
Plastic Pollution in Delhi, Deccan Herald picture
Date: 10 August 2018
Written by S Nagarajan
Time uploaded in London – 6-19 AM (British Summer Time)
Post No. 5305
Pictures shown here are taken from various sources such as Facebook friends, Wikipedia, Books, Google and newspapers; thanks. Pictures may be subject to copyright laws.
சென்னை வானொலி நிலையம் 21-7-18 முதல் 31-7-18 முடிய தினமும் காலை ஒலி பரப்பிய சுற்றுப்புறச் சூழல் சிந்தனைகளில் ஆறாவது உரை
சுற்றுப்புறம் காக்க தனிமனிதனின் வழிமுறைகள்! – 2
அலுவலகத்திலும் பொதுவாக நடக்கும் விருந்துகளிலும் பிளாஸ்டிக் கப்களை உபயோகிக்காமல் தங்களுக்கென்று தனியாக செராமிக் கப் அல்லது டம்ளரைக் கொண்டு சென்று பயன்படுத்தலாம். தூக்கி எறியப்படும் காப்பி கப்களில் தேனீக்கள் அமர்ந்து இறக்கும் பரிதாப நிலை இதனால் தவிர்க்கப்படும் என்பது கூடுதல் நன்மையாகும்.
புதிய பொருள்களை கடையில் வாங்கும்போது அவற்றை பாக் செய்யப்படும் பொருளைக் கவனித்து வாங்க வேண்டும். மறு சுழற்சிக்கு உள்ளாகும் பொருளால் பேக்கிங் இருப்பது சாலச் சிறந்தது. பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக்கினால் ஆன பேக்கிங் பொருள்களை மாற்றச் சொல்லி கடைக்காரருக்கும் அறிவுரை வழங்கலாம். வீட்டிலிருந்து துணிப்பைகளைக் கொண்டு செல்வதை வழக்கமாகக் கொண்டால் ஏராளமான அளவு பிளாஸ்டிக் பைகளின் பயன்பாடு தவிர்க்கப்படும்; செலவும் குறையும்.
அலுவலகத்திற்கோ அல்லது வெளியிலோ செல்லும் போது மறுசுழற்சிக்கு உள்ளாகும் கண்டெய்னரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கண்டெய்னரின் பயன்பாட்டை வீட்டில் உள்ள குடும்பத்தினர் அனைவரும் தவிர்க்கும்படி ஆலோசனை கூறி அதை நடைமுறைப் படுத்த வேண்டும்.
பிளாஸ்டிக் ஃபோர்க்குகள், பிளாஸ்டிக் ஸ்பூன்கள், பிளாஸ்டிக் பெட்டிகள் ஆகியவற்றை உணவிற்காக எடுத்துச் செல்வதைத் தவிர்த்தால் பெருமளவு பிளாஸ்டிக்கை ஒழித்தவராவோம்.
மறு சுழற்சி என்றால் என்ன என்பதை முதலில் குடும்பத்தினருக்கும் பின்னர் நாம் வாழும் சமுதாய அங்கத்தினர்களுக்கும் தெரியப்படுத்தி அதை நம்மால் ஆன அளவு அமுல் படுத்திக் காட்டிச் சிறந்த வழிகாட்டியாக அமையலாம்.
மாதம் தோறும் கட்ட வேண்டிய பில் பணங்களை ஆன்லைன் மூலம் செலுத்தி கம்பெனிகளிடம் பேப்பரில் பிரிண்ட் செய்யப்படும் பில்களை அனுப்ப வேண்டாம் என்று ஆலோசனை கூறினால் ஆயிரக்கணக்கான டன் அளவு பேப்பர் சேமிக்கப்படும். இதனால் காடுகளின் வளம் காக்கப்படும்.
பேப்பர்களில் ஒரு புறம் மட்டுமே எழுதுவதை விட்டு விட்டு இரு புறமும் எழுதுவதால் பேப்பர் செலவு பாதியாகக் குறையும். நமக்குத் தெரியாமலேயே ஏராளமான மரங்களையும் நாம் காத்தவர்கள் ஆவோம்.

Rubbish Pollution in Mumbai, Deccan Herald newspaper picture
பயன்பாட்டிற்கு லாயக்கில்லாத மின்னணுப் பொருள்களை கண்டபடி தூக்கி எறியாமல் அதற்குரிய முறைப்படி அவற்றை அகற்ற வேண்டும். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அவை சிதைந்து போகாது என்ற அடிப்படை அறிவை நாம் கொள்வதோடு மற்றவருக்கும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
நமது பகுதியில் உள்ள மறுசுழற்சி செய்யும் நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு பயனற்ற கம்ப்யூட்டர், எலக்ட்ரானிக் சாதனங்களை அகற்ற வருமாறு அவர்களை வேண்டிக் கொள்ளலாம்.

***