பாரதியின் பன்முகத் திறன்! -1 (Post no.12,490)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,490

Date uploaded in London –  16 September, 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

Xxxx

செப்டம்பர் 11 மகாகவி பாரதியார் நினைவு தினம். இதையொட்டி மாலைமலர் நாளிதழ் 10-9-2023 அன்று வெளியிட்டுள்ள சிறப்புக் கட்டுரை இது. இரு பகுதிகளாக இங்கு பிரசுரிக்கப்படுகிறது.

பாரதியின் பன்முகத் திறன்!

(பகுதி 1)

ச.நாகராஜன்

உய்வகை காட்டும் உயர் தமிழுக்குப்

புதுநெறி காட்டிய புலவன் பாரதி

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவி முரசு

நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்

திறம்பாட வந்த மறவன் புதிய

அறம்பாட வந்த அறிஞன். நாட்டிற்

படரும் சாதிப் படைக்கு மருந்து

மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்

அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்!

–    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

மகாகவி பாரதியார் (தோற்றம் டிசம்பர் 11, 1882 மறைவு செப்டம்பர் 11, 1921) பன்முகப் பரிமாணங்கள் கொண்ட உலக மகாகவி. காலம் செல்லச் செல்ல அவரது புகழ் மென்மேலும் ஓங்கி வளர்ந்து கொண்டே போகிறது. அவரது கவிதைத் திறனைக் கண்டு வியந்து கொண்டாடுவோரின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது.

கவிதைத் திறம்

மகாகவி பாரதியாரின் கவிதைத் திறத்தைக் கண்டு நம் நாடு மட்டும் வியக்கவில்லை. அயல் நாட்டினரும் வியந்து போற்றினர்.

பிரம்மஞானசபை இயக்கத்தைச் சேர்ந்த அன்னிபெஸண்ட் அம்மையார் பாரதியாரின் கவித்திறமையின் பால் அளவிலா ஈடுபாடு கொண்டார். அதை நேருக்கு நேர் படித்துச் சுவைக்க வேண்டும் என்ற விருப்பம் அம்மையாருக்கு எழுந்தது. ஆகவே சில கவிதைளை அயர்லாந்து கவிஞரான ஜேம்ஸ் ஹெச். கஸின்ஸ் என்ற கவிஞரைக் கொண்டு ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கச் செய்து படித்து மெச்சினார்.  அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் கவிதைகள் பிரெஞ்சு மொழியிலும் ஆங்கில மொழியிலும், தெலுங்கிலும் மொழி பெயர்க்கப்பட்டன.

“சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது,

    சொற் புதிது, சோதி மிக்க

நவ கவிதை, எந்நாளும் அழியாத

    மகாகவிதை என்று  நன்கு

பிரான்ஸென்னும்  சிறந்த புகழ்நாட்டிலுயர்

    புலவோரும் பிறரு மாங்கே

விராவு புகழ் ஆங்கிலத்தில் கவியரசர்

    தாமும் வியந்து கூறிப்

பராவி என்றன் தமிழ்க் கவியை மொழிபெயர்த்துப்

   போற்றுகின்றார்”

என்று அவர் தனது கவிதை உலகெங்கும் போற்றப்படுவதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

மரபு சார்ந்த அணிகளையும் உவமைகளையும் பயன்படுத்தியதோடு நாட்டு விடுதலை, பாரதத்தின் பெருமை, நல்லோர் பண்பு, பெண் விடுதலை, தமிழின் மாண்பு, இதிகாசப் பெருமை உள்ளிட்ட பல்வெறு பொருள்களில் புதிய உவமைகளையும் காலத்திற்கேற்றவாறு மாற்றி அவர் புதுமை புகுத்தியதையும் பார்த்தால் பெரும் வியப்பையும் பிரமிப்பையும் அடைகிறோம்.

சுமார் 850 உவமைகளை அவர் இப்படித் தன் கவிதைகளில் காட்டுகிறார். அணிகளில் சிறந்தது உவமை அணியே என்ற யாப்பிலக்கண நூலாரின் கருத்தை எடுத்துக் கொண்டால், பாரதியார் உலகின் தலை சிறந்த கவிஞர்களுள் முதலிடத்தைப் பெறுவதை உறுதிப் படுத்தலாம்.

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்

  சிறப்பை மறந்து விட்ட பூவும்

வானை மறந்திருக்கும் பயிரும் -இந்த

     வையம் முழுதும் இல்லை தோழி

 ஆசை முகம் மறந்து போச்சே என்ற பாடலுக்கு ஈடு இணை இன்னொரு பாடல் உண்டா என்ன?

