
Post No. 12,126
Date uploaded in London – 13 June , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
ராமாயண வழிகாட்டி!
சிறந்த ஒருவனுக்கு என்ன லக்ஷணம்?
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் சிறந்த ஒரு வீரனாக அங்கதன் சித்தரிக்கப்படுகிறான்.
அவனைச் சிறந்தவனாக ஹனுமர் தீர்மானிக்கிறார்.
அதற்கான காரணங்களையும் அவர் தீர்க்காலோசனை செய்து நிர்ணயிக்கிறார்.
இதை கிஷ்கிந்தா காண்டம் 54வது ஸர்க்க்கம் இரண்டாவது ஸ்லோகம் விவரிக்கிறது இப்படி:
புத்தயா ஹ்ருஷ்டாங்கயா யுக்தம் சதுர்பலசமன்விதம் |
சதுர்தசகுணம் மேனே ஹனுமான்வாலின: சுதம் ||
வாலின: – வாலியின்
சுதம் – புதல்வனை
அஷ்டாங்கயா – எட்டு வித அங்கங்கள் சேர்ந்த
புத்தயா – புத்தியுடன்
யுக்தம் – கூடியவனாக
சதுர்பல சமன்விதம் – நான்கு வித பலத்தையும் பெற்றவனாக
சதுர்தசகுணம் – பதினான்கு குணங்களையுடைவனாக
ஹி – சந்தேகமின்றி
ஹனுமான் மேனே – ஹனுமார் தீர்க்காலோசனை செய்தார்.
இதில் புத்திக்கு எட்டு வித அங்கங்கள் உண்டு என ஹனுமார் நிர்ணயித்துச் சொல்கிறார்.
அவையாவன:
1) பிறர் சொல்வதை சீக்கிரமாக கிரஹித்தல்
2) அதை மனதில் தரித்தல் (ஏற்றிக் கொள்ளல்)
3) சமயத்தில் ஞாபகத்திற்குக் கொண்டு வருதல்
4) அதை பிறருக்கு விளங்க உரைத்தல்
5) யுக்தியாகப் பேசுதல்
6) பிறருடைய தப்பான யுக்திகளைக் கண்டித்தல்
7) பிறர் சொல்வதின் நிஜமான அர்த்தத்தை அறிதல்
8) விஷயங்களின் தத்துவங்களை உள்ளபடி அறிதல்
அடுத்து ஒருவனுக்கு நான்கு வித பலங்கள் உண்டு என நிர்ணயிக்கிறார் ஹனுமார்.
அவையாவன
1) பாஹுபலம் அதாவது தோள் வலிமை
2) மனோபலம்
3) உபாயபலம் (தகுந்த உத்திகளைத் தேர்ந்தெடுத்து வெல்லும் திறமை)
4) பந்து பலம் (உறவினர், நண்பர்களின் ஆதரவு)
அடுத்து ஒருவன் சிறந்து விளங்க பதினான்கு குணங்கள் உண்டு என நிர்ணயிக்கிறார் ஹனுமார்.
அந்த 14 குணங்கள் :
1) தேசம், காலம், இடம் இவைகளை அறிதல்
2) மன உறுதி
3) சகல கஷ்டங்களையும் பொறுத்தல்
4) சகல விஷயங்களையும் அறிதல்
5) அறிய வேண்டியது, செய்ய வேண்டியது ஆகியவற்றில் சமர்த்தனாக (திறமைசாலியாக) இருத்தல்
6) விடாமுயற்சி
7) ஆலோசனைகளை மறைத்து வைத்தல்
8) சொன்ன சொல் தவறாமை
9) சௌரியம்
10) திறமையின் எல்லையை அறிதல்
11) நன்றி மறவாமை
12) நம்பினோரைக் கைவிடாதிருத்தல்
13) க்ஷமா (மன்னிக்கும் குணம்)
14) கலவரமின்மை
ஆகவே இப்படி தீர்க்காலோசனை செய்த ஹனுமார் அங்கதனைத் தன் பக்கம் சேர்க்க நினைக்கிறார்.
அங்கதன் சுக்லபக்ஷத்தின் ஆதியில் காந்தியினால் வளரும் சந்திரனைப் போன்ற தேஜஸ், பலம், பராக்ரமம் கொண்டவன்
புத்தியில் பிரஹஸ்பதிக்கு நிகரானவன்
ஆண்மையில் அவன் தந்தை வாலிக்கு ஒப்பானவன்
பிருஹஸ்பதிக்கு இந்திரனைப் போல தாரனுடைய சொல்படி நடப்பவன்.
எல்லா சாஸ்திரங்களிலும் வல்லவன்.
வால்மீகி ராமாயணத்தில் அங்கதனை முன்னிட்டு சிறந்தவனின் இலக்கணத்தை அறிகிறோம் இப்படி!
**