முட்டாள் பார்த்த கீதையின் மறு பக்கம்! (Post no.5845)

Written by S Nagarajan


Date: 28 DECEMBER 2018


GMT Time uploaded in London – 6-45 am


Post No. 5845

Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog.

நாட்டு நடப்பு – கீதை காட்டும் பாதை

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை! முட்டாள் பார்த்த கீதையின் மறு பக்கம்!

ச.நாகராஜன்

கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை?

ஆற்றில் வெள்ளம் அடித்துக் கொண்டு போனாலும் நாய் நக்கித் தான் குடிக்கும்;

நாயாவது நல்ல தண்ணீரைச் சிறிதாவது வெள்ளத்திலிருந்து எடுத்து நக்கிப் பருகுகிறது!

ஆனால் கழுதை! அதற்கு என்ன தெரியும்? கற்பூர வாசனை தெரியாது; ‘காள் காள்’ என்று தான் கத்தும்.

அதே போலத் தான் முதல் பக்கமே பார்க்கத் தெரியாத முட்டாள் கீதையின் மறுபக்கம் பார்த்தானாம்!

சிரிப்புத் தான் வருகிறது. குருடனுக்கு முதல் பக்கமாக இருந்தால் என்ன, மறுபக்கமாக இருந்தால் என்ன, ஒன்றும் தெரியாது.

ஆனால் இந்த முட்டாளைக் குறை கூறி என்ன பிரயோஜனம்? இவன் வந்த வழி அப்படி!

இவனது தலைவன் உலகம் வணங்கும் லோக மாதா சீதா தேவியைப் பார்த்த பார்வை எப்படித் தெரியுமா?

மற்ற கோடானு கோடி பேர்கள் அன்னையின் பாதங்கள் இரண்டை மட்டும் பார்த்து வணங்குவோம்.

ஆனால் தலைவனோ கழுத்துக்குக் கீழேயும், இடுப்புக்குக் கீழேயும் பார்த்தான்.

கோணல் பார்வை! ராக்ஷஸ பிறப்பு! வம்ச தோஷம்!

அதே போல கீதையின் மறுபக்கத்தை இவன் பார்த்து விட்டானாம்!

சரி, போகட்டும் விடுங்கள். குருடன் ராஜமுழி முழித்தால் தான் நமக்கென்ன?

அவன் யார் என்கிறீர்களா? 1967க்குப் பின் தமிழக நூலகங்களில் படிக்குச் சரி பாதி அதாவது ஐம்பது சதவிகிதம் குப்பை நூல்கள் பெருகி உள்ளன அல்லவா,

அதில் ஒன்று தான் இந்தக் குருடன் பார்வையில் விளைந்த புத்தகம்.

அவனுக்கு என் மூலம் விளம்பரம் வேறு ஒரு கேடா?

நல்லதைப் பற்றிப் பேசுவோம்.

*



கீதையை நன்கு புரிந்து கொள்ள விரும்பினாள் ஒரு மஹாராணி.

எத்தனை ஸ்லோகங்கள் என்று கீதையில் பாண்டித்யமுள்ள ஒரு பண்டிதரை வரவழைத்துக் கேட்டாள்.

எழுநூறு ஸ்லோகங்கள் என்றார் அவர்.

தனாதிகாரியை வரவழைத்த மஹாராணி, “700

பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள். கீதையின் ஒவ்வொரு ஸ்லோகத்தின் அர்த்தத்தையும் நம் பண்டிதர் சொல்லச் சொல்ல அவருக்கு ஒரு பொற்காசு தர வேண்டும். ஆக எழுநூறு ஸ்லோகங்களுக்கு எழுநூறு பொற்காசுகளைத் தயார் செய்யுங்கள்” என்றார்.

பண்டிதருக்கு மஹா ஆனந்தம். 700 பொற்காசுகளா?

வீடு சென்ற அவர் ஏராளமான நூல்களைப் படித்து குறிப்புகள் எடுத்துக் கொண்டார்.

மஹாராணிக்கு விளக்க வேண்டுமே!

மறுநாள் சபை ஆரம்பமானது.

700 பொற்காசுகள் குவியலாக இருக்க பண்டிதரின் கண்கள் அதை நோட்டம் விட்டன.

‘கடவுளே! மஹாராணிக்கு கீதையைப் புரிந்து கொள்ள அருள் செய்வாயாக! கண்ணபிரானே நீயே துணை.’

கம்பீரமாக முதல் ஸ்லோகத்தை ஆரம்பித்தார்.

