
Date: 19 JANUARY 2018
Time uploaded in London- 6-18 am
Compiled by S NAGARAJAN
Post No. 4633
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may not be related to the story. They are only representational.
பாரதி போற்றி ஆயிரம் – 30
பாடல்கள் 169 முதல் 173
கவிதை இயற்றியோர்: பல்வேறு கவிஞர்கள்
தொகுப்பு : ச.நாகராஜன்
கண்ணதாசன் பாடல்கள்
பாரதியைக் கண்டேன் (இறுதிப் பகுதி)
பாரதி :-
ஆற்று வாரிலை தேற்று வாரிலை
அலறி நெஞ்சினை மாற்று வாரிலை
‘காற்றி லேறிஅவ் விண்ணையுஞ் சாடுவான்’
கடல்க டந்த நாடுகள் பலவினும்
தூற்று கின்ற உமியெனப் பறப்பதும்
சொந்த நாட்டின் அரசி லிருப்பவர்
சோற்றி லான பிண்டங்க ளாயவர்
துயரை நீக்க வழியிலா திருப்பதும்
கண்டு கண்டு வேகிறேன்! தம்பி!இஅக்
காத கர்தமை நம்பி என் பிள்ளைகள்
துண்டு துண்டாய் வீழ்கிறார் பாரடா!
சூழி லங்கை நாட்டினைப் பாரடா!
அண்டை யுள்ள நாட்டினில் சாகிறான்!
அண்ண னோவெறும் மாடுபோல் நிற்கிறான்!
கண்ட துண்டோ எங்கணும், இத்தகு
கைக ளற்ற கோழையர் குழுவினை?
ஆங்கி லர்க்கு வேறொரு நாட்டினில்
அவதி நேர்ந்ததென் றறிந்த வேளையில்
வீங்கு தோளுடன் ஆங்கில நாட்டினர்
வேலெ டுத்துப் பாய்வரே! தம்பி நீ
ஓங்கி நின்ற தமிழரின் பிள்ளையாய்
உடலெடுத்தும் என்னடா புண்ணியம்?
பாங்கி லாதவன் பகுத்தறி வற்றவன்
பைந்த மிழ்த்திரு நாட்டினை ஆள்கிறான்!
எண்ண எண்ணத் துடிக்கிற தேயடா!
எந்த நாட்டினில் இந்த அநீதியை
மண்ணில் வீழ்ந்த மழையெனப் போற்றுவர்!
மடையர்! சீச்சீ! தமிழ ராஇவர்!
புண்ணை உண்டு புன்பசி ஆற்றிடும்
புல்ல ரென்று சொல்வதே மெய்ப்பொருள்!
‘கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கி’டும்
கல்வி யற்றவர் தாயகம் தென்னகம்!
(வேறு)
பாரதி உரைத்த இந்தப்
பாடலைக் கேட்டேன்! நெஞ்சின்
வேரதிர்ந் ததடா! எங்கள்
வியன் தமிழ் நாடே உன்னைப்
‘பாரத’ப் பூசை செய்யும்
பாவிகள் கையி னின்று
கூறுபோட் டெடுத்தா லன்றிக்
குறையற வழியே இல்லை!
(இந்தக் கவிதை முற்றும்)
குறிப்பு: இந்தக் கவிதையில் வரும் கவிஞரின் கருத்துக்கள் பல அவரால் பின்னர் மாற்றிக் கொள்ளப்பட்டன!
கவிஞர் கண்ணதாசன்: கவியரசு கண்ணதாசன் 5000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களையும், 5000க்கும் மேற்பட்ட இதர பாடல்களையும் புனைந்தவர். தமிழ்நாட்டில் சிறுகூடல்பட்டியில் பிறந்தார். தோற்றம்: 24-6-1927 மறைவு: 17-10-1981. இதழ் ஆசிரியர். பல காவியங்களைப் புனைந்தவர். நாவல் ஆசிரியர். பல சிறந்த நூல்களை எழுதியவர். பல விருதுகளை வென்றவர்.சிறந்த பேச்சாளர்.
குறிப்பு : இந்தப் பகுதிக்கு பாரதி பற்றி எழுதப்பட்ட பாடல்களை ஸ்கேன் செய்தோ, போட்டோ எடுத்தோ அனுப்பி உதவலாம். கவிஞரின் பெயர், அவரைப் பற்றிய 50 வார்த்தைகளுக்கு மிகாமல் உள்ள குறிப்பு, பாடல் வெளியிடப்பட்ட இதழ் அல்லது நூல் பற்றிய குறிப்பு ஆகியவற்றையும் அனுப்ப வேண்டுகிறோம்.
***