பிரிட்டனில் பாண்டியர் சின்னம்; கீதையில் ஏசு!!

kilpeck church-2
Kilpeck Church, United Kingdom

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1476; தேதி 11 டிசம்பர், 2014.

பிரிட்டனிலும் இத்தாலியிலும் பல சர்ச்சுகளில் பாண்டியர்களின் மீன் சின்னம் காணப்படுகிறது. இது ஏன்?
ஏசு கிறிஸ்துவை மீன் என்று அழைத்தது எதனால்?

உலகம் முழுதும் மீன்களை காதல் மற்றும் அதிர்ஷ்ட சின்னமாகக் கருதுவதே இதற்குக் காரணமா?

எனது ஆங்கிலக் கட்டுரையின் சுருக்கத்தை மட்டும் இங்கே தருகிறேன்:-

1.உலகில் மீனுக்கு தெய்வ அந்தஸ்து கொடுத்தது இந்துக்கள். விஷ்ணுவின் முதல் அவதாரம் மச்சாவதாரம். உலகின் மிகப் பழமையான நூலான ரிக்வேதத்தில் மத்ஸ்ய சம்மட என்ற மர்ம மன்னர் பற்றிய செய்தி வருகிறது. இவரைப் பற்றிய விவரம் எதுவும் கிடைக்கவில்லை.

(உலகம் முழுதும் காணப்படும் மீன் வழிபாடு பற்றி முன்னொரு சமயம் ஆங்கிலக் கட்டுரை எழுதினேன். அதில் மேல் விவரம் காண்க.)

2.உலகில் மீனை, காதல் குடும்ப உறவுடன் சம்பந்தப் படுத்தியவர்கள் இந்துக்களே. காதல் தெய்வமான மன்மதனின் கொடியில் இருப்பது மீன்.

3.சிந்துசம்வெளிச் சின்னங்களில் மீன் வடிவில் உள்ள எழுத்துக்கள் எல்லாம் ஒளிவீசும் கடவுளரைக் குறிக்கும் என்பது அறிஞர்கள் வாதம்.

4.எகிப்தில் மன்னர்களும் குருமார்களும் மீன் சாப்பிட முடியாது. ஏனெனில் அவை புனிதமானவை.
5.சீனாவில் மகிழ்ச்சி, குடும்ப உறவின் சின்னம் மீன்கள்

three fishes scan
From Church Walls

6.சிந்தி இன மகான் உள்பட பல சாது சந்யாசிகள் – எல்லா மதங்களிலும் — மீன்களுடன் தொடர்புடையோரே.

7.ஏசு கிறிஸ்துவை மீன் சின்னத்துடன் தொடர்புபடுத்துவர். கிறிஸ்தவர்களைத் துன்புறுத்திய ரோமானிய மன்னர்களிடமிருந்து மறைக்க இப்படி மீன் சின்னத்தைப் பயன்படுத்தினர் என்பது ஒரு தரப்பு செய்தி.

இப்படிப்பட்ட செய்தி எல்லாம் ஐந்து ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே அதிக அளவில் உலவியது. க்ரேக்க மொழியில் மீன் என்பதற்கான இத்திஸ் என்ற சொல்லை அவர்கள் சுருக்கெழுத்தாகப் பயன்படுத்தினர் என்பர். ஆனால் இவை எல்லாம் பிற்கால கட்டுக் கதைகள் என்பது எனது துணிபு.

ஏசு கிறிஸ்துவுக்கும் கிரேக்க நாட்டுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவனைக் கூப்பீட்டு மூக்கைத் தொடு என்றால் நேரடியாக மூக்கைத் தொடுவதற்குப் பதிலாக கழுத்துக்குப் பின் கையை வளைத்துத் தொட முயற்சிப்பதற்கு இது சமம்.

gold coin

பானை என்ற சொல்லுக்குப் பொருள் என்ன? என்று கேட்டால் பாலும் நெய்யும் வைக்கும் பாண்டத்துக்கு பால்+நெய்= பானை என்று எட்டுக்கட்டிச் சொல்வது போன்றதே இது.

உண்மையில் ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருத சொல் மீனைக் குறிக்கும். ஜஸானாம் ச மகர அஸ்மி == மீன்களில் நான் மகரமாக இருக்கிறேன் – என்று கிருஷ்ண பரமாத்மா பகவத் கீதையின் விபூதி யோகத்தில் சொல்லி இருக்கிறார். ஆக ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருத்ச் சொல்லையே கிறிஸ்தவர்கள் சங்கேதச் சொல்லாக பயன்படுத்தினர் என்று பொருள் கொள்வதே பொருத்தமுடைத்தாம்.

மீன் சின்னம் அதிர்ஷ்ட சின்னம் என்பதால் உலகம் முழுதும் – அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே பயன்படுத்தினர்.

8. புத்த மதத்தில் எட்டு மங்களச் சின்னங்களில் ஒன்று—- இரண்டு மீன்கள்.
9.மஹாவீரர் பிறப்பதற்கு முன்னர் அவர் தாய் கண்ட கனவில் வந்த 16 சுப சின்னங்களில் துள்ளிப் பாயும் இரண்டு மீன்கள் இருந்ததாக சமண மத நூல்கள் செப்பும்.

10.பாண்டியர் காசுகள், செப்பேடுகள் முதலியவற்றில் இரண்டு மீன்களைப் பொறித்ததற்கு அதிர்ஷ்டம் என்பதே காரணமாக இருக்கலாம்.

pandya-flags

11. கர்நாடகத்தை ஆண்ட ஆலுபா என்ற பாண்டிய வம்சத்தினர் தங்கக் காசுகளில் மீன்களைப் பொறித்தனர்.. ஹொய்சாளர் சின்னங்களிலும் இதைக் காணலாம்.

12.பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளில் சர்ச்சுகளில் காணப்படும் இரட்டை மீன்கள் ஐந்தாவது நூற்றாண்டுக்குப் பின்னர் கிறிஸ்துவுடன் தொடர்புபடுத்தப்பட்டது.

13.பைபிளில் நிறைய சம்ஸ்கிருதச் சொற்கள் இருப்பது பற்றி நான் இரண்டு பகுதிகளைக் கொண்ட கட்டுரை எழுதியுள்ளேன். மச்சாவதாரம் போன்ற கதை பைபிளிலும் உண்டு. அதில் மனு என்பதற்குப் பதிலாக நோவா என்பவர் பெயர் வரும். நாவ என்றால் படகு, கப்பல் என்று வடமொழியில் பொருள். நோவா ஒரு கப்பலைக் கட்டிக் கொண்டுவந்ததால் அவருக்கு கப்பல்காரன் (நாவ=நோவா) என்ற பெயர் வந்தது. முஸ்லீம்களில் கடல் வணீகம் செய்தவர்களை மரைக்காயர் (மரக்கலக் காரர்) என்று அழைப்பது போல இது. ஆதாம், ஏவாள் என்பதெல்லாம் ஆத்மா, ஜீவாத்மா என்ற சொற்களின் மரூஉ என்று காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் கூறியதையும் முன்னரே கொடுத்துவிட்டேன்.

vira pandya
Pandyan Coins

முடிவுரை
1.இரட்டை மீன்கள் புனிதச் சின்னம்—அதிர்ஷ்டச் சின்னம் என்பதால் உலகம் முழுதும் உள.
2.ஜீசஸ் என்ற ஏசுவின் பெயர் ‘’ஜஸ’’ என்ற சம்ஸ்கிருதச் சொல்லுடன் ஒத்து இருப்பதால் இதை ஏசுவைக் குறிக்கும் ரகசிய சொல்லாகப் பயன்படுத்தினர். கிரேக்கம், லத்தீன், ஜெர்மானிய மொழிகள் எல்லாம் சம்ஸ்கிருதக் குடும்பத்தைச் சேர்ந்ததே என்று உலகமே ஒப்புக் கொள்வதால் மேல் விளக்கம் தேவை இல்லை.

3.மீனை புனித நிலைக்கு ஏற்றி சிந்து வெளி முத்திரைகளிலும் கடவுள்/தேவர் என்ற பொருளில் பொறித்தது இந்துக்களே.

100 யானைகளை மலையிலிருந்து உருட்டிவிட்ட ஹூண மன்னன்!

huns map

ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி-2

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1475; தேதி 11 டிசம்பர், 2014.

(நிறைய கட்டுரைகள் எழுதிக் கொண்டிருப்பதால் ஆங்கிலத்தில் வெளியான எனது கட்டுரையின் சுருக்கமான சாராம்சத்தை மட்டும் தருகிறேன்.)

“ராஜதரங்கிணி அதிசயங்கள் முதல் பகுதி”–யில் இந்த நூல் ஏன் தமிழர்களுக்கும் இலங்கை மக்களுக்கும் முக்கியமானது என்று எழுதினேன். முதல் தரங்கத்தில் (அத்தியாயத்தில்) ஹூண மன்னன் மிகிரகுலன் செய்த அட்டூழியங்கள் பற்றி வருகிறது.

1.மிகிரகுலன், நூறு யானைகளை மலையில் இருந்து உருட்டிவிட்டு அவை கதறிக் கதறி சாவதைக் கண்டு மகிழ்ந்தான். அரண்மனைக்குள் நுழைவதற்கு முன் “என்ன இது விநோத சப்தம்?– என்று வினவினான். காஷ்மீர் மலை முகட்டில் இருந்து ஒரு யானை மலைப் பள்ளத்தில் விழுந்துவிட்டது. அதனுடைய கதறல் சப்தம் இது — என்று அதிகாரிகள் கூறினர். உடனே அவனுக்கு மயிர்க்கூச்சம் ஏற்பட்டது. கேட்பதற்கே வேடிக்கையாக இருக்கிறது. மேலும் பல யானைகள மலை உச்சிக்குக் கொண்டு சென்று விரட்டி விழச் செய்யுங்கள் என்றான். அது முதல் அவனுக்கு யானைகளை உருட்டி விளையாடுவது பொழுது போக்கு ஆகிவிட்டது!!

2.மனைவி பிளவுசில் (ரவிக்கை) பாதங்கள் படம் இருப்பதைப் பார்த்து அதை ஏற்றுமதி செய்த இலங்கை மீது படை எடுத்தான். மனைவி அழகான ‘’டிசைன்’’ போட்ட பிளவுஸ் அணிந்து வந்தாள். உடனே இதை எங்கு வாங்கினாய்? மார்பகப் பக்கத்தில் கால் சுவடுகள் இருக்கிறதே! என்றான். அரசாங்க அதிகாரி ஓடி வந்து, இதை இலங்கையில் இருந்து வரவழைத்தோம். அங்கு மன்னரின் பாதங்களைப் போட்டு இப்படி துணிகள் தயாரிக்கிறார்கள் என்றனர். உடனே கோபம் பொத்துக் கொண்டு வந்தது. ‘’படை எடு, படை எடு’’- என்று கூச்சலிட்டான். இலங்கை மன்னன் புயல் வேக ஹூணப் படைகள் வருவதை அறிந்து ஓடி ஒளிந்தான். வேறு ஒரு மன்னனை பதவியில் அமர்த்திவிட்டு, மிகிரகுலன், புத்த மதப் பொக்கிஷங்களைச் சூறையாடிவிட்டு காஷ்மீருக்குத் திரும்பினான்.

