
Date: 25 DECEMBER 2017
Time uploaded in London- 5-06 am
Compiled by S NAGARAJAN
Post No. 4541
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 15
பாடல்கள் 97 முதல் 101
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
அழ.வள்ளியப்பா அவர்களின் பாடல்கள்
பாரதியார்
பாப்பாப் பாட்டைப் பாடித்தந்த
பாரதி யாரைப் போற்றிடுவோம்.
கேட்போம், அவரது வார்த்தைகளை
கேட்ட படியே நடந்திடுவோம்.
“குன்றெனத் தலைநிமிர்” என்றிடுவார்,
“கொடுமை தொலைந்திட வேண்டு“மென்பார்.
“ஒன்றுபட் டாலே வாழ்வு” என்பார்.
“உலகிலே யாவரும் ஒன்று” என்பார்.
“சண்டை சச்சரவை மூட்டிவிடும்
சாதி ஒழிந்திட வேண்டும்” என்பார்.
பண்டைப் பெருமை வளர்ந்திடவே
பற்பல உண்மைகள் கூறிடுவார்.
“பெண்ணுக் குரிமைகள் வேண்டு“மென்பார்.
“பேச்சொடு செய்கையும் வேண்டு“மென்பார்.
கண்ணிற் சிறந்த விடுதலையைக்
கண்டிட வழிதனைக் காட்டிவந்தார்.
தமிழை வளர்த்திடப் பாடுபட்டார்.
தாய்மொழி ஆசையை ஊட்டிவிட்டார்.
அமுதாம் அவரது வார்த்தைகளை
அறிந்து செயலிலே காட்டிடுவோம்.
அழ.வள்ளியப்பா: புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இராயவரத்தில் 1922இல் பிறந்தார். (தோற்றம் 7-11-1922 மறைவு:16-3-1989) நகரத்தார் சமூகத்தைச் சேர்ந்த சிறந்த கவிஞரான இவர், 2000க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான பாடல்களை இயற்றியவர். குழந்தை இலக்கியத்தில் இவரது சாதனை மிகவும் அரிதான ஒன்று. எளிய தமிழ், இனிய சந்தம் கூடிய பாடல்களை குழந்தைகள் இன்றும் விரும்பிப் பாடுகின்றனர்.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
****