


Written by S Nagarajan
swami_48@yahoo.com
Date: 4 AUGUST 2019
British Summer Time uploaded in London –7-16 am
Post No. 6725
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
ஆல் இந்தியா ரேடியோ, சென்னை வானொலி நிலையத்தின் வாயிலாக தினமும் இந்திய நேரம் காலை 6.55 மணிக்குச் சுற்றுப்புறச் சூழல் நிகழ்ச்சியில் 1-8-19 முதல் 10-8-19 முடிய சுற்றுப்புறச் சூழலைக் காப்பது பற்றிய 10 உரைகள் ஒலிபரப்பப்படுகின்றன. இந்த உரைகளை www.allindiaradio.gov.in தளத்தில் தமிழ் ஒலிபரப்பைத் தேர்ந்தெடுத்து நிகழ்நிலையில் கேட்கலாம். 3-8-19 அன்று காலை ஒலிபரப்பட்ட மூன்றாம் உரை இங்கு தரப்படுகிறது.
பசுமைக் கட்டிடம் அமைப்போம்!
இன்று உலகமெங்கும் வெப்பமயமாதல் என்ற ஒரு பெரும் அச்சுறுத்தல் நிலவி வரும் வேளையில் கட்டிடக் கலையில் வரவேற்கத்தக்க ஒரு மா பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது.
Green Bulding எனப்படும் பசுமைக் கட்டிடம் அமைக்கப்பட வேண்டும் என மக்களிடையே பொதுவான கருத்து வலுவாக உருப்பெற்று விட்டது.
இயற்கையான சுற்றுப்புறச் சூழலுக்குக் கேடின்றி மறுசுழற்சிக்கு உள்ளாக்கப்பட்ட பொருள்களைக் கட்டிடம் கட்டப் பயன்படுத்துதல் இன்று ஒரு நல்ல பழக்கமாகி வருகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சி. அத்துடன் Sustainablity எனப்படும் நீடித்துத் தாங்கும் தன்மையுள்ள கட்டிடங்களாகவும் புதிதாக அமைக்கப்படும் கட்டிடங்கள் அமைக்கப்பட வேண்டும் என்பதும் முக்கியமான கருத்தாகும். நவீன தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உயர் தொழிற்பாட்டுக் கட்டிடங்கள் இன்று அமைக்கப்படுகையில் அவற்றில் சூரிய ஆற்றலை பயன்படுத்துவது, சக்தித் திறனைச் சேமிப்பது, Water efficienty எனப்படும் நீர் செயல் திறனை அதிகரிப்பது ஆகியவையும் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
உலகளாவிய அளவில் பெரும் கட்டிடக் கலை நிறுவனங்கள் இந்த ஆராய்ச்சிக்கென ஒரு தனிக் குழுவை அமைத்துச் செயல்படுவதோடு நல்ல ஒரு ஆக்கபூர்வமான கருத்தை முன் வைப்போருக்கு பரிசுகளும் வழங்கி வருகின்றன.
கழிவு நீரை வெளியேற்றப் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துவது, மாசுள்ள புகையை வெளிப்படுத்தும் வாகனங்களைக் கட்டுப்படுத்துவது, இயற்கைச் சூழ்நிலைக்கேற்ப வாழ்விடங்களை அமைப்பது இந்தப் பசுமைத் திட்டத்தில் இடம் பெறும் முக்கிய அம்சங்களாகும்.
கட்டிடத்தை புனருத்தாரணம் செய்வோரும், புதிதாகத் தன்னளவில் கட்டிடம் கட்ட நினைக்கும் மத்திய தர வர்க்கத்தினரும் இந்த நவீன கருத்தின் அடிப்படையை உள்வாங்கிக் கொண்டு அதன் படி தங்கள் இல்லங்களை அமைத்துக் கொண்டால் சுற்றுப்புறச் சூழல் பெரிதும் மேம்படும்.
மரங்கள் வெட்டப்படக் கூடாது, படிம எரிபொருள் எனப்படும் பெட்ரோல் உள்ளிட்டவற்றைத் தேங்க விடக்கூடாது போன்ற மிக முக்கியமான விதிகளைப் பசுமைக் கட்டிடங்களை அமைப்போர் கொண்டுள்ளனர்.
பசுமைக் கட்டிடங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்கள் இன்னும் அதிக அளவில் பரப்பினால் எதிர்கால நகரங்கள் சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாக்கும் நகரங்களாக உருப்பெறும், இல்லையா?!
***
