
Written by london swaminathan
Date: 16 April, 2016
Post No. 2730
Time uploaded in London :– 8-50 AM
( Thanks for the Pictures )
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)

வேதாந்த தேசிகர், ஸ்ரீ இராமனுஜர் காலத்தைத் தொடர்ந்து வந்த பெரிய வைஷ்ணவ ஆச்சார்யார்; தத்துவ வித்தகர்; கவிஞர்; பல நூற்கண்ட பெருமகனார். நூற்றுக்கும் மேலான தமிழ், சம்ஸ்கிருத நூல்களை யாத்தவர். மாலிக்காபூர் தலைமையில் வந்த முஸ்லீம் வெறியர்களின் தாக்குதலுக்குப் பின்னர், ஸ்ரீரங்கப்பெருமாளை கோவிலில் மீண்டும் ஸ்தாபிக்க ஊற்றுணர்ச்சி தந்தவர். இவர் இற்றைக்கு 750 ஆண்டுகளுக்கு முன் வழ்ந்தவர். வித்யாரண்ய ஸ்வாமிகளின் சம்காலத்தவர். இவருடைய பாதுகா சஹஸ்ரம் பற்றி ஏற்கனவே எழுதியுள்ளேன்.
காஞ்சீபுரம் அருகிலுள்ள தூப்புலில் அவதரித்த வேங்கடநாதன் (பிற்காலப் பெயர் வேதாந்த தேசிகர்) ஆதி சங்கரர் போலவே இளம் வயதிலேயே வேத, வேதாந்த நூல்களில் கரைகண்டார். அவரைப் போலவே கீதை, உபநிஷதம் முதலியவற்றுக்கு விசிஷ்டாத்வைத பூர்வமாக உரையும் கண்டார். (ஆதி சங்கரர் அத்வைத பூவமாக உரைகண்டர்)
ஒரு நாள் சிற்பி ஒருவன் தேசிகரிடம் வந்து நீங்கள் சிற்ப நூலிலும் வல்லவராமே; என்னை வெற்றிகொள்வீரானால் உமது ‘சர்வ தந்திர சுதந்திரர் – என்னும் பட்டம் நீடிக்கும் அல்லது உமக்களிக்கப்பட்ட பட்டத்தை விட்டுவிட வேண்டும் என்றார்.
இது சிற்பியின் வேலை அல்ல, தன் மீது பொறாமை கொண்ட கும்பலின் வேலை என்பது வேதாந்த தேசிகருக்கு நன்கு தெரியும். பெருமாளின் அருளுடன் போட்டியில் வெல்லலாம் என்ற நம்பிக்கையுடன் அவரும் போட்டிக்கு இசைந்தார். ஆனால் தான் செய்யும் மூர்த்திக்குப் பீடம் அமைத்து அதை நிறுவும் பணியைச் சிற்பி செய்யவேண்டுமென்று தேசிகர் பதில் நிபந்தனை போட்டார். அதைச் சிற்பியும் ஏற்றான்.
என்ன விக்ரகம் செய்வதென்று எண்ணியபோது, அவருக்கு ஆவேசம் வந்தது. இடது கையில் கோசமும், வலது கையில் ஞான முத்திரையும் உள்ள கோலத்தில் அமைக்கவும் என்று ஸ்ரீரங்கநாதரே உத்தரவிட்டார். அப்படியே தேசிகர், ஒரு விக்கிரகமும் செய்து கொடுத்தார்.
விக்கிரகததை வாங்கிய சிற்பி, அதில் கண்பார்வை சரியில்லை என்று சொல்லி, அதைச் சரி செய்வதாக, விக்கிரகத்தின் கன்னத்தில் ஆயுதத்தால் தட்டினான். உடனே எதிரேயிருந்த தேசிகர் கன்னத்தில் ரத்தம் கசிந்தது. அங்குள்ளோர் உடனே விக்கிரகத்தில் பிழை இல்லை, சிற்பி செய்த பீடத்தில்தான் தப்பு என்று சொன்னார்கள்.
உடனே தேசிகரே பீடத்தை வாங்கிச் சீராக்கி, அதில் விக்கிரகத்தை எழுந்தருளச் செய்தார். பின்னர் சிற்பி, அவரிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டு, வந்த வழியே திரும்பிப் போனான்.
Xxx

