

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 15 AUGUST 2019
British Summer Time uploaded in London – 6-29 AM
Post No. 6880
Pictures are taken from various sources. ((posted by swamiindology.blogspot.com AND tamilandvedas.com))
சுதந்திரப் போராட்டம் பற்றிய சில ரகசியங்கள்!
ச.நாகராஜன்
இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றி வெளி வராத ரகசியங்கள் ஏராளம் உண்டு. அண்ணல் காந்திஜியின் அறவழி நின்று போராட்டம் நடத்திய உத்தமர்கள் தங்களைப் பற்றி வெளியில் சொன்னதும் இல்லை; அவர்கள் விளம்பரத்தை விரும்பியதுமில்லை.
இந்த நிலையில் எனது தந்தையார் தினமணி பொறுப்பாசிரியர் திரு வெ.சந்தானம் எப்படி சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டார், அவர் எந்த சிறையில் யாருடன் எப்போது சிறைவாசம் அனுபவித்தார் என்பதெல்லாம் குடும்பத்தினரான எங்களுக்கே ஒன்றும் தெரியாது. கேட்டாலும் ஒரு புன்சிரிப்பு தான் பதிலாக வரும்!
சுதந்திர பொன் விழா ஆண்டு வந்தது. டி.வி.எஸ் நிறுவனத்தின் செய்தி ஏடான ஹார்மனியின் ஆசிரியரும் அந்த நிறுவனத்தின் பொது தொடர்பு அதிகாரியுமான திரு பி.வெங்கட் ராமன் என்னைச் சந்தித்து தந்தையாரைப் பற்றிய கட்டுரை வேண்டும் என்று கேட்டார். இத்துடன் மட்டுமல்லாமல் ராஜாஜி,சுப்ரமண்ய சிவா, வைத்யநாத ஐயர் ஆகியோரின் பேரன்மார்கள், சேலம் சி.விஜயராகவாச்சாரியாரின் கொள்ளுப் பேரன், தினமணி ஜோதிடர் திரு ரெங்கநாத ஜோஸ்யரின் பேத்தி ஆகியோரும் டி.வி.எஸ் நிறுவனத்தில் வேலை பார்ப்பதால் அவர்களிடமும் கட்டுரை பெறப் போவதாகச் சொல்லி ஹார்மனியின் இதழ் சுதந்திர தின பொன்விழா ஆண்டின் சிறப்பு மலராக வெளி வரப் போகிறது என்றும் கூறினார்.
இந்தக் கருத்தை முன் வைத்து என் தந்தையாரை அணுகிய போது அவர் மறுப்புக் கூறாமல் தான் சைமன் கமிஷனை எதிர்த்து நடந்த போராட்டத்தில் பங்கு கொண்டதையும் ராஜாஜி, காமராஜர், சங்கு சுப்ரமணியம் உள்ளிட்ட நூற்றுக் கணக்கானோருடன் வேலூர் ஜெயிலில் சிறைவாசம் அனுபவித்ததையும் கூறியதோடு அதைத் தன் கைப்பட எழுதியும் கொடுத்தார்.
சிறப்பு மலர் சிறப்பாக அனைத்து வீரர்கள் பற்றி இதுவரை அறிந்திராத ரகசியமாகவே இருந்த செய்திகளுடன் வந்தது.
1998 ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் வந்தது. மதுரை எல்லிஸ் நகர் மைதானத்தில் கொடி ஏற்றப்பட்டது.
அப்போது எனது தந்தையார் ‘கொடி ஏற்றியாச்சா’ என்று கேட்டார்.
ஆம் என்றவுடன் அவர் ஆவி அமைதியாகப் பிரிந்தது.
சுதந்திரப் போரில் பங்கு கொண்ட சுத்தமான ஒரு வீரரின் முடிவு கற்பனைக்கும் அப்பாற்பட்ட ஒரு வீர முடிவுடன் முடிந்தது.
இப்படி எதிர்கால சந்ததியினருக்கு உத்வேகம் ஊட்டும் நூற்றுக் கணக்கான வீரர்கள் பற்றிய சரிதங்கள் தொகுக்கப்பட வேண்டும். நமக்குச் சுதந்திரம் வாங்கித் தர சொல்லொணா துன்பங்கள் பட்ட அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பதோடு அவர்கள் நினைவையும் காத்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது தானே!
ஹார்மனி ஜூலை-ஆகஸ்ட் 1997 இதழில் வெளிவந்த கட்டுரையை கீழே தந்துள்ளேன்:




–subham–