புறநானூற்றில் அந்தணரும் வேதமும் – 4 (Post No.3339)

WRITTEN BY S NAGARAJAN

 

Date: 10  November 2016

 

Time uploaded in London: 6-09 AM

 

Post No.3339

 

 

Pictures are taken from various sources. Thanks.

 

Contact: swami_48@yahoo.com

 

 

 

சங்க இலக்கிய ஆய்வு – கட்டுரை எண் 7

இந்தக் கட்டூரையில் புறநானூற்றில் உள்ள பாடல்கள் 6 மற்றும் 122 ஆகியவை இடம் பெற்றுள்ளன

 

புறநானூற்றில் அந்தணரும் வேதமும் ! – 4

 

                        ச.நாகராஜன்

                            

 

சங்ககாலத்தில் வாழ்ந்த அற்புதமான மன்னனான பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போற்றி காரிக்கிழார் என்ற புலவர் பாடிய பாடல் புறநானூற்றின் 6வது பாடலாக அமைகிறது.

பாடலின் முதல் நான்கு அடிகளே பாரத தேச ஒருமைப்பாட்டை நன்கு விளக்குகிறது.

 

 

வடக்கில் பனி படு நெடிதுயர்ந்த மலை.

தெற்கிலோ உருகெழு குமரி முனை

கிழக்கிலும் க்டல்; மேற்கிலும் கடல்!

 

வாடாஅது பனி படு நெடு வரை வடக்கும்
தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்
குணாஅது கரை பொரு தொடு கடல் குணக்கும்
குடாஅது தொன்று முதிர் பொளவத்தின் குடக்கும்”                                               (1 முதல் 4 வரிகள்)

 

அடுத்து புலவர் மன்னனின் தலை யாருக்கு மட்டும் தாழலாம் என்பதைக் குறிப்பிடுகிறார் இப்படி:-

 

 

அத்தை நின் குடையே முனிவர்
முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே
இறைஞ்சுக பெரும நின் சென்னி சிறந்த
நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே
வாடுக”
(வரிகள் 17 முதல் 21 முடிய)]

 

உனது குடை மூன்று கண்ணுடைய சிவபிரானின் கோவிலை வலம் செய்யும் போது தாழட்டும்;(முனிவர் முக்கண் செல்வர் நகர் வலஞ் செயற்கே அத்தை நின் குடையே)  நான்கு வேதங்களைச் சொல்லும் அந்தணர் கைகளைத் தூக்கி இருக்க அவர்கள் முன்னர் உன் தலை வணங்கட்டும்! (நின் சென்னி சிறந்த நான்மறை முனிவர் ஏந்து கை எதிரே இறைஞ்சுக)

 

 

சிவபிரானின் கோவிலிலும் சிவபிரானை மகிழ்விக்கும் வேதங்களைச் சொல்லும் அந்தணர் முன்னும் பாண்டியனின் தலை பணியலாம்; வேறு யாருக்கும் அவன் தலை தாழாது!

என்ன ஒரு பக்தி பாண்டிய மன்னனுக்கு!

வேள்வி பல நடத்திப் பெரும் புகழ் கொண்ட பல்யாகசாலை முது குடுமிப் பெருவழுதியைப் போற்றிய அருமையான இப்பாடலில் சங்க காலச் சூழ்நிலை தெளிவாகத் தெரிகிறது.

 

 

அடுத்து பாடல் எண் 122ஐப் பார்ப்போம். இதைப் பாடியவர் கபிலர். பாடப்பட்ட பாட்டுடைத் தலைவன் மலையமான் திருமுடிக்காரி.

காரி கடை ஏழு வள்ளல்களில் ஒருவன்.

.இப்பாடலில் புலவர், காரியின் நாடு அக்கினி வளர்த்து யாகம் செய்யும் அந்தணரின் நாடு என்று சொல்கிறார்.தன் நாட்டையே ஈந்து உவந்த பெரும் வள்ளல் காரி என்பது இதனால் பெறப் படுகிறது!

 

நின் நாடே
அழல் புறம் தரூஉம் அந்தணர் அதுவே (வரிகள் 2  மற்றும் 3)

 

அடுத்து உன்னுடையது என்று சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது என்று கேட்டு அதற்கு பதிலையும் தருகிறார் இப்படி: நின் மனைவி வடமீனான அருந்ததி அன்ன கற்புடையாள். மிக மிருதுவாகப் பேசும் இயல்பினள் (வடமீன் புரையும் கற்பின் மடமொழி அரிவை). அவளது தோள் அல்லாது வேறு எதையும் உன்னுடையது என்று நினைக்காதவன் நீ; அதனாலேயே நீ பெரியோனாகிறாய்! (தோள் அளவு அல்லதை நினது என இலை நீ பெருமிதத்தையே)

 

 

வட மீன் புரையுங் கற்பின் மட மொழி
அரிவை தோள் அளவு அல்லதை
நினது என இலை நீ பெருமிதத்தையே. (வரிகள் 8 முதல் 10 முடிய)

 

 

பத்தே வரிகள் கொண்ட பாடலில் மனதை நெகிழ வைக்கிறார் கபிலர். உருக வைக்கும் சொற்கள். உன்னதமான கருத்துக்கள்!

கற்பில் அருந்ததி போன்ற மனைவியைத் தவிர வேறு எதையும் தனக்கெனச் சொந்தம் கொண்டாடாத மாமன்னன் காரியைப் போல உலகம் கண்டதுண்டா!

 

 

பெரும் ஈகையாளன் காரியைப் போல் வேறு ஒரு மன்னனைக் காண முடியுமா?

 

நாட்டையே அந்தணருக்கு ஈந்த் காரியின் பெருங்கொடை ஒரு புறம் இருக்க அதற்குத் தகுதியான பாத்திரமாகத் திகழ்ந்த அந்தணரின் புகழ் குறைவானதா என்ன?

 

அருந்ததி என்று சொல்லப்படும் கற்பில் சிறந்த ரிஷி பத்தினியை ஒவ்வொரு திருமணத்திலும் மணமகன் மணமகளுக்குக் காட்டுவது வழக்கம். வசிஷ்டர் – அருந்ததி போல வாழ்வோம் என்பது அவர்கள் அந்தச் சமயத்தில் எடுக்கும் உறுதி மொழி!

 

இப்படிப் பண்பாட்டாலும், சடங்காலும், வேத மந்திரத்தாலும், அதற்கு உரிய தெய்வத்தாலும் ஒன்றாக இணைந்த ஒரு உயரிய தேசத்தையே சங்க இலக்கியம் சுட்டிக் காட்டுகிறது. சொற்களை அனுபவித்துப் படிக்க புறநானூறு நூலை எடுப்போம்! நாமே படிப்போம்!! தீய அர்த்தம் தரும் உரைகளைத் தீயில் போடுவோம்!!!

**********

Leave a comment

Leave a comment