3.போகும் வழியில் தமிழ்ச் சோழ மன்னன் தலையிலும் இரண்டு தட்டு தட்டிவிட்டுப் போனான். இவை எல்லாம் கல்ஹணர் எழுதிய விஷயங்கள். யார் அந்தச் சோழன் என்பதை தமிழர்கள் ஆராய வேண்டும்.

4.ஒரு அணையில் பாறாங்கல் அடைத்துக் கொண்டது. யாரவது ஒரு பத்தினி தொட்டால் பாறை அகன்றுவிடும். அதில் ஒரு யக்ஷன் இருக்கிறான் என்று அறிஞர்கள் சொன்னார்கள். பத்தினி என்று சொல்லிக் கொண்ட பெண்கள் தொட்டும் நகராமல் ஒரு குயவப் பெண் தொட்டவுடன் பாறை விலகியது. இதனால் கோபம் அடைந்து உயர் ஜாதிகளைச் சேர்ந்த மூன்று கோடிப்பேரை கொன்று குவித்தான். உயர்குலப் பெண்கள், அவர்களுடைய கணவன்மார்கள், குழந்தைகள் எல்லோரையும் கொன்றான்.

huns_gd

(இப்படி நடக்குமா? என்று நாம் யோசிப்போம். ஆனால் வரலாற்றில் இப்படி எவ்வளவோ சம்பவங்கள் உண்டு. ஹிட்லர், ஸ்டாலின், சூ என்லாய் போன்றோர் கோடிக் கணகான மக்களைக் கொன்றார்கள். அமெரிக்கா அணுகுண்டு வீசி ஹிரோஷிமா, நாகசாஹியில் ஒன்றும் அறியாத அப்பாவி ஜப்பானிய பொதுமக்களை மில்லியன் கணக்கில் கொன்று குவித்தது. அண்மையில் சதாம் ஹுசைனின் பேரக் குழந்தையைக் கூட அமெரிக்கா கொன்றது. இந்திரா காந்தியை சீக்கியர்கள் கொன்றனர் என்பதற்காக 3000 சீக்கியப் பெண்கள் குழந்தைகள், ஆண்களை ரவுடிக் கும்பல்கள் கொன்றன. திருஞான சம்பந்தர் என்ற பிராமண சிறுவனின் மடத்துக்கு தீவைத்த 8000 சமணர்களை பாண்டிய மன்னன் கழுவேறச் செய்தான். பொற்கொல்லன் ஒருவன் காரணமாக கோவலன் கொலையுண்டதால் கண்ணகி என்னும் பத்தினித் தெய்வத்துக்கு ஆயிரம் பொற்கொல்லர்களைப் பாண்டிய மன்னன் பலி கொடுத்தான் என்பது சிலப்பதிகாரம் நமக்கு அளிக்கும் செய்தி. இலங்கையில் கடைசி காலத்தில் ஆயிரக் கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். ஆயிரம் யானைகளைக் கொல்வோர் மீது மட்டுமே பரணி பாட முடியும் என்று தமிழ் நூல் கலிங்கத்துப் பரணி கூறுகிறது. ஆயினும் முறையான போரில் எதைக் கொன்றாலும் அது குற்றமாகாது என்று எல்லா நாடுகளும், மதப் புத்தகங்களும், இலக்கியங்களும் சொல்லும்.)

5.இவ்வளவு பாபம் செய்தும் இவன் கொடுத்த தானங்களை வாங்க காஷ்மீரி பிராமணர்கள் வரிசையில் நின்றனர்! அத்தகைய பிராமணர்க்ளும் கொடியவர்களே என்று காஷ்மீரி பிராமணன் கல்ஹணன் சாடுகிறான். இவர்தான் ராஜ தரங்கிணி என்னும் நூலின் ஆசிரியர்.

6.இறுதியில் எல்லாவற்றுக்கும் பரிகாரமாக கூரான வாள் பொருத்தப்பட்ட கொதிக்கும் இரும்புப் பலகையின் மீது ஏறி உயிர்விட்டான் மிகிரகுலன்.

7.இவனுக்கு புத்தமதம் பிடிக்காது. ஆகையால் ஆப்கனிஸ்தானத்தில் உள்ள புத்த விஹாரங்களையும் தூபிகளையும் நாசம் செய்து புத்த குருமார்களைக் கொன்று குவித்தான். சைவ சமயத்துக்கு மட்டும் ஆதரவளித்தான். சீன யாத்ரீகன் யுவாங் சுவாங்கும் இதைக் குறிப்பிடுகிறான்.

8.இவன் ஆண்டது கி.பி.515-ஐ ஒட்டிய காலம். அப்பொழுது தமிழ் நாட்டில் பல்லவர் ஆட்சி நடந்தது. ஆயினும் ஆங்காங்கே சேர சோழ, பாண்டிய மன்னர்கள் பெயரளவுக்கு இருந்திருக்கலாம்.

9.இவனுடைய ஆட்சி குவாலியர் (ம.பி) வரை இருந்தது ஒரு கல்வெட்டால் தெரிகிறது. பிறகு யசோ வர்மன் அல்லது பாலாதித்யன் என்ற குப்த மன்னன் இவனை விரட்டி அடித்தனர். அதற்குப் பின்னரே காச்மீரையும் ஆப்கனிஸ்தானத்தையும் வென்றான்.

10.ஹூணர்கள் என்பவர்கள் மங்கோலிய வம்சத்தினர் — நாடோடி மக்கள் — புயல் போல வருவர் — காட்டுமிராண்டிகள் போல நடந்து கொள்வர். புயற் காற்று சேதத்தை உண்டாக்கிவிட்டு போய்விடுவது போல இவர்களும் போய் விடுவர். போகும் வழியில் கிடைத்ததை எல்லாம் வாரிச் சுருட்டிக் கொண்டு போய்விடுவர்.
elephants

மேற்கூறிய விஷயங்களை விரிவாக அறிய விரும்புவோர், ஸ்லோகம் வாரியான முழு மொழி பெயர்ப்பையும் இந்தக் கட்டுரையின் ஆங்கில வடிவில் காண்க.

மூன்றாவது பகுதியில் மேலும் பல சுவையான செய்திகளைத் தருகிறேன்

—சுபம்—-
Hunnen

மஹரிஷி கவிஞன் பாரதி!

SM_BHARTHI_2317e(1)

டிசம்பர் 11 மஹாகவி பாரதியாரின் ஜன்ம தினம். அதையொட்டிய சிறப்புக் கட்டுரை இது!

மஹரிஷி கவிஞன் பாரதி!

Wriiten by ச.நாகராஜன்
Post No.1472; Dated 10th December 2014

செய்யு(ள்) நலம் சீரழிந்து செந்தமிழும் வாடுகையில்
உய்யு(ம்) நலம் காட்டியவன் ஓர் கவிஞன் – நெய்யுமொரு
கூட்டிற்கோ தேன் கூடு கொட்டு தமிழ்ச் சந்த மொழிப்
பாட்டிற்கோ பாரதியே தான் – ச.நாகராஜன்

தமிழ் தவம் இருந்து பெற்ற கவிஞன்
தமிழ் தவம் இருந்து பெற்ற பிள்ளை பாரதியார். தேசத்தையும் தெய்வத்தையும் ஒன்றாகப் போற்றி தமிழால் பாடி உயர்ந்த சிந்தனைகளை உலகிற்கு அளித்த மகாகவி அவன்.
தேசமும் தெய்வமும் ஒன்றே என்பதைப் பல இடங்களில் அவன் குறிப்பிடுகிறான்.
எடுத்துக்காட்டாக இரு இடங்களைக் குறிப்பிடலாம்.

குரு கோவிந்த சிங் கூறுவதாக வரும் பின் வரும்வரிகள் அவன் தன் கருத்தைத் தெளிவாகத் தெரிவிப்பது கண்கூடு:

“காளியும் நமது கனக நன்னாட்டுத் தேவியும்
ஒன்றெனத் தேர்ந்த நல் அன்பர்காள்!”

இன்னொரு பாடல் :
“முன்னை இலங்கை அரக்கர் அழிய
முடித்த வில் யாருடை வில்?
எங்கள் அன்னை பயங்கரி பாரத தேவி
நல் ஆரிய ராணியின் வில்”

Barathi_by_Kabil

தேசத்தையும் தெய்வத்தையும் தமிழால் பாட அவன் ஏன் முன் வந்தான்?

அதற்கும் அவனே பதில் கூறுகிறான்:
“யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்!”
உலக மகா கவிஞர்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி அவன் முன்னணியில் இருப்பதற்கான காரணம் கவிதையை ரஸானுபாவத்திற்காக மட்டும் பாடாமல் தேச எழுச்சிக்கும் சமுதாய உயர்வுக்கும் பெண் விடுதலைக்கும் இன்னுமுள்ள பிற நல்ல காரணங்களுக்காகவும் பயன்படுத்தி தன் தனித்தன்மையை உறுதிப்படுத்தியது தான்! உயர்ந்த சிந்தனையிலிருந்து ஒருபோதும் கீழே வராமல் இருந்த கவிதை ரிஷி அவன்.

ஆனால் காலத்தின் மாறுதலுக்கேற்ப யுகாவதார கவியாய் அவனை ஏன் சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது எனில், இது வரை தோன்றிய அனைத்துக் கவிஞர்களிடமிருந்தும் மாறுபட்டு புதிய நடையில் புதிய சிந்தனையுடன் புதிய லட்சியங்களுக்காக புதிய யுகம் தோன்றுவதற்காக அவன் பாடியது தான்.
போகின்ற பாரதத்தை போ போ போ என்று தூற்றித் தள்ளி விட்டு வருகின்ற பாரதத்தை

small bharati
“ஓளி படைத்த கண்ணினாய் வா வா வா
உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா வா”

என்று அவன் வரவேற்ற பாங்கே தனி! இந்தப் பாடலை முழுவதுமாகப் படித்தால் புதிய மந்திரத்தைத் தரும் புது மஹரிஷி கவிஞன் பாரதி என்பதை உணர முடியும்.
பழைய புதிய கவிதா இலக்கணத்தின் சங்கமம்!

அதற்காக சம்பிரதாயமான கவிதை ருசியை அவன் தராமல் இல்லை.
கம்பன் அலை புரண்டு ஓடி வரும் தெள்ளிய கோதாவரி ஆற்றைக் கவிதையுடன் ஒப்பிட்டு இப்படிக் கூறுகிறான்:

“சவியுறத் தெளிந்து தண்ணென்று ஒழுக்கமும் தழுவிச்
சான்றோர் கவியெனக் கிடந்த கோதாவரி”
(ஆரணிய காண்டம் சூர்ப்பணகைப் படலம்,1)

ஒரு கவிதை என்றால் அதில் ஒளி, தெளிவு, குளுமை, ஒழுக்கம் ஆகிய பண்புகள் இருக்க வேண்டும் என்பது கம்பனின் கவிதைக் கொள்கை.

