
Picture of Snake blessing during Naga Panchami puja
By London Swaminathan
Post No. 894 dated 8th March 2014
தமிழர்களின் இரக்க சிந்தனையில் பாம்பு கூட உயிர் பிழைத்து விடுமாம்!
சங்க நூலில் ஒன்றான கலித்தொகையில் ஒரு உவமை வருகிறது:–
‘’தாங்காச் சினத்தொடு காட்டி உயிர் செகுக்கும்
பாம்பும் அவைப்படின் உய்யுமாம்’’ — நெய்தற்கலி
பொருள்: பயங்கர கோபத்துடன் சீறிப் பாய்ந்து மற்றவர்கள் உயிரை வாங்கும் பாம்பையும் கூட நல்லவர்கள் கூடி இருக்கும் இடத்திற்குள் வந்தால் அடித்துக் கொல்ல மாட்டார்கள் என்கிறார் நெய்தற்கலி பாடிய நல்லந்துவனார்.
மகாபாரதத்திலும் இப்படி ஒரு கதை வருகிறது.
கல்வி கேள்விகளில் தேர்ச்சிபெற்ற கவுதமி என்ற பிராமணப் பெண்ணின் மகனைப் பாம்பு கடித்திவிடுகிறது. அவன் இறந்த பின்னர் அந்தப் பாம்பை ஒரு வேடன் பிடித்துக் கொண்டுவந்து, அம்மையே உன்மகனைக் கொன்ற இந்தப் பாம்பினை எந்த வகையில் கொல்ல வேண்டும் என்ரு சொல்லுங்கள் கொன்று பழி தீர்க்கிறேன் என்றான். அவளோ இதை கொன்றாலும் தன் மகன் உயிருடன் வரப்போவத்ல்லை என்று சொல்லி பாம்பினை உயிருடன் விட்டுவிடச் சொல்கிறாள் (ம்.பா. 13/1)
‘’நல்லவர் கண்ணில் நாகம் அகப்பட்டாலும் கொல்லார்’’ என்ற தமிழ்ப் பழமொழியை இது உண்மையாக்கிவிட்டது.
‘’நல்லோரவை புக்க நாகமும் சாகா’’ — என்று பிற்காலத்திலும் சொல்லப்பட்டுள்ளது.
பாம்புகளை எப்போதுமே தீய பிராணிகளாகவே எல்லா நாட்டு இலக்கியங்களும் வருணிக்கும்.அதிலும் விஷமுடைய பாம்பையும் விஷமற்ற பாம்பையும் வேறுபடுத்தியும் காண்பர்:
நஞ்சுடைமை தானறிந்து நாகம் கரந்துறையும்
அஞ்சாப் புறங் கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்
கரவுடையார் டம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத்தவர் –(வாக்குண்டாம்)
நாகப் பாம்புக்கு விஷம் இருப்பதால்தான் மறைந்து வாழ்கிறது. நீர்ப் பாம்புக்கு விஷம் இல்லாததால் அஞ்சாமல் வெளியே இருக்கும்.. அதுபோல நெஞ்சில் வஞ்சனை (கரவு) உடையார் தங்களைத் தாமே மறைத்துக் கொள்வர். வஞ்சம் இல்லாதோர் மறைந்து வாழ மாட்டார்கள்.
நாக பஞ்சமி அன்று உயிருடன் இருக்கும் நாகத்துக்குப் பூஜை செய்வதும், வாரம் தோறும் பாம்புப் புற்றில் பால் வார்ப்பதும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறுகிறது. கேரளத்தில் பாம்புக் கோவில்கள் உள்ளன. ஆயினும் இவை எல்லாம் தெய்வ வழிபாடு என்ற வகையில் வந்துவிடும். தமிழர்களோவெனில், தெய்வ சம்பந்தம் இல்லாத ‘அசெம்பிளிக்குள்’ வந்தாலும் பாம்புகளை அடிக்கமாட்டார்கள் என்பது ரசிக்கத் தக்கது!!
contact swami_48@yahoo.com

You must be logged in to post a comment.