
WRITTEN BY S NAGARAJAN
Post No. 12,966
Date uploaded in London – – 29 JANURARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
2024 ஜனவரி 22. தெய்வீகத் திருவிழா நன்கு தெய்வீகமாக நடந்து முடிந்துள்ளது. ராம நாம மஹிமை பற்றிய சிறப்புக் கட்டுரைத் தொடரில் இது ஆறாவது கட்டுரை!
ராம நாம மஹிமை – 6
ச.நாகராஜன்
வால்மீகி ராமாயணத்தில் ஏராளமான நல்ல கருத்துக்களும் ரகசியங்களும் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளும் உள்ளன.
இவற்றைத் தொகுத்து ஏராளமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
லிப்கோவின் தொகுப்பு குறிப்பிடத்தகுந்தது. அதில் சிலவற்றை தமிழாக்கத்துடன் இங்கு தருகிறேன்:
பொறுமையின் சிறப்பு
அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா!
பாலகாண்டம் 33-9
க்ஷமா (பொறுமை) பெண்களுக்கு ஒரு சிறந்த ஆபரணம், ஆண்களுக்கும் தான்!
தந்தையே கடவுள்
பிதா ஹி ப்ரபுரஸ்மாகம் தைவதம் பரமம் ஹி ந:!
தந்தைக்கு நம் மீது அதிகாரம் உண்டு. அவரே நமது தலையாய கடவுள்.
பாலகாண்டம் 32-31
ஆன்மீக பலமே உயர்ந்த பலம்
திக்பலம் க்ஷத்ரியபலம் ப்ரஹாந்தேஜோ பலம் பலம்!
உடல் வலிமை ஒரு வலிமையா என்ன, ஆன்மீக பலமே நிஜமான பலம்!
பாலகாண்டம் 56-22
பொறுமையே அனைத்து நலன்களையும் தரும்
க்ஷமா தானம் க்ஷமா சத்யம் க்ஷமா யக்ஞஸ்ச புத்ரிகா:|
பொறுமையே தானம். பொறுமையே சத்யம். பொறுமையே யக்ஞம்
(அனைத்து நலன்களும் பொறுமையில் அடங்கியுள்ளன என்பது பொருள்)
பாலகாண்டம் 33-8
பொறுமையே தர்மம்
க்ஷமா யஷஸ் க்ஷமா தர்ம: க்ஷமயா விஷ்டிதம் ஜகத்|
பொறுமையே யசஸ். பொறுமையே தர்மம். பொறுமையிலே தான் உலகமே நிலைநிற்கிறது.
பாலகாண்டம் 33-9
தத்ரூபமாக காட்சிகளைச் சித்தரிக்கும் கீதம்
அஹோ கீதஸ்ய மாதுர்யம் ஸ்லோகானாம் ச விசேஷத:|
சிரநிர்வ்ருத்தமப்யேதத் ப்ரத்யக்ஷமிவ தர்ஷிதம் ||
அடடா, கீதம் மதுரம். கடந்த காலத்தில் நடந்த நிகழ்வுகளை இன்று நம் கண் முன் நடப்பது போல அப்படியே ஸ்லோகங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
பாலகாண்டம் 4-17
சீதையின் மகத்தான சரிதம் கூறும் ராமாயணம்
காவ்யம் ராமாயணம் க்ருத்ஸ்னம் சீதாயாஸ்சரிதம் மஹத் |
சீதையின் மகத்தான சரித்திரத்தை ராமாயண காவியம் சித்தரிக்கிறது.
பால காண்டம் 4- 7
காமத்தினாலும் கோபத்தினாலும் அலட்சியப்படுத்தக் கூடாது!
நசாவஞா ப்ரயோக்தவ்யா காமக்ரோதவசாதபி|
காமத்தினாலும் க்ரோதத்தினாலும் எதுவும் அலட்சியப்படுத்தப்படக் கூடாது.
பாலகாண்டம் 13- 14
மற்ற கவிஞர்களுக்கு வழிகாட்டும் காவியம்!
ஆச்சர்ய மிதமாக்யானம் முனினா சம்ப்ரகீர்த்த்தம் பரம் கவீனாமாதாரம்|
முனிவரால் இயற்றப்பட்ட இந்தக் காவியம் ஆச்சரியகரமானது. மற்ற கவிஞர்கள் பின்பற்றத்தக்க முன்மாதிரியாக இது அமைந்துள்ளது.
பாலகாண்டம் 4- 26,27
அனைத்தையும் காப்பவர் ராமர்
ரக்ஷிதா ஜீவலோகஸ்ய தர்மஸ்ய பரிரக்ஷிதா|
ராமர் அனைத்து உயிர்களையும் காக்கிறார்; முக்கியமாக தர்மத்தைக் காக்கிறார்.
பாலகாண்டம் 1- 13
ராமர் சத்ய தர்மம் பரிபாலிக்கும் சத்புருஷர்
ராம: சத்புருஷோ லோகே சத்யதர்ம பராயண: |
சத்யத்தையும் தர்மத்தையும் பரிபாலிக்கும் ராமர் இந்த உலகில் ஒரு சத்புருஷர்.
அயோத்யா காண்டம் 2- 29
பெரியோரின் மனம் தர்மத்திலேயே நிலையாக நிற்கும்
சதாம் து தர்மநித்யானாம் க்ருதஷோபி ச ராகவ |
பெரிய மனிதர்களின் மனம் எப்போதும் தரமத்திலேயே நிலைத்திருக்கிறது, ராகவ!
அயோத்யா காண்டம் 4- 27
பயம் பயப்படுபவரிடமிருந்தே உருவாகும்
பயம் பீதாத்தி ஜாயதே |
பயம் அதற்கு இடம் கொடுப்பவரிடமே ஊற்றெடுக்கும்.
அயோத்யா காண்டம் 8- 5
நெருங்கிய தொடர்பு தாவரங்களிடம் உருவாக்கும் நட்புணர்வு
சன்னிகர்ஷாச்ச சௌஹாதம் ஜாயதே ஸ்தாவரேஷ்வபி |
நெருங்கிய தொடர்பினால் தாவரங்களிடம் கூட ஒரு நல்ல நட்புணர்வு ஏற்படுகிறது.
அயோத்யா காண்டம் 8- 28
நீர் வற்றிய பின் அணை கட்டி பயன் என்ன?
கதோதகே சேது பந்தோ ந கல்யாணி விதீயதே |
எல்லா நீரும் வற்றிய பின்னர் அணையைக் கட்டி என்ன பிரயோஜனம்?
அயோத்யா காண்டம் 9- 54
***