பாரதியின் பாடல்கள் அனைத்தும் கோடி சூரிய பிரகாசம் கொண்ட ஒளிப் பாடல்கள். அதில் தெளிவு பற்றிச் சொல்லவே வேண்டாம். எந்த ஒரு பண்டிதரின் உதவியும் அதைப் புரிந்து கொள்ளத் தேவை இல்லை. சிறு குழந்தை கூட அதைப் படித்துத் தெளிந்து உத்வேகம் பெற முடியும். மனதிற்கு இதமான குளுமையைத் தருவதோடு உயர்ந்த சிந்தனையை மனதில் ஏற்றும் ஒழுக்கம் உள்ள பாடல்கள் அவனுடையவை.

shivaji bharati
உலகின் ஒப்பற்ற கவிதா வரிகள்
உதாரணத்திற்கு இரு பாடல் வரிகளை இங்கு குறிப்பிடலாம்;
ஆசை முகம் மறந்து போச்சே – சொற்றொடரே எளிமையானது; புதுமையானது; மனதின் உருக்கத்தை வெளிப்படுத்துவது.

ஆசை முகம் மறந்து போச்சே – இதை
யாரிடம் சொல்வேனடி தோழி
நேசம் மறக்கவில்லை நெஞ்சம் –எனில்
நினைவு முகம் மறக்கலாமோ?

பாடலை ஒரு முறை மனம் தோய்ந்து படித்துப் பார்த்தால் இனம் புரியாத ஒரு மேலான உணர்வு தோன்றுகிறது, இல்லையா! இதைத் தொடர்ந்து வரும் வரிகளைப் பார்ப்போம்.

தேனை மறந்திருக்கும் வண்டும் – ஒளிச்
சிறப்பை மறந்துவிட்ட பூவும்
வானை மறந்திருக்கும் பயிரும் – இந்த
வையம் முழுதுமில்லை தோழி” -ஆசை முகம் மறந்து போச்சே!!!

jesudas baharati

இதற்கு ஈடான வரிகள் உலக இலக்கியத்தில் எங்கும் இல்லை என உறுதிபடக் கூறலாம்! தேன் – வண்டு, ஒளிச் சிறப்பு – பூ, வான் – பயிர், இப்படி ஒரு அருமையான தொடர் வரிசையை மாபெரும் கவிஞன் ஒருவனால் மட்டுமே பளிச் பளிச் என மின்னல் போலத் தர முடியும். இதில் ஒளி, தெளிவு,குளுமை, ஒழுக்கம் ஆகியவற்றைக் காண முடிகிறது அல்லவா!

இன்னொரு பாடலான கண்ணம்மா என் காதலியில் வரும் அமர வரிகளுக்கு ஈடு இணை உண்டா, என்ன?

பாயு மொளி நீ யெனக்குப் பார்க்கும் விழி நானுனக்கு;
தோயும் மது நீ யெனக்குத் தும்பியடி நானுனக்கு;
வாயுரைக்க வருகுதில்லை; வாழிநின்றன் மேன்மை யெல்லாம்;
தூயசுடர் வானொளியே! சூறையமுதே! கண்ணம்மா!

வீணையடி நீ யெனக்கு, மேவும் விரல் நானுனக்கு;
பூணும் வடம் நீ யெனக்கு, புது வயிரம் நானுனக்கு;
காணுமிடந்தோறும் நின்றன் கண்ணி னொளி வீசுதடி!
எத்தனை நாட்கள் வேண்டுமோ இதன் சிறப்பினை எடுத்துக் கூற! வேதம் ஆழ்ந்து உரைக்கும் மிக மேலாம் சிந்தனைகளை இதில் காணலாம்!

என்னென்று சொல்வது பாரதியாரின் புகழை!
bharati ms

மஹரிஷி கவிஞன் பாரதியை முழுவதுமாகப் பல முறை படித்தவர்கள் அவன் புகழை முற்றிலும் உரைக்க நாள் ஆயிரமும் நா ஆயிரமும் போதா என்றே கூறுவர். என்றாலும் ஹா.கி, வாலம் அம்மையார் பாரதியின் புகழைக் கூறும் சில வரிகளை இங்கே நினைவு படுத்திக் கொண்டு மகிழ்வோம்:

வீரக் கனல் பொங்கும் வெற்றி மணிச் சிங்கம்!
விண்ணாடு மண்ணாடு வியந்து பணி தங்கம்!
கோரப் பகை அடிக்கும் கொடிய மணிக் கதிர்வேல்! ‘
கொடியவர்கள் கொட்டமழி நெடிய மணி நேமி

ஆருக்கும் அஞ்சாத ஆரமர் செல்வன்
அன்புக்கு என்பு தரும் அருளாளன் அண்ணல்

போருக்கு ரகுராமன்! புலமைக்கு வாணி!
பொற்புக்கும் நட்புக்கும் புண்ணியக் கண்ணன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்”

என்று அவர் பாரதியின் புகழை நெஞ்சாரக் கூறி மகிழ்கிறார்.
பாரதியின் கவிதா வரிகளில்

“சுவை புதிது பொருள் புதிது வளம் புதிது சொற் புதிது
அது ஜோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மஹா கவிதை

பாரதியைக் கற்போம்

கற்பார் பாரதி அல்லாது வேறொன்றைக் கற்பாரோ, என்ன!

ஆயுள் முழுவதும் பாரதியைக் கற்போம்; உயர்ந்த மஹரிஷிகளின் சிந்தனையைப் பெறுவோம். தேசமும் தெய்வமும் ஒன்று எனத் தெளிந்து தமிழால் பாடி நலம் பெறுவோம் வளம் பெறுவோம்!

******

ராஜதரங்கிணி அதிசயங்கள் – பகுதி 1

rajatarangini

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1470; தேதி 9 டிசம்பர், 2014.

ராஜதரங்கிணி என்றால் என்ன?
காஷ்மீரின் வரலாற்றைக் கூறும் நூல் ராஜதரங்கிணி — இதை கல்ஹணர் என்ற காஷ்மீரி பிராமணர் எழுதினார் — இது வடமொழியில் எழுதப்பட்டது. இதில் 3449 சுவைமிகு ஸ்லோகங்கள் உள்ளன. காஷ்மீர் வரலாறு நமக்கு எதற்கு என்று பல தமிழர்கள் நினைக்கலாம். இலங்கை மன்னரையும் சோழனையும் தோற்கடித்த மிஹிரகுலன் என்ற காட்டுமிராண்டி மன்னன் பற்றிய சுவையான செய்திகள், இலங்கை வரை ஆட்சிச் சக்கரத்தை பரவ விட்ட லலிதாதித்யன் போன்ற மன்னர்கள் பற்றிய செய்திகள் இதில் உள.

பாரதத்தின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேருவும் ஒரு காஷ்மீரி பிராமணர். அவருடைய மைத்துனர் ஆர்.எஸ்.பண்டிட் இதை வடமொழியில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். எங்கு தெரியுமா? சிறையில் உடகார்ந்து கொண்டு! அப்பொழுது நேருவும் சிறைவாசம் செய்தார். 1934 ஆம் ஆண்டில் அவர் இந்த ஆங்கில மொழி பெயர்ப்புக்கு டேராடூன் சிறையில் இருந்தே முன்னுரை எழுதினார். புத்தகத்தை சாஹித்ய அகாடமி வெளியிட்டது.

கல்ஹணரை வெளிநாட்டுக்கார்கள் மிகவும் பாராட்டுகின்றனர். ஏனெனில் தற்கால வரலாற்றுப் புத்தகம் போல மன்னர்களின் ஆண்டுகளைக் குறிப்பிட்டு இவர் புத்தகம் எழுதி இருக்கிறார். ஆனால் பல மிகைப்பட்ட செய்திகள் இருக்கதான் செய்யும். ஏனெனில் அவர் எழுதியது 12 ஆம் நூற்றாண்டில் — கிட்டத்தட்ட கம்பன் தமிழில் ராமாயணம் எழுதிய காலம் இது — நூலின் பெயர் ‘’அரசர்களின் ஆறு’’, அதாவது ராஜ தரங்கிணி. இதை அவர் எட்டு அத்தியாயங்களாகப் பிரித்துள்ளார். ஒவ்வொன்றும் ஒரு தரங்கம். (தரங்கம் என்றால் அலை என்று பொருள்)

கல்ஹணரைப் பற்றிய ஒரு விநோதச் செய்தி — இவர் கலியுக துவக்கம் கி.மு.3100 என்பதை ஒப்புக்கொள்ளாமல் 2500 என்கிறார். காஷ்மீரின் ஆட்சியை முஸ்லீம்கள் கைப்பற்றுவதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்னர் எழுதிய நூல் இது.

kalhanas_rajatarangini_medium

இவர் மிகப் பழங்காலத்தில் நடந்த விஷயங்களைச் சொல்லும் போது தெளிவில்லாமலும், இவரது காலத்தை ஒட்டிய செய்திகளைத் துல்லியமாகவும் கூறுவதாக நேரு கருதுகிறார்.

கல்ஹணர் ஒரு பெரிய கவிஞர். வரலாற்றைக் கவிதை நடையில் எழுதிய புத்தகம், அநேகமாக, உலகில் இது ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். நிறைய உவமைகலைப் பயன்படுத்துகிறார். ‘’பாலைவனத்தில் வசிப்பவனுக்கு கங்கை நதியில் மூழ்கிக் குளிக்கும் அருமை பெருமை தெரியுமா?’’ – என்பது போன்ற பல உவமைகளைப் போகிற போக்கில் அள்ளித் தெளித்து இருக்கிறார்.

புத்தகத்தில் காஷ்மீர் அரசர்களின் சூழ்ச்சிகள், சூதுவாதுகள், காம சேஷ்டைகள், கொடூரங்கள், பிராமணர்களின் முறை தவறிய பேராசை ஆகியவற்றை விவரிக்கிறார். பல நல்ல விஷயங்களையும் சொல்கிறார். லலிதாத்தியன் என்ற மன்னனின் கடல் கடந்த ஆட்சி, சூர்யா என்ற மன்னனின் பொறியியல் பணிகள், மேகவர்ணன் என்பவன் போர் மூலம் ‘’அஹிம்சையயை’ நிலைநாட்ட முயன்றது ஆகிய எல்லாவற்றையும் இதில் படிக்கலாம்.
stories_from_rajatarangini_tales_of_kashmir_idi013

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் சோழனையும் இலங்கை மன்னனையும் வென்ற ஹூணன் மிகிரகுலன் பற்றிய விவரங்களைத் தருகிறேன். அவன் மூன்று கோடிப் பேரை ஏன் கொன்றான், 100 யானைகளை ஏன் மலை மீதிருந்து உருட்டிவிட்டான் என்ற விஷயங்களையும் காண்போம்.

ராஜதரங்கிணி அதிசயங்கள் தொடரும்………………………………..

கலியுகம் பற்றிய விஞ்ஞான விந்தை: உலகம் அழியுமா?

earth-temps

Research paper written by London Swaminathan
Research article No.1462; Dated 6th December 2014.

2030-ஆம் ஆண்டில் காந்த துருவங்கள் இடம் மாறும் என்று ஜே.எம்.ஹார்வுட் என்பவர் 1970 ஆம் ஆண்டிலேயே கூறிவிட்டார். இப்படி மாறுவதால் உலகில் பேரழிவுகள் ஏற்படும் என்று சிலர் கூறுகின்றனர். இதிலலென்ன உண்மை உளது என்று காண்போம்.

