

WRITTEN BY S NAGARAJAN
swami_48@yahoo.com
Date: 3 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 12-50
Post No. 7049
Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.
கொங்குமண்டல சதகம்
தொண்டைமான் வரலாறு!
ச.நாகராஜன்
கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தென்கரை நாட்டில் மூவனூர் என்று ஒரு ஊர் உள்ளது.அங்கு தொண்டைமான் என்ற விருது பெற்ற கீர்த்திமான் ஒருவர் வாழ்ந்து வந்ததாக வரலாறு கூறுகிறது.
அவரை ‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான்’ என்று கூறிப் புகழ்ந்தும் தெரிய வருகிறது!
ஒரு சமயம் சங்ககிரி துர்க்கத்தில் நவாபைப் பார்க்கப் பலரும் காத்திருந்தனர்.
பல நாட்கள் கழிந்தன. நவாபைக் காணும் வழியே இல்லை.
அங்கு அரசகுமாரன் வளர்த்து வந்த அருமையான செம்மறிக் கடா ஒன்று இருந்தது.
அதைப் பிடித்து அதன் இரு காதுகளையும் அறுத்து விட்டான் காத்திருந்த ஒருவன்.
அவனைப் பிடித்து நவாபின் முன் நிறுத்தினர்.
நவாபிடம் அவன், “ஐயா! தங்களைப் பார்க்க பல நாட்கள் காத்திருந்தேன். ஆனால் காண முடியவில்லை. இப்படிச் செய்தாலாவது தங்களைக் காணும் வாய்ப்பு கிடைக்கும்; குறைகளைச் சொல்லலாம் என்று இப்படிப்பட்ட செயலைச் செய்து விட்டேன்” என்றான்.
நவாப் அவனது தைரியமான யோசனையையும் செய்கையையும் கண்டு வியந்தார்.
‘வளர்கடாவைக் காதறுத்த பஹதூர் தொண்டைமான்’ என்று அவனைக் கூப்பிட்டார்.
அன்று முதல் அவனுக்கு அந்தப் பெயர் வந்தது. ஆனால் அவனது இயற்பெயர் யாருக்கும் தெரியவில்லை. அவனது சந்ததியார் மூலனூர் வட்டத்தில் இன்னும் இருக்கிறார்கள்.
இதே போல கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த கீழ்ப்பூந்துறை நாட்டில் இருந்த உபநாடுகளில் ஒன்றான பருத்தியபள்ளி நாட்டில் ஒரு வாலிபன் தொண்டைமான் என்னும் அரசன் சேனையில் சேர்ந்தான். பகைவன் மேல் போரெடுத்துச் சென்றான். வெற்றியும் பெற்றான்.
அந்தத் தொண்டைமான் அரசன் அவனுக்குத் தன் பெயரையும் மாலையையும் விருதாக அளித்தான்.
அதனால் அன்று முதல் அவன் தொண்டைமான் என்று அழைக்கப்பட்டான்.
மல்லசமுத்திரத்தில் ஸ்ரீ சோழீசர் ஆலயத்துக்கு உரியவர்களாக அவனது சந்ததியார் இருந்து வருகின்றனர். அவர்கள் நவாபிடம் பெரும் அதிகாரமும் செல்வாக்கும் பெற்றிருந்தனர்.
அவர்களுக்குரிய இடங்களுக்குப் போகும்போது ஒரு வெண்கலத் துடும்பு (ஒரு வகையான பறை) ஒருவன் இவர்கள் முன்னே அடித்துச் செல்வான். அது நவாப் கொடுத்தது என்று சொல்லப்படுகிறது.
தொண்டைமான் என்ற பெயரையும் அவர்கள் தொடர்ந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கலியுகம் 4735 ஸ்ரீ முக வருடத்தில் வீழிய குலத்தவரான இவர்களின் மரபினர், மல்லைச் சோழீசர் வருக்கக் கோவை என்னும் பிரபந்தம் கேட்டுள்ளனர்.
இந்த வரலாற்றை கொங்குமண்டல சதகம் தனது 71ஆம் பாடலில் விரித்துரைக்கிறது.
பாடல் :
பண்டைய நாளிலொன் னார்பஞ்சு போலப் பறந்தகலத்
திண்டிநல் நாட்டிய காளையை நோக்கியச் செம்பியனுந்
தொண்டைமா னென்றுந் தனதுநற் பேருஞ் சிறப்புமிக
வண்டரை மீதினிற் பெற்றவ னுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் : முன் நாளில் பகைவர்களைப் பஞ்சாகப் பறக்கும் படி வென்ற வீரனை நோக்கித் தனது மாலையையும் தொண்டைமான் என்னும் தனது பெயரையும் விருதாக செம்பியனால் கொடுக்கப் பெற்றவன் வாழ்கின்றதும் கொங்கு மண்டலம் என்பதாம்.
****,

