
Written by London Swaminathan
Post No. 14,475
Date uploaded in London – 5 May 2025
Contact – swami_48@yahoo.com
Pictures are taken from various sources for spreading knowledge.
this is a non- commercial blog. Thanks for your great pictures.
tamilandvedas.com, swamiindology.blogspot.com
xxxx
ஞானமயம் வழங்கும் மே 4- ஆம் தேதி
உலக இந்து செய்திமடல்
****
Collected from popular newspapers and edited for broadcast.
ஞானமயம் வழங்கும் உலக இந்து செய்திமடல்
செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்து வழங்கும் செய்தி மடல்
அனைவருக்கும் வைஷ்ணவி ஆனந்த் வணக்கம்
இன்று ஞாயிற்றுக்கிழமை மே 4- ஆம் தேதி 2025-ம் ஆண்டு
காஞ்சிபுரத்தில் புதிய சங்கராச்சாரியார் தீட்சை பெற்றார்


காஞ்சி சங்கர மடத்தின் 71-வது இளைய மடாதிபதியாக ஸ்ரீ சுப்பிரமணிய கணேச சர்மா பொறுப்பேற்றார்
காஞ்சி சங்கர மடத்தின் புதிய இளைய மடாதிபதிக்கு சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என பெயர் சூட்டப்பட்டது.
2533 ஆண்டுகள் பழமையான ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, ஸ்ரீசத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு அட்சய திருதியை நாளில் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடத்தின் இளைய மடாதிபதியாக, சன்யாச தீட்சை வழங்கி ஆசி வழங்கினார். அதன்பின், இளைய மடாதிபதிக்கு சன்யாச தீட்சை வழங்கி, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் என்ற பெயர் சூட்டப்பட்டது.
தீட்சை வழங்கும் நிகழ்ச்சி
காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 70வது மடாதிபதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இளைய பீடாதிபதிக்கு தீட்சை வழங்கும் வழிபாடுகள் காலை 5.30 மணிக்கு ஆரம்பமாகியது. காலை 6:00 மணியில் இருந்து, 7:30 மணிக்குள் காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயிலில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தத்தில், இளைய மடாதிபதியான, சத்ய வெங்கட் சூர்ய சுப்ரமண்ய கணேச சர்மாவிற்கு 71வது மடாதிபதியாக சன்யாச தீட்சை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.தீர்த்த அபிஷேகம்
தீட்சை பெறுவதற்கு முன்பு திருக்குளத்தில் இறங்கிய கணேச சர்மா தனது கடுக்கண், மோதிரம், பூணூால், அரைஞாண் கயிறு ஆகியவற்றை துறந்து, மகிழ்ச்சியுடன் சந்நியாசத்தை ஏற்றார். அதன் பின் வேத மந்திரம் முழங்க காலை 6:30 மணிக்கு சன்யாச தீட்சை வழங்கினார் சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். தீட்சை வழங்கிய பிறகு காவி வஸ்திரம், கமண்டலம், தண்டத்தை ஸ்ரீகணேச சர்மாவுக்கு விஜயேந்திரர் வழங்கினார்.
தொடர்ந்து இளைய மடாதிபதி தலையில் சாளக்கிராமம் வைத்து, சங்கு தீர்த்ததால் அபிஷேகம் செய்து, பல்வேறு மந்திர உபதேசங்கள் செய்தார். காஞ்சி சங்கர மடத்தின் இளைய பீடாதிபதியாக பொறுப்பேற்றுள்ள கணேச சர்மாவுக்கு, ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்று, பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நாமம் சூட்டினார். பின் இருவரும் இணைந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.
சந்நிதியில் தரிசனம்
தொடர்ந்து காலை 8.00 மணி முதல் 9.00 வரை ஸ்ரீ காமாட்சி அம்பாள் சந்நிதி மற்றும் ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியார் சந்நிதியில் தரிசனம் மற்றும் விஷேச பூஜைகள் நடந்தன. காலை 9 மணிக்கு ஸ்ரீ காமாட்சி அம்பாள் கோயிலில் இருந்து ஸ்ரீமடத்திற்கு ஊர்வலம் துவங்கியது. மடம் வந்தடைந்ததும் ஸ்ரீ மஹா திரிபுர சுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமி சந்நிதியில் தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து பீடாதிபதிகள், ஸ்ரீ சங்கராச்சாரியார் மற்றும் ஸ்ரீ சுரேஷ்வராச்சாரியார் சந்நிதி, ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி மஹா சுவாமிஜி மற்றும் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரியார் சுவாமிகளின் பிருந்தாவனத்தில் தரிசனம் செய்தனர்.
