குடிகாரர்கள் பற்றி கம்பன் எச்சரிக்கை (Post No.3337)

Written  by London Swaminathan

 

Date: 9 November 2016

 

Time uploaded in London: 18-32

 

Post No.3337

 

Pictures are taken from various sources; they are representational only; thanks.

 

 

 

contact; swami_48@yahoo.com

 

 

தமிழன் புதைத்துக் கெட்டான் என்று ஒரு பழமொழி உண்டு. அதாவது தங்க நாணயங்கள், நகைகள் முதலியவற்றை மற்றவர்களுக்குத் தெரியாமல் புதைத்து வைத்துவிட்டு இறந்தும் போய்விடுவான். பின்னர் அதை யாரோ ஒருவன் புதையலாக எடுத்து பயனடைவான் என்பது இதன் பொருள். இப்போது தமிழன் குடித்துக் கெட்டான் என்று பழமொழியை மாற்றி அமைப்பது சாலப் பொருத்தம்.

 

குடியும் கூத்தும் தமிழனைக் கெடுத்தது திருவள்ளுவர் காலத்திலிருந்தே இருந்ததை நாம் திருக்குறள் மூலமாக அறிவோம். இதற்காகவே “கள்ளுண்ணாமை, வரைவின் மகளிர், பெண்வழிச் சேரல்” என்று பல அதி காரங்களில் முழங்கியுள்ளார்.

 

ஆனால் கம்பன் அதை சுக்ரீவன் வாயிலாக கிட்கிந்தாக் காண்டத்தில் வழங்கும் பாங்கு படித்துச் சுவைக்க வேண்டியது.

நறவுண்டு மறந்தேன், நாணுகிறேன்

 

உறவுண்ட சிந்தையானும் உரைசெய்வான் ஒருவற்கின்னம்

பெறலுண்டோ அவரால் ஈண்டு யான் பெற்ற பேர் உதவி உற்றது

இறலுண்டோ என்னின் தீர்வான் இருந்த பேரிடரை எல்லாம்

நறவுண்டு மறந்தேன் காண நண்ணுவல் மைந்த என்றான்

 

பொருள்:-

அங்கதனை நோக்கிச் சுக்ரீவன் கூறியது: இராமனிடம் நான் பெற்ற உதவி, மற்றொருவனால் பெறக்கூ டியதா?  நான் பெற்ற செல்வத்துக்கு அழிவு உண்டோ? இராமனின் பெருந் துன்பங்களை எல்லாம் மது அருந்தியதால் மறந்துவிட்டேன் ஆகையால் இலக்குவனைப் பார்க்க வெட்கமாக இருக்கிறது.

 

பஞ்ச மா பாதகம் (5 பெரும் பாவங்கள்)

ஏயின இதுவலால் மற்று ஏழமைப் பாலதென்னோ

தாய் இவள் மனைவி என்னும் தெளிவு இன்றேல் தரும் என் ஆம்

தீவினை ஐந்தின் ஒன்றாம் அன்றியும் திருக்கு நீங்கா

மாயையின் மயங்குகின்றாம் மயக்கின்மேல் மயக்கும் வைத்தாம்

 

பொருள்:-

என்னிடம் குடிப்பழக்கத்தைத் தவிர வேறு என்ன இருக்கிறது? சீச் சீ! தாய் யார் , மனைவி யார் என்று கூட வித்தியாசம் தெரிவதில்லையே! கள் குடிப்பவனிடம் எவ்வளவு படிப்பு இருந்து என்ன பயன்? பஞ்சமா பாதகங்களில் இதுவும் ஒன்றே (கொலை, களவு, மது பானம் அருந்தல், பொய் சொல்லுதல், குருவை நிந்தித்தல்). ஏற்கனவே மாயையில் சிக்கித் தவிக்கும் எனக்கு குடி வேறு மயக்கம் தருகிறது. இது மிக இழிவானது.

