
Written by S.NAGARAJAN
Date: 26 NOVEMBER 2017
Time uploaded in London- 6-27 am
Post No. 4433
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
புத்தபிரான் போதனை
ப்ரக்ருதியின் ஆசையும் புத்தரின் கேள்விகளும்!
ச.நாகராஜன்

1
புத்த பிரானின் சீடரான ஆனந்தரின் வாழ்க்கை சுவாரஸ்யமான ஒன்று. ஏராளமான சம்பவங்களைக் கொண்டுள்ள அவரது வாழ்க்கையில், ஒவ்வொரு சம்பவமும் ஒரு பெரிய உண்மையை விளக்கும். அத்துடன் புத்தரின் அவதார மஹிமையையும் அருளையும் கூடவே விளக்கும்.
2
ஒரு நாள் ஆனந்தர் தன் உணவை முடித்துக் கொண்ட பின்னர் நீர் அருந்துவதற்காக அருகிலிருந்த ஒரு கிணற்றுக்குச் சென்றார். அங்கு ஒரு இளம் பெண் நீர் இறைத்துக் கொண்டிருந்தாள். அவளிடம் சென்ற ஆனந்தர், “சகோதரியே! கொஞ்சம் நீர் தா” என்றார்.
அவள் ஜாதியில் தாழ்ந்த ஜாதிப் பெண். தயங்கினாள்.அவள் பெயர் ப்ரக்ருதி.
“பூஜ்ய ஆனந்தரே! நான் ஒரு மாதங்கப் பெண்” என்று தன் ஜாதியைச் சுட்டிக் காட்டினாள்.
“ நான் உன் ஜாதி என்ன என்று கேட்கவில்லை. அருந்துவதற்கு நீர் தான் கேட்டேன்” என்றார் ஆனந்தர்.

பிறகு அவள் நீரைத் தந்தாள். அதை அருந்தி விட்டு ஆனந்தர் சந்தோஷமாகத் தன் வழியே சென்றார்.
ப்ரக்ருதிக்கு ஒரே மகிழ்ச்சி. பலவித கற்பனையில் அவள் ஈடுபடலானாள்.ஆனந்தர் ஏன் தன்னிடம் வந்து நீர் கேட்க வேண்டும்.
அவள் ஆனந்தரையே தனது கணவனாக நினைத்துக் கொண்டாள்.
அவளது போக்கைக் கண்ட அவளது தாய் அவளது நிலையை நன்கு புரிந்து கொண்டாள்.
அவள் மாயாஜாலக் கலையில் வல்லவள்.
தன் மகளுக்கு ஆனந்தரை மணமுடித்து வைப்பது என்ற தீர்மானத்திற்கு வந்த அவள் வசிய ஜாலத்தை ஆனந்தர் மீது ஏவி விட்டாள்.
ஆனந்தர் எப்படியும் தன் குகைக்கு வந்தே ஆக வேண்டும் என்பது அவளது தீர்மானம்.
ஆனந்தர் அப்போது உயர்நிலையான அர்ஹத்தாக ஆகியிருக்கவில்லை.
அவர் வசிய ஜாலத்தால் நிலை கொள்ளாமல் தவித்தார். ப்ரக்ருதியைப் பார்க்க வேண்டும் என்ற நினைவு இடைவிடாமல் வரவே என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தார்.

கடைசியில் புத்த பிரானை மனமுருக வேண்டிப் பிரார்த்தனை செய்தார்.
புத்தர் நடந்தது அனைத்தையும் உணர்ந்து கொண்டார்.
ப்ரக்ருதியின் தாயார் செய்த வசிய ஜாலத்தை முறியடிக்கும் விதமாகத் தன் அருளை ஆனந்தர் மீது பொழிந்தார்.
ப்ரக்ருதியின் தாயார் தான் தோற்கடிக்கப்பட்டதை உணர்ந்தாள்.
தன் மகளிடம் நடந்ததை அப்படியே கூறினாள்.
ஆனால் ப்ரக்ருதியோ ஆனந்தரின் நினைவை விடவில்லை.
ஆனந்தர் பிக்ஷை எடுக்கப் போகும் போதெல்லாம் முன்னே வந்து நிற்பாள்.
ஒருநாள் ஆனந்தர் அவளிடம், “ உன் மேல் எனக்கு இரக்கம் தான் வருகிறது. நீ நன்றாக இருக்க வேண்டும். என்னை விட்டு விடு” என்றார்.
ப்ரக்ருதி யோசித்தாள்.
புத்த பிரானிடமே சென்று விடலாம் என்று நினைத்து அவரிடம் சென்று முறையிட்டாள்.
புத்த பிரானுக்கு அவள் மீது கருணை பொங்கியது.
அவளை நோக்கி வினவலானார்:
“ப்ரக்ருதி! நீ எனது சீடனை மணந்து கொள்கிறாயா?”
“ஆமாம், பூஜ்யரே”
“எனது சீடனை மணந்து கொண்டால் அவன் செல்லுமிடமெல்லாம் நீயும் செல்ல வேண்டியிருக்குமே, அதற்குத் தயாரா?”
“தயார் தான், பூஜ்யரே”
“எனது சீடன் துவராடையை அணிந்து கொண்டிருப்பது போல அதே ஆடையைத் தான் நீ அணிய வேண்டியிருக்கும். அதற்குச் சித்தமா?”
“சித்தம் தான், பூஜ்யரே”
“என் சீடன் மரத்தடியே கூரையாக நினைத்து மரத்தடியில் உறங்குவது வழக்கம். அது போல உன்னால் உறங்க முடியுமா?”
“உறங்க முடியும், பூஜ்யரே”

கேள்விகள் வர வர, ப்ரக்ருதியின் மனம் உயர்நிலைக்குச் செல்ல ஆரம்பித்தது.
புத்தரின் கேள்விகள் அவளை ஒரு பெரிய உயரிய நிலைக்குக் கொண்டு செல்லவே அவள், அவர் தாள்களில் பணிந்து தனக்கு த்ரி ரத்னமே தேவை என்ற தனது முடிவைச் சொன்னாள்.
அவளைக் கருணையுடன் தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்ட புத்த பிரான் அவளுக்குப் புகலிடத்தை அளித்தார்.
3
ப்ரக்ருதி சிறந்த சிஷ்யையாக மாறினாள். ஜாதியில் உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்பது இல்லை, தனது உபதேசம் அனைவருக்குமானது என்பதை புத்த பிரான் நிரூபித்தார்.
-subham-
nparamasivam1951
/ November 27, 2017நான் அறிந்திராத ஒரு செய்தி. அளித்தமைக்கு நன்றி.