பிருந்தாவன் மண்டப மேடைக்கு சுவாமிகள் வருகை தந்தனர். வேத மந்திரம் முழங்க காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக பொறுப்பேற்றார் ஸ்ரீசத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். அவருக்கு சங்கராச்சாரியார் ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசி வழங்கினார். தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் பிற மாநிலங்களின் பல்வேறு கோவில்களில் இருந்து வந்த பிரசாதங்களை இளைய பீடாதிபதி பெற்றுக்கொண்டார்.
பக்தர்களுக்கு தரிசனம்
மாலையில் பக்தர்களுக்குத் தரிசனம் தந்தார்கள்
விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத், பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், துக்ளக் ஆசிரியர் எஸ். குருமூர்த்தி, டாக்டர் சுதா சேஷய்யன் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். காஞ்சிபுரம் சங்கர மடத்தின் மேலாளர் ந.சுந்தரேச அய்யர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தார்.
சிறப்பு ஏற்பாடுகள்
சன்யாச தீட்சை வழங்கும் நிகழ்ச்சியை காண வந்தவர்கள் கோவில் தெற்கு வாசல் வழியாக வந்து, நவராத்திரி மண்டபம் வழியாக மாடத்துக்கு வந்து, அங்கிருந்து திருக்குளத்தில் நடந்த நிகழ்ச்சிகளை பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பார்வையாளர் மாடத்தில் 3 அகண்ட திரைகள் வாயிலாகவும் நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆதீனங்கள், மடாதிபதிகள், சன்னியாசிகள் ஆகியோருக்கு திருக்குளத்துக்கு நடுவில் அமைக்கப்பட்டிருந்த நகரும் தெப்பத்தில் அமந்து நிகழ்ச்சிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.விழாவையொட்டி காஞ்சிபுரத்தில் பூக்கடை சத்திரம், பேருந்து நிலையம், கச்சபேஸ்வரர் கோவில், பஜனை மண்டபம், காமாட்சி அம்மன் கோவில் மற்றும் சங்கர மடம் உள்ளிட்ட இடங்களில் இடங்களில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவை முன்னிட்டு காமாட்சி அம்மன் கோயில் வளாகமும, சங்கர மடமும் வண்ண மின் விளக்குகளாலும், வண்ண மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
பெயரில் திராவிட் ஏன்?
புதிய பீடாதிபதிக்கு பெற்றோர் வைத்த பெயரின் கடைசியில் தி ராவிட் என்ற வார்த்தை இருக்கிறது. பொதுவாக தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு குடி பெயர்பவர்கள், தங்கள் பெயருடன் தி ராவிட் என்ற வார்த்தையையும் சேர்த்துக்கொள்வர்.
இவரது முன்னோர்கள் 200 ஆண்டுகளுக்கு முன்பே தமிழகத்தின் வலங்கைமான் பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு குடி பெயர்ந்தவர்கள். அதனால் தான் அவரது பெயரிலும் தி ராவிட் என்ற வார்த்தை இருக்கிறது.
****
பொன்முடியின் பதவி பறிப்பு– இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி
தமிழக அமைச்சரவையில் பதவி வகித்த பொன்முடி, செந்தில் பாலாஜி ஆகிய இருவரின் பதவிகளும் பறிக்கப்பட்டன நீதி மன்றத்தின் கடுமையான விமர்சனம், எச்சரிக்கை ஆகியவற்றை அடுத்து தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின் இந்த நடவடிக்கையை எடுக்கும் நிர்பந்தத்துக்குத் தள்ளப்பட்டார்.
இந்து மதத்தையும் பெண்களையும் அமைச்சர் பொன்முடி வசைபாடியதால் இந்துக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தமிழ் நாடு முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர் . ஆகவே பொன்முடியின் பதவி நீக்கம் இந்துக்களுக்கு கிடைத்த வெற்றி என்று அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.
