
WRITTEN by London Swaminathan
Date: 16 May 2018
Time uploaded in London – 7-37 am (British Summer Time)
Post No. 5016
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
WARNING: PLEASE SHARE MY ARTICLES; BUT DON’T SHARE IT WITHOUT AUTHOR’S NAME AND THE BLOG NAME. BE HONEST; OTHERS WILL BE HONEST WITH YOU
‘நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்’ என்பர் சான்றோர்கள். யாம் பெற்ற துன்பம் பெறுக இவ் வையகம் என்பர் சிறியோர்கள். இதை விளக்க இதோ இரண்டு கதைகள். தமிழ் வேதம் தந்த வள்ளுவப் பெருமானும் பத்து குறள்களில் சிற்றினம் சேராமை நன்று என்று விளக்குகிறார்.
நல்லினத்தி னூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல் -குறள் 460
நல்லவர்களைத் துணையாகக் கொள்வதைவிடச் சிறந்தது உலகில் வேறு எதுவும் இல்லை. அதுபோல தீயவர்களைத் துணையாகக் கொள்வதைவிடத் தீங்கு எதுவும் இல்லை.
முதல் கதை

ஒரு ஊரில் சில வியாபாரிகள் இருந்தனர்; ஒருவருக்கொருவர் கில்லாடி; உண்மை என்பது வாயில் தப்பித் தவறியும் வராது. ஒரு நாள் அனைவரும் சந்தைக்குச் செல்லும் முன்னர், ஒரு பிள்ளையார் கோவிலுக்குச் சென்றனர். ஒரு வணிகனுக்குப் பேராசை. பிள்ளையார் தொப்புளில் காசு வைக்கும் பழக்கம் சில பக்தர்களுக்கு உண்டு என்பதை நினைத்து அங்கிருந்த பெரிய பிள்ளையார் சிலையின் தொப்புள் ஓட்டைக்குள் விரலை விட்டார். அங்கு ஒரு தேள் இருந்தது. அது சடக்கென்று அவர் விரலில் கொட்டியது. கடுமையான வலி. திருடனுக்குத் தேள் கொட்டினால் சொல்ல முடியுமா? பேசாமல் மூக்கின் அருகில் விரலைக் கொண்டு சென்று புன்னகைத்தார். எல்லோரும் என்ன என்ன? என்று ஆவலுடன் வினவினர்.
அந்த வணிகர் சொன்னார்:அடடா! என்ன வாசனை! என்ன வாசனை! கஸ்தூரி வாசனை, கோரோசனை வாசனை கமக்குது, கமக்குது என்றார்.
உடனே ஒருவர் பின் ஒருவராக வரிசையில் நின்று ஓட்டைக்குள் கையை விட்டனர். ஒவ்வொருவரையும் தேள் கொட்டியது. எல்லோரும் கஸ்தூரி வாசனை கமக்குது கமக்குது என்று ஒருவரை ஒருவர் ஏமாற்றிக் கொண்டு தன்னைதானே ஏமாற்றிக்கொண்டனர்.
XXXXX

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும் – குறள் 451
பொருள்
கீழ் மக்களைக் கண்டு அஞ்சி விலகிப் போவார்கள் பெரியோர்; அற்பர்கள், அவர்களையே விரும்பி ஏற்றுக் கொள்வர்.
இரண்டாவது கதை
ஒரு ஊரில் வடை சுட்டு விற்கும் வியாபாரி அடுத்த ஊரில் வாரச் சந்தை கூடும் தினத்தன்று ஒரு கூடை நிறைய வடைகளை எடுத்துச் சென்றார்.
அவர் பாதி தூரம் செல்லும்போது அவரை ஒரு ரவுடிகள் கூட்டம் சூழ்ந்து கொண்டது.
ஏய்! கூடையில் என்ன? என்று கேட்டது.
இவர் கூடை நிறைய வடை என்றவுடன் கும்பலில் இருந்த ஒவ்வொரு ரவுடியும் ஆளுக்கு இரண்டு மூன்று தின்றுவிட்டு ஏப்பம் விட்டனர். காசு என்று கேட்டவுடன், முதுகிலும் கன்னத்திலும் நாலு அடி போட்டு விரட்டி விட்டனர். அவர் அலறிப் புடைத்துக் கொண்டு சொந்த கிராமத்துக்கு விரைந்து வந்தார்.
அவர் இவ்வளவு சீக்கிரம் திரும்பி வந்ததைப் பார்த்த அடுத்த வீட்டு வியாபாரி என்ன வடை எல்லாம் விற்றுத் தீர்ந்து விட்டதா? நல்ல விற்பனையோ? நல்ல கூட்டமோ? என்று வினவினார். அவர் அப்பம் சுட்டு விற்கும் வணிகர். அவர் கையில் கூடை நிறைய அப்பம் வைத்துக் கொண்டு இப்படி ஆவலுடன் கேட்டார்.
அடிபட்ட வியாபாரி சொன்னார்: சீக்கிரம் போங்கள். சந்தை வரை போகத் தேவையே இல்லை. பாதி தூரம் போகும்போதே கூடை காலி ஆகிவிடும் என்றார்.
ஆப்பக்கூடை வியாபாரி ஆசையோடு வேக நடை போட்டார். சந்தைக்குப் போகும் முன்னரே பாதி வழியில் அவரை ரவுடிகளின் கூட்டம் சுற்றி வளைத்தது. கூடையில் இருந்ததைத் தின்று முடித்தவுடன், வியாபாரி காசு கேட்டார். அவரையும் நாலு சாத்தி சாத்தி விரட்டி விட்டனர்.
கிராமத்துக்குத் திரும்பியவுடன், ஏற்கனவே அடிபட்ட வியாபாரி,
‘என்ன பிரமாதமான விற்பனையோ? இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டாயே?’ என்றார்.
ஆமாம் ஆமாம் இன்று சேல்ஸ் (sales) கன ஜோர் என்று சொல்லிக் கொண்டே நடையைக் கட்டினார்.
இதனால்தான் வள்ளுவனும் சிற்றினம் சேராமை என்று பத்து பாடல்களைப் பாடிவிட்டும் போனார்.
–சுபம்—