
Compiled BY S NAGARAJAN
Date: 22 April 2016
Post No. 2747
Time uploaded in London :– 11-23 AM
( Thanks for the Pictures)
DON’T REBLOG IT AT LEAST FOR A WEEK! DON’T USE THE PICTURES; THEY ARE COPYRIGHTED BY SOMEONE.
(for old articles go to tamilandvedas.com OR swamiindology.blogspot.com)
100 வயது வாழ்ந்த பெரியோர்
(இதற்கு முன்னர் வேதபிராயம் வகுத்த நூறு வயது வாழ்ந்த நால்வரைப் பற்றிய கட்டுரைகள் படித்தவர்களுக்கு மீண்டும் ஒரு விருந்து! இப்போது இன்னும் சிலர் பற்றி அறிவோம்.)
120 வயது வாழ்ந்த அதிசய புத்த துறவி ஸு யுன்! -1
ச.நாகராஜன்
ஒவ்வொரு புத்த மடாலயத்திலும், சீனாவில் ஒவ்வொரு இல்லத்திலும் மிக்க பயபக்தியுடன் உச்சரிக்கப்படும் பெயர் ஸு யுன்!
120 ஆண்டுகள் வாழ்ந்ததோடு நேரடியாக ஆன்மீக வாழ்க்கையை 101 ஆண்டுகள் புத்த துறவியாக இருந்து வாழ்ந்து காட்டிய ஒரு பெரியவர் என்பதால் அவர் ஒரு அதிசய புருஷர்!
அவர் வாழ்க்கையில் ஏராளமான சுவையான சம்பவங்கள் நிறைந்திருப்பதால் அவர் வாழ்க்கை சரிதம் ஒரு அபூர்வ சரிதம்!
நூற்றுக்கணக்கான சீடர்களை அவர் ஆங்காங்கே உருவாக்கினார். சில சமயம் அவரைப் பார்க்க வரும் மக்கள் கூட்டம் ஆயிரக்கணக்கில் திரண்டது.
மிங் வமிசத்தில் மாஸ்டர் ஹான் ஷான் (1546-1623) என்பவருக்கு மட்டுமே இப்படிப்பட்ட ஒரு பெரும் சீடர் கூட்டம் இருந்தது.
அவர் காலத்திலும் ‘தர்மா’ (புத்த தர்மம்) நலிவுற்று அழியும் தருணத்தில் இருந்தது. அதற்குப் புத்துயிரூட்டி நலிவடைந்திருந்த ஏராளமான ஆலயங்களை புனருத்தாரணம் செய்தார் அவர்.
அதே போல ஸூ யுன் காலத்திலும் சீனாவில் மாசேதுங் ஆட்சியால் புத்த தர்மத்திற்கு பேராபத்து ஏற்பட்டது. அந்தக் காலத்திலும் கூட இவர் தளரவில்லை. இவர் பட்ட கொடுமைகள் சகிக்க முடியாதவை.
இருந்தாலும் ஏராளமான புத்த ஆலயங்களை இவர் புதுப்பித்தார். புத்த தர்மத்திற்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தன் வாழ்க்கையில் வாழ்ந்து காட்டி அளித்தார்.
ஆகவே இந்த இரு புத்த குருமார்களையும் வரலாறு ஒப்பிடுகிறது. இவரை ஹான் – ஷான் திரும்பி வந்து விட்டார் என்று சீன மக்கள் செல்லமாகக் குறிப்பிட்டனர்.
இருவரின் வாழ்க்கையிலும் ஏராளமான ஒற்றுமை சம்பவங்கள் உண்டு.
1840 ஆம் ஆண்டு ஸூ யுன் பிறந்தார்.ஓபியம் போர் முடிவுக்கு வந்த காலம் அது.1843ஆம் ஆண்டு ஹாங்காங் நகரம் பிரிட்டிஷாரிடம் ஒப்படைக்கப்பட்டது.
மஞ்சு வமிசம் 1911இல் முடிவுக்கு வந்தது. சீனாவின் புதிய தலைவர்கள் புத்த மதத்திற்கு எதிராகவே திரும்பி விட்ட தருணம் ஆரம்பித்தது.
ஏராளமான புத்த மடாலயங்கள் கம்யூனிஸ கொடுங்கோலர்களால் தரைமட்டமாக்கப்பட்டன. ஏற்கனவே சிதிலமாக இருந்த மடாலயங்கள் வேறு இடிந்து வீழ்ந்தன. பஞ்சம், கொடும் நோய்கள் என சீனாவை துயரம் பிடித்து ஆட்டியது.
ஆயிரத்தி தொள்ளாயிரத்து முப்பதுகளில் ஜப்பானிய படை வேறு வட சீனாவை ஆக்கிரமித்தது.

இப்படிப்பட்ட ஒரு மோசமான கால கட்டத்தில் தான் ஸூ யுன் தோன்றினார்.
ஆனால் அவர் மதிப்போ மிகவும் பெரிது. அவர் தாய்லாந்து விஜயம் செய்த சமயம் அந்த நாட்டின் மன்னரே அவரிடம் தன்னை சீடனாக ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டினார்.
தான் வாழ்ந்த நீண்ட 120 ஆண்டுகள் முழுவதும் மிகவும் எளிமையாக வாழ்ந்தார் அவர்.
ஒரு மடாலயத்தைப் புனருத்தாரணம் செய்ய நிச்சயித்து அந்த இடத்திற்கு அவர் சென்றால் கையில் ஒரு கம்புடன் மட்டுமே செல்வார். அந்த கம்பு ஒன்றே அவரது உடைமை.
அந்த மடாலயம் அல்லது கோவிலின் புனருத்தாரண வேலை முடிந்து விட்டால் அவர் அங்கிருந்து கிளம்பி விடுவார் – கையில் இருந்த ஒரே உடைமையான கம்பை அந்த இடத்தில் போட்டு விட்டு!
அபூர்வமான அந்த அற்புத புருஷரின் வாழ்க்கை சரிதத்தை இங்கு வழங்குவதில் பெருமிதப்படுகிறோம்.
-தொடரும்
You must be logged in to post a comment.