பொங்கி வரும் பெரு நிலவு, புன்னகையின் புது நிலவு, துங்கமணி மின் என்று இப்படி நூற்றுக்கணக்கான சுவை தரும் சொற்சேர்க்கைகளைத் தந்த புதுமைப் பாவலனாக அவர் மிளிர்கிறார்.

கற்பார்க்கு வாழ் நாள் முழுவதும் வேண்டிய சுவையைத் தரும் ‘கற்பகத் தரு கவிஞனாக’ அவரைக் காண முடிகிறது.

விநாயகர் நான்மணி மாலை, புதிய ஆத்திசூடி, பாரதி அறுபத்தாறு, குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் உள்ளிட்டவற்றைப் பாடி பிரபந்த வகைகளையும் காவியப் படைப்புகளையும் சற்று புதிய முறையில் காட்டி மகிழ்ந்தார்; தமிழரை மகிழ்வித்தார்!

தமிழ் மொழிபோல் இனிதாவது எங்கும் காணோம்!

“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல்

இனிதாவதெங்கும் காணோம்” என்று உரக்கக் கூவிய அவர் தமிழை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றார்.

ஆங்கிலத்தில் வல்லவர் அவர். ஆங்கிலம் மற்றும் வங்க மொழிக் கவிதைகள் ஒன்பதை அவர் மொழி பெயர்த்திருக்கிறார். காசியில் வடமொழியைப் பயின்று தேர்ந்தார். ஹிந்தியில் வல்லவர். புதுவையில் பிரெஞ்சு மொழியைக் கற்றார். பிரெஞ்சு தேசிய கீதத்தை அவர் தமிழ்ப்படுத்தியுள்ளார். தெலுங்கு அவருக்கு அத்துபடி. அரபி மொழியைக் கற்ற அவர் குர் ஆனை அப்படியே உரிய உச்சரிப்புடன் கூறுவதை புதுவை வாழ் இஸ்லாமியர் பாராட்டியதுண்டு.

நிவேதிதா தேவியின் ஆசி!

1905ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் தேதி இந்திய மக்களின் விருப்பத்திற்கு எதிராக வங்கம் பிரிக்கப்பட்டது. மக்கள் சீறி எழுந்தனர். சுதந்திர எழுச்சி நாடெங்கும் பரவியது. 1906ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு கல்கத்தாவில் நடந்தது. அதில் கலந்து கொண்ட பிறகு பாரதியார் கல்கத்தாவின் வட பகுதியில் இருந்த பாக்பஜாருக்குச் சென்று அங்கு போஸ்பரா தெருவில் வசித்து வந்த சகோதரி நிவேதிதா தேவியைச் சந்தித்தார். (தோற்றம் 28-10-1867 மறைவு 13-10-1911) அப்போது நிவேதிதா தேவிக்கு வயது 39. பாரதிக்கோ வயது 24 தான்.

பாரதிக்கு மணமாகி ஒரு பெண் குழந்தையும் இருப்பதை அறிந்த நிவேதிதா மனைவியை ஏன் அழைத்து வரவில்லை என்று கேட்க பாரதியார், “பெண்களை வெளியில் அழைத்துச் செல்வது எங்கள் வழக்கம் இல்லை. காங்கிரஸ் பற்றி என் மனைவிக்கு ஒன்றும் தெரியாது” என்றார்.

இதைக் கேட்டு கோபம் கொண்ட அவர் பாரதியாருக்கு பெண்மையைப் போற்ற வேண்டிய அவசியத்தை வெகுவாக எடுத்துரைத்தார். பாரதியார் அவரை குருவாக வரித்தார். பாரதியார் விடை பெறும் போது  இமயமலைப் பயணத்தில் தனக்குக் கிடைத்த சருகு ஒன்றை நிவேதிதா பாரதியாருக்கு அளிக்க அதை அவர் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டார். நெடுங்காலம் அந்த சருகைப் போற்றிப் பாதுகாத்தார் அவர். தனது கவிதைப் படைப்பை நிவேதிதா தேவிக்கு சமர்ப்பணம் செய்தார். ‘அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோயிலாய் அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய்” என்று தொடங்கும் பாடலையும் பாடி ஞானகுருவிற்கு அர்ப்பணித்தார்.

** தொடரும்

Previous Post
Leave a comment

Leave a comment