இந்துக்கள் உலகத்தின் வயதை நான்காகப் பிரித்துள்ளனர்: கிருத யுகம்(4), த்ரேதா யுக (3), த்வாபர யுகம் (2), கலியுகம் (1). ஏன் இப்படி தலைகீழ் வரிசையில் 4,3,2,1 என்று யுகத்திற்குப் பெயரிட்டார்கள்?

ஏன் என்றால் சத்திய யுகமான கிருத யுகத்தில் தர்மம் என்னும் பசு மாடு நான்கு கால்களில் நிற்குமாம். த்ரேதா யுகத்தில் அதற்கு மூன்று கால்கள்தான். அதவது தர்மம் 25 விழுக்காட்டை இழந்துவீட்டது. அப்போது ராம பிரான் தோன்றினார். த்வாபர யுகத்தில் தர்மம் என்னும் மாடு இரண்டு கால்களை – அதவது 50 விழுக்காட்டை இழந்து விட்டது. அப்போதுதான் கிருஷ்ணன் தோன்றினார். யுகத்தின் முடிவில் மஹாபாரத யுத்தம் நடந்தது. கலியுகத்தில் தர்மப் பசுவுக்கு இன்னும் ஒரு காலும் போய், ஒற்றைக் காலில் 25 சதவிகித புண்ய கர்மாவுடன் தள்ளாடிக் க்ண்டிருக்கும். கலியுக முடிவில் அந்தக் காலும் போய் உலகமே அழியும். பிறகு மீண்டும் கிருத யுகம் பிறக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை.

இப்படி மாறிமாறி வரும் யுகங்களுக்கு காலம் எவ்வளவு என்றும் இந்துக்கள் கணக்கிட்டனர். உலகில் மற்ற நாகரீகங்கள் எல்லாம் 20-ன் மடங்குகளிலும் (மாயா நாகரீகம்), 40-ன் மடங்குகளிலும் (செமிட்டிக் மதங்கள்) சிறிய எண்களுடன் நின்றுவிட்டன. இந்துக்களோவெனில் பல லட்சம் வருடங்களைச் சொன்னதோடு இதற்கு முடிவு என்பதே இல்லை. இந்து வட்டச் சுழல்—மீண்டும் மீண்டும் நடந்து கொண்டே இருக்கும் என்றும் மனித ஆண்டு, தேவ ஆண்டு, பிரம்மாவின் ஆண்டுகள் என்பன வெவ்வேறு என்றும் சொன்னார்கள். இது ஏதோ கற்பனையில் பிறந்த வருடங்கள் என்று 200 ஆண்டுகளுக்கு முன் வரை நினைத்தார்கள். இப்பொழுது பல்வேறு உலகங்கள் பல்வேறு வேகத்தில் சுற்றும்போது இவை எல்லாம் சாத்யம் என்று தெரிகிறது.

Yugas

இதற்கு என்ன விஞ்ஞான விளக்கம் என்று எண்ணிப் பார்த்தால் விடை கிடைக்கவில்லை. இப்பொழுது விஞ்ஞானம் முன்னேற, முன்னேற புதுப்புது விளக்கங்கள் கிடைக்கின்றன. இந்துக்கள் சொன்ன காலக் கணக்கீடு:–

கிருத யுகம் – 1728 ,000, 000 ஆண்டுகள்
த்ரேதாயுகம் – 1296, 000, 000 ஆண்டுகள்
த்வாபரயுகம் – 864,000 ஆண்டுகள்
கலியுகம் – 432, 000 ஆண்டுகள்

இந்த நாலு யுகங்களையும் சேர்த்து சதுர்யுகம் என்பார்கள். 8,640,000,000 ஆண்டுகள் ஒரு கல்பம் எனப்படும். அதுதான் பிரம்மாவின் ஒரு நாள். அதுபோல அவர் நூறு ஆண்டுகள் வாழ்வார். அவருக்குப் பின்னால் வேறு ஒரு பிரம்மா வருவார். இந்தக் காலச் சுழற்சிக்கு முடிவே இல்லை.

கலியுகத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் ஓரளவு விஞ்ஞான விளக்கம் சொல்லலாம். நம்முடைய பூமி ஒரு காந்த உருண்டை. எப்பொழுதும் காந்த மண்டலத்தை உருவாக்கிய வண்ணம் இருக்கும். ஏன் இப்படி நடக்கிறது. நாம் வாழும் பூமியின் மேல் ஓடு வெறும் எட்டு மைல்கள்தான். அதன்மீதுதான் நாம் வசிக்கிறோம். அதற்குக் கீழே அதள பாதாளத்துக்குப் போனால் பூமியின் வயிற்றில் அது நெருப்பைக் கட்டிக்கொண்டு தன்னைத் தானே சுற்றுகிறது. அது மட்டுமா? தான் தட்டாமாலை சுற்றுவதோடு சூரியனையும் சுற்றி வருகிறது. பூமியானது சந்திரனையும் தன்னோடு இழுத்துக் கொண்டு சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனோவெனில் நவக் கிரஹங்களுடன் பால்வெளி மண்டலத்தைச் சுற்றிவருகிறது. இப்படி பூமி சுற்றுவதால், கடலைக் கடைந்தது போல பூமியின் வயிற்றைக் கடையும் போது பூமியே காந்த சக்தி உருவாக்கும் ‘டைனமோ’ ஆகிவிடும்.

இந்த பூமியில் வட துருவம், தென் துருவம் என இரு துருவங்கள் உண்டு. அதே போல காந்தத்திலும் – அதாவது பூமி என்னும் கிரஹத்தைச் சுற்றி இருக்கும் – காந்த இரு துருவங்கள் உண்டு. வானத்தில் பூமியைச் சுற்றிவரும் பல விண்கலங்கள் மூலம் இவற்றை ஆராய்ந்து வருகின்றனர். அதன்படி பூமியின் காந்த துருவங்கள் வேகமாக நகர்ந்து வருவது தெரிகிறது. பூமியின் காந்த மண்டலம்தான் நம்மை சூரியனிடமிருந்து வரும் தீய கதிர்களிl இருந்து காத்துவருகிறது. இப்படி காந்த மண்டலம் இல்லாவிடில் நமது பூமியும் சந்திரன், செவ்வாய் போல வறண்ட இடங்களாகக் காட்சி தரும். உயிரினங்களே இரா.

geomagnetic-field-orig_full

மாக்னெட்டொகெட்டொன்
காந்த மண்டல வட துருவம் மெதுவாக நகர்ந்து தென் துருவத்துக்குப் போய்விடும். அதே போல தென் துருவம் மெதுவாக நகர்ந்து வட துருவத்துக்குப் போய்விடும். அதாவது இரண்டும் இடத்தை மாற்றிக் கொள்ளூம். இது ஓரிரவில் நடந்து விடாது ஆயிரம் ஆண்டுகூட ஆகலாம்.

இது நடைபெறும் காலம் பக்கத்தில் வந்துவிட்டது விண்கல ஆய்வில் தெரிய வந்ததால் விஞ்ஞானிகள் கவலை அடந்துள்ளனர். 2030-ல் இது நடைபெறும் என்று ஏற்கனவே பல விஞ்ஞானிகள் கூறியது உண்மையாகி வருகிறது. இப்படி துருவம் மாறுவது நாலு லட்சம் ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் நடைபெறும் என்றும் இதற்குக் காரணம் காந்தப் புலன் பலவீனம் அடைவதுதான் என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுவர். கடந்த சில நூறு ஆண்டுகளில் பூமி அதன் காந்த சக்தியில் பத்து சதவிகிதத்தை இழந்துவிட்டது.

துருவங்கள் மாறும் நாலு லட்சம் அண்டுகள் என்பது கிட்டத்தட்ட கலியுகத்தின் காலத்தை (432,000) ஒட்டிவருகிறது. நாம் கலியுகம் முடிவில் பெரிய மாறுதல் வரும் என்று நம்புவது போல விஞ்ஞானிகளும் காந்தப் புலன்கள் மாறும் போது பெரிய மாறுதல்கள் ஏற்படக்கூடும் என்பர். தகவல் போக்குவரத்து சீர் குலையும், விண்வெளியில் பறக்கும் விண்கலங்களுக்கு ஆபத்து ஏற்படக் கூடும் என்பர். இதை மாக்னெட்டோகெடான் என்று அழைப்பர். கடந்த காலத்தில் இப்படி மாறிய போது உலகம் அழியவில்லை என்று கல் படிம அச்சுகள் காட்டுகின்றன.ஆனால் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டன என்பது அவர்கள் தரப்பு வாதம். மற்றவர்களோவெனில் டைனோசர் போன்ற ராட்சத மிருகங்கள் அழிந்தது இதனால்தான் என்பர்.

solar wind

ஒரு சுனாமி வந்த பின்னர்தான் அதன் பேரழிவுச் சக்தியை நாம் உணர்ந்தோம். அது போல ஒரு காந்த துருவ மாற்றம் ஏற்பட்ட பின்னர்தான் நமக்கு அது பற்றி விளங்கும் என்றும் அவர்கள் கூறுவர்.

காந்த துருவ மாற்றம் மெதுவாகத்தான் நடைபெறும்; அது நடக்க 1000 ஆண்டு ஆகும் என்பது போல நாமும் யுகங்களுக்கு இடையே துருவ சந்தி என்று இடைக்கால, இன்டர்வல் – வைத்திருக்கிறோம். இதையெல்லாம் ஒப்பிட்டுப் பார்க்கையில்தான் கலியுகம் என்பது காந்தப் புலன் மாற்றம் அடையும் காலம் என்று எண்ணத் தோன்றுகிறது. பெரிய இடைவெளி, சின்ன இடைவெளி என்று இருக்கும் என்றும் அதற்குப் பின்னரே யுகங்கள் முழுதும் மாறுபட்டிருக்கும் என்றும் புராணங்கள் பகரும். இவைகளை எல்லாம் எண்ணிப் பார்க்கையில் விஞ்ஞானம் வளர, வளர நமக்குப் புராணங்கள் சொன்னது உண்மையே என்ற உணர்வு பலப்படுகிறது.

earth pressure

சந்திரனில், விண்கலம் இறங்கிவிட்டது, செவ்வாய்க்கு விண்கலம் போய்ச் சேர்ந்துவிட்டது, வாயேஜர் என்னும் விண்கலம் சூரிய மண்டலத்தையே தாண்டிப் போய்விட்டது என்றெல்லாம் பத்திரிக்கையில் வரும் செய்திகளைக் கேள்வியே கேட்காமல் நம்பும் நம்மவர், நமது முன்னோர்கள் —– நம்மிடம் தேர்தலில் வோட்டோ, கையில் பணமோ கேட்காமல்—— நமது நன்மைக்காக எழுதிவைத்ததை நாம் நம்ப வேண்டாமா? அதுதான் அறிவுடைமை அன்றோ!

contact swami_48@yahoo.com

வியாசருக்கு இரண்டு நோபல் பரிசுகள் தருக!

VYASA top

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1459; தேதி 5 டிசம்பர், 2014.
(This is already posted in English)

உலகிலேயே மிக நீண்ட நூலான மஹாபாரதத்தை இயற்றிய,
உலகிலேயே மிகப் பழைய நூலான வேதங்களை நமக்குப் பாதுகாத்து அளித்த,
உலகிலேயே அதிகமான சமயக் கதைகளைக் கொண்ட 18 புராணங்களை நமக்கு தொகுத்துத் தந்த
வியாச மாமுனிவருக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசையும் இலக்கியத்துக்கான நோபல் பரிசையும் அளிக்க வேண்டும்.

