கண்ணின் ‘மாயப்பார்வை’! ஆயிரம் அறிஞர்களின் சட்டங்கள்!!! (Post No.7076)

Written by S Nagarajan

swami_48@yahoo.com

Date: 9 OCTOBER 2019
British Summer Time uploaded in London – 17-15
Post No. 7076

Pictures are taken from various sources; beware of copyright rules; don’t use them without permission; this is a non- commercial, educational blog; posted in swamiindology.blogspot.com and tamilandvedas.com simultaneously. Average hits per day for both the blogs 12,000.

ச.நாகராஜன்

கலீல் ஜிப்ரான் லெபனானிய அமெரிக்கர். 1883ஆம் ஆண்டு ஜனவரி 6ஆம் தேதி பிறந்தார். அமெரிக்காவில் குடியேறினார். கமிலா ரெஹ்மான் அவரது தாய். அவரது தாயின் மூன்றாவது கணவருக்குப் பிறந்தவர் அவர்.

காச நோயால் 1931, ஏப்ரல் மாதம் ̀10ஆம் தேதி அவரி நியூயார்க்கில் மரணமடைந்தார்.

ஜிப்ரான் ஒரு தத்துவ ஞானி. எழுத்தாளர். நாவலாசிரியர். ஓவியர்.

பொருள் பொதிந்த குட்டிக் கதைகளை எழுதும் அவரது பாணி தனி பாணி.

இரண்டு குட்டி உரைநடைக் கதைகளைக் காண்போம்.

கண்ணின் ‘மாயப்பார்வை’

கண் ஒரு நாள் சொன்னது : “இந்தப் பள்ளத்தாக்குகளுக்கு வெகு தொலைவில் நான் ஒரு மலையைப் பார்க்கிறேன். அது நீலப் பனிப்போர்வையால் மூடப்பட்டிருக்கிறது. அது அழகாக இருக்கிறது, இல்லையா?”

காது கேட்டது, சிறிது நேரம் உற்றுக் கேட்ட பின்னர் சொன்னது : “அது சரி, எங்கே இருக்கிறது மலை? அதை நான் கேட்கவில்லையே?”

பிறகு கை பேச ஆரம்பித்தது, அது சொன்னது : “ நானும்  அதை உணர்ந்து பார்க்கவோ தொடவோ வீணாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். என்னால் மலையைப் பார்க்கவே முடியவில்லை.”

மூக்கு சொன்னது : “  அங்கு மலையே இல்லை. என்னால் அதை நுகர முடியவில்லை.”

பின்னர் கண் இன்னொரு பக்கம் பார்த்தது.

மற்றவை எல்லாம் தமக்குள் ஒன்றுக்கொன்று கண்ணின் விசித்திரமான மாயப்பார்வையைப் பற்றிப் பேச ஆரம்பித்தன.

பிறகு அவை கூறின : “ கண்ணிடம் ஏதோ ஒன்று சரியாக இல்லை.”

***

முன்னொரு காலத்தில் ஒரு மன்னன் இருந்தான். அவன் பெரும் புத்திசாலி.

தன் மக்களுக்காகச் சட்டங்களை இயற்ற அவன் விரும்பினான்.

தன் குடிமக்களில் ஆயிரம் வெவ்வேறு கூட்டத்தினரிடமிருந்து ஆயிரம் அறிஞர்களை தன் தலை நகருக்குஅழைத்தான். சட்டங்களை இயற்றினான்.

இது ஒரு முடிவுக்கு வந்தது.

அனைத்துச் சட்டங்களும் சுவடிகளில் எழுதப்பட மன்னன் முன் வைக்கப்பட்டது.

மன்னன் அதைப் படித்தான். அதைப் படித்தவுடன் அவன் தேம்பித் தேம்பி அழுதான்.

தனது ராஜ்யத்தில் இப்படி வெவ்வேறு விதமாக ஆயிரம் விதத்திலான குற்றங்கள் இருப்பது தனக்கு இதுவரை தெரியவில்லையே என்று நினைத்து அழுதான்.

பிறகு தனது  எழுத்தரை அழைத்தான்.

புன்னகை முகத்தில் தவழ தானே சட்டங்களைச் சொல்ல ஆரம்பித்தான்.

அவனது சட்டங்கள் மொத்தம் ஏழு தான்!

ஆயிரம் அறிஞர்களுக்கும் ஒரே கோபம். கோபத்துடன் அவனை விட்டு நீங்கி தனது கூட்டத்தாரிடம் தாங்கள் இயற்றிய சட்டங்களுடன் சென்றனர்.

ஒவ்வொரு கூட்டமும் தங்கள் அறிஞர்கள் இயற்றிய சட்டங்களைப் பின்பற்றி நடக்க ஆரம்பித்தது.

அதனால் தான் இன்றும் கூட நம்மிடையே ஆயிரம் சட்டங்கள் இருக்கின்றன.

அது ஒரு பெரிய தேசம். அதில் ஆயிரம் சிறைச்சாலைகள் இருக்கின்றன. சிறைகளில் ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் – ஆயிரம் சட்டங்களை மீறியவர்கள் நிரம்பி வழிகின்றனர்.

உண்மையில் அது ஒரு பெரிய தேசம் தான். ஆனால் அங்குள்ள மக்கள் ஆயிரம் சட்டங்களை வகுத்த சட்ட நிபுணர்களின் வழி வந்தவர்கள்.

அங்கு ஒரே ஒரு புத்திசாலி மன்னன் தான் இருந்தான்!

***

Leave a comment

Leave a comment