‘தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே’

மஹாராணிக்குக் கண்களில் நீர் வழிந்தது.

“நிறுத்துங்கள்!” என்று பண்டிதரை நோக்கிக் கூவினாள்.

பண்டிதர் திடுக்கிட்டார்.

மஹாராணி மந்திரியை அழைத்துப் பல்லக்கைத் தயார் செய்யுங்கள், கிளம்பலாம் என்றார்.

‘அட 700 காசுகளும் போச்சே’ என்று பண்டிதர் வருந்தினார்.

அவருக்கு ஒன்றும் புரியவில்லை. “ராணியாரே! இன்னும் ஆரம்பிக்கக் கூட இல்லையே” என்று இழுத்தார்.

“அட என்ன அற்புதமான விளக்கம்; நான் நன்கு புரிந்து கொண்டு விட்டேன், கீதா தாத்பர்யத்தை. இதோ, இந்தாருங்கள் 700 பொற்காசுகள்; ஒரு கணமும் இனி தாமதிக்க மாட்டேன்; இதோ நீங்கள் கூறியபடியே செய்யப் போகிறேன்.”

மஹாராணி இப்படிச் சொன்னதைக் கேட்டவுடன் அவருக்குத் தலை சுற்றியது.

“நான் என்ன விளக்கினேன்?” அழாக் குறையாக அவர் கேட்டார்.

அது தான் அழகாகச் சொல்லி விட்டீர்களே; கீதா தாத்பர்யத்தை! தர்ம க்ஷேத்ரே குரு க்ஷேத்ரே – அதை எப்படிப் பிரிக்க வேண்டும்? ‘க்ஷேத்ரே க்ஷேத்ரே தர்மம் குரு!’ என்று. க்ஷேத்ரே க்ஷேத்ரே -க்ஷேத்ரம் க்ஷேத்ரமாகச் சென்று அதாவது ஒவ்வொரு திருத்தலமாகச் சென்று- தர்மம் குரு – தர்மத்தைச் செய்- அதாவது தர்மத்தைச் செய்ய வேண்டும். அது தானே கீதை காட்டும் பாதை! கீதையின் போதனை! இதோ தர்மம் செய்யக் கிளம்பி விட்டேன்” என்றாள் ராணி.

பண்டிதர் தன் ஆயுளிலும் அறியாத ஒரு பெரிய உபதேசத்தை கால் ஸ்லோகத்தில் ராணி அறிந்து விட்டாரே என்று மகிழ்ந்தார்.

இத்தனை நாள் படித்தும் தமக்கு கீதா போதனை ஏறவில்லையே என்று வருந்தினார்.

‘மஹாராணியாரே! உங்களிடமிருந்து கீதா பாடம் கற்றுக் கொண்டேன். இந்தப் பொற்காசுகளை என் சார்பாக நீங்களே தர்மத்திற்குச் செலவிடுங்கள்; இதோ உலகைத் துறக்கிறேன். என் வழியில் போகிறேன்’  என்று சொல்லி விட்டுத் தவம் புரியச் சென்றார்;பின்னர் பெரும் மஹான் ஆனார்.

*

ஆக அந்த மஹாராணி எங்கே, இந்த முட்டாள் எங்கே!

கீதையின் மறுபக்கம் பார்க்க வேண்டாம்; முதல் பக்கத்தில் முதல் ஸ்லோகத்தின் கால் ஸ்லோகம் பார்த்தாலும் கூட நாடு முழுவதும் தர்மம் பெருகும்; தழைக்கும்!

கீதை காட்டும் பாதையை முழுவதுமாகப் படித்து அறிவோம்; உயர்வோம்!

***

சென்னை கோடம்பாக்கம் கல்லூரியில் சில வருடங்களுக்கு  முன்னர்  நடந்த ஆன்மீக மாநாட்டில் ராமகிருஷ்ண மடத்தைச் சேர்ந்த துறவி ஒருவர் சொன்ன ராணியின் கதைக்கு இங்கு எனது நன்றியைப் பதிவு செய்கிறேன்.

tags –கீதையின் மறு பக்கம்

Leave a comment

3 Comments

  1. tskraghu's avatar

    This is sooooper! Thanks. Never heard of it.

  2. tskraghu's avatar

    Translated here with grateful thanks due to you:

    A Queen Understands Bhagavad Gita!!

  3. Santhanam Nagarajan's avatar

    Santhanam Nagarajan

     /  January 1, 2019

    thanks a tonne to Sri Raghu santhanam nagarajan camp SanFrancisco

Leave a comment