***
பாரதத்தின் கலாச்சார பெருமை பற்றி நடிகர் ரஜினிகாந்த்

இன்றைய இளைஞர்கள் நாட்டின் கலாச்சாரம், பெருமைகள் குறித்து தெரியாமல் இருக்கிறார்கள். நாட்டின் உன்னதமான கலாச்சாரத்தை இளைஞர்களிடம் சேர்க்க வேண்டும் என்ற நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை கூறியுள்ளார்.
பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமல் மேற்கத்திய கலாச்சாரம் நோக்கி இளைஞர்கள் சென்று கொண்டிருக்கின்றார்கள் என நடிகர் ரஜினிகாந்த் கூறினார்..
லதா ரஜினிகாந்த்தின் ஃபீஸ் ஃபார் சில்ட்ரன் (peace for children) அமைப்பு சார்பில் ‘பாரத சேவா’ என்ற புதிய அமைப்பின் அறிமுக நிகழ்ச்சி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது.
இந்த திட்டத்தை ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயண ராவ் கெய்க்வாட் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் காணொளி மூலம் பேசிய ரஜினிகாந்த்,
செல்போன் யுகத்தில் இளைஞர்கள், பெரியவர்கள் என சிலர் நம் பாரத நாட்டின் பாரம்பரியம் ,கலாச்சாரம், அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளாமலேயே மேற்கத்திய கலாச்சாரம்நோக்கி சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
ஆனால் மேற்கத்திய கலாச்சாரத்தை பின்பற்றக் கூடிய மக்கள் அதில் நிம்மதி இல்லை என்று சொல்லி பாரதத்தின் கலாச்சாரத்தை பின்பற்றிக் கொண்டிருப்பதாகவும் நடிகர் ரஜினிகாந்த்
தெரிவித்தார்.
****
கேதார்நாத், பத்ரி நாத் கோவில்கள் திறப்பு
இமயமலை மீதுள்ள கேதார்நாத் , பத்ரி நாத் ஆகிய இரண்டு புனிதத்தலங்களும் பக்தர்களுக்குத் திறந்துவிடப்பட்டன. இவை இரண்டும் ஆறு மதங்களுக்குத் திறக்கப்பட்டிருக்கும்; பின்னர் பனி பெய்வதால் ஆறு மாதங்களுக்கு மூடப்பட்டிருக்கும்
கேதார்நாத் சிவன் கோவில் மே மாதம் 2-ம் தேதி திறக்கப்பட்டது ; பத்ரிநாத் விஷ்ணு கோவில் இன்று திறக்கப்பட்டது.
உத்தரகண்ட் மாநிலத்தில் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் கோவில்கள் உள்ளன .
கேதார்நாத் கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாகும் ; இங்கு பாண்டவர்கள் சிவபெருமானை நோக்கித் தவமிருந்ததாகவும், அவர்களே இக்கோவிலை கட்டியதாகவும் கருதப்படுகிறது.
பத்ரிநாத் அல்லது பத்ரிநாராயணா கோவில் என்று அழைக்கப்படும் கோவிவில் விஷ்ணு பிரதான கடவுளாகும். வைணவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட 108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்றாகும்.
இவை இரண்டும் சார்தாம் எனப்படும் நான்கு புனித தலங்களுள் இரண்டாகும் . ஏனைய இரண்டு கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகும் ; ஆண்டுதோறும் லட்சக் கணக்கான பக்க்தர்கள் நான்கு தலங்களையும் ஒரே பயணத்தில் தரிசிப்பது வழக்கமாக இருக்கிறது
****
அடுத்ததாக அட்சய திருதியை செய்திகள்
ஒரே பந்தலில் எழுந்தருளி அருள்பாலித்த 12 பெருமாள்கள்!
அட்சய திருதியை முன்னிட்டு தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் 12 பெருமாளின் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
கும்பகோணம் நகரைச் சுற்றிலும் 12 பெருமாள் கோயில்கள் அமைந்துள்ளன. அட்சய திருதியையொட்டி 12 கோயில்களிலிருந்தும் சுவாமிகள் கருட வாகனத்தில் எழுந்தருளி திருவீதி உலா சென்றனர்.
தொடர்ந்து டி.எஸ்.ஆர்.பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் பந்தலில் 12 பெருமாள்களும் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சியளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
ரூ.12,000 கோடிக்கு தங்கம் விற்பனை!
