்லவேனும் சொல்லொப்புமை நோக்கி எண்ணாகக் கொள்ளப்படும்; எழுகூற்றிருக்கை முதலியவற்றிலும் இங்ஙனம் வருதல் காண்க. (85)
–subham—
Tags- எழுகூற்றிருக்கை, முத்துமாலை ,ஆயுள் அதிகரிக்கும், பணம் சேரும், பரஞ்சோதி தகவல், நவரத்தினங்கள் , அரிய செய்திகள் – திருவிளையாடல் புராணம் ,) ஆராய்ச்சிக் கட்டுரை-12
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல் .
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் லதா யோகேஷும் வாசித்து வழங்கும் செய்தி மடல்.
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்.
இன்று ஞாயிற்றுக்கிழமை ஜூன் எட்டாம் தேதி 2025-ம் ஆண்டு .
(Collected from popular newspapers and edited for broadcast)
முதலில் இந்தியச் செய்திகள்!
குஜராத் : முட்டை, இறைச்சி இல்லாத உலகின் முதல் சைவ நகரம்!
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாலிதானா நகரம் இறைச்சி, முட்டை உட்பட அனைத்து வகையிலான அசைவ உணவுகளைத் தடை செய்து உலகின் முதல் சைவ நகரமாக உருவெடுத்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் சமண துறவிகள் தொடர் போராட்டம் மேற்கொண்டு வந்த நிலையில், தற்போது அந்த நகரத்தில் அசைவ உணவுகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
இந்த முடிவு சமண மதத்திற்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகவும், அவர்களின் மத நம்பிக்கைக்கு மரியாதை அளிப்பதாகவும் அமைந்திருக்கிறது.
*****
என் வாழ்நாளின் சிறந்த அனுபவம் அயோத்தி ராமர் கோவில் பயணம்; எலான் மஸ்கின் தந்தை நெகிழ்ச்சி
அயோத்தி ராமர் கோவிலுக்கு சென்றது என் வாழ்நாளின் சிறந்த அனுபவங்களில் ஒன்று,” என ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க் கூறினார்.
எலான் மஸ்கின் தந்தை எரோல் மஸ்க், இந்தியா வந்துள்ளார். அவர் இன்று உ.பி., மாநிலம் அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவரது மகள் அலெக்ஸாண்ட்ரா மஸ்க் உடன் வந்திருந்தார். அருகிலுள்ள ஹனுமன்கர்ஹி கோவிலுக்கும் அவர்கள் சென்றனர்.
ராமர் கோவில் பயணம் குறித்து எரோல் மஸ்க் கூறியதாவது:
தனது வாழ்நாளின் மிகச் சிறந்த அனுபவங்களில் ஒன்று, இந்தியா அருமையான, அற்புதமான நாடு. இந்திய கலாசாரம், விருந்தோம்பல்,அன்பு, கருணை நிறைந்த மக்கள் கொண்ட நாடாக உள்ளது. இந்தியா ஒரு அற்புதமான இடம். முடிந்தவரை பலர் இந்தியாவுக்கு வர வேண்டும்,
எங்களிடம் சில வணிக திட்டங்கள் உள்ளன, அவை பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இந்தியா-அமெரிக்க உறவுகள் மிகவும் நன்றாக இருக்கிறது. இவ்வாறு எரோல் மஸ்க் கூறினார்.
*****
அமர்நாத் யாத்திரை பாதுகாப்புக்கு மத்திய அரசு ஏற்பாடு
38 நாட்கள் நடக்கும் அமர்நாத் யாத்திரை துவங்க உள்ளதை தொடர்ந்து 581 கம்பெனி மத்திய ஆயுதப்படையினர், jammers, ஜாமர்கள் மற்றும் drones.ட்ரோன்களை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஜம்மு – காஷ்மீரில், கடல் மட்டத்தில் இருந்து 12,755 அடி உயரத்தில் அமைந்துள்ளது அமர்நாத் குகை கோவில். ஒவ்வொரு ஆண்டும் ஜூலை,- ஆகஸ்ட் மாதங்களில் இங்கு புனித யாத்திரை மேற்கொள்ளப்படுகிறது. அப்போது மட்டுமே இந்த குகை கோவில் திறந்திருக்கும். இந்த ஆண்டு ஜூலை 3ம் தேதி துவங்கி ஆக., 9 வரை 38 நாட்கள் மட்டுமே அமர்நாத் யாத்திரை நடைபெற உள்ளது.கடந்த ஆண்டு 52 நாட்கள் யாத்திரை நடந்த நிலையில், இந்தாண்டு 38 நாட்கள் மட்டுமே நடக்க உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 22 அப்பாவி சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டதை தொடர்ந்து இந்தாண்டு அமர்நாத் யாத்திரைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் காஷ்மீர் சென்று இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கவர்னர், முதல்வர் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருந்தார்.