டில்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தளபதி மாலிக்காபூர் தமிழ் நாட்டிற்குப் படையெடுத்து வந்து, மதுரை ஸ்ரீரங்கம் கோவில்களைச் சூறையாடினான். கோவிலை இடித்து டன் கணக்கில் தங்க நகைகளைக் கொள்ளையடித்தான். ஆனால் இதை முன்கூட்டியே அறிந்த பட்டர்கள், மூலஸ்தான விக்கிரகத்துக்கு முன்னால் ஒரு போலிச் சுவர் எழுப்பி அதுதான் கோவில் என்பது போலவும் சிலைகள் வேறிடத்துக்கு மாற்றப்பட்டன என்பன போலும் காட்டினர். உற்சவ விக்கிரகங்களை திருமலை/திருப்பதிக்கு அனுப்பினர். அதை எடுத்துச் சென்ற குழுவில் தேசிகரும் ஒருவர்.
அக்காலத்தில் செஞ்சி பகுதியை கொப்பணாரியர் என்பவர் ஆண்டுவந்தார். அவருடைய ஆளுகையிலிருந்த அழகிய மணவாளம் என்ற கிராமத்திலிருந்த சிங்கப்பிரான் என்பவன், முஸ்லீம் படைத்தலைவருடன் நட்பு ஏற்படுத்திக்கொண்டு, அவருடைய நம்பிக்கையைப் பெற்றான். எல்லா செல்வங்களையும் கொள்ளையடித்து அவனிடம் ஒப்படைப்பதாகவும் சொன்னான். துருக்கப்படைகள் அனைத்தும் அவரது கட்டுப்பாட்டில் வந்தது.
செஞ்சி அரசன் கொப்பணாரியனுக்குச் சிங்கப்பிரான் ஒரு ரகசிய கடிதம் எழுதி ஒரு குறிப்பிட்ட நாளன்று ஸ்ரீரங்கம் கோட்டைக் கதவுகளைத் திறந்து வைப்பதாகவும், செஞ்சி அரசன் படைகளுடன் வந்து அதைக் கைப்பற்றலாம் என்றும் கடிதத்தில் எழுதியிருந்தான். அந்தத் திட்டப்படி செஞ்சி அரசனும் திருவரங்கத்துக்குப் படைகளுடன் வந்து சேர்ந்தான். சிங்கப்பிரான், முன் ஜாக்கிரதையாக கண்ணனூரில் தங்கியிருந்த படைகளுக்கு மதுபான விருந்து வைத்து அதில் மயங்கி மூழ்கும்படி செய்து வைத்தான். கோட்டைக்குள் புகுந்து கோவிலுக்குள் வந்த செஞ்சி அரசன், அங்கு இருந்த மிலேச்சர்களை விரட்டிவிட்டு, வைணவ ஆச்சார்யார்களை மீண்டும் அழைத்து, கோவிலைச் சுத்தம் செய்து, அலங்கரித்து மீண்டும் உற்சவ மூர்த்திகளைக் கொண்டுவந்தார். மூலத்தானத்திலுள்ள கல்திரையை அகற்றி பெருமாள் சேவையை முன்போல் மீண்டும் துவக்கினார்.
திருவரங்கத்தில் நடந்த இந்த விருத்தாந்தங்களையெல்லாம் கேட்டறிந்த வேதாந்த தேசிகர் தம் பரிவாரம் புடை சூழவந்து பெருமாளைத் தரிசித்து ஆனந்தப் பரவசக் கடலில் மூழ்கினார். அப்பொழுது கோவிலிலிருந்த பட்டரின் வேண்டுகோளின்படி கொப்பணாரியர் செய்த அரும்பணியை இரண்டு ஸ்லோகங்களில் பாராட்டினார். அவை சேனை முதலியார் பிரகாரத்தில் கல்வெட்டாகப் பொறிக்கப்பட்டன.
அவர் பாடிய பாடலின் பொருள்:-
“நீல நிறமான சிகரங்களோடு கூடி மக்களுக்குப் ப்ரீதியை உண்டாக்குகிற அழகிய மணவாளனை, உபய நாச்சிமாருடனும், திருமலையிலிருந்து இங்கே எழுந்தருளப் பண்ணி, (அதற்கு முன்) செஞ்சி நாட்டிலே சில நாள் ஆராதனம் செய்வித்துப் பிறகு, துருக்கரை வெற்றி கொண்டு, பெருமாளை அவரது இடத்தில் எழுந்தருளச் செய்த, ஸ்படிகம் போல மாசுமருவற்ற புகழுடைய கொப்பணாரியர் விசேஷமான பணிகளைச் செய்து ஸ்ரீரங்கத்தில் மீண்டும் கிருதயுகத்தை உதிக்கச் செய்தார்.”

இதற்குப் பின்னர், தேசிகர் நாள்தோறும், அழகிய மணவாளனுக்கு மங்களாசாசனம் செய்துகொண்டு சுகமாக ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்து வந்தார்.
–சுபம்–
You must be logged in to post a comment.