அட்சய திருதியை ஒட்டி 12 ஆயிரம் கோடி ரூபாய்க்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக அனைத்து இந்திய நகைக் கடை உரிமையாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
அக்ஷய என்ற சமஸ்க்ருதச் சொல்லுக்கு அழியாதது என்று பொருள்; அந்த தினத்தில் எதைச் செய்தாலும் .எதை வாங்கினாலும் அதாற்கு அழிவு கிடையாது என்பது இந்துக்களின் நம்பிக்கை.
தங்கத்தின் விலை அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி ஆபரண விற்பனை அதிகரித்தே காணப்பட்டது.
கடந்த ஆண்டு அட்சய திருதியையை ஒட்டி 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பில் 20 டன் எடையில் தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
இந்த ஆண்டோ இந்திய அளவில் 12 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்குத் தங்கம் விற்பனை செய்யப்பட்டதாக வர்த்தக அமைப்புகள் தெரிவித்துள்ளன.
சென்னையில் காலை 6 முதல் தொடங்கி நள்ளிரவு 12 மணி வரை நகை விற்பனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
****
மங்களூரு ஹிந்து ஊழியர் படுகொலை ; விஸ்வ ஹிந்து பரிஷத் பந்த் அறிவிப்பு

மங்களூருவில் ஹிந்து அமைப்பைச் சேர்ந்த ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து தட்சிண கன்னட மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கர்நாடக மாநிலம், தட்சிண கன்னட மாவட்டம், மங்களூரு அருகே ஹிந்து அமைப்பை சேர்ந்த சுஹாஸ்செட்டி என்பவர் காரில் சென்று கொண்டிருந்தார். பஜ்பே பகுதியில் சென்றபோது மர்ம நபர்கள் , அவரை பயங்கர ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியாது. படுகொலை தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.
சுஹாஸ்செட்டி படுகொலையைக் கண்டித்து முழு அடைப்பு போராட்டத்திற்கு விஸ்வ ஹிந்து பரிஷத் அழைப்பு விடுத்தது.
தட்சிண கன்னட மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்திற்கு இந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளதால் மங்களூரு நகரில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன.
பெங்களூருவில் இருந்து வந்த நான்கு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்கியதால் கேஎஸ்ஆர்டிசி பேருந்து சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சாலைகளும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
****
கோவிலை மறைத்து தி மு க BANNER பேனர் ; பக்தர்கள் கடும் அதிர்ச்சி

வேலூரில் கோவில் வழியை மறைத்து கட்சி விளம்பர பேனர் வைத்துள்ள திமுக-வினரால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கடும் கஷ்டத்துக்குள்ளானார்கள்.
காட்பாடி அருகேயுள்ள காங்கேய நல்லூர் கிராமத்தில் விநாயகர் கோவில் அமைந்துள்ளது.
அங்குள்ள கிருபானந்தவாரியார் கோவிலுக்கு வரும் பக்தர்கள், சுற்றுவட்டாரப் பகுதி மக்களும் இந்த விநாயகர் கோவிலுக்கு வந்து செல்வது வழக்கம்
அந்த கோவிலின் வழியை மறைத்து திமுக விளம்பர பேனரை வைத்த திமுக-வினர், அதன் அருகேயே தண்ணீர்ப் பந்தலும் அமைத்துள்ளனர்.
இதனால் கோவிலுக்குள் செல்ல முடியாமல் கடும் அவதிக்குள்ளான பக்தர்கள், திமுக-வினர் இந்துக்களை அவமதிக்கும் செயல்களைத் தொடர்ந்து செய்து வருவதாகக் குற்றச்சாட்டினர்.
****
மதுரையில் சித்திரைத் திருவிழா
நூறு உலக அதிசயங்களில் ஒன்று மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் ஆகும் . அங்கு நடக்கும் சித்திரைத் திருவிழா மிகவும் புகழ்பெற்றது. மீனாட்சி கல்யாணம், பின்னர் நடக்கும் தேர்த்திருவிழா,. அழகர்கோவிலில் இருந்து 13 மைல் நடந்து வரும் கள்ளழகர் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் இறங்குதல் ஆகியன விழாவின் முக்கிய நாட்கள் ஆகும் ; இந்த விழாவில் மதுரை பெருமாள் கோவில் விஷ்ணு, திருப்பரங்குன்றம் முருகன் ஆகியோரும் பவனி வருவார்கள் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் சமய ஒற்றுமையை வளர்ப்பதற்காக மாமன்னர் திருமலை நாயக்கர் பல விழாக்களை இணைத்து இந்த பெரிய விழாவினை உருவாக்கினார்
லட்சக் கணக்கான மக்களை ஈர்க்கும் இந்த சித்திரைத் திருவிழா கொடி ஏற்றத்துடன் துவங்கிவிட்டது.
