
WRITTEN BY S NAGARAJAN
Date: 23 September 2016
Time uploaded in London:5-05 AM
Post No.3179
Pictures are taken from various sources; thanks.
அறிவியல் துளிகள் தொடரில் பாக்யா 16-9-2016 இதழில் 293ஆம் அத்தியாயமாக வெளியாகியுள்ள கட்டுரை
அற்புத அறிவியல் எழுத்தாளர் ஐஸக் அஸிமாவ்! – 2
ச.நாகராஜன்

“வாழ்க்கையைப் பற்றிய ஒரு சோகமான விஷயம் இப்போது என்னவெனில் ,சமுதாயம் விவேகத்தைச் சேகரிப்பதை விட விஞ்ஞானம் அதிவேகமாக அறிவைச் சேகரிக்கிறது” – ஐஸக் அஸிமாவ்
அஸிமாவ் தினமும் எழுதும் விதம் சற்று விசித்திரமானது. ஜன்னலே இல்லாத சிறிய அறையில் எழுதுவது அவருக்கு மிகவும் பிடிக்கும். இதற்கு ஒரு காரணமும் உண்டு. சூரிய வெளிச்சத்தில் பத்து நிமிடம் இருந்தாலும் போதும், அவரது தோல் எரிச்சலடைந்து வேதனையைத் தரும். அப்படி ஒரு உடல் வாகு அவருக்கு இருந்தது!
காலையில் ஏழரை மணிக்கு டைப்ரட்டரின் முன்னால் அமர்ந்தார் என்றால் இரவு பத்து மணி வரை அவரது எழுத்துப் பணி தொடரும்!
விமானத்தில் பறப்பது அவருக்குப் பிடிக்காது. கார் அல்லது சொகுசுக் கப்பலில் தான் பெரும்பாலும் அவர் பயணங்களை மேற்கொள்வார். மிக அவசியமான நேரங்களில் மட்டும் விமானத்தில் பயணமாவார். இராணுவத்தில் அவர் பணியாற்றிய போது விமானப் பயணம் கட்டாயமாக மேற்கொள்ள வேண்டிய ஒன்றாக ஆனது. ஏராளமான விண்வெளிப் பயணங்கள், நட்சத்திரப் பயணங்கள் என்பதையெல்லாம் எழுத்தில் வடித்துக் கொட்டிய அந்த அதிசய மனிதர் வாழ்நாளில் இரண்டே இரண்டு முறை மட்டுமே விமானப் பயணம் மேற்கொண்டார் என்பது ஒரு அதிசயமான செய்தி!
Limericks எனப்படும் ஆங்கிலக் குட்டிக் கவிதைகளை எழுதுவதில் அவருக்கு அலாதி பிரியம் உண்டு. ஆனால் அவை கொஞ்சம் அசிங்கமாகவே இருக்கும்.
கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் கூட ஒழுக்க நெறிகளை அவர் வலியுறுத்தினார். பகுத்தறிவே துணை என்றார் அவர்.
அவரைத் தேடி பல விருதுகள் வந்தன. அவரைப் போற்றி ஒரு விண்கல்லிற்கு ஆஸ்ட்ராய்ட் 5020 அஸிமாவ் என்று பெயரிடப்பட்டது.
பைபிளைப் பற்றி இரண்டு தொகுதிகளாக 1300 பக்கங்களில், ‘அஸிமாவ் கைட் டு தி பைபிள்’ (பைபிளுக்கு அஸிமாவின் வழிகாட்டி) என்ற நூலை அவர் எழுதினார். இதில் பழைய ஏற்பாடு மற்றும் புதிய ஏற்பாடில் உள்ள அனைத்தும் சொல்லப்பட்டது.
அவரது மரணமோ சோகமாக நிகழ்ந்தது. 1983இல் இதய அறுவை சிகிச்சை ஒன்றின் போது உடலில் செலுத்தப்படக் கூடாத தடை செய்யப்பட்ட இரத்தம் அவர் உடலில் செலுத்தப்பட்டது. இதனால் ஹெச் ஐ வி தொற்றால் அவர் பாதிக்கப்பட்டார். ஆகவே 1992இல் மரணமடைந்தார். இப்படி ஒரு நோய் அவரைத் துன்புறுத்தியது பத்து வருடங்கள் ரகசிய்மாகவே இருந்தது.

