
Written BY S NAGARAJAN
Date: 19 April 2016
Post No. 2737
Time uploaded in London :– 8-28 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
பாக்யா வார இதழில் 15 -4-2016 தேதியிட்ட இதழில் அறிவியல் துளிகள் தொடரில் வெளியான கட்டுரை
இரத்த சந்திரன் உலகை அழிப்பானா?
ச.நாகராஜன்

“சந்திரன் பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதை மறைக்கும் போது சந்திர கிரகணம் ஏற்படுகிறது” –அறிவியல் செய்தி
சூரிய கிரகணம் பற்றிப் பேசும் போது ஒரு முக்கியமான செய்தியை அறிவியல் தருகிறது.
இனி அடுத்து வரும் மிகப் பெரிய சூரிய கிரகணம் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி நிகழவிருக்கிறது. அமெரிக்காவில் இதை நன்கு பார்க்க முடியும். அங்கு ஜனத்தொகை அதிகமாக இருக்கும் பகுதிகளில் இதை பார்க்க முடியும் என்பதால் இதை அமெரிக்கா கோலாகலமாக வரவேற்க இருக்கிறது. இதையொட்டி என்னவெல்லாம் உற்பாதம் நிகழும் என்பதைக் குறித்து ஜோதிடர்கள் இப்போதே தங்கள் ஆரூடங்களைச் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இன்னொரு சூரிய கிரகணம் 2024ஆம் ஆண்டு நிகழவிருக்கிறது.
இனி சந்திர கிரகணம் பற்றிய சில சுவையான செய்திகளைப் பார்க்கலாம்.
பௌர்ணமி தினங்களில் நிகழும் சந்திர கிரகணத்தைப் பற்றி உலகின் எல்லா நாகரீகங்களும் பல்வேறு நம்பிக்கைகளைக் கொண்டுள்ளன.
முக்கியமாக செக்ஸ் உறவு தவிர்க்கப்பட வேண்டும். கிரகண காலத்தில் கர்ப்பிணிகள் வெளியே வரக் கூடாது. கிரகணம் முடிந்த பின்னர் குளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நம்பிக்கைகள் ஏராளம்.
சூரியனுக்கு எதிரில் சந்திரன் வரும் போது நடுவில் இருக்கும் பூமியின் நிழல் சந்திரனின் மிது பட சந்திர கிரகணம் ஏற்படுகிறது. சந்திரனின் சுற்றுப் பாதை பூமியின் பாதையிலிருந்து ஐந்து டிகிரி கோணத்தில் தள்ளி இருப்பதால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் கிரகணம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது.
பூமி, சூரியன் மற்றும் சந்திரன் ஒரே நேர் கோட்டில் வந்தால் அது Syzygy என்று அழைக்கப்படுகிறது. இது கிரேக்க மொழியில் சேர்ந்து இணைக்கப்பட்டிருத்தல் என்ற சொல்லிலிருந்து பிறந்தது.
பூமியின் வளி மண்டலத்தில் பட்டு ஒளி சிதறும் போது சந்திரனின் நிறம் செக்கச் செவேலென சிவப்பாக இருக்கும் இதையே ரத்த சந்திரன் அல்லது சிவப்பு நிலவு என்கிறோம். ஒரே வருடத்தில் ஆறு பௌர்ணமியும் நான்கு சிவப்பு நிலவும் வந்தால் பூமி நிச்சயம் அழிந்து விடும் என்பது ஒரு நம்பிக்கை. இதையொட்டி ஜான் சார்லஸ் ஹேஜி என்ற ஒரு பாதிரியார் எழுதிய புத்தகம் சென்ற 2015ஆம் ஆண்டு உலகையே பரபரப்புக்குள்ளாக்கியது. 2014 தொடங்கி 2015 செப்டம்பர் முடிய இந்த மாதிரி நிகழ்வுகள் வந்து விட்டன என்றார் அவர். நல்ல வேளை, இரத்த சந்திரனால் உலகம் அழியவில்லை!

