
Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 29 May 2019
British Summer Time uploaded in London – 7-11 am
Post No. 6456
Pictures shown here are taken from various sources including google, Wikipedia, Facebook friends and newspapers. This is a non- commercial blog. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
பாரதி இயல்
மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 59
ரகமி எழுதியுள்ள ஆய்வுத் தொடர் – வீர வாஞ்சி
ரகமி (இயற்பெயர் டி.என்.ரங்கஸ்வாமி) வாஞ்சிநாதனைப் பற்றி இரு தொடர்களை தினமணி கதிரில் எழுதியுள்ளார்.
ஆஷ் கொலை வழக்கு என்ற தொடரைப் பற்றி இந்தத் தொடரில் (கட்டுரை எண் 4364; வெளியான தேதி – 4-11-17) மஹாகவி பாரதியார் பற்றிய நூல்கள் – 42 என்ற கட்டுரையில் பார்த்தோம்.
அவர் வீர வாஞ்சியைப் பற்றி எழுதியுள்ள இந்தத் தொடரில் பாரதியார் பற்றிய அரிய செய்திகள் இடம் பெறுவதால் இந்த நூலை இங்கு பாரதி ஆர்வலர்களுக்குக் குறிப்பிட வேண்டியது அவசியமாகிறது.
இந்தத் தொடர் தினமணி கதிரில் 5-6-1983 இதழில் ஆரம்பிக்கப்பட்டு 30-10-1983 இதழில் முடிக்கப்பட்டுள்ளது.
22 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது இந்தத் தொடர்.
இது புத்தகமாக வெளி வந்துள்ளதா என நிச்சயமாகத் தெரியவில்லை; ஆயின் புத்தகமாக வெளிவரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதை உறுதியாக அறிய முடிகிறது.
ஆஷ் கொலை வழக்கு தொடரில் பாரதியார் பற்றிக் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் இங்கு மீண்டும் இடம் பெறுகின்றன. tamilandvedas.com, swamiindology.blogspot.com
புதுவை தேசீய வீரர்கள் பற்றிய பல விஷயங்களையும் பாரதியாரின் நண்பர்களைப் பற்றியும் நூல் குறிப்பிடுகிறது.
ஆஷ் கொலை வழக்கு நூலில் குறிப்பிடப்பட்டுள்ள போஸ்ட் ஆபீஸ் தகவலை இதிலும் காண்கிறோம்.
அத்தியாயம் 8இல் வரும் தகவல் இது:
“சில நாள் தபாலாபீசுக்கே தபால் கட்டுகள் தாமதமாக வரும். அன்றும் கவி பாரதியாரே தபாலாபீசுக்கு வந்திருப்பார். காலதாமதமாக தபால்கட்டுகள் வந்ததினால் போஸ்ட்மாஸ்டரால் கவி பாரதியார் வந்திருப்பதையும் கவனிக்க முடியாத நிர்ப்பந்தமான வேலை நேரம்.பரிசீலனை செய்ய வேண்டிய தபால்களிலும் தாமதம். இந்த தாமதங்களைக் கவி பாரதியாரால் பொறுத்துக் கொள்ளாமல் முதலில் சாதாரணமாகக் கூப்பிடும் ‘போஸ்ட்மாஸ்டர்’ என்ற விதம் போய் கோபத்தோடு, “என்ன, எம்.கே. ஸ்ரீனிவாசய்யங்காரே!”யென இனிஷியலோடு கணீரென்று குரல் கொடுப்பாராம். இவரது குரலைக் கேட்டு போஸ்ட்மாஸ்டர் திடுக்கிட்டு, ‘மன்னிக்கணும், இன்னிக்கு கட்டு லேட். கொஞ்சம் உள்ளே வந்து உட்காரலாமே. உங்கள் தபால்களைத் தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்’ என்பாராம்.
“என்னய்யா, பரிசோதனை வேண்டியிருக்கு?அவைகளை அப்படியே கொடுத்தாலென்ன.. அதில் என்ன அப்படிப்பட்ட ரகசியத்தைக் கண்டுபிடிக்கப் போகிறீர்கள்?” யென்று பாரதி கேட்பதுண்டு. என்ன சொல்வது? ‘ராஜாங்க உத்தரவாயிற்றே!’ என்று போஸ்ட்மாஸ்டர் கூறும் போது, “சீ,சீ, கேவலம் நாயும் கூட இந்தப் பிழைப்பு பிழைக்குமே!” என்று கத்தி விட்டு வேகமாகத் திரும்பிச் சென்று விடுவாராம் பாரதி.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
பீச்சில் நடந்த ஒரு சம்பவத்தை 15ஆம் அத்தியாயம் விவரிக்கிறது. போஸ்ட்மாஸ்டர் தபால்களைக் கொடுப்பது பற்றிய விஷயம் தான் இதுவும். பாரதியார் உள்ளிட்ட அனைவரும் குழுமியிருந்த போது நடந்தது இது.
அங்கிருந்த வாஞ்சி, அவர் தபாலைத் தாமதிக்காமல் ஒழுங்காகக் கொடுத்தால் தான் நல்லது ; இல்லாவிட்டால் இவரை இந்த ஊரில் தாமசிக்காமல் செய்து விட்டால் போச்சு” என்கிறார்.
மாடசாமியைப் பற்றிய அரிய தகவல்களை 22ஆம் அத்தியாயம் தருகிறது.
அவரை பாரதியார் ஒரு இரவு தன் வீட்டிலேயே தங்கச் சொன்ன தகவலை இதில் காண்கிறோம்.
மொத்தத்தில் வீர வாஞ்சியைப் பற்றி நன்கு ஆராய்ந்து எழுதப்பட்ட நூல் என்பதால் இது சுதந்திரப் போர் பற்றிய – அதில் குறிப்பாக தமிழகம் பற்றிய – ஒரு ஆய்வு நூலாக அமைகிறது.
அதில் பாரதியார் சம்பந்தப்பட்ட செய்திகளை நன்கு ஆதாரபூர்வமாக அறியவும் முடிகிறது.
நூலை எழுதியுள்ள ரகமி பாராட்டுக்குரியவர்; வெளியிட்ட தினமணி கதிர் ஒரு அரிய சேவையைச் செய்திருக்கிறது.
பாரதி ஆர்வலர்கள் படிக்க வேண்டிய நூல் இது.
***tamilandvedas.com, swamiindology.blogspot.com