அவர் காலத்தில் நோபல் பரிசு போன்ற ஒரு பரிசு இருந்திருக்குமானால் அவருடன் போட்டி போட யாருமே இருந்திருக்க மாட்டார்கள்.

இந்தியாவில் மிகவும் கறுப்பாகவும் அவலட்சணமாகவும் பிறந்த முனிவர் வியாசர். இவருடைய அம்மா ஒரு மீனவப் பெண்மணி. பெயர் சத்யவதி. அப்பா பெயர் பராசர முனிவர். வியாசருக்குப் பெயரே “தீவில் பிறந்த கறுப்பன்”, அதாவது கிருஷ்ண த்வைபாயன வியாசன்.

இவர் எவ்வளவு அவலட்சணம் என்றால், ராஜ வம்சத்தை நடத்திச் செல்ல பிள்ளைகள் இல்லாமல் விசித்ரவீர்யன் இறந்துவிட்டான் என்பதால் அவனது மனைவியர் அம்பா, அம்பாலிகா ஆகியோர் மூலம் பிள்ளைகளை உண்டாக்கு என்று அம்மா இட்ட கட்டளையை சிரமேற்கொண்டார். ஆனால் இவரைப் பார்த்தவுடன் அவர்கள் இருவரும் வெறுப்பால் படுக்க மறுத்தனர். பின்னர் அறுவறுப்புடன் படுத்ததால் ஒரு குழந்தை குருடாகவும் மற்றொரு குழந்தை ‘’ஆல்பினோ’’ குறையுடன் வெளுப்பாகவும் பிறந்தன. மூன்றாவது முறை அவருடன் படுத்து நல்ல பிள்ளையைப் பெறு என்று அம்மா சொன்ன போது அப்பெண்மணிகள் வேலைக் காரியை வியாசருடன் படுக்க அனுப்பவே ஒரு கள்ளப் பிள்ளை பிறந்தது. அவ்வளவு கறுப்பு/அவலட்சணம்!

Shree-Vyasa-Ji4

ஆனால் உலகிலேயே ஒரு தூய ஆன்மா, ஒரு மகத்தான ஆன்மா இருந்ததென்றால் அது வியாச மாமுனிவனே. உலகில் யாரும் சாதிக்க முடியாத மகத்தான பணிகளைச் செய்தார். ஆகையால் தினமும் விஷ்ணு சஹஸ்ரநாமம் படிப்போர் இவரை விஷ்ணு என்று போற்றுவர் (வியாசாய விஷ்ணு ரூபாய வியாச ரூபாய விஷ்ணவே). இவரைத்தான் இந்துக்கள் முதல் குருவாக கருதி ஆண்டுதோறும் வியாச பவுர்ணமியை குரு பூஜையாகக் கொண்டாடுகின்றனர்.

அவர் செய்த மகத்தான இலக்கியப் பணிகள்
1.அவர் வாழ்ந்த கி.மு.3100-ல் வேதங்கள் அழிந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. காரணம் அதை எழுதக் கூடாது, வாய் மொழியாகத்தான் கற்க வேண்டும் என்ற விதி இருந்தது. யாரும் அத்தனை வேதங்களையும் மனப்பாடம் செய்ய முடியாது. மேலும் வேதங்கள் எண்ணிக்கையில் கடல் போலப் பெருகிவிட்டன. உடனே அவர், அழிந்துபோனதைத் தவிர மிச்சமுள்ள வேதங்களைத் தொகுத்து நாலு மிகப் பெரிய அறிவாளிகளை அழைத்து அவர்கள் மூலம் பரவச் செய்தார். இன்று வரை வாய் மொழியாக வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. உலகில் இப்படிப்பட்ட அதிசயத்தை வேறு எங்குமே காணமுடியாது.

உலகிலேயே பழமையான நூலான வேதங்களில் மனிதகுலத்தின் வரலாறும் உயரிய சிந்தனைகளும் இருக்கின்றன. சில வெளிநாட்டுக் காரர்கள் வேண்டுமென்றே இதை சுமேரிய ஜில்காமேஷ் காவியத்துக்குப் பின்னர் என்பர். முதலில் ஜில்காமேஷ் காவியம் முழு உருப்பெற்றது கி.மு 800 வாக்கில்தான். இரண்டாவது அது ஆதிமனிதனின் அடிபிடிச் சண்டை பற்றிய அசுர காவியம். அவரை யாரும் வழிபட்டதும் இல்லை
vyasa3

2.தமது காலத்தில் இந்தியாவில் வழங்கி வந்த அத்தனை பழமொழிகள், கதைகள், தர்ம விதிகள் அனைத்தையும் தொகுத்து அவற்றை மஹாபாரத கதையுடன் அழகாகப் பின்னிப் பிணைந்து உலகிலேயே மிகப் பெரிய இதிஹாச நூலை உருவக்கினார். மஹபாரதத்தில் இரண்டு லட்சம் வரிகளும் சுமார் ஒரு மில்லியன் சொற்களும் உள. அது மட்டுமல்ல. வியாசர் அதில் முதல் பகுதியிலேயே (ஆதிபர்வம்) ஒரு சவாலும் விட்டார். உலகில் உள்ள எல்லாப்பொருளும் இதனில் உள. இதனில் உள்ள அத்தனை பொருளும் வேறு எங்கும் இல என்றார். அதுவும் உண்மையே. அத்தனை விஷயங்களும் நீதி நெறிகளும் இந்த இதிகாசத்தில் இருக்கின்றன.

3.அவர் செய்த மூன்றாவது சாதனை 18 புராணங்களைத் தொகுத்ததாகும். நூற்றுக்கணக்கான புராணங்கள் இருந்தபோதிலும் அவற்றில் சிறப்புமிக்க 18-ஐ எடுத்து அவைகளை எழுதினார். எட்டு லட்சம் பாக்களையும் 16 லட்சம் வரிகளையும் உடைய புராணங்களில் இந்து மதத்தின் சாரம் கதைகள் வாயிலாக வெளிப்படுத்தப்படுகின்றது. இதுவும் அவர் செய்த சாதனை.

வியாசர் இந்த சதானைகளைச் செய்த காலத்தில் உலகில் வேறு எந்த மொழியிலும் இலக்கியம் இல்லை. மோசஸ் பிறக்கவே இல்லை. கிரேக்க கதாசிரியர் ஹோமரும் பிறக்கவில்லை. சம்ஸ்கிருத வேதம் தவிர உலகில் வேறு எந்த நூலும் இல்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பாடல்கள் மட்டும் சில மொழிகளில் இருந்தன. இலக்கியமென்று எதுவும் இல்லை!

இந்த மூன்று காரணங்களுக்காக வியாசருக்கு இலக்கிய நோபல் பரிசு கொடுக்கவேண்டும். அவர் தோன்றியிராவிடில் இந்துமதம் அழிந்தே போயிருக்கும்.

vyasa02

சமாதான நோபல் பரிசு எதற்கு?
மஹாபாரதப் போரைத் தவிர்ப்பதற்காக திருதராஷ்டிரனுக்கு எவ்வளவோ புத்திமதி சொல்லி உன் பிள்ளையை அடக்கு என்றார். ஆனால் அவர் முக்காலமும் உணர்ந்த முனிவர் என்பதால் போர் நடைபெறப்போவதும், அதன் முடிவும் அவருக்கு முன்கூட்டியே தெரியும்.

இதைவிட அவர் செய்த மிகப் பெரிய சமாதான வேலை ரிக் வேதத்தில் சமாதானம், அமைதி, உலக நலன் பற்றிய பாக்களை முதலாவது மற்றும் பத்தாவது மண்டலத்தில் சேர்த்ததாகும். ரிக் வேதத்தின் கருத்து என்ன என்பதைச் சொல்லும் முகத்தான், கடைசி பாடலாக அமைதி பற்றிய ஒரு பாடலை வைத்தார். மஹா பாரதத்தில் பாரத சாவித்ரி என்ற பகுதியில் நாலே ஸ்லோகங்களில் அதன் கருத்தை வெளியிட்டார். அதே போல மகத்தான வேதத்தின் கருத்தை கடைசி பாடலில் வெளியிட்டார். உலக மகா தேசிய கீதமாக வைக்கத் தக்க பாடல் அது.

உலக நாடுகள், இரண்டு உலகப் போர்களை நடத்தி பல லட்சம் மக்களைச் சாகடித்த பின்னர் ஐ நா சாசனத்தில் எழுதிய விஷயங்களை அதற்கு முன்னரே — 5000 ஆண்டுகளுக்கு முன்னரே — எழுதி விட்டார். அகவே அவருக்கு சமாதான நோபல் பரிசும் உரித்தாகுக!

vyasa 1
இதோ அவர் நமக்கு தொகுத்தளித்த ரிக் வேதத்தின் கடைசி பாடல் ( ரிக் வேதம் 10-191) வரிகள்:
உங்கள் அனைத்து பிரார்த்தனையும் ஒரே கருத்துடையதாகுக !
உங்கள் இறுதி லட்சியம் ஒருமித்ததாகுக !
உங்கள் அணுகுமுறை ஒரே மாதியாக இருக்கட்டும் !
நீங்கள் பேசுவதெல்லாம் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் ஆசை அபிலாசைகள் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் இதயங்கள் ஒன்றுபடட்டும் !
உங்கள் நோக்கம்/எண்ணம் ஒன்றாக இருக்கட்டும் !
உங்கள் ஒற்றுமை பரிபூரணமானதாகட்டும் !
எல்லோரும் மகிழ்ச்சியுடன் இதைச் செய்யுங்கள் !

வாழ்க வியாசன் புகழ்!!
–சுபம்–

சிரியா நாட்டில் இந்துக் கோவில்!

maa_naina_devi
Naina (Nayana) Devi Temple, Bilaspur, HP

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1457; தேதி 4 டிசம்பர், 2014.

சிரியா என்பது முஸ்லீம் நாடு. அங்கே நயன (கண்) தேவி கோவில் இருக்கிறது. ஆனால் 5000 ஆண்டுகளுக்கு முன் வழிபாடு நடந்ததால் அது பற்றி யாருக்கும் ஒன்றும் தெரியவில்லை. இந்தியாவில் உள்ள நயனதேவி கோவிலுடன் ஒப்பிடுகையில்தான் அதன் சிறப்பு தெரியும்

சிரியாவில் டெல் பிராக் என்னும் இடத்தில் ஆயிரக்கணக்கான கண் உருவங்களும் கண் தேவியர் உருவங்களும் கிடைத்தன. வேறு எங்கும் இப்படிக் கிடைக்காததால் அது என்ன என்றே அவர்களுக்குத் தெரியவில்லை. அவை அனைத்தும் இந்துக்கள் வழிபடும் நயன தேவி உருவங்கள் என்று நான் கருதுகிறேன்.

