
RESEARCH ARTICLE Written by London swaminathan
Date: 5 August 2018
Time uploaded in London – 14-03 (British Summer Time)
Post No. 5290
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
ஒட்டக ஆராய்ச்சியில் வரும் விஷயங்கள்
ரிக்வேதத்தில் ஒட்டகம்
பாணினியின் இலக்கண நூலில் ஒட்டகம்
பைபிளில் ஒட்டகம்
சங்க இலக்கியத்தில் ஒட்டகம்
தொல்காப்பியத்தில் ஒட்டகம்
சிலப்பதிகாரத்தில் ஒட்டகம்??
காளிதாசனில் ஒட்டகம்
ஸம்ஸ்க்ருதக் கதை நூல்களில் ஒட்டகம்
அமர கோஷத்தில் ஒட்டகம்
மஹாபாரதத்தில் ஒட்டகம்
மனு ஸ்ம்ருதியில் ஒட்டகம்
சிந்து சமவெளியில் ஒட்டகம்
அகராதி, நிகண்டுக்களில் ஒட்டகம்
ஒட்டக வாஹனம்
எனது முடிபு
கட்டுரை இரண்டு பகுதிகளாக வருகின்றது; இதோ முதல் பகுதி:-
சங்க இலக்கியத்தில் சிறுபாணாற்றுப் படையிலும் அக நானூற்றிலும், ஒட்டகம் பற்றிய குறிப்புகள் வருகின்றன. ஒட்டகம் என்பது பாலைவன மிருகம். மேலும் உஷ் ட் ர என்ற ஸம்ஸ்க்ருதச் சொல்லே இப்படி ஒட்டை, ஒட்டகம் என்று மருவியது.
சிறுபாணாற்றுப்படை சங்க காலத்தின் முடிவில் தோன்றிய நூல். ஆகவே பொது ஆண்டு 300 முதல் 400-க்குள் இருக்கலாம். பிற்கால இலக்கியத்திலும் கூட ஒட்டகம் பற்றிய குறிப்புகள் சிலவே.
பனி நீர்ப்படுவின் பட்டினம் படரின்
ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்தன்ன
வீங்கு திரை கொணர்ந்த விரைமர விறகின்
1153-155 சிறு பாணாற்றுப்படை
பொருள்
கடல் நீர் அலைகள் எயிற்பாட்டினக் கரையில் அகில் கட்டைகளைக் கொண்டுவந்து ஒதுக்கின. அக்கட்டைகள் ஒட்டகம் உறங்குவது போலக் காட்சி தந்தன.

தொல்காப்பியத்தில் ஒட்டகம் வருகிறது
சூத்திரம் 1517
‘ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலையும்………………….’
ஒட்டகத்தின் குட்டியையும் கன்று எனலாம்
சூத்திரம் 1552
‘ஒட்டகம், குதிரை, கழுதை, மரை இவை
பெட்டை என்னும் பெயர்க் கொடைக்கு உரிய’
ஒட்டகம், குதிரை, கழுதை, மரைமான் ஆகியவற்றின் பெண்பால்- பெட்டை என்ற பெயர் பெறும். அதாவது ஒட்டகப் பெட்டை என்றால் அது பெண் ஒட்டகம்.
ஆக தொல்காப்பியர் காலத்திலேயே ‘உஷ்ட்ற’ என்பது தமிழில் ஒட்டகம் ஆகிவிட்டது.
XXX
அகநானூற்றில் ஒட்டகம்
முள் தின்றதா? எலும்பு தின்றதா?
அகநானூற்றில் மருதன் இளநாகனார் பாடிய பாடலில்
“குறும்பொறை உணங்கும் ததர் வெள் என்பு
கடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்
கல்நெடுங் கவலைய கானம் நீந்தி,
அம்மா அரிவை ஒழிய– அகம்.245
இந்த வரிகளின் பொருள்
பாறையில் உதிர்ந்து கிடக்கும் இலவ மலர்கள் காய்ந்து எலும்புகள் போலக் காட்சி தரும். அவைகளை ஒட்டகங்கள் சாப்பிட்டுப் பசியைத் தீர்த்துக்கொள்ளும்.
இந்தப் பாடல் வரிகளை ஒட்டகம் எலும்பு சாப்பிட்டதாக் கொண்டோரும் உண்டு. ஆனால் ஒட்டகங்கள் சாக பட்சினிகள்; அவை எலும்பு தின்னாது.
ஆக எலும்பு போலக் காய்ந்த பூக்கள் அல்லது பூக்களைத் தாங்கிய , காய்ந்த சுள்ளிகள் என்றே கொள்ளல் வேண்டும்.
அகநானூறு, சிறுபாணாற்றுப் படை, தொல்காப்பியம் ஆகியவற்றில் ஒட்டகம் வருவதால் அக்காலத்தில் பாலைவனப் பகுதி மிருகமான ஒட்டகம் தமிழகம் வந்தது என்று கொள்ளவேண்டும். இல்லாவிடில் அதற்குத் தமிழ் இலக்கணத்தில் தொல்காப்பியர் இடம் தந்திருக்க மாட்டார்!
XXXX

