சுற்றுப்புறச்சூழல் சிந்தனைகள்
(நான்காம் பாகம்)
ச.நாகராஜன்
சென்னை வானொலி நிலையம் அலைவரிசை A யில் காலையில் ஒலிபரப்பப்பட்ட சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகள்
Part 1 posted on 6th Nov.15;Part 2 posted on 7th ,Part 3 on 8th nov. Part 4 on 9th nov.15;part 5 on 11th Nov. and Part 6 on 12th Nov.2015
Radio Talk written by S NAGARAJAN
Date: 12 November 2015
POST No. 2322
Time uploaded in London :– 17-12
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
6.உத்வேகமூட்டும் ஒரு காட்டின் கதை!
மரங்களை மனம் போன போக்கில் வெட்டி வீழ்த்தி சுற்றுப்புறச் சூழலுக்குப் பெருங்கேட்டைப் பலரும் ஏற்படுத்தும் இந்தக் காலத்தில் அனைவருக்கும் உத்வேகமூட்டும் விதத்தில் தனிநபராக இருந்து ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் ஒருவர் என்றால் அது ஆச்சரியமான விஷயம் தானே!
கௌஹாத்தியிலிருந்து 350 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஜோர்ஹாட்டை அடுத்துள்ள பிரம்மபுத்ரா நதியின் படுகை அருகே உள்ள பெரும் மணற்பரப்பில் ஜாதவ் பேரிக் (Jadav ) என்பவர் ஒரு காட்டையே அமைத்துள்ளார்.550 ஹெக்டேர் நிலப்பரப்பில் இவர் அமைத்துள்ள காடு தனி மனிதன் அமைத்த காடுகளில் மிகப் பெரிய ஒன்றாகும்.
1979ஆம் ஆண்டு பிரம்மபுத்ரா நதியில் ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏராளமான பாம்புகள் மணற்பரப்பில் ஒதுங்க அருகில் மரங்கள் ஏதும் இல்லாததால் அவை மடிந்தன,இதைப் பார்த்து மனம் நெகிழ்ந்த பதினாறே வயதான சிறுவன் ஜாதவ் அந்த உயிரினங்களைக் காக்க காடு ஒன்றை அமைப்பது என உறுதி பூண்டான்.
இடைவிடாத உழைப்பினால் அங்கிருந்த, எதுவுமே விளையமுடியாத மணற்பரப்பை மாற்ற ஆரம்பித்தான். இதற்கென செவ்வெறும்புகளை தூரத்திலிருந்த கிராமங்களிலிருந்து கொண்டு வந்து அந்த மணற்பரப்பில் வாழ வைத்து செடிகளை வளர்க்கலானான். இன்றோ ஆயிரமாயிரம் மரங்களைக் கொண்டு அனைவரையும் அதிசயக்க வைக்கும் அடர்ந்த காடாக அது மலர்ந்துள்ளது. கடந்த 32 ஆண்டுகளில் அந்தக் காடு ஏராளமான பறவைகளுக்கு இருப்பிடமாக ஆகியுள்ளது. முதலில் சிறு பறவைகள் வர ஆரம்பிக்கவே பின்னால் பருந்துகள் போன்றவையும் அங்கே வர ஆரம்பித்து வாழ ஆரம்பித்தன.
அதுமட்டுமின்றி அருகி வரும் இனமான புலிகள் கூட சிறிய அளவில் அங்கே வசித்து வருகின்றன. யானைகளோ விரும்பி கூட்டம் கூட்டமாக அங்கே வசிப்பதற்கு வந்து விட்டன.இயற்கை எப்போதுமே தானாகவே ஒரு உணவுச் சங்கிலியை அமைக்கிறது என்கிறார் ஜாதவ்.
இந்த உணவுக்காகவும் உறைவிடத்திற்காகவும் ஏராளமான மிருகங்கள் அங்கே வந்து சேரவே அது இயற்கைக் காடு போல இப்போது திகழ்கிறது. சீதோஷ்ண நிலையை அந்தப் பகுதியில் மேம்படுத்தியுள்ளது.
அற்புதமான காட்டை இவர் உருவாக்கியதால் அவரது செல்லப் பெயரான மொலாய் என்பதை அதற்குச் சூட்டி அதை “மொலாய்க் காடு” என்றே அனைவரும் அழைக்கின்றனர்.
இந்த முயற்சியினால் ஏற்பட்ட வெற்றியைக் கவனித்த சுற்றுப்புறச்சூழல் ஆர்வலர்கள் இவரைப் பாராட்டியுள்ளனர். அரசும் பல்வேறு விதங்களில் உதவி புர முன் வந்துள்ளது.
தனி மனிதனாக இருந்து ஏழையான ஒருவர் இயற்கைச் செல்வத்தைக் காக்க ஒரு காட்டையே அமைத்திருக்கும் போது நாமும் நமது பங்கிற்கு இயற்கையைக் காக்க ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தை மேற்கொள்வோம்; இயற்கை அன்னையைக் காப்போம்!
*****************




You must be logged in to post a comment.