ராமன்-சுக்ரீவன் நட்புறவு ஒப்பந்தம்! கம்பன் தரும் சுவைமிகு தகவல்

sugreeva

Written by London swaminathan

 

Date: 6 September 2016

 

Time uploaded in London: 9-42 AM

 

 

Post No.3127

 

Pictures are taken from various sources; thanks.

 

 

இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின்னர் பல ராணுவ உடன்பாடுகள் ஏற்பட்டன. எல்லோருக்கும் நன்கு தெரிந்தது நேட்டொ (North Atlantic Treaty Organisation)  எனப்படும் மேலை நாடுகளின் கூட்டணியாகும். இதில் முக்கியமான விதி கூட்டணியிலுள்ள ஒரு நாட்டை ஏதாவது ஒரு நாடு தாக்கினால் உடனே இந்தக் கூட்டணியும் தலை யிடும். அங்கே தர்ம, நியாயம் என்பதெல்லாம் கிடையாது. என் நண்பனை நீ தாக்கினாய், ஆகையால் நான் உன்னத் தாக்குவது சரியே என்பது அவர்தம் கொள்கை.

 

இதே போல அரசியல் கட்சிக் கூட்டணிகள் பல அமைகின்றன ; போகின்றன. இ வைகளுக்கெல்லாம் மூலம் ராமாயணத்தில் உள்ளது! கம்பன் ஒரு பாட்டில் சொல்வது நமக்கே வியப்பைத் தரும். இதோ பாருங்கள்:–

 

 

என்ற அக் குரக்கு வேந்தை இராமனும் இரங்கி நோக்கி

உந்தனக்கு உரிய இன்ப துன்பங்கள் உள்ள முன் நாள்

சென்றன போக மேல்வந்து உறுவன தீர்ப்பல் அன்ன

நினறன எனக்கும் நிற்கும் நேர் என மொழியும் நேரா

 

மற்று இனி உரைப்பது என்னே வானிடை மண்ணில் நின்னைச்

செற்றவர் என்னைச் செற்றார் தீயரே எனினும் உன்னோடு

உற்றவர் எனக்கும் உற்றார் உன்கிளை எனது காதல்

சுற்றம் உன் சுற்றம் நீ என் இன்னுயிர்த் துணைவன் என்றான்.

 

பொருள்:-

 

நட்புறவு ஒப்பந்தத்தின் முக்கிய ஷரத்துகள் (அம்சங்கள்):-

1.இனி உனக்கு வரக்கூடிய துன்பங்களைத் தவிர்க்க உதவுவேன்

2.இதற்கு முன் உனக்கும் எவருக்கும் பகைமை, சண்டை சச்சரவுகள் இருந்தால் அதில் எனக்குப் பொறுப்பில்லை

3.இனி உனக்கு இன்பம் வந்தால் அதில் 50 சதவிகிதம் உனக்கு; மீதி 50 சதவிகிதம் எனக்கு; அதே போல துன்பம் வந்தாலும் இருவரும் சமமாக பங்கு போடுவோம்

4.உன்னை யார் தாக்குகின்றனரோ அவர் என்னையே தாக்கியதாகக் கருதப்படுவார்

5.கொடியவரே என்றாலும் உன்னுடன் நட்புடையவர் எமக்கும் நண்பரே

6.உன் உறவினர் யாவரும் என் உறவினர்; அன்புகாட்டும் எம் உறவினரும் உனக்குச் சொந்தம் (யாதும் ஊரே, யாவரும் கேளிர்).

7.நீ இன்றுமுதல் என் ஆருயிர்த் தோழன்

 

எவ்வளவு தெளிவான பேச்சு. இக்காலப் பத்திரிக்கைகள் கூட இப்படி இரண்டே பாடலில் — எட்டே வரிகளில் இப்படிச் சுருக்கி வரைய முடியாது!

ram lak

வாலியை, இராம பிரான் மறைந்திருந்து கொன்றதை, இந்த சமாதான உடன்பாட்டின் பின்ன்ணியில் நோக்கினால் தர்ம- நியாயம் விளங்கும்!

 

இதில் குறிப்பிடத்தக்க அம்சம் ஐந் தா வது எண்ணாகும். கொடியவரே என்றாலும் உன் நண்பன் எனக்கும் சிநேகிதனே. அதாவது நட்புறவு ஒப்பந்தம் வந்துவிட்டதால் அங்கே தர்ம நியாயம் கிடையாது! இது இன்றும் இன்டெர்நேஷனல் பாலிடிக்ஸில் INTERNATIONAL POLITICS கடைப்பிடிக்கும் கோட்பாடு.

 

இராக் அதிபர்  சதாம்ஹுசைனையும், லிபியா அதிபர் கர்னல் கடாபியையும் அநியாயமாகக் கொன்றது அமெரிக்கா. ஏன்? பெட்ரோல்

 

தர மறுத்தனர். உடனே அமெரிக்கவுக்கு வால் பிடிக்கும் பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஜெர்மனி , பிரான்ஸ் போன்ற நாடுகள் படை அனுப்பி உதவி செய்தன. இன்று அதன் காரணமாக புதிய முஸ்லீம் பயங்கரவாதம் தலை தூக்கி இருக்கிறது.

 

ஹிட்லருக்குத் துணை போனதற்காக அப்பாவி புத்த மதத்தினர் மீது — பொது மக்கள் மீது – அணுகுண்டு போட்டு லட்சக் கணகானோரை அமெரிக்கா கொன்று குவித்தது ; யாரும் கண்டிக்கவில்லை; கா ரணம் நட்புறவு ஒப்பந்தம்!

 

ஆப்கனிஸ்தானத்துக்குள் ரஷ்யப் படைகள் புகுந்து நீண்ட நெடுங்காலம் நிலை கொண்டிருந்தன. அதை அப்போதைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஆதரித்துக் குரல் கொடுத்தார். எத்தனை வெளிநாட்டு நிருபர்கள் எத்தனை முறை  கேள்வி கேட்டாலும் ரஷ்யா செய்தது நியாயமே என்றார். காரணம்? ரஷ்யா என்பது, இந்தியாவின் நீண்ட நெடுங்கா ல நட்புறவு நாடு. அதை விட்டுக்கொடுக்க முடியாது.

 

ஆனால் ஒரு மிகப்பெரிய வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி கட்டு ரையை முடிப்பேன். ராமன் சொன்ன சொல் தவறாதவன்! சத்ய தர்ம பராக்ரமன்! ஆனால் மேலே குறிப்பிட்ட மேலை நாடுகளும் அரசியல் கூட்டணிகளும் தம் நிலையை மாற்றிக் கொண்டே இருப்பர்.

இந்த சத்தியத்தினால்தான் ராமனை இன்றும் வழிபடுகிறோம். அரசியல் கங்கை என்னும் தர்மப் பிரவாகத்தில் அரசியல் கட்சிக் கூட்டணிகள்அடித்துச் செல்லப்படும்.

 

-Subham–

Leave a comment

Leave a comment