இந்தாண்டு பாதுகாப்பு பணியில் 581 Central Armed Police Forces (CAPF) companies மத்திய ஆயுதப்படையின் 581 கம்பெனி வீரர்கள், ஜாமர்கள் மற்றும் ட்ரோன்களை பயன்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக மத்திய அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்தாண்டு யாத்ரீகர்கள் பாதுகாப்பாக செல்ல ஏதுவாக அவர்கள் செல்லும் பாதையை நோக்கி வரும் சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் தற்காலிகமாக போக்குவரத்து தடை செய்யப்படும். வெடிகுண்டு தடுப்பு பிரிவினர், வெடிகுண்டுகளை கண்டுபிடித்து செயலிழக்க செய்வார்கள். சிறப்பு பயிற்சி பெற்ற கே 9 பிரிவினரும் மற்றும் வான்வெளியில் கண்காணிப்பில் ட்ரோன்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன. பஹல்காம் மற்றும் அமர்நாத் குகை சொல்லும் வழியில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
முதல்முறையாக யாத்ரீகர்கள் செல்லும் வாகனம் வழியில் jammers ஜாமர்கள் பொருத்தப்படும். இந்த வாகனத்தை மத்திய ஆயுதப்படையினர் பாதுகாப்புடன் அழைத்துச் செல்வார்கள். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
*********
திருச்செந்தூர் கோயில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சாமி கோயிலில் குடமுழுக்கு விழா, வரும் ஜூலை மாதம் 7-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 12 ஆண்டுகளுக்கு பிறகு இக்கோயிலில் கும்பாபிஷேக விழா நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.
*****
கோவில் விழாக்களில் ஆடல் பாடல்- கோர்ட் உத்தரவு
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
உயர் நீதிமன்றம் மதுரைக் கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக் கோரி 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் இன்று உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர்கள், கடந்த பல ஆண்டுகளாக ஆடல், பாடல் நிகழ்ச்சி திருவிழாவின் போது நடத்தப்பட்டு வருகிறது. சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்ட காரணங்களை காட்டி அனுமதி மறுக்கின்றனர். அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறினர்.
இதனைக்கேட்ட நீதிபதி,
சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில், ஆடல், பாடல், கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனுத் தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யபடுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது.
மனுதாரர்கள் ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர்வார வேண்டும். இதனால், உங்கள் கிராமம் செழிப்பாக இருக்கும் எனக்கூறி மனுக்களுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.
****
தொன்மை வாய்ந்த கோவிலை தெருவில் விட்டது அரசு: பொன்.மாணிக்கவேல் குற்றச்சாட்டு
தொன்மை வாய்ந்த திருச்செந்துறை கோவிலை தெருவில் விட்டது அரசு என்று ஓய்வு பெற்ற ஐ.ஜி., பொன்மாணிக்கவேல் குற்றம்சாட்டி உள்ளார்.
திருச்சியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: திருச்சி ஜீயபுரம் பகுதியில் உள்ள திருச்செந்துறை கோவில், எப்படிப்பட்ட கோவில் என்பது குறித்து திருச்சி மக்களுக்கு தெரியாத தகவல்கள் உள்ளது. இக்கோவிலை இன்று காலை 9 மணிக்கு திறந்தனர். நேற்று 7 20 மணிக்கு மூடி உள்ளனர். எந்நேரமும் எரிய வேண்டிய விளக்கு எரியவில்லை. காலை 9:15 மணிக்கு தான் முதல் விளக்கை ஏற்றினர்.
சோழ மன்னன் ஆதித்ய தேவரின் மகன் பராந்தகன். இவரது பெயர் சோழப்பெருமானடிகள். இவரது மகன் அரிகுலகேசரியார். இவரது தேவியார்தான் கோவிலை கட்டி உள்ளார்.
மங்கள வாத்தியம் இசைப்பவர்கள் வாழ வேண்டும் என்பவருக்காக, பல நூறு ஆண்டுகளுக்கு எந்நேரமும் மங்கள வாத்தியம் பாட வேண்டும் என்பதற்காக தங்கம் கொடுத்து உள்ளார். அதனை ஈசான மங்களம் மகாசபைக்கு கொடுத்தார். அதில் நிலத்தை வாங்கி, இந்த குடும்பத்திற்கு மங்கள வாத்தியம் இசைப்பவர்களுக்கு வழங்கி உள்ளனர். அவர்கள் கருவறைக்கு அருகே நின்று வாசிப்பார்கள்.