ஹிமாசலப் பிரதேசத்தில் பிலாஸ்பூர் என்னும் இடத்தில் ஒரு குன்றின் மீது நைனா தேவி கோவில் இருக்கிறது. நயன, லோசன, அக்ஷி,, நேத்ர என்ற சம்ஸ்கிருத சொற்களுக்கு கண் என்று பொருள். இங்கு கண் வடிவத்தில் தேவி வழிபடப் படுகிறாள்.

தக்ஷ யக்ஞத்தில் சிவனுக்கு அழைப்பு இல்லாததால் சிவ பெருமான் அவனுடைய யாகத்தை உருக்குலைத்ததும் அதன் காரணமாக தேவி தீயில் குதித்து உயிர் இழந்ததும் எல்லோரும் அறிந்த கதையே (திருவிளையாடல் சினிமா). தீயில் உயிர் நீத்த ‘’சதி’’யின் உருவத்தை சிவன் எடுத்துச் செல்லவே தேவியின் உடற் பகுதிகள் இந்தியாவில் 51 இடங்களில் விழுந்தன. அந்த 51 கேந்திரங்களும் சக்தி பீடங்கள் ஆயின. பல்லாயிரக் கணக்கான மக்கள் இன்றும் அந்த சக்தி க்ஷேத்திரங்களுக்குச் சென்று அருள் பெற்று வருகின்றனர்.

middle-figure
Tell Brak Eye Idol, Syria

தேவியின் கண்கள் (நயனம்) விழுந்த இடம் பிலாஸ்பூரில் நைனா தேவி கோவில் ஆகியதாக தல புராணம் கூறும். இதே போல உத்த்ரகண்டில் உள்ள நைனிடால் கோவிலும் பெயர் பெற்ற கோவில் ஆகும். அந்த ஊரின் பெயரான நைனிடால் என்பதே நயன தளம் என்பதில் இருந்தே வந்தது. பிலாஸ்பூர் கோவிலில் சீக்கிய குருவான குரு கோவித சிம்மன் பெரிய சண்டி யக்ஞம் செய்த பின்னரே மொகலாய மன்னரை எதிர்த்துப் போரிட்டார் என்பர்.

சிரியாவில் டெல்பிராக்கில் கண்டெடுக்கப்பட்ட கண் உருவம் போல தமிழ்நாடு, கேரள கோவில்களில் மாரியம்மன், தேவி உருவங்களுக்கு கண் பூ வாங்கிப் போடும் வழக்கம் உண்டு. அது மட்டும் அல்ல மீனாக்ஷி, காமாக்ஷி, நீலாயதாக்ஷி, விசாலாக்ஷி என்ற தேவியர்கள் பெயரிலும் கண் (அக்ஷி) சிறப்பிக்கப்படுகிறது. இந்து மகளிரின் பெயர்களில் லோசனி, அக்ஷி, நயன, நேத்ர என்ற பெயர்கள் நிறைய இடம்பெறும்.

naina-devi-temple-nainital
Nainital Temple, Uttarkhnad

புரி தேர்த்திருவிழாவில் பலபத்ரா, கிருஷ்ணா, சுபத்ரா உருவங்களிலும் கண் பெரிதாக சித்தரிக்கப்படும். சிவனுடைய மூன்றாவது கண்ணாகிய நெற்றிக் கண் ஞானத்தையும் அபூர்வ சக்திகளையும் குறிக்கும். இவை எல்லாம் இந்துக்கள் , கண் என்னும் அவயத்துக்குக் கொடுத்த சிறப்பைக் காட்டுவன.

சிரியா கண் மலர்களை ஒப்பிடக் கூடிய ஒரே இடம் இந்தியக் கோவில்கள்தான் என்பதே அந்தக் கோவில் இந்துக் கோவிலாக இருந்த இடம் என்பதை நிரூபிக்கும்.

சிரியாவில் உள்ள கோவிலை இந்துக்களின் கோவில் என்று சொல்ல வேறு என்ன ஆதாரங்கள் உள்ளன?

1.டெல் பிராக் என்னும் இடத்தின் மற்றொரு பெயர் ‘’நகர்’’. இது நகரம் என்னும் சம்ஸ்கிருத்ச் சொல்லாகும். புறநானூற்றில் (பாடல் 6) நகர் என்னும் சொல் கோவில் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
tell brak, syria

2.இந்த பகுதி முழுதும் கி.மு1500ஆம் ஆண்டுகளில் இந்து மிட்டனிய அரசர்களால் ஆளப்பட்டது. தசரத, பிரதர்தன என்ற பெயர்களுடன் அவர்கள் ஏரத்தாழ 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். உலகிலேயே மிகப் பழைய சம்ஸ்கிருதச் சொல் கல்வெட்டுகளும் சிரியா-துருக்கி எல்லையில்தான் கிடைத்தன. மிட்டன்னிய மன்னர் கையெழுத்திட்ட உடன்படிக்கை களிமண் படிவ (கி.மு 1400) கல்வெட்டுகளில் கிடைத்தன. அதில் வேதகால தெய்வங்கள் பெயர்கள் உள.

3.கண் உருவங்கள் கிடைத்த இடத்தில் கி.மு.2600ல் நரம் சின் என்பவன் ஒரு அரண்மனை கட்டி இருக்கிறான். இவன் ஜில்காமேஷ் போன்றோருக்கு முன்னர் அரசாண்டவன். ‘’சின்’’ என்றால் சந்திரன் என்று பெயர். நம் ஊரில் மன்னர்கள் ஹரிச் சந்திரன், தேவ சந்திரன், ராம சந்திரன் என்று பெயர்கள் வைத்துக் கொண்டதுபோல அவர்கள் ஊரில் நிறைய சந்திரன்கள் (சின், சுயென், நன்னன்) உண்டு. நம்மைப் போலவே பெயருக்கு முன்னொட் டாகவோ பெயருக்கு பின்னொட்டாகவோ சின் / சந்திரன் வரும். இது சம்ஸ்கிருத மொழி அமைப்பு. பின் வரும் மன்னர்கள் பட்டியலைக் காண்க. இவர்கள் எல்லோரும் கி.மு.1600க்கு முன் அரசாண்டவர்கள்:–

இப்பி, நரம் சின், சுசின், சின் எட்டினம், சின் எரிபம், ரிம் சின் (ராம சந்திரன்), ரிம் சின்-2, சின் மகிர், அபில சின், சின் முபாலித்.

99-00_Hamoukar_fig4
Syria Eye Goddesses

சின் என்பதை சேன என்றும் படிக்கலாம். ஆனால் சந்திரன் என்ற பொருள் கிட்டா. நன்னன் என்பதும் சந்திரனையே குறிக்கும். சங்க காலத்தில் தமிழ் நாட்டில் நன்னன் என்ற மன்னன் இருந்தான். வடக்கில் நன்ன தேவன் என்ற பெயரில் மன்னன் இருந்தான். சுமேரியாவில் நன்னன் என்பது வழிபாட்டுக்குரிய பெயர்.

puri
Balabhadra, Krishna, Subhadra of Puri Rath Yatra

இன்ன பிற காரணங்களால் இந்தக் கண் கோவிலும் இந்துக் கோவிலாகவே இருக்க வேண்டும். மிட்டனியர்கள், காசைட்ஸ், ஹிட்டைட்ஸ் ஆகிய இன மக்கள் இந்தியாவில் இருந்து சென்றவர்களே. அவர்கள் சம்ஸ்கிருத குடும்ப மொழியையே பேசினர் என்பது ஆரரய்ச்சியாளர்களின் துணிபு.

–சுபம்—

naina-devi1

குறுந்தொகை அதிசயங்கள்

kannaki cooking

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1449; தேதி 1 டிசம்பர், 2014.

சங்கத் தமிழ் இலக்கியத்தில் பதினெட்டு மேல் கணக்கு நூல்கள் உண்டு எனவும் அதில் பத்துப் (10) பாட்டு+ எட்டு (8)த்தொகை அடக்கம் எனவும் கண்டோம். சங்க காலத்துக்குப் பின்னர் திருக்குறள் உள்ளிட்ட 18 கீழ்க்கணக்கு நூல்கள் தோன்றியதையும் அறிவோம். எட்டுத்தொகை நூலில் ஒன்றான பதிற்றுப்பத்து அதிசயங்களைக் கண்டோம். பின்னர் புறநானூற்று அதிசயங்களைக் கண்டோம். இன்று எட்டுத் தொகை நூலில் மேலும் ஒரு நூலான குறுந்தொகை என்னும் நூலின் அதிசயங்களைக் காண்போம்.
குறுந்தொகையில் குடும்ப உறவு தொடர்பான 400 அகத்துறைப் பாடல்கள் இருக்கின்றன. இவை குறுகிய அடிகளைக் கொண்ட சின்னச் சின்ன பாடல்கள்.

தமிழர்கள் என்னென்ன உணவு சாப்பிட்டார்கள் என்றால் நீண்ட பட்டியலையே தரலாம். பெரும்பாணாற்றுபடையில் எந்தெந்த ஜாதியினர் வீட்டுக்குப் போனால் என்னென்ன உணவு கிடைக்கும் என்று அழகாகப் பாடி வைத்துள்ளனர். ஆயினும் குறுந்தொகை உணவு பற்றி பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

வற்றல் குழம்பும் தயிர் சாதமும்

ஒரு தோழி அவள் நண்பி நடத்தும் திருமண வாழ்வை அறிய அவள் வீட்டுக்குச் சாப்பிடச் சென்றாள்– பின்னர் திரும்பி வந்து அப்பெண்ணின் தாயிடம் சொன்னாள்,
“அடியே! உன் மகள் வீட்டுக்குச் சாப்பிடப் போனேன். நல்ல அருமையான தயிர் சாதமும் வற்றல் குழம்பும் சமைத்து வைத்திருந்தாள். நல்ல வாசனை! தாளித்துக் கொட்டியிருந்தாள். அடுப்பின் புகை தாளாமல் எல்லாவற்றையும் புடவையிலேயே துடைத்துக்கொண்டாள்; கணவனோ அதை ரசித்து, ருசித்து சுவைத்து சாப்பிட்டான். அவள் முகம் மலர்ந்தது:–
முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்
……………………………….
தான் துழந்து இட்ட தீம் புளிப் பாகர்
இனிது எனக் கணவன் உண்டலின் – (கூடலூர்க் கிழார், 167)

பாடல் 277ல் ஓரில் பிச்சையார் வேறு ஒரு உணவு பற்றிப் பாடுகிறார். அதோ ! நாய்கள் நுழைய முடியாத (அந்தணர்) தெருவில் நெய் கலந்து வெண்சோறு போடுவர். உன் செம்பில் வெந்நீரும் தருவர். அதைப் பெறும் துறவியாரே என் கணவர் எப்போது வருவார்? வாடைக் காலம் வந்துவிட்டதா? என்று ஒரு த்ரிகால ஞானியிடம் ஒரு பெண் வினவுகிறாள். துறவிகள் முக்காலம் உணரும் த்ரிகால ஞானிகள் என்று தொல்காப்பியம் செப்பும் (தொல்.புறத்.20). ஐயர்கள் வசிக்கும் தெருவில் நாய்களோ கோழிகளோ போகக் கூடாது என்று பெரும்பாணாற்றுப்படையும் செப்பும் (வரிகள் 298-301).