தனது சுயசரிதத்தை மூன்று முறை அவர் எழுதியுள்ளார். மூன்றாவது நூல் மட்டும் அவர் இறந்த பின்னர் வெளி வந்தது. அவரது மனைவி ஜேனட் அஸிமாவ் இந்த மூன்று சரிதங்களையும் சுருக்கி ஒரு நூலை வெளியிட்டார். அதில் தான் அவர் இறந்தது எதனால் என்பது தெரிய வந்தது.
கடைசியாக அஸிமாவின் எழுத்து நடையைப் பற்றிச் சொல்லியாக வேண்டுமே! ஒரு சிறிய எடுத்துக்காட்டின் மூலமாக நகைச்சுவை கலந்த அவரது நடையை உணர முடியும்
அஸிமாவின் எழுத்துக்கு ஒரு சாம்பிள் இதோ:
நுண்ணறிவு என்பது தான் என்ன?
நான் இராணுவத்தில் பணியாற்றிய போது ராணுவ வீரர்களுக்கான சோதனையில் நூற்றுக்கு நான் 160 மார்க்குகள் பெற்றேன்! யாருமே அப்படி ஒரு மதிப்பெண்ணைப் பெற்றதில்லை என்பதால் இரண்டு மணி நேரம் என்னைச் சுற்றி ஒரே கூத்தும் கும்மாளமுமாக இருந்தது.
வாழ்க்கை முழுவதுமே இதே போன்ற மதிப்பெண்ணையே பெற்று வந்ததால் எனது அறிவைப் பற்றிய ஒரு உயர் அபிப்ராயம் எனக்கு இருந்தது. மற்றவர்களும் என்னை அறிவாளி என்றே நினைக்க வேண்டும் என்றும் நினைத்து வந்தேன்.
இந்த மதிப்பெண்கள் என்னைக் கேள்வி கேட்பவர்களின் சாதாரணமான் கேள்விகளுக்கு நான் நல்ல பதிலைச் சொல்ல வேண்டும் என்ற அவசியத்தைத் தரும் என்று எதிர்பார்க்கக் கூடாது தான்!
உதாரணமாக ஒரு ஆட்டோ மெக்கானிக்கை நான் சந்தித்த விஷயத்தைச் சொல்லலாம். அவருக்கும் இண்டெலிஜெண்ட் டெஸ்டுக்கும் சம்பந்தமே இல்லை. ஆகவே அவரை விட நான் பிரமாதமான அறிவாளி என்றே என்னைப் பற்றி நான் எண்ணிக் கொண்டிருந்தேன்.
அந்த மெக்கானிக்கை நான் சந்தித்த போதெல்லாம் அவர் ஜோக்குகளைச் சொல்லி மகிழ்வது வழக்கம்.

ஒரு நாள் காரின் அடியிலிருந்து தலையை மட்டும் நீட்டினார் அவர்.
“டாக்டர், ஒரு செவிட்டு ஊமை ஒரு நாள் ஆணி வாங்க கடைக்குப் போனார்.ஒரு கையில் இருந்த விரலை ஊன்றிக் காண்பித்து இன்னொரு கையால் சுத்தியலால் அடிப்பதைப் போல அந்த விரலின் மீது அடித்துக் காண்பித்தார். கடைக்காரர் ஆணிகளைக் கொண்டு வந்தார் அதில் தனக்குத் தேவையான சைஸை அவர் எடுத்துக் கொண்டு சென்றார்.
டாக்டர், அடுத்தாற்ப் போல அந்தக் கடைக்கு வந்தவர் கண் பார்வையற்ற குருடர். அவர் கத்தரிக்கோலை வாங்க வந்தார். அவர் எப்படி கத்தரிக்கோலை வாங்கினார்?” என்று கேட்டார் மெக்கானிக்.
மிக்க அறிவுத் திறமையுடன் நான் இரு விரல்களாலும் கத்தரிக்கோல் அசைவது போல அசைத்துக் காட்டினேன்.
உடனே அந்த மெக்கானிக் கலகலவென்று சிரித்து, “ அட, மக்கு டாக்டரே, அவர் தனது வாயைத் திறந்து கத்தரிக்கோல் வேண்டும் என்று கேட்டார்” என்றார்.
தொடர்ந்த அவர், “இன்று முழுவதும் எனது வாடிக்கையாளர்களிடம் இந்தக் கேள்வியைத் தான் கேட்டேன்” என்றார்
“நிறைய ஆள்களைப் பிடித்து விட்டீர்களோ” – நான் கேட்டேன்.
“ஆமாமாம் நிறைய பேரை. ஆனால் நிச்சயம் உங்களைப் பிடித்து விடுவேன் என்று எனக்குத் தெரியும்!”
“அது எப்படி என்னைப் பிடிப்பது பற்றி அவ்வளவு நிச்சயம்?” – நான் கேட்டேன்..
“ஏனென்றால் மெத்தப் படித்த மேதாவியாயிற்றே நீங்கள். அவ்வளவாக ஸ்மார்ட்டாக உங்களால் இருக்க முடியாதே!”
சற்று அசடு வழிந்தேன் நான்!”
அஸிமாவ் எழுதாத பொருளே இல்லை என்பதால் அவரை யார் வேண்டுமானாலும் படிக்கலாம்! மாபெரும் மேதை அவர்!