ஆனால், 20 ஆண்டுக்கு முன்பு சம்பளம் கொடுப்பதை நிறுத்திவிட்டு, அப்படிப்பட்ட நிகழ்ச்சி கோவிலில் இல்லாமல், தொன்மையான கோவிலை அறநிலையத்துறை தெருவில் விட்டுவிட்டது. இவ்வாறு பொன் மாணிக்கவேல் கூறினார்.
*****
கோயில் திருவிழா தொடர்பான சர்ச்சை பேச்சு – அமைச்சர் மனோ தங்கராஜுக்கு அண்ணாமலை கண்டனம்!
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து சர்ச்சையாக பேசிய அமைச்சர் மனோ தங்கராஜுக்கு பாரதீய ஜனதா கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பெங்களூரு நிகழ்வு பற்றிய கேள்விக்கு, மக்கள் கோயில் திருவிழாக்களுக்கு செல்லக்கூடாது என மனோ தங்கராஜ் பதில் அளித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்
கோவில் சொத்துகளை சுரண்டும் கூட்டம், மக்கள் கோயில் திருவிழாவுக்கு செல்வது நாகரிகம் இல்லை என்று கூறுவதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர்,
தமிழகத்தில் கள்ளச்சாராயம் ஆறாக ஓடும் நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜ் பகுத்தறிவு பேசுவதாக விமர்சித்துள்ளார்.
இண்டி கூட்டணிக் கட்சியின் நிர்வாகத் தோல்வியை மறைக்க இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அண்ணாமலை, கொத்தடிமைகளைக் கூட்டி கூட்டம் போடும் திமுக தலைவரிடம் இவ்வாறு கூறுவாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
****
கன்னியாகுமரியில் சுற்றுலா படகு கட்டணம் உயர்வு!
கன்னியாகுமரியில் சுற்றுலாப் படகு சேவையின் கட்டணத்தை உயர்த்தி பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கோடை விடுமுறை சீசன் முடிவடைந்துள்ள நிலையில் சுற்றுலா படகு சேவையின் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் 75 ரூபாயாக இருந்த கட்டணம், 100 ரூபாயாகவும், மாணவர்களுக்கு 30 ரூபாயாக இருந்த கட்டணம் 40 ரூபாயாகவும் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு
கடந்த சில தினங்களுக்கு முன் அமலுக்கு வந்துவிட்டது. நாளை முதல் அமலுக்கு வருவதாகவும் அறிவித்துள்ளது.
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஆண்டு முழுவதும் இங்கு சுற்றுலா பயணிகள் வந்து சென்றாலும் ஏப்ரல் மற்றும் மே மாதம் கோடைகால சீசனாக கருதப்படுகிறது. இந்த சீசனில் தற்போது குடும்பம், குடும்பமாக சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
கன்னியாகுமரி சுவாமி விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலையை பார்வையிட சுற்றுலா பயணிகளுக்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது. தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை சேவை வழங்கப்பட்டு வருகிறது.
****
சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது
மங்களூரு பாஜ்பே அருகே இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி கொலையில் தொடர்புடைய மற்றொரு குற்றவாளியை சி.சி.பி போலீசார் கைது செய்துள்ளனர்.
மேலும், பன்ட்வாலில் நடந்த அப்துல் ரஹிமான் கொலை வழக்கில் மேலும் இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர்.
சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி பாட்டே சாந்திகுட்டேவைச் சேர்ந்த அப்துல் ரசாக் (59). முக்கிய குற்றவாளிகளுடன் சேர்ந்து கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாகவும், அவர்கள் தப்பிக்க உதவியதாகவும் அப்துல் ரசாக் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முசாமிலின் தந்தை அப்துல் ரசாக் ஆவார். அப்துல் ரசாக், மகன் முசாமில் மற்றும் மருமகன் நௌஷாத் ஆகியோருடன் சேர்ந்து சுஹாஸ் ஷெட்டியைக் கொல்ல சதி செய்ததாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், சுஹாஸ் ஷெட்டி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.
மே 1 ஆம் தேதி இரவு, மங்களூர் நகரின் பாஜே அருகே இந்து ஆர்வலர் சுஹாஸ் ஷெட்டி வாளால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்..
****
பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம்!
கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோயிலில் 270 ஆண்டுகளுக்குப் பின் மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது
இன்று ஜூன் 8-ம் தேதி பத்மநாபசுவாமி கோயிலில் மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்து முடிந்தது
மிகப் பிரசித்திபெற்ற பத்மநாபசுவாமி கோயிலில் கடந்த 2017-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியமித்த நிபுணர் குழு அறிவுறுத்தலின்படி, புனரமைப்பு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
பின் கொரோனா தொற்று பரவல் காரணமாக முடங்கிய புனரமைப்பு பணிகள், மீண்டும் கடந்த 2021-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று அண்மையில் முடிவுற்றன. விஷ்ணுவுக்குரிய 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.
புதிய விஷ்வக்சேனன் சிலை பிரதிஷ்டை, கோவில் வளாகத்தில் அமைந்துள்ள திருவம்பாடி ஸ்ரீகிருஷ்ணர் சன்னிதியில் அஷ்டபந்த கலசம் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் கும்பாபிஷேக நாளில் நடந்தது.
****
கடைசியாக ஒரு சுவையான வெளிநாட்டுச் செய்தி
விண்கலத்தில் செல்லும் தமிழ், சம்ஸ்க்ருத அன்னப்பறவை!
இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா ஒரு அன்னப் பறவையின் பொம்மையை விண்வெளிக்கு எடுத்துச் செல்லப்போகிறார் . அவர் சொன்ன காரணம் ஏற்கனவே தமிழ், சம்ஸ்க்ருத நூல்களில் உள்ளது!
ஜூன் பத்தாம் தேதி அமெரிக்காவின் விண்வெளி ஏவுதளத்திலிருந்து ஆக்ஸ்யம் மிஷன்-4 விண்கலம், வானத்தில் பறக்கப்போகிறது. அதன் கேப்டன் சுபான்ஷு சுக்லா. அவர் 140 கோடி இந்தியர்களின் கனவை நனவாக்கப்போகிறார் இதற்கு முன்னர் ராகேஷ் சர்மா விண்கலத்தில் சென்றதை நாம் அறிவோம் . ஆனால் இவர் 14 நாட்கள் விண்கலத்தில் தங்கி புதிய சாதனை செய்யப்போகிறார்
தன்னுடைய பயணம் வெற்றியடைய இந்தியர்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார் .
அமெரிக்காவின் ப்ளோரிடா மாநில விண்கல ஏவுதளத்திலிருந்து அவர் பேசினார்
நாம் நட்சத்திரங்களைக்கூட அடைய முடியும் ஜெய் ஹிந்த் என்று அவர் கூறினார் . நாங்கள் 14 நாட்களில் பல சாதனைகளை செய்யப்போகிறோம் என்றார்
இந்தியாவின் தேசீய வடிவமைப்புக் கழகம் செய்துள்ள பல பரிசுப் பொருட்களை சுக்லா, விண்வெளிக்கு கொண்டு செல்லப்போகிறார். அதில் ஒன்று அன்னப் பறவையின் பொம்மை . ஏன் அன்னப்பறவையின் பொம்மையை கொண்டு செல்கிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர் சொன்ன பதில்:
“அன்னப்பறவை மத ரீதியில் முக்கியம் வாய்ந்தது. பாலையும், தண்ணீரையும் பிரித்து பாலினை மட்டும் சாப்பிடும் அபூர்வ சக்தி இதற்குண்டு என்று நம்புகிறோம். இதன் பொருள் தூய்மை, விவேகம், அருள் ஆகியவற்றை நாம் பிரித்து எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதாகும் அறிவு விஷயத்தில் இது சம நிலையை உண்டாக உதவுகிறது இது எனக்குப் பிடித்த கருத்து . எனக்கு இப்பொழுது முழு உத்வேகம் வந்துவிட்டது ; பறக்கத் தயாராகி விட்டோம்” .
“நான் கொண்டு செல்லும் அன்னப்பறவை, நாங்கள் எடையற்ற தன்மையை அடைந்து விட்டோமா என்பதைக் காட்டும் அடையாளம்”
மாம் பழ ரசம் , கேரட் ஹல்வா , பாசிப்பயறு ஹல்வா ஆகியவற்றையும் கொண்டு செல்வேன். இதை மற்ற வீரகளுடன் பகிர்ந்து கொள்வேன் என்றும் சொன்னார்
இவருடன் செல்லும் குழுவினர் இரண்டு வாரங்களுக்கு விண்கலத்தில் தங்கி பல ஆராய்ச்சிகளை செய்யப்போகிறார்கள்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;