 

குடித்தால் வஞ்சனை, களவு, பொய் வரும்

 

வஞ்சமும் களவும் பொய்யும் மயக்கமும் மரபில் கொட்பும்

தஞ்சம் என்றாரை நீக்கும் தன்மையும் களிப்பும் தாக்கும்

கஞ்ச மெல்லணங்கும் தீரும் கள்ளினால் அருந்தினாரை

நஞ்சமும் கொல்வதல்லால் நரகினை நல்காதன்றே

 

 

பொருள்:-

குடித்தால் வஞ்சனை,  திருடுதல்,  பொய் கூறல், அறியாமை, மாறான கொள்கை, அடைக்கலம் அடைந்தோரை கைவிடுதல், செருக்கு,  ஆகியன வருத்தும். அதே நேரத்தில் தாமரை மகளும் (லெட்சுமி) நீங்கிவிடுவாள் நஞ்சைச் சாப்பிட்டால் உடல் மட்டும் அழியும். இதுவோ உடலையும் அழித்து ஆளை நரகத்திலும் தள்ளும்.

 

இன்னும் இரண்டு பாடல்களில் மதுவால் கேடுவரும் என்று பெரியோர் சொல்லிக் கேட்டிருக்கிறேன். நல்ல வேளை! அனுமனின் புத்திமதியால் பிழைத்தேன் என்பான் சுக்ரீவன்

கேட்டெனென் நறவால் கேடு வரும் எனக் கிடைத்த அச் சொல்

காட்டியது அனுமன் நீதிக் கல்வியால் ……………….

என்றும்

இதைக் கையால் தொடுவது கெட்டது என்பது எல்லோருக்கும் தெரியும். மனதினால் நினைப்பதே தப்பு!

ஐய நான் அஞ்சினேன் இந்நறவினின் அரிய கேடு

கையினால் அன்றியேயும் கருதுதல் கருமம்

என்றும் சொல்லுவான்.

 

—சுபம்–

பெண்கள் மீது கை வைத்தால்………. கம்பன் எச்சரிக்கை! (Post No.3184)

beauty-with-puukkuutai

Written by London swaminathan

Date: 24 September 2016

Time uploaded in London:6-37 am

Post No.3184

Pictures are taken from various sources; thanks.

 

 

நான் மதுரை யாதவர் தெரு வடக்கு மாசி வீதியில் கால் நூற்றாண்டுக் காலம் வசித்தேன். அப்பொழுது பல காட்சிகளைக் கண்டதுண்டு. திடீரென டவுன் பஸ் நிற்கும். அதிலிருந்து ஒருவனைக் கீழே தள்ளி நாலைந்து பேர் அடிப்பார்கள். உடனே ரோட்டில் போகும் வருவோரெல்லாம் அவர்களுடன் சேர்ந்து கொண்டு அவனை அடிப்பார்கள். அவன் குத்துயிரும் கொலை உசிருமாக இருக்கையில் அவனை ஓட ஓட விரட்டுவார்கள். கடைசியில் அவன் எப்படியோ தப்பி த்து ஓடி விடுவான். இதே போல மதுரை சித்திரைத் திருவிழாவிலும் கண்டதுண்டு. காரணம் என்ன என்று கேட்டால் அவன் “பெண்கள் மீது கை வைத்துவிட்டான்” சார்! என்பர். ஆனால் அடித்தவர்களில் பாதிப்பேருக்கு ஏன் அடித்தோம், யாரை அடிக்கிறோம் என்றே தெரியாது! இதற்குப் பெயர் தர்ம அடி!

 

இப்போது நான் வசிக்கும் ஊரிலும் (LONDON) பெண்கள் மீது இப்படிக் கைவைப்பதுண்டு. பெரும்பாலும் பஸ்களிலும் அதிகமாக மெட்ரோ

 

(METRO சுரங்க) ரயிலிலும் நடக்கும். அதை அவ்வப்போது பத்திரிக்கைகளில் வரும் சில கட்டுரைகளில் சி. சி. டிவி. (C C TV= Closed Circuit Television) காமெரா மூலம் படம் எடுத்துப் பிரசுரிப்பார்கள்.