அறிவியல் அறிஞர் வாழ்வில் ..
பிரபல அமெரிக்க விண்வெளி வீரரான ஸ்டோரி மஸ்க்ரேவ் (Story Musgrave) ஒரு விஞ்ஞானி. எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்தவர். ஒரு கணித மேதை. ஒரு கம்ப்யூட்டர் ப்ரோக்ராமர். ஒரு மெக்கானிக் ஒரு பைலட். ஒரு சர்ஜனும் கூட.
இப்படிப் பன்முகத் திறமை கொண்ட அபூர்வமான இந்த மனிதர் நாஸாவில் 30 ஆண்டுகள் பணி புரிந்தார். 1983ஆம் ஆண்டிலிருந்து ஆறு முறை அவர் விண்ணில் பறந்தார். ஸ்பேஸ் ஷட்டில் திட்டத்தில் முனைப்புடன் அவர் ஈடுபட்டார். 1983இல் ஸ்பேஸ் ஷட்டில் சாலஞ்ஜரில் ஆரம்பித்த விண்வெளி வாழ்க்கை 1996இல் ஸ்பேஸ் ஷட்டில் கொலம்பியாவில் முடிவுற்று 61ஆம் வயதில் பணி ஓய்வு பெற்றார். அமெரிக்காவின் ஐந்து ஸ்பேஸ் ஷட்டில்களிலும் பறந்த ஒரே வீரர் இவர் தான்! விண்ணில் பறந்ததால் வாழ்க்கை பற்றிய தன் கருத்தில் எந்த ஒரு மாற்றமும் ஏற்படவில்லை என்கிறார் அவர்!
மற்ற விண்வெளி வீரர்கள் எல்லோரும் விண்ணில் பறந்தவுடன் ஒரு ஓவர் வியூ எஃபக்ட் (Overview effect) ஏற்பட்டு விட்டதாகக் கூறுவது வழக்கம். பிரக்ஞை பற்றிய உணர்வில் ஒரு பெரும் மாற்றம் ஏற்படுவதை ஓவர்வியூ எஃபக்ட் என்பர். ஆனால் இது தனக்கு ஏற்படவில்லை என்று கூறினார் அவர். இந்த ‘விண்வெளி பிரக்ஞை விளைவு’ தனிப்பட்ட நபராகவோ அல்லது அரிய உயிரின வகைக்கு ஏற்படும் ஒன்றாகவோ எந்த விதத்திலும் தனக்கு நிகழவில்லை என்றும் எப்போதும் போலத் தான் இருப்பதாகவும் அவர் கூறி அனைவரையும் பிரமிக்க வைத்தார்.
ஏனைய வீரர்களோ உலகைப் பற்றிய பார்வையில் தங்கள் உணர்வில் பெரிய மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கூறினர்.
எளிமையாக இருந்து விண்வெளிப் பயணத்தை அனுபவித்த பல்துறை மேதாவி என்று அவரைக் கூறலாமோ!

*********
You must be logged in to post a comment.