குரங்குகள் பற்றிய அதிசயச் செய்திகள் என்ற கட்டுரையில் ஒரு குரங்கு, கணவன் உயிர் இழந்ததால் தற்கொலை செய்து கொண்ட செய்தியை எழுதி இருந்தேன். அதுவும் பொறுப்புடன் தன் குட்டிகளை சுற்றத்தாரிடம் ஒப்புவித்துவிட்டு மலை முகட்டில் இருந்து விழ்ந்து இறந்தது. இது கணவனுடன் உடன் கட்டை ஏறும் ‘’சதி’’ போன்றது (பாடல் 69)

கார்க்கியர் என்று உபநிஷதத்தில் ஒருரிஷியின் பெயர் உண்டு. எப்படி புறநானூற்றில் வால்மீகி, மார்க்கண்டேயன் போன்ற பெயர்கள் உளதோ அதே போல குறுந்தொகையில் கார்ர்கியர் என்ற ரிஷி பெயரில் ஒரு புலவர் இருக்கிறார். சாண்டில்யன் , மஹாபாரத சல்லியன் பெயரிலும் புலவர்கள் இருக்கின்றனர். தமிழைக் கிண்டல் செய்து பின்னர் கபிலரிடம் தமிழ் கற்று ஒரு தமிழ்ப் பாட்டும் பாடிய வட நாட்டு ஆரிய அரசன் யாழ் பிரம்ம தத்தன் என்பவனும் குறுந்தொகைப் புலவனே!!
dhenupureeswar, chennai
Dhenupureeswar Temple, Chennai

சம்ஸ்கிருதச் சொற்கள்
குறுந்தொகையில் பல புலவர்கள் தயக்கமின்றி பல சம்ஸ்கிருதச் சொற்களைக் கையாளுவர். அவையாவன:–

அகில், அச்சிரம், அமயம், அமிழ்தம், அரசன், அவை, இமயம், ஆரியர், உலகம், ஏமம், கடிகை, கமண்டலம், கலாவம், காமம், காலம், குணன், குவளை, சகடம், சூலி, சேமம், தண்டு, தாது, தூது, தெய்வம், நகர், நீலம், நேமி, பக்கம், பணிலம், பருவம், பலி, பவழம், பிச்சை, மண்டிலம், மணி, மதம், மதி, மாலை, முகம், முத்து, முரசு, யாமம், வாசம் (உ.வே.சாமிநாத அய்யர் தந்த பட்டியல்)

தமிழ்ப் பெண்கள் மறு பிறப்பில் நம்பிக்கை உடையவர்கள். அடுத்த பிறப்பிலும் நீயே கணவனாக வரவேண்டும் என்று விரும்பினர் என்று அம்மூவனார் பாடுகிறார் (பாடல் 49)
இம்மை மாறி மறுமை ஆயினும்
நீ ஆகியர் எம் கணவனை

பழந்தமிழ் வழக்கங்கள்

பறையும் சங்கும் ஊதி திருமணம் செய்தல் (ஆண்டாள் பாடிய வாரணம் ஆயிரத்திலும் உண்டு), திருமணம் செய்த பின்னர் பெண்ணின் சிலம்பைக் கழித்தல், சுடுகாட்டைக் கண்டால் விலகிச் செல்லுதல், முதியோர் சென்று திருமணம் பேசுதல், பிறையைத் தொழுதல் ஆகியவற்றைக் குறுந்தொகை நமக்கு அளிக்கிறது.

dance,odisi

குறுந்தொகை அளிக்கும் தமிழ் பொன்மொழிகள்

பெரு நன்று ஆற்றின் பேணாரும் உளரே (பாடல் 115)
பெரிய நன்மையைச் செய்தால் போற்றாதோர் உண்டோ

நல் இசை வேட்ட நயனுடை நெஞ்சின்
கடப்பாட்டாளனுடைப் பொருள் போலத்
தங்குதற் குரியதன்று (143)
புகழையே விரும்பும் நல்ல மனிதனிடம் உள்ள பொருள் அவனிடம் தங்காது எல்லோருக்கும் பயன்படுவது போல

திறவோர் செய்வினை அறவது ஆகும் (247)
திறமையுள்ளோர் செய்யும் காரியம் அறத்துடன் பொருந்தியது — (தர்மம் உடையது)

சன்றோர் புகழும் முன்னர் நாணுப;
பழியாங்கு ஒல்பவோ காணுங்காலே (252)
பெரியார், தம்மைப் புகழ்வதற்கு முன்னரே வெட்கப்படுவர். அப்படிப்பட்டவர்கள் பழிச் சொல்லைக் கூறினால் பொறுத்துக் கொள்வரோ?

புலவர்களின் விநோதப் பெயர்கள்
சில புலவர்களின் பெயர் தெரியாத காரணத்தாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சிறப்பு சொற்றொடர் காரணமாகவோ அதையே அவர்களுக்குப் பெயராக வைத்துள்ளனர். இது போல ரிக்வேத முனிவர்கள் பெயரிலும் பல பெயர்கள் இருக்கின்றனர்!!

செம்புலப்பெயல் நீரார், கயமனார், அணிலாடு முன்றிலார், நெடு வெண் நிலவினார், மீன் எறி தூண்டிலார், விட்ட குதிரையார், ஓரேர் உழவனார், கூவன் மைந்தன், காலெறி கடிகையார், ஓரில் பிச்சையார், கல் பொரு சிறு நுரையார், கள்ளில் ஆத்திரையனார், குப்பைக் கோழியார், பதடி வைகலார், கவை மகன், கங்குல் வெள்ளத்தார், குறியிரையார். — இவர்களில் 13 பேரின் பெயர்கள் அவர்கள் பாடிய பாடல்களில் வரும் சொற்கள்!!

_HY29BONALU-2__1533282g
Bonalu festival

இன்னும் சில சுவையான செய்திகள் இதோ:–

பாடல் 61: சிறுவர் இழுத்துச் செல்லும் குதிரை வண்டி பொம்மை
பாடல் 156: பார்ப்பன மகனே! பார்ப்பன மகனே! என்று துவங்கும் பாடலில் வேதத்தை எழுதாக் கற்பு என்ற மிக அழகிய சொல்லால் வருணித்துவிட்டு கணவன் மனைவியைச் சேர்த்துவைக்கும் மந்திரம் ஏதேனும் வேதத்தில் உண்டா என்று கேட்கிறார் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார்.

பாடல் 300: கடல் சூழ் மண்டிலம் என்ற சொற்கள் இந்தப் பூமி உருண்டையானது என்பது தமிழர்களுக்குத் தெரியும் என்பதைக் காட்டும். கோப்பர்நிகசுக்கு முன்னரே இந்தியருக்குத் தெரிந்த சாதாரண விஷயம் இது.

பாடல் 135: வினையே ஆடவர்க்கு உயிரே; வாள் நுதல் மனை உறை மகளிர்க்கு ஆடவர் உயிர் = “தோழி! வேலைதான் ஆடவர்க்கு உயிர், மனைவியர்க்கு கணவன் தான் உயிர்!”
பாடல் 1: பெண்களுக்கு பூ கொடுக்கும் வழக்கம்

குறுந்தொகையில் வரும் கடவுளர்

பாடல் 1:முருகன்
பாடல் 362: முருகனுக்கு ஆட்டுக் குட்டி பலி
பாடல் 218: சூலி என்னும் துர்க்கையை வணங்குதல், தமிழ் பெண்கள் காப்பு நூல் அணியும் வழக்கம், சோதிடம் கேட்கும் வழக்கம்
பாடல் 267:யமன்
பாடல் 87:மரா மரக் கடவுள்
பாடல் 89, 100: கொல்லி மலைப் பாவை
பாடல் 372: சுனாமி, நில அதிர்ச்சி, கடல் எல்லை மாறுதல் (இவை பற்றி நற்றிணை, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுபத்திலும் உண்டு)
பாடல் 361: காதலன் வாழும் மலைப் பகுதியில் வெள்ளத்தில் அடித்து வந்த காந்தள் கிழங்கைக் கொஞ்சி அதை நட்டு வைத்துக் கணவன் போல எண்ணி மகிழ்தல்
பாடல் 151: இப்பாடலில் வரும் வங்கா என்ற பறவை மடகாஸ்கர் தீவிலும் உண்டு.
பாடல் 119: யானையைப் படாத படுத்தும் வெள்ளைப் பாம்பு (இது என்ன பாம்பு என்பது ஆய்வுக்குரியது)

400 பாடல்களிலும் நனி சுவை சொட்டும்; படித்து இன்புறுக!
–சுபம்–

சதுரங்க பந்தம் – 10

sarasvathy

தமிழ் என்னும் விந்தை!

கட்டுரையை எழுதியவர் :– By ச.நாகராஜன்
கட்டுரை எண்- 1447; தேதி 30 நவம்பர், 2014.

புதிர் : கீழே உள்ள வார்த்தைகளைக் கவிதையாக மாற்ற வேண்டும். குதிரை தாவும் போக்கில் சென்று உரிய கட்டங்களில் உள்ள வார்த்தைகளை வரிசையாக எடுத்துப் பொருத்தினால் கவிதையைப் படிக்க முடியும்!

sor to king good say luck loy eth
and moth a soon dis our to bad
place ry church his force is hat al
er queen him wight he to may truth
man his and and chess es knight op’s
a sneer the and un lawn of tates
cas that at less pawn no bish lant
eth faith tles have the gal in love

சற்று கஷ்டமான புதிர் தான்: உலகில் குறுக்கெழுத்துப் போட்டி அறிமுகமாவதற்கு முன்னர் இது போன்ற பொழுதுபோக்குப் புதிர்கள் மேலை நாடுகளில் வெளி வந்து கொண்டிருந்தன.
கவிதையைக் கண்டுபிடிக்க எப்படி சதுரங்க கட்டங்கள் வழியே செல்வது என்பதைப் பார்ப்போம்:-
கீழே உள்ள கட்டங்களின் படி வார்த்தைகளை அமைக்க வேண்டும்.

14 55 22 37 12 51 18 35
23 38 13 54 17 36 11 50
56 15 40 21 52 9 34 19
39 24 53 16 33 20 49 10
2 57 28 41 8 61 32 47
25 42 1 60 29 48 7 62
58 3 44 27 64 5 46 31
43 26 59 4 45 30 63 6

ஒன்று என்ற கட்டத்தில் இருக்கும் வார்த்தை the.
இரண்டு என்ற கட்டத்தில் இருக்கும் வார்த்தை man
இப்படியே 64 வரை உள்ள எண்களில் எந்த வார்த்தைகள் உள்ளன என்பதை அறிந்து அவற்றை சேர்த்துப் பார்த்தால் கீழே உள்ள கவிதை வருகிறது.

The man that have no love of chess
Is, truth to say, a sorry wight,
Disloyal to his king and queen.
A faithless and ungallant knight;
He hateth our good mother church,
And sneereth at the bishop’s lawn;
May bad luck force him soon to place
His castles and estates in pawn!