அதிக பட்சமாக சந்திர கிரகணத்தின் நேரம் 220 நிமிடங்களே! இதில் பூரண சந்திர கிரகணம் என்பது அதிக பட்சமாக சுமார் நூறு நிமிடங்களே நீடிக்கும்.
இன்னும் நூறு கோடி வருடங்கள் கழித்து நிகழும் சந்திர கிரகணம் முற்றிலும் வேறுமாதிரியாக இருக்கும். இதற்கான காரணம் சந்திரன் பூமியிலிருந்து ஆண்டு ஒன்றுக்கு 1.6 அங்குலம் நகர்வதினால் தான்! கிரகணங்கள் நிகழும் போது விஞ்ஞானிகளுக்குக் கொண்டாட்டம் தான். பல்வேறு விதமான ஆராய்ச்சிகளை அவர்கள் தீவிரப் படுத்துவார்கள்.
ஆனால் உலக மக்களுக்கோ பல வித கவலைகள்! எஸ்கிமோக்கள் சந்திர கிரகணத்தின் போது பாத்திரங்களைத் தலைகீழாகக் கவிழ்த்து வைத்து விடுவார்கள். இல்லையேல் வியாதி வந்து விடும் என்பது அவ்ர்களின் நம்பிக்கை.
தாய்லாந்திலோ கிரகணத்தின் போது பட்டாசு வெடிப்பது வழக்கம். இதன் மூலம் கெட்ட ஆவிகளை விரட்ட முடியும் என்பது அவர்களின் நம்பிக்கை. பொதுவாக உலகின் முடிவைத் தெரிவிக்க ஏற்படுவதே கிரகணம் என்பது அவர்களின் நம்பிக்கை. இப்படி கிரகணத்தை ஏற்படுத்துவது கெட்ட ஆவிகளே என்று அவர்கள் நம்புவதால் பானைகளைத் தட்டி ஒலி எழுப்பியும் வெடி வெடித்தும் ஆவிகளை அவர்கள் துரத்துவார்கள்.
இன்னும் யூதர்கள், மாயா நாகரிகத்தைச் சேர்ந்தவர்கள். கிரேக்கர்கள் என இப்படி ஒவ்வொரு பிரிவினரின் நம்பிக்கைகளையும் ஆராயப் புகுந்தால் பெரிய நூலையே தொகுக்க வேண்டியிருக்கும்.
ஆனால் கிரகணம் என்பது இயற்கையில் நிகழும் ஒரு அற்புத நிகழ்வு; என்பது நபிகள் நாயகத்தின் அருளுரை!
கிரகணங்கள் வருகின்றன, போகின்றன; உலகம் அதன் இயல்பில் இயங்கிக் கொண்டே தான் இருக்கிறது.
விஞ்ஞானிகள் தரும் அறிவுரைகளை மனதில் கொண்டு பாதுகாப்பாக கிரகணங்களைப் பார்த்தால் பல இயற்கை விந்தைகளைக் கண்டு மகிழலாம் என்பது உறுதி.

அறிவியல் அறிஞர் வாழ்வில் .. .
1902ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதியன்று முதல் தொலைத் தொடர்புச் செய்தி மார்கோனி ஸ்டேஷனிலிருந்து ஒலிபரப்பப்பட்டது. 1903ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி அமெரிக்க ஜனாதிபதி தியோடர் ரூஸ்வெல்ட் பிரிட்டன் மன்னர் ஏழாம் ஹென்றிக்கு தொலைதூரச் செய்தியை முதலில் அனுப்பினார். இதிலிருந்தே உலகம் சுருங்கிப் போனது. உடனடிச் செய்திப் பரிமாற்றம் அமுலுக்கு வந்தது.
உலகின் பெரிய கடல் விபத்தான டைடானிக் நிகழ்வில் மார்கோனியின் கண்டுபிடிப்பு பல உயிர்களைக் காப்பாற்றிய சம்பவம் பிரபலமான ஒன்று.
டைடானிக் மூழ்கிக் கொண்டிருந்த அதே நேரத்தில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு கர்பதீயா என்னும் கப்பல் நியூயார்க்கிலிருந்து ரிஜேகா என்னும் இடம் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் இருந்த வயர்லெஸ் ஆபரேட்டர் ஹரால்ட் காட்டம் டைட்டானிக்கின் அவசர செய்தியை முதலில் கேட்கவில்லை. பின்னர் டைடானிக் மூழ்கும் செய்தி அவருக்குக் கிடைத்தவுடன் வேகமாகச் சென்று காப்டன் ஆர்தர் ஹென்றியை எழுப்பினார். அவர் உடனே 58 மைல் தொலைவில் தள்ளி இருந்த டைடானிக் நோக்கி கப்பலை விரைந்து ஓட்டிச் சென்றார். உரிய தருணத்தில் அங்கு சேர்ந்த காப்டன் 705 பேரைக் காப்பாற்றினார்.
விபத்து பற்றி மார்கோனி கோர்ட்டில் தனது சாட்சியத்தை அளிக்கும் போது கடலிலிருந்து எப்படி செய்திகளை ஆபத்துக் காலத்தில் அனுப்ப முடியும் என்பது பற்றி விளக்கினார். பிரிட்டனின் போஸ்ட் மாஸ்டர் ஜெனரலும் டைடானிக் விபத்து பற்றிய தனது அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில்,” காப்பாற்றப்பட்ட அனைவரும் ஒரே ஒருவரால் காப்பாற்றப்பட்டனர், அவர் தான் மார்கோனி, அவரது கண்டுபிடிப்பே இப்படி அனைவரையும் காப்பாற்ற உதவியது என்று குறிப்பிட்டு அவர் மார்கோனியைப் பாராட்டினார்.
அனைவரும் அறிவியல் கண்டுபிடிப்பால் மகிழ்ந்தனர்.
******
You must be logged in to post a comment.