
Date: 19 FEBRUARY 2018
Time uploaded in London- 5-49 am
WRITTEN by S NAGARAJAN
Post No. 4761
PICTURES ARE TAKEN from various sources. PICTURES MAY NOT BE RELATED TO THE ARTICLE; THEY ARE ONLY REPRESENTATIONAL.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU.
ஆல் இந்தியா ரேடியோ சென்னை வானொலி நிலையம் 11-12-2017லிருந்து 20-12-2017 முடிய காலையில் சுற்றுப்புறச் சூழ்நிலை சிந்தனைகள் பகுதியில் ஒலிபரப்பிய உரைகளில் ஏழாவது உரை
- கால்களை இழந்தும் காட்டு வளம் காப்பவர் ச.நாகராஜன்
புதைபடிமங்கள் மூலம் கால நிர்ணயம் செய்த ஆராய்ச்சியாளர் ரிச்சர்ட் லீகி (Richard Leakey), எந்த நிலையிலும் மனம் தளரக் கூடாது என்பதை நிரூபித்து, அனைவருக்கும் உத்வேகம் ஊட்டும் வாழ்க்கை வரலாற்றைக் கொண்டவர். இப்போது அவருக்கு வயது 73.
ஆப்பிரிக்காவில் பிறந்த லீகி பிரமாதமான கல்வி அறிவைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவரது நுணுகிய ஆய்வுத் திறனும் அர்ப்பணிப்பு மனோபாவமும் அவர் பெயரை ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு இல்லமும் கொண்டாடும் பெயராக ஆக்கியது.
கோபி ஃபோரா என்ற இடத்தில் அவர் தனது ஆய்வுகளை ஆரம்பித்தார். இந்த ஆய்வு 30 லட்சம் வருடங்களுக்கு முன்னர் இருந்த புதை படிமங்களைக் கண்டுபிடிக்க இவருக்கு உதவியது. பழங்காலத்திய 400 எலும்புகளை இவர் சேகரித்தார். இதன் மூலம் மனித குல வரலாற்றைப் பற்றிய முக்கிய தகவல்கள் கிடைத்தன.
1974ஆம் ஆண்டு நேஷனல் ம்யூஸியம்ஸ் ஆஃப் கென்யாவின் டைரக்டராக அவர் நியமிக்கப்பட்டார்.
ஆப்பிரிக்காவில் தந்தத்திற்காக யானைகளைச் சுட்டுக் கொல்லும் நபர்கள் அதிகரிக்கவே யானைகளின் எண்ணிக்கை பாதியாக அதாவது ஆறு லட்சமாகக் குறைநதது.
‘கொல்ல வருபவரைக் கண்டவுடன் சுடு’ என்ற கடுமையான ஆணையைப் பிறப்பித்து யானைகளைக் காத்தார் லீகி.
1989இல் கென்யாவின் ஜனாதிபதி டேனியல் அராப் மொய் இவரை கென்யா வைல்ட்லைப் சர்வீஸின் தலைவராக ஆக்கினார்.
இந்தப் பதவியை அவர் ஏற்றுக் கொண்டது அனைவருக்கும் ஆச்சரியத்தைத் தந்தது.
ஏனெனில் அவருக்கு சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தது.
இந்த உடல் உபாதை எல்லாம் லீகியை ஒன்றும் செய்யவில்லை. சரியாக காலை 4 மணிக்கு எழுந்து தன் ஆய்வுப் பணியை ஆரம்பிப்பார். தனது விமானத்தைத் தானே ஓட்டிச் செல்வார்.
காட்டு வளத்தைச் சுரண்டுவதில் இருந்த ஊழலை அவர் ஒழித்துக் கட்டினார். வனத்துறை ஊழலில் ஈடுபட்டிருந்த சுமார் 1700 பேர்களைத் தைரியமாக அவர் களையெடுத்தார்.
1993ஆம் ஆண்டு ஒரு விமானத்தை லீகி ஓட்டுகையில் அது கீழே விழுந்து விபத்திற்குள்ளானது. அதில் அவர் கால்கள் இரண்டும் நசுங்கிப் போயின. இரண்டும் அறுவைச் சிகிச்சையில் அகற்றப்பட்டன.
அவருக்கு செயற்கை அவயவங்கள் பொருத்தப்பட்டன. மீண்டும் செயலாற்றலுடன் உழைக்க ஆரம்பித்தார்.
2013இல் அவருக்கு ஐஸக் அஸிமாவ் விஞ்ஞான விருது வழங்கப்பட்டது.
இன்று உலகில் வன வளத்தையும் வன விலங்குகளையும் காக்க வேண்டும் என்று மிக்க ஆர்வத்துடன் செயல்படும் அனைவரும் ரிச்சர்ட் லீகியை உத்வேகமூட்டும் முன் மாதிரியாகக் கொண்டு இயங்குகின்றனர்.
இதுவே அவரது வாழ்க்கையில் அவருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்!
***