QUIZ தமிழ் சிற்றிலக்கியப் பத்து QUIZ (Post No.12,179)

WRITTEN BY LONDON SWAMINATHAN

Post No. 12,179

Date uploaded in London – –  24 June , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

https://www.pustaka.co.in/home/author/london-swaminathan

Xxx

பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் கீழ்கண்டவாறு பாடினார்

வெண்பாவிற் புகழேந்தி பரணிக்கோர்

     சயங்கொண்டான் விருத்தமென்னும்

ஒண்பாவிற் குயர்கம்பன் கோவையுலா

     அந்தாதிக் கொட்டக் கூத்தன்

கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்

     வசைபாடக் காள மேகம்

பண்பாகப் பகர்சந்தம் படிக்காச

     லாலொருவர் பகரொ ணாதே.”

1.வெண்பா பாடுவதில் புகழேந்தி வல்லவர் என்று பாடல் சொல்கிறதே ; அவர் பாடிய வெண்பா என்ன?

2.பரணிக்கு சயம் கொண்டான் என்ற புலவரைப் போற்றுகிறார் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர். அது என்ன பரணி நூல் ?

3.இலக்கியத்தில் பரணி என்றால் என்ன?

4.தமிழில் புலவர்களிடையே போட்டியும் பொறாமையும் நிலவியது. புகழேந்தியுடன் மோதிய புலவர் யார்?

5. ஒட்டக்கூத்தன் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லி கதவை படார் என்று மூடியவர் யார்?

6.விருத்தமென்னும் ஒண்பாவில் உயர்கம்பன் என்பதற்கு நமக்கு பொருள் தெரியும்; கம்பன் பாடிய ராமாயணம் புகழ்பெற் றது அடுத்ததாக கோவையுலா  அந்தாதிக்கு ஒட்டக் கூத்தன் என்பதன் பொருள் என்ன?

7.கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள் (கண்பாய = பெருமையுடைய)— என்ற வரியிலுள்ள இரட்டையர்கள் யார்? அவர்கள் செய்த கலம்பகம் என்ன?

XXXXX

8.வசைபாடக் காள மேகம் என்பதைப் பலரும் அறிவோம். அவர் பாடிய சிலேடைப்பாடல்கள் பலரைத் தாக்கியும் பகடி செய்தும் எழுதப்பட்டவை  அதைத் தொடர்ந்து பண்பாகப் பகர்சந்தம் படிக்காச லாலொருவர் பகரொ ணாதே.” என்கிறார். அதன் பொருள் என்ன?

XXXXXXX

9.இவ்வளவு புலவர்களை ஒரே பாடலில் பெருமைப்பட நமக்கு அறிமுகம் செய்துவைக்கும் பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் யார்?

XXXXX

10.அதிவீரராமர் பாடிய இருநூல்களின் பெயர்களைத் தருக

xxxx

விடைகள்

1.நளவெண்பா

2.கலிங்கத்துப் பரணி

3.பரணி என்பது தமிழில் வழங்கப்பெறும் தொண்ணூற்றாறு பிரபந்த வகைகளுள் ஒன்றாகும். போரிலே ஆயிரம் யானைகளைக் கொன்று வெற்றிபெறும் வீரர்கள் மேல் பாடப்படுவது பரணி இலக்கியம் ஆகும்.

4.ஒட்டக்கூத்தர்

xxxxx

5.குலோத்துங்க மன்னனோடு ஊடல் கொண்ட

அரசி கோபத்தோடு போய் கதவை மூடிக் கொண்டாள்.

மன்னனுக்காக கதவைத் திறந்துவிடு என்று சொல்ல  ஒட்டக்கூத்தர் தூது போனார்.ஒரு பாடலையும் பாடினார் .அரசிக்கு மேலும் மேலும் கோபம் அதிகரித்தது   ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் என்று சொல்லி 2 முறை தாழ்ப்பாள் போட்டாள் அரசி.  பாடல் இதோ:

நானே இனியுன்னை வேண்டுவதில்லைநளினமலர்த்

தேனே கபாடந் திறந்திடு திறவா விடிலோ

வானேறனைய வாள் வீரவிகுலாதிபன் வாசல் வந்தால்

தானே திறக்கு நின் கையிதழாகிய தாமரையே !

Meaning

அழகான  மலரில் இருக்கும் தேன் போன்ற இனிமையான பெண்ணே!

மன்னனுக்காகக் கதவைத் திறந்துவிடு என்று உன்னை வேண்டிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம்  எனக்கில்லை. வானளாவிய புகழ் கொண்ட

ஆண் சிங்கத்துக்கு நிகரானவன் என் மன்னன் குலோத்துங்கன். வாள் வீரனாகிய குலோத்துங்கன் உன் அறையின் பக்கம் வந்தாலே போதும்.

தாமரை போன்ற உன் கைகள் தானாக வந்து கதவைத் திறந்து வைத்துவிடும் .

Xxxx

6.மூவர் உலா, தில்லை உலா.

தக்கயாகப் பரணி, கண்டன்  கோவை

கண்டன் அலங்காரம் முதலிய நூல்களை பாடினார்

கண்டன் என்பவன் இரண்டாம் இராசராசன். இவன்மீது ஒட்டக்கூத்தர் பாடிய நூல்கள் கண்டன் கோவை, கண்டன் அலங்காரம் என்பன.

Xxxx

7. இரட்டையர்களின் இயற்பெயர்கள் முது சூரியர்இளஞ்சூரியர் .இரட்டையர்களால் பாடப்பெற்ற கலம்பகம் ‘தில்லைக் கலம்பகம்’. இவ்விருவருள் ஒருவர் முடவர் என்றும் மற்றவர் குருடர் என்றும் கூறப்படுகிறது முடவரைக் குருடர் சுமந்து செல்வார். முடவர் வழி காட்டுவார்.இவர்கள் சோழநாட்டில் இலந்துறை என்ற ஊரினர். ஒரு பாட்டின் முதல் இரு அடியை ஒருவரும், பின் இரு அடியை மற்றவரும் பாடுவர். திருவாமாத்தூர்க் கலம்பகம் . காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் மீது ‘ஏகாம்பரநாதர் உலா’, இவர்களால் இயற்றப்பட்டன.

Xxxx

8.படிக்காசுப்புலவர் என்பவர் தண்டலையார் சதகம் என்னும் சிற்றிலக்கியத்தினை ஆக்கியவர். இந்தத் தண்டலையார் சதகத்தைப் ‘பழமொழி விளக்கம்’ என்றும் சுட்டுவர். நூறு பழமொழிகளைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு பழமொழியும் ஒவ்வொரு பாடலில் அமையுமாறு பாடியுள்ளதனால் இந்நூல் ‘பழமொழி விளக்கம் என்னும் பெயர்பெற்றது.

XXXXX

9.பலபட்டடைச் சொக்கநாதப் புலவர் எனப் போற்றப்படும் புலவர் 18-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். தேவை உலா, அழகர் கிள்ளை விடு தூது முதலான நூல்களைப் பாடியவர். தனிப்பாடல் திரட்டு நூலில் இவரது தனிப்பாடல்கள் 66 இடம்பெற்றுள்ளன.

XXXXX

10. காசிக் காண்டம்; 2. இலிங்கபுராணம்

—–SUBHAM—–

Tags- சிற்றிலக்கியம், ஒட்டக்கூத்தர், புகழேந்தி, இரட்டைப் புலவர்கள், பரணி, சந்தக்கவி

Leave a comment

Leave a comment