பொய்க்காத புலவர் வாக்கு! (Post No.12,105)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,105

Date uploaded in London –  June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx 

தனிப்பாடல் தமிழின்பம்

பொய்க்காத புலவர் வாக்கு! 

ச.நாகராஜன்

புலவர்கள் வாக்கு பொய்க்காது என்பார்கள்.

ஆகவே தான் அவர்களைக் கண்டால் மன்னர்கள் முதல் சாமானியர் வரை மதிப்புக் கொடுத்து கௌரவிப்பர்.

பொய்யா மொழிப் புலவர் என்பவரின் வாக்கும் இப்படிப் பொய்க்காது என்பதை ஒரு சம்பவம் விளக்குகிறது.

அவரது ஆசிரியரின் வீட்டுக் கொல்லையை ஒரு நாள் அவர் காவல் காத்துக் கொண்டிருந்தார்.

அப்போது காளிங்கன் என்னும் அரசனது குதிரை அங்கு வந்து அங்கிருந்த பயிரை மேய ஆரம்பித்து விட்டது.

இதைக் கண்ட பொய்யாமொழி மிகவும் பயந்து போனார். ஆசிரியர் வந்து வைவாரே என்று அவருக்குத் தோன்றியது.

உடனே அந்தக் குதிரை இறக்க வேண்டும் என்று ஒரு பாடலைப் பாடினார்:

வாய்த்த வயிரபுர மாகாளி யம்மையே

ஆய்த்த மணலி லணிவரையிற் – காயத்த

கதிரைமா ளத்தின்னுங் காளிங்க னேறும்

குதிரைமா ளக் கொண்டு போ

இதன் பொருள்:

வாய்த்த வயிரபுரம்  – நீர்வளம் மிக்க வயிரபுரம் என்னும் ஊரில் வாழ்கின்ற

மாகாளி அம்மையே – மாகாளி அம்மையே

ஆய்த்த மணலில் – ஆய்ந்த மணலினும்

அணி வரையில் – அழகிய மலையிலும்

காய்த்த – காய்ந்திருக்கின்ற’

கதிரை – தினைக் கதிர்களை

மாள  – அழியும்படி

தின்னும் – மேய்ந்து உண்கின்ற

காளிங்கன் ஏறும் – காளிங்கராயன் ஏறுகின்ற’

குதிரை – குதிரையானது

மாள் – இறக்கும்படி

கொண்டு போ – அதைக் கொண்டு போவாயாக!

பாடலைப் பாடியவுடன் குதிரை மாண்டது.

இவரது ஆசிரியர் திரும்பி வந்து பார்த்தார். நடந்தது என்ன என்பதை உணர்ந்தார்.

அவர் உடனே ஒரு பாடலைப் பாடினார் இப்படி:

பொதியி லகத்தியனாய்ப் பொய்யா மொழியாய்ச்

சிதைவில் புலவர் சிகாமணியாய்த் – துதிசேரும்

செங்காட்டங் கோட்டந் துறையூ ரெனுந்தலத்திற்

தங்காட்டங் கொண்டிருப்பாய் தான்

இதன் பொருள் :

பொதியில் அகத்தியனாய் – பொதியமலையில் அகத்தியனாகவும்

பொய்யாமொழியாய் – பொய்யாமொழிப் புலவனாகவும்

சிதைவு இல் புலவர் சிகாமணியாய் – அழிவில்லாத புலவர்களுக்குச் சூடாமணியாகவும்

துதி சேரும் – புகழ் பொருந்திய

செங்காட்டங் கோட்டத் துறையூர் எனும் தலத்தில் – செங்காட்டங் கோட்டத் துறையூர் என்னும் ஊரில்

தங்கு ஆட்டம் கொண்டிருப்பாய் – தங்கி இருத்தலாகிய விளையாட்டைக் கொண்டிருப்பாய்.

அகத்திய முனிவனே செங்காட்டந் துறையூர் என்னும் தலத்தில் பொய்யாமொழிப் புலவனாக வந்து தங்கி இருக்கிறான் என்பதே பொருள்.

ஆசிரியர் வாயாலேயே பொய்யாமொழி என்று பெருமைப்படுத்தப்பட்ட பொய்யாமொழிப் புலவர் பல பாடல்களை அழகுறை இயற்றியுள்ளார்.

இவர் ஒரு சமயம் தானும் சங்கப்புலவர்கள் வரிசையில் அதே தரத்தில் உள்ளவனே என அங்கீகரித்து சங்கப் புலவர்களின் விக்கிரகங்கள் தலை அசைக்கும்படி ஒரு பாடலையும் பாடியுள்ளார்.

உங்களிலே யானொருவ நொவ்வுவனோ வோவ்வேனோ

திங்கட் குலனறியச் செப்புங்கள் – சங்கத்தீர்

பாடுகின்ற முத்தமிழ்க் கென் பைந்தமிழு மொக்குமோ

ஏடெழுதா ரேழெழுவீ ரின்று

இதன் பொருள்

சங்கத்தீர் – சங்கப் புலவர்களே

உங்களிலே யான் ஒருவன் – உங்களில் நான் ஒருவன் என்று’

ஒவ்வுவனோ – ஒப்பாவேனோ

ஒவ்வேனோ – அல்லது ஒப்பாக மாட்டேனோ

திங்கட்குலன் அறியச் செப்புங்கள் – சந்திர குலத்து அரசனாகிய பாண்டியன் அறியச் சொல்லுங்கள்

ஏடு எழுதார் – இதழ் விரிந்த பூமாலை அணிந்த

ஏழ் எழுவீர் – நாற்பத்தொன்பது புலவீர்காள்

இன்று – இப்பொழுது

பாடுகின்ற முத்தமிழ்க்கு – நீவிர் பாடுகின்ற முத்தமிழ்ப் பாடல்களுக்கு

என் பைந்தமிழும் ஒக்குமோ – எனது பசுந்தமிழ்ப் பாடல்களும் ஒத்திருக்குமோ?!

ஒத்திருக்கும் என்று சங்கப்புலவர்களின் சிலைகளின் தலைகள் அசைந்தன.

தலை அசைத்து நீரும் எமது புலவர் கூட்டத்தில் ஒருவரே என சங்கப் புலவர் நாற்பத்தொன்பது பேரும் அங்கீகரித்தனர்.

அப்படிப்பட்ட அருந்தமிழ் வாணர் பொய்யாமொழிப் புலவர் ஆவார்!

***

Leave a comment

Leave a comment