
Date: 10 JANUARY 2018
Time uploaded in London- 6-34 am
Compiled by S NAGARAJAN
Post No. 4600
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 25
பாடல்கள் 147 முதல் 152
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
பாரதிதாசன் பாடல்கள்
பாரதியார் பட்டினி உபதேசம்
கேளென்று சொன்னாலும் கேளாத நெஞ்சத்தை
வாளொன்று கொண்டு வருத்தாமல் நீ தம்பி
தந்திரத்தாலே சரிப்படுத்தலாம் கண்டாய்!
வந்த வறுமையிலே செம்மை வரச் செயலாம்.
அந்த விவரம் அறைகின்றேன் நீ கேட்பாய்
முந்தா நாள்நீ உண்ட மொச்சை விதைக் குழம்பு
நேற்றுப் புசிப்பதற்கு நெஞ்சு கசந்திருக்கும்
மாற்றிப் புசிக்க வழிதேடித் தானிருப்பாய்
இன்று முருங்கைக்காய் இட்டுப் பருப்பிட்டு
நன்று குழம்பிட்டு நாலு பிடி சோறுண்டால்
நாளைக்கு கத்தரிக்காய், நாளன்று பீர்க்கங்காய்
வேளைக்கு மாங்காய், விடிந்தால் புடலங்காய்
நித்தம் விதவிதமாக நீ உண்பாய்; ஆனாலும்
அத்தனையும் தெவிட்டும்; ஆசைவிடும் மேற்கொண்டே
அண்டை அயலகத்தில் ஆமைவடை மோர்க்குழம்பு
கண்டால் அதுபோற் கறியுண்ண ஆசைவரும்
ஆமைவடை மோர்க்குழம்புக்கு அப்பாலோ நாகரிகச்
சீமை அவரைக்காய் சேமியாப் பாயாசம்
வீட்டில் பதார்த்த விழா நடத்த ஆசையுண்டு
மூட்டைப் பணம் வேணும் முள்ளங்கிப் பத்தையைப் போல்
இட்டகூழ் இன்றைக்கு நன்றா யிராவிட்டால்
பட்டினியாய்ப் போட்டு விடு; நாளைக்குப் பார்ப்பாய் நீ
இட்டதொரு கூழில் இனிமை கிளம்புவதை,
பட்டினியால் இலாபம் பல.
அலங்காரக்குறும்பு
ஊராரே கேளுங்கள் இந்த ஒரு சேதி
பாரதியார் என் மகனைப் பார்த்துப் பரிகசித்தார்
ஏன் பாரதியாரே, என் மகன் உம் காரியத்தில்
தான் வந்து வீணில் தலையிட்டுக் கொண்டதுண்டா?
இல்லையென்று சொல்கின்றீர் அவ்வாறிருக்கையிலே
தொல்லை தரும் வார்த்தை என் மாமனைச் சொன்னதேன்?
ஏழ்மைக் கிழத்தன்மை நோய்கள் இவற்றையெல்லாம்
ஆழக் குழித்தோண்டி அப்படியே புதைத்துத்
தேசத்தை மேல் நிலையிற் சேர்ப்பதெனும் உங்கள்
ஆசையோ பேராசை! அப்படித்தான் ஆகட்டும்
அச்செயலை நான் ஒன்றும் ஆட்சேபம் பண்ணவில்லை?
கச்சை கட்டி ஆடுங்கள்! கை தட்டிக் கூவுங்கள்!
எங்கள் செயலுண்டு யாமுண்டு, மற்ற விதம்
உங்களிடம் யாரையா ஓடிவந்தார்? சொல்லும்!
‘இளம் பையன் வீதியிலே சொன்னான் எனில், நீர்
முதுமையில் மணி முதுமையில் மணி என்றே
எதிர் வந்து சொன்னீரே! எல்லாரும் கேட்டுக்
குலுங்க நகைத்தாரே ஐயா குறும்பில்
அலங்காரம் சேர்த்தீரோ அங்கு?
குறிப்பு : பையனின் தந்தை, பாரதியாரிடம் பேசியதாகக் கூறியது கற்பனை.
கவிஞரைப் பற்றிய குறிப்பு ஏற்கனவே வெளியாகியுள்ளது.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
***