 

வாரம் தோறும்  நாங்கள் ‘ஸ்கைப்’ SKYPE மூலம் நடத்தும் கம்ப ராமாயணம் வகுப்பில், கிஷ்கிந்தா காண்டம் படிக்கையில் இப்படி ஒரு காட்சி வந்தவுடன் , மதுரையில் பழைய காலத்தில் பார்த்த அவ்வளவும் நினைவுக்கு வந்து விட்டது. மன திற்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். காரணம் இல்லாமல் இல்லை. எங்கள் வீட்டுப் பக்கத்துச் சந்தில் ஒரு ஐயர், இட்டிலிக் கடை வைத்து நடத்தி வந்தார். அவரது இட்டிலியும் பக்கோடாவும் மதுரை முழுதும் பிரசித்தம். அவரும் ஒரு முறை இப்படி தர்ம அடி கொடுக்கும் கும்பலில் நாலு அடி போட்டு விட்டுத் திரும்பி வந்தார்.

 

 

“என்ன மாமா? நீங்களும் அடித்தீர்கள்? ஏதாவது உங்களி டம் விஷமம் செய்தானா? என்று நாங்கள் கேட்டோம். இல்லை எனக்குத் தெரியாது. எல்லோரும் அடித்தார்கள். நானும் அடித்தேன். என்ன? பொம்பளை மீது கை வச்சிருப்பான். அல்லது பிக் பாக்கெட் அடிச்சிருப்பான். நாலு சாத்து சாத்த வேண்டியதுதானே? என்றார் !!!

இதுபேர்தான் தர்ம அடி!!!

 

இதை எல்லாம் கேட்ட பின்னர் நாங்கள் (என் சகோதர்கள்) எல்லோரும் வீட்டிற்குள் போய் சிரி, சிரி என்று சிரிப்போம். அவரைப் பார்க்கும் போதெல்லாம் ‘தர்ம அடி’ நினைவுக்கு வரும்.

 

நிற்க. கம்பன் பாட்டைப் பார்ப்போம்.

img_4413-2

ஆறுடன் செல்பவர் அம் சொல் மாதரை

வேறு உளார் வலி செயின் விலக்கி வெஞ் சமத்து

ஊறுற தம் உயிர் உகுப்பர் என்னையே

தேறினள் துயரம் நான் தீர்க்ககிற்றிலேன்

–கலன் காண் படலம் , கிஷ்கிந்தா காண்டம், கம்ப ராமாயணம்

 

 

பொருள்:-

வழியில் செல்லும் மகளிரை வேறு எவரேனும் வருத்தினால் (ரோட்டில் போகும் பெண்கள் மீது யாரேனும் கை வைத்தால்), அவர்களுடன் தமக்குத் தொடர்பில்லையானாலும், அது செய்ய முடியாதபடி (தர்ம அடி போட்டு),  தடுத்துப் போர் செய்து உயிரையும் கொடுப்பர் உலகத்தார். அப்படியிருக்கையில் நானோ என்னை நம்பியிருந்த என் மனைவியின் (சீதா தேவியின்) துயரத்தைப் போக்க மாட்டாதவனாய் உள்ளேன் (இவ்வாறு ராம பிரான் புலம்புகிறார்)

 

இதைப் பார்க்கும்போது கம்பன் காலத்திலும் சாலையில் இப்படி நடந்து, அதில் பலர் தலையிட்டு,  தர்ம அடி கொடுத்து, சிலர் உயிர் கூட போனதுண்டு என்று தெரிகிறது.

 

எங்கள் லண்டனிலும் கூட மாதம் தோறும் இப்படிச் சில செய்திகள்

வருகின்றன. சூப்பர்மார்க்கெட் கார் பார்க்கிலும் (CAR PARK) ‘பப்’ (PUBLIC HOUSE) பிலும் (மது பானக்கடை) சண்டை போடுவோர் இடையே சமரசம் செய்யப்போய் கத்திக் குத்து வாங்கி இறந்தோர் பற்றிய துயரச் செய்திகளை படிக்கிறோம்.

bob-painting-3

வாழ்க கம்பன்! வளர்க தமிழ்! அனைவரும் படிக்க கம்ப ராமாயணம்!!!

 

-SUBHAM-