
Post No. 12,810
Date uploaded in London – – 8 December , 2023
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
Xxxx
கொங்குமண்டல சதகம் பாடல் 21
சுந்தரருக்கு விருந்து கொடுத்த வரலாறு
ச. நாகராஜன்
சுந்தர மூர்த்தி நாயனார் வாழ்வில் நிகழ்ந்த அற்புத வரலாறை 16ஆம் பாடலில் விரிவாகப் பார்த்தோம்.
முதலை வாயில் அகப்பட்ட சிறுவனை மூன்று ஆண்டுக்குரிய வளர்ச்சியுடன் திரும்பி வரச் செய்து அக்குழந்தையின் தாயின் துயர் போக்கினார் சுந்தரர்.
இது நடந்த இடம் அவிநாசி. அங்கிருந்து கிளம்பிய சுந்தரர் அடர்ந்த காட்டினூடே சென்று வழி தெரியாது திகைத்தார்.
உலகத்தையே ஈன்ற கன்னி வேடச்சியாகவும், எல்லாம் வல்ல இறைவன் வேடனாகவும் தோன்றி வழி காட்டுவதற்காகத் துடியலூருக்குள் புகுந்தனர்.
அம்மையும் அப்பனும் திடீரென்று மறையவே சுந்தரர் அங்குள்ள ஆலயத்திற்குள் சென்று அகத்தீஸ்வரரையும் அருந்தவச் செல்வியம்மையையும் முறையாக வணங்கிப் பாடிப் பணிந்தார்.
“உணவருந்திச் செல்க” என ஆகாயத்திலிருந்து அசரீரி ஒலி ஒன்று ஒலித்தது.
கணநாயகர் பல்வகையான உணவுடன் காட்டு முருங்கையிலை, காய்கறியும் ஆக்கிப் படைத்தனர்.
தனது பரிஜனங்களோடு விருந்தை உண்ட சுந்தரர் கடவுளைப் பாடி வணங்கி விடை பெற்றுச் சென்றார்.
கொங்குமண்டலத்தில் துடியலூர் இருப்பது ஆறைநாடு.
இதை துடிசை புராணம் விரிவாக விளக்குகிறது.
சொல்லரும் கிராத வேடந் துணைவியுந் தானுங் கொண்டு
மெல்லவே நடந்து வந்து மேதினி புகழ வன்று
ஒல்லுநர் தம்மை நோக்கி யுயங்குத லொழித்தி யென்று
வல்லுரந் தன்னி னல்ல வழிதனைக் காட்டி யாங்கே
கடிய தானமுட் கான முருங்கையி
னெடிய காயட காதிய நெய்சுவைப்
பொடி விராய பொறித்த புளிக்கின
முடிவி லாத முதிர்கறி பாகரோ (துடிசைப் புராணம்)
திரு அவிநாசிப் புராணம் இது பற்றி இப்படிக் கூறுகிறது:
நெட்டிசையின் றமிழ்முனிபூ சனையுகந்த துடிசையில்வாழ் நிமலர்ப் போற்றி
அட்டில் வினைப் புனமுருங்கை வடகலிநல் லமுதுவிரு ந்தளிக்க வுண்டார். – (திருவவிநாசிப் புராணம்)
சுந்தரரது தேவாரத்தில் வாள்கொளி புத்தூர் பாடலில் உள்ள பாடல் இது:
திருவின் நாயகன் ஆகிய மாலுக்
கருள்கள் செய்திடும் தேவர் பிரானை
உருவி னானைஒன் றாவறி வொண்ணா
மூர்த்தி யைவிச யற்கருள் செய்வான்
செருவில் ஏந்தியோர் கேழற்பின் சென்று
செங்கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவி னான்றனை வாழ்கொளி புத்தூர்
மாணிக்கத் தைமறந் தென்நினைக் கேனே
இந்த அற்புத வரலாற்றை கொங்கு மண்டல சதகம் பாடல் 21இல் பதிவு செய்கிறது இப்படி:-
வேட்டுவ வேட மெடுத்து வழித்துணை மேவியிளங்
காட்டு முருங்கை யிலைகாய்நெய் பெய்து கறிசமைத்துப்
பாட்டு முழக்குவன் றொண்டர்க் கன்னம் படைத்துநரை
மாட்டுதிப் போன்றுடி சைப்பதி யுங்கொங்கு மண்டலமே
பாடலின் பொருள் ; வழி தெரியாது மயங்கும் சுந்தரருக்கு (வன்றொண்டருக்கு) வேட வடிவம் பூண்டு வழி காட்டுவித்து, காட்டு முருங்கையிலை காய் கறியுமாக்கி விருந்து செய்த விருந்தீசுரர் விளங்கும் துடியலூரும் கொங்குமண்டலத்தில் உள்ளதேயாம்.
துடியலூர் தற்போதைய கோவை மாவட்டத்தில் உள்ள தலமாகும்.
***
கொங்குமண்டல சதகம் தொடரில் விடுபட்டுப் போன பாடல் இது.
விளக்கத்துடன் இங்கு தரப்படுகிறது.