
Written by London Swaminathan
Date: 16 May 2017
Time uploaded in London: 17-58
Post No. 3914
Pictures are taken from various sources such as Face book, google and Wikipedia; thanks.
contact: swami_48@yahoo.com
தம்மபதம் என்பது புத்தமதத்தினரின் வேதப் புத்தகம்
திருக்குறள் என்பது தமிழர்களின் வேதப் புத்தகம்
பசிப்பிணி என்னும் பாவி
ஆற்றுவார் ஆற்றல் பசி ஆற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின் (குறள் 225)
பசியைப் பொறுத்துக் கொள்வது தவசிகளின் வலிமை; ஆனால் அவர்களுக்கு உணவு கொடுக்கும் இல்லறத்தான் வலிமை அதைவிடப் பெரியது
அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி (226)
நல்ல குணங்களை மறக்கச்செய்யும் பசியைத் தீர்ப்பது பெரிய புண்ணியம்; அதாவது பிற்காலத்துக்குச் சேர்த்துவைக்கும் வங்கிக் கணக்கு போன்றது
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்கணவர் (228)
செல்வத்தைச் சேர்த்துவைத்து பிறருக்கும் கொடுக்காமல், தாமும் அனுபவிக்காமல் இருப்பவர்களுக்கு, தானம் செய்வதிலுள்ள இன்பம் என்ன என்றே தெரியாது.
தம்மபதத்தில் புத்தர் சொல்லுவார்:
உண்மையே பேசு
கோபப் படாதே
கேட்பவருக்கு உன்னிடம் உள்ளதைக் கொடு
இந்த மூன்றும் உன்னைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்லும் (தம்ம.224)
xxxx

வாய்மை
உள்ளதால் பொய்யாதொழுகின் உலகத்தார்
உள்ளத்துளெல்லாம் உளன் (குறள் 294)
ஒருவன் மனத்தாலும் பொய் சொல்ல நினைக்காமல் இருந்தால் அவன் உலக மக்கள் எல்லோருடைய உள்ளத்திலும் இருப்பான்.
புத்தர் சொல்கிறார்:
நல்ல குணம் உள்ளவனாக இருந்து, யார் அறவழியைப் பின்பற்றுகிறானோ, யார் உண்மை பேசுகிறானோ, செய்ய வேண்டிய கடமைகளைச் செய்கிறானோ அவனை உலக மக்கள் அனைவரும் விரும்புவர் (தம்ம. 217)
xxx
பிறன் மனை நோக்கா பேராண்மை
பகை பாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண் ( 146)
பொருள்:
பிறருடைய மனைவியை விரும்பி நெறி தவறி நடப்பவனிடமிருந்து பகை, பாவம், அச்சம், பழிச்சொல் என்ற நான்கும் எப்போதும் நீங்காது.
புத்தரும் இதையே மொழிகிறார்:
மற்றவனுடைய மனைவியை அபகரிப்பவனுக்கு நான்கு விஷயங்கள் நடக்கும்:-
அவன் மதிப்பையும் மரியாதையையும் இழப்பான்;
அவன் மன சஞ்சலத்துன் வாழ்வான்;
எல்லோரும் அவனைத் தூற்றுவர்;
அவன் நரகத்தில் வீழ்வான் (தம்மபதம்-309)
xxx

ஆசையே துன்பத்திற்குக் காரணம்
இன்பம் இடையறாதீண்டும் அவாவென்னும்
துன்பத்துள் துன்பம் கெடின் (குறள் 369)
ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே
பேரா இயற்கை தரும் (370)
பொருள்
ஒருவன் ஆசையெனும் துன்பத்தைக் கைவிட்டால் அவனுக்கு இன்பம் வந்து குவியும்.
ஆசையைப் பூர்த்தி செய்ய முடியாது அதனை விடக் கற்றுக்கொண்
டால், அழியாத இன்பத்தைப் பெறலாம்.
ஆசை போனால், இன்பம் வரும்; தங்க நாணய மழையே பெய்தாலும் ஆசை அடங்காது. இன்பத்தின் எல்லையில் துன்பம் நிற்கிறது. கடவுள் கொடுக்கும் இன்பங்களை ஞானியானவன் நாட மாட்டான் (தம்ம-187)
கருமிகள் சுவர்க்கத்துக்குள் புக முடியாது; முட்டாள்கள் தானத்தைப் புகழ மாட்டார்கள்; புத்திசாலிகளே தானம் செய்து, அதன் மூலம் இன்பம் அடைவர் (தம்ம.177)
–சுபம்–