முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன் (Post No.12,820)

WRITTEN BY S NAGARAJAN

Post No. 12,820

Date uploaded in London –  –  11 December , 2023                  

Contact – swami_48@yahoo.com

Pictures are taken from various sources for spreading knowledge.

this is a non- commercial blog. Thanks for your great pictures.

tamilandvedas.com, swamiindology.blogspot.com

xxxx

கொங்குமண்டல சதகம் பாடல் 74

முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயர் பெற்ற வீரன்

ச.நாகராஜன்

பருத்திப்பள்ளி என்பது கொங்குமண்டலத்தில் கீழ்கரைப் பூந்துறை நாட்டைச் சேர்ந்த உபநாடுகளில் ஒன்று. அது எழுகரை நாடுகளில் ஒன்று. சித்திரமேழி விண்ணகரம் எனப் பழைய பெயர் இந்த ஊருக்கு உண்டு.

பருத்திப்பள்ளி புவனேசுவர சுவாமி ஆலயத்தில் ஒரு சாசனம் இருக்கிறது.

இது ஒரு வீர வரலாற்றைச் சொல்கிறது.

வரலாறு இது தான்:

பருத்திப்பள்ளியில் செல்லர் குலத்துதித்த வலிமிகுந்த வீர வாலிபன் ஒருவன் இருந்தான். தென்கரை நாட்டில் (தாராபுரம்) சில பகைவர்கள் மிகவும் தொந்தரவு செய்து கொண்டிருந்தனர். இதைப் பார்த்த வாலிபன் வேட்டுவ வீரர்கள் உள்ளிட்ட பல வீரர்களைச் சேர்த்து ஒரு சேனையை அமைத்தான். சேனைக்குத் தலைவனாகவும் ஆனான். சேனைத் தலைவனான அவன் இராஜ கட்டளைப்படி தாராபுரம் சென்று பகைவர்களை விரட்டினான். இந்த வலிமையைப் பார்த்து வியந்த கிருஷ்ணதேவ ராயர் அவனுக்கு ‘முதலிக் காமிண்டன்’ என்ற விருதுப் பெயரை அளித்துச் சிறப்பித்தார்.

கிருஷ்ணதேவ ராயர் கி.பி.1509 முதல் 1530 வரை விஜயநகரத்தை அரசாண்ட மன்னர். 

இந்த வரலாற்றை இருப்புலிப் பள்ளு சிறப்பித்துக் கூறுகிறது இப்படி :

வெற்றியுடனே கிருஷ்ணராயரிடத்தில் வர

   மேன்மைப்பட்டாபிஷேக முடிசூட்டி

முத்தின் சிவிகையில் வைத்து வலஞ்செய்துதான்

   முதலிக் காமிண்டனென்றும் விருதுங்கொடுத்து

நத்தூர் பருத்திப்பள்ளி நாடும் பூந்துறைநாடு

    நாலாறுநாடுதானு மேலுமையாப் பெற்றோன்

இந்த சம்பவத்தை கொங்குமண்டல சதகம் பாடல் 74இல் பதிவு செய்கிறது.

புதுமைப் படைவேட் டுவர் சூழத் தார புரத்துடனே

சதுர மிகுபடை யார்சம ராற்றிச் சயம்பெறவே

முதலிக்கா மிண்டனெனக்கிருஷ்ண ராயர் மொழிவிருதை

மதிகொள் பருத்திப் பளிச்செல்ல னுங்கொங்கு மண்டலமே

பாடலின் பொருள் : தாராபுரத்தில் வந்து எதிர்த்த பகைவரை, வேட்டுவப் படையைச் சேர்த்துக் கொண்டு அவர்களைத் துரத்தி வெற்றி கண்ட திறமையைக் கண்டு விஜயநகர அரசர் கிருஷ்ணராயர் முதலிக் காமிண்டன் என்ற விருதுப் பெயரை அளிக்க அதைப் பெற்ற பருத்திப்பள்ளிச் செல்லனும் கொங்குமண்டலத்தைச் சேர்ந்தவனே என்பதாகும்.

***

Leave a comment

Leave a comment