கோவேறுக் கழுதையில் கோவலன்
சிலப்பதிகாரத்தில் கோவலன் அத்திரி மீது சவாரி செய்ததாக ஒரு செய்தி உண்டு; அத்திரி என்றால் கழுதை, ஒட்டகம் என்று இரு பொருள் உண்டு. கோவலன் போன்ற பெரிய வணிகன் கழுதை மேல் சவாரி செய்தான் என்பதை விட ஒட்டகத்தின் மீது சென்றான் என்று பொருள் கொள்வது பொருந்தும்
பூம்புகாரில் பௌர்ணமி நாளன்று நடந்தது என்ன?
வான வண்கையன் அத்திரி ஏற
மான் அமர் நோக்கியும் வையம் ஏறிக்
கோடி பல அடுக்கிய கொழிநிதிக் குப்பை………………………
–கடலாடு காதை, சிலப்பதிகாரம்
பொருள்
வானத்து மழைபோல வழங்கும் கைகளை உடைய கோவலன், கோவேறுக் கழுதையின் மீது ஏறிக்கொண்டான்; மான் போன்ற பார்வையுடைய மாதவி மூடு வண்டியில் ஏறிக்கொண்டாள்; கோடிக் கணக்கான பொருள் உடைய வணிகரின் மாட வீதிகளைக் கடந்து சென்றனர்.
இதில் அத்திரி என்பதைக் கழுதை என்று உரைகாரர்கள் வியாக்கியானம் செய்த போதும் அத்திரி என்பதற்கு ஒட்டகம் என்றும் பொருள் உண்டு. ஆக கோவலன் ஒட்டகம் மீது ஏறிக் கடலாடச் சென்றான் என்றும் பொருள் சொல்ல முடியும்.
மதுரையில் ஒட்டக பவனி
மதுரை மீனாட்சி கோவிலில் சுவாமியும் அம்மனும் பவனி வருகையில் ஒட்டகம் யானை டமாரம் (முரசு) ஏந்திய மாடு முதலில் பவனி வரும் அவைகளுக்குப் பின்னர் சுந்தரேசரும் மீனாட்சி அம்மனும் பவனி வருவர்.
எருது ஒட்டகம், எருமை ஆகியவற்றுக்கும் திமில் இருந்தாலும் திமில் உள்ள மிருகம் என்றால் அது ஒட்டகத்தையே குறிக்கும். மாடு, ஆடு ஆகியவற்றுக்குக் கொம்புகள் இருந்தாலும் கொம்பு மிருகம் என்றால் அது காண்டா மிருகத்தையே குறிப்பது போல!
அகராதி, நிகண்டுக்களில்

ஒட்டகத்தின் தமிழ் ஸம்ஸ்க்ருதப் பெயர்கள்
ஒட்டகம், ஒட்டை, அத்திரி, இரவணம், கனகதம், தாசோகம், நெடுங்கழுத்தன், உஷ் ட் ர, க்ரமேல (இதிலிருந்து கேமல் CAMEL என்ற ஆங்கிலச் சொல் வந்தது; அராபிய மொழியில் கமல், கமலா என்று இருப்பதால் அங்கிருந்தும் ஸம்ஸ்க்ருத்ததுக்கு வந்திருக்கும் வாய்ப்பு இருக்கிறது.)
அமர கோசம் என்னும் புகழ் பெற்ற ஸம்ஸ்க்ருத நிகண்டில்
பெண் ஒட்டகத்துக்கு உஷ்ட்ரி கா (ம்ருத்தாண்டே) என்ற பெயர் உள்ளது
க்ரமேல, மய, மஹாங்காஹா, கரபஹ, தீர்க்கக்ரீவ, த்விகுடஹ, சரபஹ என்ற பெயர்கள் உள்ளன.
தமிழில் தாசேரம், நெடுங்கோணி, அயவனம், கூன்புறம் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவைகளில் பெரும்பாலானவை ஸம்ஸ்க்ருதப் பெயர்களே!
குட்டியாக இருந்தால்
கரபாஹா, ஸ்யுஹு, ஸ்ருல்லகா, தாரவைஹி, பாத பந்தனைஹி என்றும் உள்ளது.
TO BE CONTINUED………………………….
–SUBHAM–