ஆங்கிலக் கவிதையைக் கட்டங்களில் காண்போம்:

bandhamnew10

செஸ் எனும் சதுரங்கம் பற்றிய கவிதை இது! குதிரை தாவும் விதமாகத் தாவித் தாவி இதைக் கண்டு பிடிப்பதில் ஒரு ஆனந்தம் இருக்கவே செய்கிறது. ஆனால் இதில் sorry, disloyal, faithless, ungallant, hateth,mother, sneereth, bishop’s, castles போன்ற வார்த்தைகள் பிரிக்கப்பட்டிருப்பதையும் காணலாம். 64 வார்த்தைகளுக்கு பதில் 52 வார்த்தைகளே கவிதையில் இருப்பதால் இப்படி பிரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இப்படி ஒரு கவிதையைப் பிரித்து சதுரங்கத்தில் அமைப்பதில் அவ்வளவாக சுவாரசியம் இல்லை என்பது உண்மையே.
தமிழில் எழுத்துக்கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ள செய்யுள்களையும் அதில் அடங்கியுள்ள விந்தைகளையும் பார்க்கும் போது அதன் உயரிய தன்மை தெரிய வருகிறது.

இது ஒரு புறமிருக்க, இந்த ஆங்கிலக் கவிதையில் உள்ளது போன்ற அமைப்பு மேலே உள்ள (சென்ற அத்தியாயத்தில் தரப்பட்டுள்ள) தமிழ் நேரிசை ஆசிரியப்பாவில் உள்ளதா? பாடலின் பொருள் என்ன? விளக்கம் கிடைக்கவில்லை. ஆனால் இவை போன்ற நுட்பமான விஷயங்கள் அடங்கிய தாரணை நூல் தமிழகத்திலோ அல்லது தமிழ் நூல்களைச் சேகரித்துள்ள உலகம் முழுவதுமாகப் பரவி ஆங்காங்குள்ள நாடுகளில் இருக்கும் தமிழ் ஆர்வலர்களிடையேயோ நிச்சயம் உள்ளது. ஒரு நாள் நமக்குக் கிடைக்கக் கூடும்! கிடைக்கும் போது, அதில் சதுரங்க பந்தம் பற்றிய இன்னும் சில விந்தைகளை நாம் அறிய முடியும். அந்த நாளை விரைவில் உருவாக்குவது தமிழ் ஆர்வலர்களின் கையிலே தான் உள்ளது.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும், அரிய நமது தமிழ் நூல்களை இனம் கண்டு அச்சிட்டு விளக்குவீர் என்று பாரதி பாணியில் உரக்கக் கூவத் தான் தோன்றுகிறது!

**************** தொடரும்

தோன்றிற் புகழொடு தோன்றுக! உத்திஷ்ட! யசோ லப !!

Srimad_Bhagavad__4c53e78e9a0a5

கட்டுரையை எழுதியவர் :– லண்டன் சுவாமிநாதன்
ஆராய்ச்சிக் கட்டுரை எண்- 1440; தேதி 27 நவம்பர், 2014.

பகவத் கீதையில் கண்ண பிரான் உலக மக்களுக்கு ஒரு கட்டளை இடுகிறான்:
உத்திஷ்ட ! யசோ லப !!
எழுந்திரு ! புகழ் அடை!! (பகவத் கீதை 11-33)

இதையே வள்ளுவனும் அழகாகச் சொல்கிறான்:

தோன்றிற் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலிற் தோன்றாமை நன்று – குறள் 236

பொருள்:- ஒருவன் பிறந்தால் புகழ் அடையவேண்டும் என்ற அவாவோடு – அதற்குரிய குண நலன்களுடன் பிறக்க வேண்டும். அக்குணம் இல்லாதார் பிறக்காமல் இருத்தலே நல்லது.

கண்ணனும் இதே கருத்தையே வலியுறுத்துவான். அர்ஜுனன் ஏதேதோ சாக்குப் போக்கு சொல்லி யுத்தம் செய்யாமல் தப்பிக்கலாம் என்று பார்க்கிறான். கண்ணன் விடவில்லை. பலவிதமான எடுத்துக் காட்டுகளைச் சொல்லி வழிப்படுத்தப் பார்க்கிறான்.

பகவத் கீதையில் உத்திஷ்ட! (எழுந்திரு) என்று கண்ண பிரான் குறைந்தது நாலு முறையாவது கட்டளை இடுகிறான். அதாவது, நமது ஊரில் சண்டித்தனம் செய்யும் மாட்டை மாட்டு வண்டிக்காரன் விரட்டுவது போல எழுந்திரு என்று மாற்றி மாற்றிக் குரல் கொடுக்கிறான்.
Srimad_Bhagavad__4bfd17abd98d4

இந்தியா- பாகிஸ்தான் எல்லைக்குச் சண்டை போட நம் ஊர் உசிலம்பட்டி இளைஞரை அனுப்புகிறோம். அவர் முதல் நாள் இரவு மஹாத்மா காந்தி புத்தகத்தையும் புத்த பகவான் சரித்திரத்தையும் படித்துவிட்டு அடாடா! நாளைக்கு நாம் துப்பாக்கியே எடுக்கக்கூடாது என்று சண்டித்தனம் செய்தால் அவருடைய பாட்டாளத்தின் மேஜர் அவருக்குத் தக்க தண்டணை கொடுப்பார். அவர் அஹிம்சைக்காக ராணுவத்தில் சேரவில்லை. துஷ்டர்களுக்கு ஹிம்சை தருவதே அவர்தம் கடமை.

“சுடச் சுடரும் பொன் போல ஒளிவிடும்” — என்ற உவமையை வள்ளுவன் ஞானிகளுக்குப் பயன்படுத்துவான்.
உசிலம்பட்டி இளைஞருக்கும் அதே வரிகள் வேறு பொருள் தரும். அவர் ஆட்களைச் சுடச் சுட— (சுட்டுத் தள்ளத் தள்ள) — பொன்= தங்கப் பதக்கம் ஒளிரும். அதாவது நிறைய பேரைக் கொன்றால் அவருக்கு தங்கப் பதக்கம் மட்டுமா, ‘’பரமவீர சக்ரம்’’ கூடக் கிடைக்கும்.

AriseAwake_p
ராஜீவ் காந்தியையும் இந்திரா கந்தியையும் கொன்ற கொலைகாரர்களுக்கு தண்டனை அளிக்க ஒரு நீதிபதி கருணையின் காரணமாகத் தவறினால் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவார். ராணுவ வீரனானாலும் நீதிபதி யானாலும் அவரவர் சட்ட திட்டங்களைப் பின்பற்ற வேண்டும். போர் வீரன் க்ஷத்ரிய தர்மத்தையும் நீதிபதி ஒரு சட்ட தர்ம (ஸ்மிருதி) நூலையும் பின்பற்ற வேண்டும்.

ஒருவனை ஒருவன் கொன்றால் அவனுக்கு மரண தண்டனை கிடைக்கும். அவனே போரில் பல ஆட்களைக் கொன்றால் அவனுக்கு மிகப்பெரிய ராணுவ விருது கிடைக்கும். அது க்ஷத்ரிய தர்மம். உலகம் முழுதுமுள்ள நடை முறை. அதே போல நாம் ஒருவரைக் கொன்றால் ஒரு புறம் சட்டம் நம்மை விரட்டும், மறுபுறம் பாவம் நம்மை விரட்டும். ஆனால் ஒரு நீதிபதி அவரது பதவிக் காலத்தில் நூறு பேருக்கு மரண தண்டனை விதித்தாலும் அவரைப் பாவம் ஒட்டாது. கடமையைச் செய்ததற்குப் புண்ணியமே கிடைக்கும். தூக்கு மேடைப் பொறுப்பாளன் எத்தனை பேர் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டினாலும் அவனை பாவம் ஒட்டாது. அவன் விருப்பு வெறுப்பின்றி தன் கடமையைச் செய்கிறான்.

இவ்வளவு சின்ன விஷயத்தை அர்ஜுனனுக்குப் புரிய வைக்க, பாவம்! கிருஷ்ண பரமாத்மா படாதபாடு பட்டார். அர்ஜுனனைச் சமாதானப் படுத்த அவர் 1400 வரிகள் பேச வேண்டியதாயிற்று. அதுவும் நல்லதாகப் போயிற்று. இல்லாவிடில் இந்து மத தத்துவங்களை ஒட்டு மொத்தமாக ‘’ஜூஸ்’’ பிழிந்து, அதில் சர்க்கரையையும் தேனையும் சேர்த்து, வாசனைக்கு ரோஸ் எசன்ஸையும் விட்டது போன்ற பகவத் கீதை நமக்குக் கிடைத்திருக்குமா?

malaysia_stamp_vivekananda
கீதையில் இதற்கு முன் சொன்ன உத்திஷ்ட பகுதிகளும் சுவையானதே.
இரண்டாம் அத்தியாயத்தில் (2-3)

க்லைப்யம் மாஸ்மகமஹ = சீ ! சீ ! பேடித்தனத்தை விட்டு எழுந்திரு – என்று கொஞ்சம் அதட்டல் மிரட்டலாகவே பேசி விடுகிறார் கண்ணன்.

இன்னும் ஒரு இடத்தில் இதோ பார்! இந்த அத்தைப் பாட்டி கதைகளை எல்லாம் என்னிடம் சொல்லாதே. “போரில் இறந்தால் வீர சுவர்க்கம்- வெற்றி பெற்றாலோ மாபெரும் சாம்ராஜ்யம்! எழுந்திரு! நண்பா! (2-37) என்கிறார்.

4-41-ல் வரும் உத்திஷ்ட அஞ்ஞானத்தை ஞானம் என்னும் வாளால் வெட்டிவிட்டு என்று குறள் கொடுக்கும் ஆன்மீக உத்திஷ்ட ஆகும்.

பகவத் கீதை ஒரு அதிசயமான நூல். எல்லா இடங்களிலும் அர்ஜுனனுக்கு சுதத்திரம் தருகிறார் கண்ணன் —- கொஞ்சம் அதட்டுகிறார், மிரட்டுகிறார், உருட்டுகிறார் —- ஆயினும் இறுதியில் நண்பனே! உனக்கு எது நல்லதோ அதைச் சொல்லிவிட்டேன். ஆயினும் உன் இஷ்டம்!! என்று அவனையே முடிவு எடுக்க அனுமதிக்கிறார். அதாவது நம் வீட்டில் அப்பா அம்மா நமக்கு எப்படி அதட்டியும் உருட்டியும் மிரட்டியும் அன்பாகவும் பண்பாகவும் சொல்லுகிறார்களோ அதே ‘’டெக்னிக்’’கைத் தான் – உத்தியைத் தான் – கண்ணனும் பின்பற்றுகிறான்.

bhagavad-gita

எப்படி திருக்குறளை திரும்பத் திரும்பப் படிக்கும் போது புதுப்புது பொருள் கிடைக்குமோ அப்படி — தொட்டனைத்தும் மணற்கேணி என — பகவத் கீதையை அதிகாலையில் படிக்கையில் புதுப்புது பொருள் தோன்றும். ஸ்ரீ சித்பவானந்த சுவாமிகள் எழுதிய பகவத் கீதை பேருரை அல்லது சென்னை மயிலாப்பூர் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் அண்ணா எழுதிய உரை இருந்தால் போதும். ஆங்கிலத்தில் சின்மயானந்தா உரை போதும்.

புத்தகம் இருந்தாலே நீங்களும் ஞானம் என்னும் ஏணியில் முதல் படியில் கால் எடுத்து வைத்ததாகக் கருதலாம்.
–சுபம்—