
Post No. 12,985
Date uploaded in London – — 5 FEBRUARY 2024
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
கர்ம ரகசியம்! – 5
இறந்தவர்கள் செல்லும் மூன்று வழிகள் – ரமணீயம், நிராபாதம், துர்த்தர்சம்!
ச.நாகராஜன்

Picture of Hell in Yama Loka
யம சபை வர்ணனையை வன பர்வத்தில் பார்த்து விட்டோம்.
யம லோகத்திற்கு மனிதர்கள் போவது எப்படி, யமதூதர்கள் எப்படிப்பட்டவர் என்பன உள்ளிட்ட பல கேள்விகள் எழுகின்றன.
இதை உமாதேவியார் மஹேஸ்வரனிடத்தில் கேட்கிறார். அவரும் அந்த ரகசிய விஷயங்களை உமாதேவியாருக்கு விளக்குகிறார்.
இதை அநுசாஸனபர்வம் 229ஆம் அத்தியாயத்தில் காணலாம்,
தேவியின் கேள்விகள் :
1) யம தண்டனைகள் எப்படிப்பட்டவை
2) யம தூதர்கள் எப்படிப்பட்டவர்?
3) இறந்த பிராணிகள் யமலோகத்திற்குப் போவதெப்படி?
4) யமனுடைய வீடு எப்படிப்பட்டது?
5) அவன் மக்களைத் தண்டிக்கும் வகை யாது?
இந்தக் கேள்விகள் எல்லாம் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவர் மனதிலும் எழுகிறது. இதையே தான் நமக்காகப் பார்வதி கேட்கிறார். பரமேஸ்வரன் பதில் சொல்கிறார்.
இப்படிப்பட்ட நுட்பமான ரகசிய விஷயங்களை பீஷ்மர் தர்மருக்குச் சொல்கிறார். அதை வியாஸ பகவான் மஹாபாரதத்தில் அப்படியே நமக்குத் தருகிறார்.
பரமேஸ்வரன் பார்வதி தேவியார் கேட்ட கேள்விகளுக்குப் பதிலைச் சொல்கிறார் இப்படி:

picture of Hell and torture
யமனுடைய கிருஹம்
தென் திசையில் யமனுடைய வீடு பெரிதாக இருக்கிறது.
அது விசித்திரமாகவும், அழகாகவும், அநேகம் பொருள்கள் அமைந்ததாகவும் இருக்கிறது. அது பித்ரு தேவதைகளாலும் பிரேதர்களின் கூட்டங்களாலும் (ஒருவகைப் பேய்) யமதூதர்களாலும், கர்மங்களில் அகப்பட்ட பல பிராணிக் கூட்டங்களாலும் நிரம்பியிருக்கிறது.
உலகத்தின் நன்மையில் ஊக்கமுள்ள யமன் தண்டித்துக் கொண்டு எப்போதும் அங்கே இருக்கிறான். அவன் தன் உள்ளத்தினால் பிராணிகளின் நல்வினை தீவினைகளை எப்போதும் அறிகிறான். அங்கிருந்து கொண்டு எல்லா இடங்களிலுமுள்ள பிராணிக் கூட்டங்களையும் நினைத்தவுடன் ஸம்ஹரித்துக் கொண்டிருக்கிறான்.
அவனுடைய மாயா ரூபங்களான பாசங்கள் தேவர்களாலும் அசுரர்களாலும் கூட அறியப்படுவதில்லை. அவனுடைய பெரிய சரித்திரத்தை மனிதன் எவன் அறிவான்?
யமதூதர்கள்
கர்மம் முடிந்த பிராணிகளை அந்தக் காரணம் பற்றிக் கிளம்புகின்றவர்களான யம தூதர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் அவர்களைப் பிடித்துக் கொண்டு போகின்றனர்.
உலகில் பிராணிகள் தாம் செய்யும் கர்மத்தினால் உத்தமமாகவும் அதமமாகவும் மத்தியமமாகவும் இருக்கின்றன. அவைகளின் அவற்றின் தகுதியின்படி எடுத்துக் கொண்டு யமனிடம் போகின்றனர்.
தர்மிஷ்டர்கள் உத்தமர்கள் என்று அறி.
அவர்கள் தேவர்கள் போல சுவர்க்கத்தில் இருப்பவர்கள்.
கர்மத்தினால் மூவுலகிலும் ஜனிப்பவர்கள் மத்தியமர்கள்.
திர்யக் ஜாதியில் பிறப்பவர்களும் நரகம் போகின்றவர்களும் மனிதர்களின் அதமர்கள்.
இறந்த பிராணிகள் யமலோகத்திற்கு போவதெப்படி?
இவர்கள் செல்லும் வழிகள் மூன்று வழிகளாக அறியப்படுகின்றன.
அவை கீழ்க்கண்ட பெயர் உள்ளவை
1) ரமணீயம்
2) நிராபாதம்
3)துர்த்தர்சம்
ரமணீயம் என்னும் மார்க்கமானது கொடிகளும், கொடி மரங்களும் நிரம்பி விளங்கி ஜலம் தெளித்துப் பூமாலைகளால் அலங்கரிக்கப்பட்டும், தூபங்கள் போடப்பட்டும், போகிறவர்களின் மனதைக் கவர்வதாகவும், போகிறவர்களுக்கு இனிமையான காற்றுள்ளதாகவும் இருக்கும்.
நிராபாதம் என்னும் மார்க்கமானது ஒளியோடு நன்றாகச் செய்யப்பட்டிருக்கும்.
மூன்றாவதாகிய துர்த்தர்சம் என்னும் மார்க்கம் கெட்ட வாசனையுள்ளதாகவும், இருள் மூடியதாகவும், கற்களும், நாய்ப்பற்களும்,மிக நிரம்பி கரடுமுரடாகவும் புழு பூச்சிகள் நிறைந்ததாகவும் நடக்க கஷ்டமானதாகவும் இருக்கும்
உத்தம, மத்திம, அதமர்களை மரண காலத்தில் யமதூதர்கள் இந்த மூன்று வழிகளிலேயே கொண்டு செல்வர்.
உத்தமர்கள் இறந்து போகும் போது அவர்களை யமதூதர்கள் சிறந்த உடை உடுத்தி வந்து சுகமாக ரமணீயம் மார்க்கம் வழியே கொண்டு செல்வர்.
**