மீனாட்சி அம்மன் – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 8-ம் தேதி காலை நடக்கிறது. அன்றிரவு மீனாட்சி அம்மன் புஷ்ப பல்லக்கில் பவனி வருவார்.
மே 9 ம் தேதி மாசி வீதிகளில் சுவாமி, அம்பாள் திருத்தேரோட்டம் நடைபெறும்;
அழகர்கோவில் மலையில் இருந்து மே 10ம் தேதி கள்ளழகர், மதுரைக்கு புறப்படுகிறார். மே 12-ம் தேதி காலை அழகர் வைகையாற்றில் எழுந்தருளும் விழா நடக்கிறது.
****
ராமர் பாலத்தில் 1 கி.மீ., ‘வாக்கிங்’: கப்பல் நிறுவனம் சுற்றுலா ஏற்பாடு!
ராமர் பாலத்தில் 1 கி.மீ., துாரம் நடந்து சென்று தரிசிக்கும் வகையில், ஆன்மிக, கலாசார சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது,” என, நாகையில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்கும், ‘சுபம்’ என்ற தனியார் கப்பல் நிறுவன இயக்குநர் சுந்தரராஜன் கூறினார்.
நாகை-யில் இருந்து காங்கேசன் துறைமுகம் வரை, பிப்., 22 முதல் செவ்வாய்கிழமை தவிர்த்து, வாரம் ஆறு நாட்கள் பயணியர் கப்பல் இயக்கப்படுகிறது.
இருவழி கட்டணம், தற்போது 8,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. பயணியரை மேலும் ஊக்குவிக்க, புதிய பேக்கேஜ் அறிவிக்கப்படுகிறது. இலங்கையில் ஐந்து இரவுகள், ஆறு நாட்கள் தங்குவதோடு, உணவு, தங்குமிடம், வாகனம் உட்பட ஒரு நபருக்கு 30,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், சிறப்பம்சமாக ராமர் பாலத்தில் ஒரு மணி நேரம் நடந்து செல்லலாம். ராமாயணத்துடன் தொடர்புடைய முக்கிய இடங்களை பார்வையிடும், கலாசார, ஆன்மிக சுற்றுலாவாக இது இருக்கும்.
நாகையில் இருந்து காங்கேசன் துறையை அடைந்து, அங்கிருந்து சீதாவனம், சீதை சிறை வைக்கப்பட்ட அசோக வாடிகா, ராவணன் குகைகள், பழங்கால பிரசித்தி பெற்ற கோவில்கள், புராண இடங்கள் மற்றும் ராமர் பாலத்தை பார்வையிடும் வகையில் சுற்றுலா அமையும்.
ஜூன் 1 முதல், 250 பேர் பயணிக்கும் வகையில், புதிய கப்பல் இயக்கப்பட உள்ளது. கப்பல், மூன்று மணி நேரத்தில் காங்கேசன் துறையை சென்றடையும்.
*****
இத்துடன் செய்திகள் நிறைவடைந்தன.
உலக இந்துமதச் செய்திகளைத் தொகுத்தவர் லண்டன் சுவாமிநாதன்;
லண்டன் மாநகரிலிருந்து வைஷ்ணவி ஆனந்த்தும் சென்னையிலிருந்து கோமதி கார்த்திகேயனும் வாசித்த செய்தி மடல் இது.
அடுத்த ஒளிபரப்பு
மே மாதம் 11 ஆம் தேதி
லண்டன் நேரம் பகல் ஒரு மணிக்கும்,
இந்திய நேரம் மாலை ஐந்தரை மணிக்கும் நடைபெறும்
வணக்கம்.
—SUBHAM—-
Tags- Gnanamayam, Hindu news, 4th May 2025, Vaishnavi Anand, broadcast












































































