
Written by S NAGARAJAN
Date:28 April 2017
Time uploaded in London:- 6-11 am
Post No.3858
Pictures are taken from different sources; thanks.
contact: swami_48@yahoo.com
இள வயதில் என் குழந்தை ஏன் இறந்தது? தந்தையின் துக்கமும் பகவானின் பதிலும்!
ச.நாகராஜன்
18-9-1945. மதிய நேரம்.
ரமண மஹரிஷியின் ரமணாஸ்ரமத்திற்கு வஙகத்திலிருந்து சிலர் வந்திருந்தனர் அவர்களில் ஒருவர் சமீபத்தில் தன் குழந்தையை இழந்திருந்தார். அவ்ருக்கு ஒரே சோகம்.
அவர் பகவானிடம், “ ஏன் என் குழந்தை இந்த இளம் பிராயத்திலேயே இறந்தது? அது அந்தக் குழந்தையின் கர்மாவினால் தானா அல்லது நாங்கள் அந்த துக்கத்தை அடைய வேண்டுமென்ற எங்களின் கர்மாவினால் தானா?” என்று கேட்டார்.
இதற்கு பகவான் பதில் கூறினார் இப்படி:
“குழந்தையின் பிராரப்தம் இந்த உலகில் முடிவுக்கு வந்து விட்டதால் அது இறந்து விட்டது. உங்களைப் பொறுத்த வரை நீங்கள் அதைப் பற்றித் துக்கத்துடன் இருக்க வேண் டா.ம் ஆனால் மிக்க அமைதியுடன் எந்த வித பாதிப்பும் இன்றி அந்தக் குழந்தை கடவுளுடையதே. அவர் கொடுத்தார். அவரே எடுத்துக் கொண்டார் என்ற எண்ணத்துட்ன இருக்க வேண்டும்.” என்றார்.
இதைச் சற்று விள்க்க வேண்டுமென்ற எண்ணத்தில் பகவான் யோக வாசிஷ்டம் நூலை எடுத்தார்.
என்ன ஆச்சரியம், அவர் எதைச் சொல்ல நினைத்தாரோ அதே பக்கம் திறந்தது. அதில் உள்ள ஒரு கதை புண்ய, பாவத்தைப் பற்றிய கதை.
அதை அணுக்க பக்தரான ஏ. தேவராஜ முதலியாரிடம் கொடுத்து பகவான் படிக்கச் சொன்னார்.
அதில் புண்யம் தனது சகோதரன் பாவனாவை அவர்களின் பெற்றோர்கள் இறந்ததைக் குறித்து முட்டாள்தனமாக வருந்த வேண்டாமென்றும், பாவனா எண்ணற்ற பிறவிகளைக் கடந்த காலத்தில் எடுத்திருப்பதாகவும், ஒவ்வொரு பிறவியிலும் ஏராளமான உறவினர்களைக் கொண்டிருந்தார் எனவும் அந்த அனைத்து உறவினர்களையும் பற்றி இப்போது பாவனா துக்கித்து வருத்தப்படுவதில்லை என்றும் ஆகவே அதே போலவே இந்தப் பிறவியில் அவரது தந்தை இறந்ததற்குத் துக்கிக்க வேண்டாம் என்றும் அறிவுரை கூறியது.
வங்காள பக்தர் மேலும் கேட்டார்: “ஒரு குழந்தை இறந்து விட்டது, ஆனால் இன்னொருவரோ வாழ்ந்து கொண்டிருக்கிறார், இந்த இருவரில் அதிகப் பாவம் செய்தவர் யார்?”
பகவான்: என்னால் சொல்ல முடியாது.
உடனே தேவராஜ முதலியார் அவர் கொடுத்த விவரத்தின் மூலமாக யாராலும் யார் இதில் அதிக பாவம் செய்தவர் என்பதைக் கூற முடியாது என்று கூறினார்.
பக்தர்: ஒருவர் நீண்ட காலம் வாழ்ந்தால் ஞானம் பெறுவதற்காக தன்னை முழுமையாக்கிக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உண்டல்லவா?
பகவான்: இள்மையில் இறக்கும் ஒருவருக்கு சீக்கிரமே அடுத்த் பிறவி கிடைத்து அந்தப் பிறவியில் ஞானம் பெற இந்தப் பிறவியில் நீண்ட நாட்கள் வாழும் ஒருவரை விட இன்னும் நல்ல வாய்ப்புகள் கிடைக்கலாம் இல்லையா?
குழுவினரில் ஒருவர் இதையொட்டி பகவானிடம், “எல்லாவற்றையும் துறந்து விட வேண்டுமென்று சொல்லும் போது எவ்வளவு முடியுமோ அவ்வளவு நமது செயல்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்று அர்த்தமா?” என்று கேட்டார்.
அதற்கு பகவான், : எல்லா செயல்களையும் துறந்து விடு என்பதற்கு அர்த்தம் அந்தச் செயல்களால் ஏற்படும் பலன்களைத் துறந்து விட் வேண்டுமென்று தான் அர்த்தம். நான் தான் இதைச் செய்கிறேன் என்ற பாவனையை விட்டு விட வேண்டும் என்றே அர்த்தம். இந்தச் செயல்களைச் செய்வதற்காக வந்திருக்கும் உடல் அவற்றைச் செய்தே ஆக வேண்டும். அந்தச் செயல்களைச் செய்யாமல் விடுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அவற்றை ஒருவர் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி, செய்தே ஆக வேண்டும்” என்று பதில் அளித்தார்.
பொருள் பொதிந்த இந்த ச்ம்பாஷணையில் தான் எத்தனை இரகசியங்களை நம்மால் உணர முடிகிறது, கற்க முடிகிறது!
எப்படி வாழ்க்கையில் வாழ வேண்டும், எடுத்த உடலை நன்கு பயன்படுத்தி எப்படி மறைய வேண்டும் என்பதை அழகாக சில சொற்களால் விளக்கி விடுகிறார் பகவான்.
எடுத்த பிறவிக்கு அணி அடுத்த பிறவி அடையாமல் இருப்பதே தான் என்றால் எடுத்த பிறவியில் எல்லா நல்ல காரியங்களையும் பலனை எதிர்பாராமல் செய் என்பதே பகவானின் அருளுரை!
***
Source : Day by Day Bhagavan by Sri A.Devaraja mudaliyar